செவ்வாய், 15 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்--3

அசையும் இசையொலி அகலா மணியொளி
    அழகாம் தொட்டில் துயில்குக!வருகவே
அரியா சனத்தமர் நெறியாம் தனக்குடி
    அறவே மறவா மழலையே!வருகவே!

அடிமேல் அடிவைத்து அலைமணி உதிர்ந்திட
    அமரர் மகிழ்வின் நடனமே!வருகவே!
அணுகும் பரிமேல் பிளிறும் கரிமேல்
  அடுத்தும் விடுத்தும் அமர்குகா!வருகவே!

அதளம் மேலெழ,உயர்வான் கீழ்காண்
    ஆடல் ஆடிடும் வேலவா!வருகவே!
பதியின் கயிலை,வைகுந்தம் சத்யம்
  பயிலும் பயணப் பதியே!வருகவே!

அனைத்தும் அறிந்தான் அனைத்தும் புகுந்தான்
     அனைத்தும் ஆன கன்னிகுகா வருகவே
மனையற மாண்பின் மாதாம் கல்யாணி
  மனமகிழ் மைந்தனே.1வருக !வருகவே.

                                     பொருள்
மணியொளி வீசி அசைந்தாடும் தொட்டிலிலே துயிலும் குகனே வருக;அரியாசனத்தில்
அமர்ந்தும்,தாய்ப்பால் குடிக்கும் பழக்கம் மாறாத மழலை முருகனே வருக;
    தத்தித் தத்தி நடக்கையில் அரைஞாண் மணிகள் உதிர்ந்திட,நடக்கும் முருகன் அரக்கன்
அழிப்பான்,நமது துயர் நீங்கும் என மகிழும் தேவர் மனத்து நடனம் ஆடுபவனே!வருக;
ஒருபோது பரி மீதும்,அடுத்த நொடி கரி மீதும் விரைந்தும்,மாறியும் செல்லும் குகா!வருக;
       பாதாள உலகை விண்ணுலகாயும் வானுலகைப் பாதாள உலகையும் மாற்றி விளையாடும்
வேலவா!வருக;
கயிலை,வைகுந்தம்,சத்யலோகம் என எங்குள்ளார் எங்கு வருவார் என அறியமுடியாமல்
பயணம் செய்யும் தலைவா!வருக;
     எல்லாவற்றையும் அறிந்து,எல்லாமும் தானாகி,எல்லாவற்றிற்கும் உள் தங்கும் கன்னியாகுடி
முருகா!வருக;
மனையற மாண்பின் தாயான கல்யாணி அம்மை மகிழும் மைந்தனே!வருக.
                                                                     விளக்கம்
தனக்குடி .....தனம்==முலைப்பால் குடிக்கும்
அதளம்....பாதாள உலகு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக