சனி, 26 டிசம்பர், 2015

அம்புலிப்பருவம்--2

வான்வெளி முழுமையும்  வயல்மலை முழுமையும்
                        வலிவுடை வளவனே!
மானொளிர் குற்றமும் மறைகலை குற்றமும்
                        மதிப்பினைக் குறைக்குமே;

வான்வெளி முழுமையும் வயல்மலை முழுமையும்
                         வணங்கிடும் வள்ளலான்
மானிணை மயக்கமும் மறைகளின் முதன்மையும்
                          மதிப்பினை உயர்த்துமே.

கோனவன் சாபத்தால் குறையுடல் பெற்றபின்
                         குணமதும் பெற்றனை;
கோனவன் சாபத்தால் குலமழி கொள்கையால்
                          குணமதும் பெற்றவன்.

ஆனதால் அம்புலி!ஆடவா அருங்கன்னி
                          ஆண்டவன் அழகனுடன்.
ஆனைமுகன் அருந்தம்பி ஆறுமுக வள்ளலுடன்
                           அம்புலி!ஆடவாராய்.

                                             பொருள்
   வானும்,நிலமும் ஒளி வீசி ஆட்சி நடத்தும் வல்லவன் நீ. ஆயினும் மான் நிழல் என்னும்குற்றமும்,
சாபத்தால் தேய்ந்து வளரும் நிலையை உடைய உனது பெருமை குறைபாடுடையதே.
      வானும்,நிலமும் வணங்கும் வள்ளல் அவன்;இணை மான்களாம் வள்ளி தேவயானை மீது
கொண்ட காதலும்,மறைகளின் முதன்மையும் அவனது பெருமையை உயர்த்தும்.
      தக்ஷனின் சாபத்தால் குறையும் கலையினைப் பெற்றும்,சிவன் அருளால் நிறைகலை
பெற்றவன் நீ.
    முருகனோ தனது வில்லாற்றலால் அரக்கர் குலம் அழித்துக் குணக் குன்றாய் நிற்பவன்.
            ஆனதால் கன்னியாகுடி ஆண்டவனான அழகன் முருகனுடன் அம்புலியே!
விளையாட வருவாய்!
      ஆணை முகனின் தம்பியான ஆறுமுகனுடன் அம்புலியே!விளையாட வருவாய்.
                                            விளக்கம்
மானிணை ---இரு மான்கள் வள்ளி,தெய்வயானை
சாபம்--சபித்தல்
சாபம் --வில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக