ஞாயிறு, 13 டிசம்பர், 2015

முத்தப்பருவம்--10

அமரர் துயரை அறவே களைய
    அளித்தான் பொறிக்கண் அறுமுகச் சுடரை
அன்னையும் அமுதை அளித்தே இணைத்தாள்
    அம்மை அப்பன் அளிக்க முத்தம்

அமரா வதியை அளித்த தளபதி
   அருமண மகளாம் இந்திரன் மகளும்,
அருங்கா தலுற்ற அடைதினை மகளும்
    அறுமுக முத்தம் அன்புடன் பெறுக .

அபயா! அடைந்தேன்;அமலா !பணிந்தேன்;
    அருந்தமிழ்க் கவிதை விருந்தாய்ப் படைத்தேன் ;
அவைமுதல் கீரன் ஆதி  அருணகிரி
    அந்தமாய்க் கவிகள் அளிக்க முத்தம்.

அடியவர் பணியவர் அகலா மனத்தார்
  அணைத்து இனிமை முத்தம் தருகவே
அடிமுடி அரிஅயன் தேடியும் காணான்
    அறுமுகச் செல்வா!முத்தம் தருகவே.

                                  பொருள்
 அமரர் துயரைக் களைய நெற்றிக்கண் பொறியால் தோற்றிய தந்தைக்கும்,அமுதப்பால்
அளித்து ஆறுமுகத்தையும் ஒரு முகமாக்கிய  அன்னைக்கும் முத்தம் அளிப்பாய்!
         விண்ணகத்தைக்  காத்திட அரக்கர்களுடன் போராற்றி வென்று நகரை மீட்டுத் தந்த
முருகனுக்கு அன்புடன் மனமகளாய்த் தன்மகள் தெய்வயானையைத் தந்தான் இந்திரன்;
அந்த மகளுக்கும்,காதலுற்று மணம் கொண்ட வள்ளிக்கும் முத்தம் அளிப்பாய்!
          உன்னை நாடி வந்து உன் புகழ் பாடும் நக்கீரன் முதல் அருணகிரிவரை அனைத்துப்
புலவர்களுக்கும் முத்தம் அருள்வாய்!
         அடியவர்கள்,கோயில் பணி புரிபவர்கள்,உன் திருவுருவம் அகலாத மனத்தையுடையவர்கள்
அனைவருக்கும் முத்தம் அருள்வாய்!
     அடியைத்தேடி மாலும்,முடியைத்தேடி நான்முகனும் அலைந்தும் காண முடியாதவன்
மகனே!முத்தம் அருள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக