செவ்வாய், 8 டிசம்பர், 2015

முத்தப்பருவம் --2

முல்லை முகிழ்க்கும் முறுவல் முத்து
     முகிழ்த்த முறுவல் வதங்கிடும் இயல்பாம்
முள்ளினுள் மறைக்கும் நல்லதாம் நாக
     முதிர்விட மணியதும் மயக்குறு முத்தே .

அல்லல் அகன்றிட அருந்தவ முனிவரும்
   அனுதினம் அரும்புகை நலமறை வணங்கியே
அடைந்தநல் தனிப்பத தவப்பயன் முத்தாம்
  அருமுனி அடைந்ததும் அடைவது உன்பதம்.

கல்மலை அருவிகள் விரைவென நதியெனக்
  கரையதில் திரைவளம் கலங்கிடும் மணியுள
கடல்குளிர் மறந்திட அலவனும் பிறவுமே
   கலந்திட கனிமணிக் குவியலும் குறையதே .

தொல்லை தவிர்த்திடு தவழ்தமிழ் முருகனே!
     துவப்பிலாத் தனியிதழ்க் குவிமுத்தம் தருகவே!
கலைமதிச் சடையவன் கருணையின் புதல்வனே!
   கனி நகர் முருகனே!முத்தம் தருகவே.

                                          பொருள்
முல்லைநில முத்துக்களைக் கூறி,அதனினும் உயர்ந்த முத்தாய் விளங்கும் முருகனிடம்
முத்தம் தருக என வேண்டுதல்
  முல்லைநில மலர் முல்லை;முத்தாய் அது மலரினும் காலத்தில் வாடி வதங்கிப் பொய் 'விடும்;
முல்லைநில நாகங்கள் உமிழும் நாகரத்தினங்கள் மயக்கத்தைத் தரவல்லது;
        அரும் கானகத்தில் தவம் புரியும் முனிவர்களின் தவப்பயன் எனும் முத்தை அடைவர்;
ஆனால் அவர்கள் அதை முருகன் காலடியில் சமர்ப்பிக்கின்றனர்;
        அருவி நீர் ஆராகிக் காட்டுவழி ஓடும் பொழுது,அதன் கரைகளில் ஆற்று மணிகள்
ஒளி குறைந்து கிடக்கும்;ஆற்றோடு கலந்த கடல் நண்டுகளும்,சிப்பிகளும் முத்தை ஈனும்;
இடம் மாறியதால் அவைகளும் ஓளி குறைந்தே விளங்கும்.
       துன்பங்கள் தீர்க்கும் தமிழ்போன்ற முருகா!இனிக்கும் இதழ் கூட்டி முத்தம் தருவாய்.
பிறைநிலவைச் சூடிய சிவபிரானின் கருணையால் தோன்றிய குழந்தையே!
கன்னியாகுடியில் எழுந்தருளியிருக்கும் முருகனே!முத்தம் தருவாய்>
                                           


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக