புதன், 8 பிப்ரவரி, 2017

தாலப்பருவம்.......8

                 தாலப்பருவம்.......8
பஞ்சினும்மென்   பிஞ்சடியின்   மிஞ்சியணி   தானொலிக்கும்
                             பாதமலர்ப்   பைங்கொடியே!
கஞ்சமலர்க்    கவினழியக்,    குளிர்ச்சியும்    கவினும்பொழி
                        கருணைமுகம்   மலர்ந்தவளே!

மஞ்ஞைவிரி    மையல்தோகை   அஞ்சியொடுங்    கயலடைய
                         மணிக்கூந்தல்     உடையவளே!
 அஞ்சுகமும்    விஞ்ஞையெனக்    கொஞ்சுகுரல்     மமதைவிட
                        அமுதமொழி    அருள்வாயே.

மஞ்சளது    மகத்துவமும்    மங்களமும்     மறைந்தொடுங்கும்,
                    மணமேனி      மஞ்சளழகே!
இஞ்சிமூன்று    அழித்தவனின்      இணையான    ஆற்றலளி
                          இகல்சூலம்     ஏந்தியவளே!

நஞ்சுகண்டன்     நாளெல்லாம்      போற்றுமூரின்     நற்றலைவி!
                              தாலோ!       தாலேலோ.
செஞ்சடையன்     செம்பாகம்    சேர்ந்தவளே!   கல்யாணி!
                               தாலோ!  தாலேலோ.

                              பொருள்
      பஞ்சைக் காட்டிலும் மென்மை கொண்டும்," மிஞ்சி" என்னும்,அணியை விரலில் அணிந்து,அது,எழுப்பும் ஒலி அருளைத் தருவதுபோல் நடை பயிலும் மழலையே!தாமரை மலரின் அழகு,
குளிர்ச்சி தோற்குமாறு கருணைக் குளிர்ச்சியும்,அழகும் கொண்ட முகத்தினை உடையவளே!
    விரிந்த தோகை அழகு மயக்கம் கொண்ட மயில்,நாணத்துடன் அவ்விடம் விட்டு அகலுமாறு,விரிந்த அழகுக் கூந்தல் உடையவளே!மொழியை அழகுறக் கொஞ்சிப் பேசும் கிளியும்,தன்குரல்கர்வத்தை இழக்குமாறு,அமுத மொழி பேசும் வாயினை உடையவளே!அம்மொழி அருள்வாய்.
    மஞ்சளின் நிறம்,மங்களப் பெருமை மகத்துவம் மறைந்து உன் மேனியில் மறைந்ததுவோ?என்னுமாறு மஞ்சள் மேனி கொண்டவளே!முப்புரம் அழித்த சிவபிரானுக்கு நிகராக மகிடனைவென்று முச்சூலம் கையில் கொண்ட வீராங்கனையே!
   நீலகண்டனாம் சிவபிரானை வாழ்நாளெல்லாம் போற்றி வணங்குவோர் வாழும் கன்னியாகுடியின்கல்யாணியம்மையே!தொட்டிலில் தவழ்ந்து உறக்கம் கொள்க.தாலோ!தாலேலோ.
செஞ்சடை கொண்ட சிவனின் பாதியுடல் பெற்று விளங்கும் கல்யாணி!தொட்டிலில் நல்லுறக்கம்கொள்க.தாலோ!தாலேலோ.

                                                  விளக்கம்
பாதமலர்............உருவகம்.
பைங்கொடி .....அன்மொழித்தொகை
அமுதமொழி.....உவமைத்தொகை
  அருள்வாய்......வினைத்தொகையாகக் கொண்டாள் அருள்கின்ற ...வாய்.எனப்பொருள் படும்.
இதனை முன்னிலை ஒருமை வினைமுற்றாகக் கொண்டாள் அருள்வாய்! எனப்பொருள்
இஞ்சி =கோட்டை
   

     



                     
                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக