திங்கள், 14 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்--1

மணிப்பொன் பதித்த தனிச்சீர் கிரீட
   மணியொளி மகரக் குழைதரி செவியும்,
மயனே  மயங்கும் மருளிலா விழியும்,
    மணிகோர்த் தன்ன முத்துப் பற்களும்.

மருளிலா  மதியாய் மலர்ந்த முகமும்,
     மலரணி மார்பும்,உடனணி மணியும்
மரகத வேலும்,நூபுரத் தோளும்
     மற்போர் திண் புயமும்,மயிலணை கரமும்,

மான்தோல் பூணூலும் மண்ணுளோர் சார்த்திய
    மாசிலாப் பட்டுடையும்,இடையில் தனிப்பட்டும்
மாமன்னர் முடிபட்டு,சிரம்தொட்டுச் சிவந்த
   மாண்புடை  மூவுலகு போற்றும் மலரடியும்

மணந்தவா!மலர்ந்தவா!மகிழ்ந்தவா!மாமுருகா!
    மதிகுகா!மனமுவந் தழைத்தோம் வருகவே!
மணக்கும் மலராள் கன்னி நகர்க் கல்யாணி
   மைந்தனே!வா!வா!என்றழைத்தோம் வருகவே.

                                                   பொருள்
     நவரத்தினங்கள் ஒளி காட்டும் கிரீடமும்,மணிகள் பதித்த குழை அணிந்த செவிகளும்,படைப்புத்
தொழில் புரியும் மயனே மயங்கிடும் ஞான விழிகளும் ,முத்துக்களைக் கோர்த்ததுபோல்
வரிசைப்பற்களும்,
     குற்றமற்ற நிலவுபோல் மலர்ந்தமுகமும்,மலர் மாலைகளும் மணிமாலைகளும் அணிந்த
மார்பும்,நூபுரம் அணிந்த தோளிலே மரகத வேலும்,திரண்ட புயமும்,மயிலை அணைத்தபடி
இருக்கும் கரமும்,
       மான்தோல் இணைத்த பூணூலும் , மக்கள் சார்த்திய பட்டாடையும்,இடுப்பில் கட்டிய
தனிப்பட்டுடையும்,பல நாட்டு மன்னர்களும் வந்து தொழுது,வணங்கும் பொழுது அவர்தம் கிரீடம்
பட்டும்,தொட்டும் சிவந்துபோன மேன்மை வாய்ந்த பாதங்களும் ,
       மணக்கும் முருகா!மலரும் முருகா!மகிழும் முருகா!மா முருகா!மதிபோன்ற குகா!
மனமுவந்து அழைத்தோம் ;வருக!வருக.
       மணமிகு மலரணிந்தவளும் கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கல்யாணி அம்மையின்
மகனே!வா!வா!என்றழைத்தோம்;வருக.வருக.
                                                              விளக்கம்
மான்தோல் பூணூலும் ....பூணூலில் மான்தோலைக்கட்டிக் கொள்வது மரபு.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக