ஞாயிறு, 15 நவம்பர், 2015

தாலப்பருவம்--4

மதகரி போர்த்த மலைமுக டெல்லாம்
   மலர்,செடி,கொடிகனி,முசுவுடன் வான்தொடும்;
மலைவீ  ழருவி மடையற்  றோடும்'
     மதிமறை புயல்சூழ் குறிஞ்சிக் கிழவ!

உதித்திடு ஆதவ,உறங்கிடு நிலவும்,
    உயிரலை,வெள்ளிப் பொன்னென மின்னும்;
உலர்த்திடு மீன்மணம் உடலினில் வீசிட,
    உவகைப் பரதவர் நெய்தல் தலைவ!

விதையிடு விளைநிலம் வளைக்கரச் செம்முலை
    வயலினில் வார்த்தபடி நாற்றுநடும் சேற்றழகு;
விரிவாழை குலைதள்ள வெறித்தொடும் எருமைகள்;
     உழவரின் உளத்தமர் மருதச் செல்வ!

மதுவள மலர்மார்ப!மலைமகள் மடிதுயில்
   மதுரமொழி மழலையே!தாலோ!தாலேலோ!
மதுகரம் மண்டிடும் மாச்சோலை கன்னிநகர்
   மஞ்ஞை மணவாள!தாலோ!தாலேலோ!

                                        பொருள்
மதம் பிடித்த யானைகள் கூட்டம் நிறைந்த மலைச் சிகரங்கள்;செடி,கொடி மலர்,,காய்,கனி,
இவற்றோடு குரங்குகளும் சேர்ந்து விளங்கும் உயரமான மரங்களைக் கொண்டது;
அருவிகள் தங்கு தடையின்றி ஓடும்;நிலவை மறைக்கும் மேகங்கள் சூழ்ந்த குறிஞ்சிக் கடவுளே!
     சூரிய உதயமும் நிலவின் மறைவும் ஒருசேர நடக்கிறது;அந்தநேரம் கடலலை
ஒருபுறம் வெள்ளிபோல் மறுபுறம் தங்கம்போல் மின்னும்;கடற்கரையில் மீன்களை
உலர்த்தும் மீனவர் உடலெல்லாம் மீன் நாற்றம் வீசும்;அப்படிப்பட்ட நெய்தல் நிலத் தலைவ!
       வயலிலே நாற்றுநடும் பெண்களின் கரமும்,முலையும் நிலத்தில் தோய்ந்து அழகூட்டும்;
வாழைமரங்கள் குலை விடுகின்றன;அதன் வளர்ச்சியைப் பார்த்து எருமைகள் மிரண்டோடும்;
உழவர் உள்ளத்தில் வீற்றிருக்கும் மருதச் செல்வ!
      தேன்சிந்தும் மலர் மாலைகளை அணிந்த மார்பனே!கல்யாணி அம்மையின் மடியில்
துயில் கொள்ளும் மழலைச் செல்வமே!தாலோ!தாலேலோ!
வண்டுகள் மொய்த்திடும் சோலைகள் நிறைந்த கன்னியாகுடி நகரின் மயிலாள் வள்ளி
கணவா!தாலோ!தாலேலோ!

                                                          விளக்கம்
முசு=குரங்கு
உயிரலை ===ஆரவாரத்துடன் ஒலி எழுப்பும் அலை
மதகரி போர்த்த ......மதயானைகள் சூழ்ந்தமலைமுகடு எனவும்,
                                             மதயானைபோல் கருமையும்,பருமனும்.காண்போர் அஞ்சும் மலை முகடு
                                             எனவும் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக