செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

சிங்கமுகனைச் சூரன் கடிதல்

                   சிங்கமுகனைச்  சூரன்   கடிதல்

1.  தந்தவரம்   தான்மாற்ற  தண்தலைவன் எண்ணானே;
     எந்தவத்தின் ஈடு,யார்?  சொல்.

2. நூற்றெட்டு  மாயுகமே  ஈசனுரை  நானறியேன்;
    காற்றெட்டும்  காலமெலாம்  நான்.

3. பெருவரம்  பேரியாக்கை  பாராளல்  பெற்ற
     திருச்சூரைத்    தீண்டுவார்  யார்?

4.  நன்றண்ணா   ஒன்றுசொல்வேன் மன்றலாடி தோற்றுவித்த
     தென்றலே   தீண்டும்  உனை.

5. தாரகனும்   மாயத்   தடங்கிரியும்  தூளாகப்
    போரெடுத்த   புண்ணியனைப்  போற்று.

6.சிறைவிடு  தேவரை; சீற்றமழி; சின்னவன்
   அறைமொழி    ஆக்கம்  தரும்.

7.கனன்றசூரன்  காரிருள்  சொற்களைப்  பேசிக்
   கனன்றனன்   தம்பி  வெறுப்பு.

8. விண்ணவர்   வெஞ்சிறை  வீறுற்றோன் வீரவலி;
    புண் ணவர்  பூமிக்குப்   போ.

9.  எருவாலே   எட்டிமரம்  தன்கசப்பு  மாறா;
     உருவான   அண்ணன்  பணி.

1௦. ஆர்பெறுவார்   இத்தம்பி; ஊர்செல்க;நாற்படை
       போரறிந்து   வந்திடுக; போ.
 

                                             பொருள்

1 , சிங்கமுகனின்   அறிவுரையால்  சினமுற்ற  சூரன்  செருக்குடன் பேசலுற்றான்.  சிவனே  என்   வாழ்வை  அழிக்கக்  கூடும்  சிங்கமுகன் என்கிறாய்.
எம்பெருமான்   தான்  அளித்த  வரங்களை  ஒரு[ஒருபோதும்   தானே
அழிக்கமாட்டார்,எனது   தவத்திற்கு  அவர்   அளித்த  பரிசு  அது.ஈடு
இணையில்லாப்   பெருந்தவம்   என்னைப்  போல்  யார்   ஆற்ற முடியும்?


2,   நூற்றெட்டு  யுகங்களே   என்  வாழ்வு"  என   ஈசன்   கூறியதாக   நீ
 உரைக்கிறாய்! நான்   அப்படிப்பட்ட   சொற்களைக் கேட்கவில்லை;
காலமும்   காற்றும்   இருக்கும்   வரை   நானும்  என்  வரபலங்களும்
நிலைத்திடவே  அருள் பொழிந்தவன்  ஈசன்   என்பதை   நீ உணர்.

3, சிவபெருமானின்   வரங்களால்  அழிவில்லா   யாக்கையும்,சிங்காதனமும்,
பேரண்டங்களையும்   ஆளும்  பராக்கிரமும்  பெற்று   வாழும்   என்னை
யாரால்  அழிக்கமுடியும்?என்னைத்    தொடக் கூட ஒருவராலும்   இயலாது.
என்று   தனது பெருமைகளையும்  அழிவற்ற   வாழ்வையும் விளக்கிச்
செருக்குடன்  சின உரை   ஆற்றிய   அண்ண னைப்  பணிந்து  சிங்கமுகன்
சொல்லத்   தொடங்கினான்,

4,   அண்ணா!  நீங்கள்  கூறிய   அனைத்தும்  உண்மையே.வரத்தைப்  பெற்றதால்  நன்மை   செய்ய வேண்டிய  நாம்  பல   தீமைகளைப்  புரிந்தோம்.
தேவர்களைச்  சிறையில்  அடைத்தோம்; அவர்களோ   நமது  கொடுமைகளைப்  பொறுக்க முடியாமல்  சிவபெருமானிடம்  முறையிட்டார்கள், அவர்களது   துயரைப்   போக்க  சிவனார்   தனது
நெற்றிக்கண்    சுடரில்   தோன்றிய  பொறியில்   நம்மை அழிப்பதற்காகவே
திருக்குமரனைத்  தோற்றுவித்தார். அந்த   அழகு   முருகன் உன்னை  என்னை  அரக்கர்  கூட்டத்தையே  அழித்துவிடும்   என்பதை நீ  அறிவாயா?

5,   தாரகனையும், கிரௌஞ்ச மலையையும்  அழித்த   அந்த   முருகனைப்
போற்றுதலே   நமக்கு முன்   அமைந்துள்ள   நல்ல  வழியாகும்,எதிர்த்தால்
நாமெல்லாம் அழிவோம்   என்பதை   நீங்கள்   உணருங் க ள் அண்ணா!

6,   அண்ணா! உடனே   தேவர்களைச்  சிறையிலிருந்து   விடுவிக்க,
தீமை   நிகழ்ச்சிகளை  நிறுத்துக; வேதநெறி  நின்று  பரம்பொருளான முருகனைப் போற்றுக, அதுவே   நமக்கு   ஆக்கத்தையும் வாழ்வையும் நல்கும்", இதுவே  தம்பியாகிய   யான் கூறும்  அறிவுரை ஆகும்,என்று பணிந்து   சிங்கமுகன்  சொன்னான்,

7.  சிங்கமுகனின்   சொற்கள்   சூரனின்  மனதைப் புண்படுத்தின;விருப்பம்   சினமும் கொண்ட சூரன்  வெறியுடன்  பேசினான். தம்பி! அண்ணனைச்
சாராமல்  மாற்றான்   புகழ்   பேசிய நீ  எனக்குத்   துணை   ஆக மாட்டாய்!
அங்கே  செல்;நல்ல வாழ்வைப்பெறு ,இக்கணமே   நீ வெளியேறு " என்று
கத்தினான்.

8, தம்பி!  தேவர்களைச்   சிறையில்   இட்டது.  எனது  வீரத்தால்  விளைந்தது;
அது   வீரத்தின்   வெகுமதி, அதனால்   நான் ஒருபோதும்   அவர்களைச்
சிறையிலிருந்து  விடுவிக்க மாட்டேன்.இனி  இங்கு   நில்லாதே,தேவர்களைச் சார்ந்து  செல்வமும், வளமும்  பெற்று  வாழ், என்று சினத்துடன் கத்தினான்.

9, எட்டி மரத்திற்கு  ஏலக்காய்   உரமிட்டுப்  பன்னீரைத்   தண்ணீராகப்
பாய்ச்சினாலும். அதில்   காய்க்கும்  காய்  மேலும்  கசக்குமே   அன்றி
இனிக்காது.அதுபோல்   அண்ணனும்  அவனது  குணங்களும்  நாம்
என்ன  கூறினாலும்   மாற்ற முடியாதவை; ஆதலின்  அண்ணன்  மீது
கொண்ட   பாசத்திற்காக, நாமும்   அவன்  வழியில்  செல்லுதலே   சிறந்தது "
என்ற முடிவிற்கு  வந்த   சினகுகன்  மீண்டும்  அண்ணனைப் பணிந்து
பேசலுற்றான்.

1௦,   தன்னை  வணங்கித்    தான்   கூறிய   சொற்களுக்காக   மன்னிப்பும்  வேண்டிய   தம்பி   சிங்கமுகனை   ஆரத்  தழுவிக்கொண்ட   சூரன்  தம்பி!
உன்னைப்போல்   நல்ல உடன்பிறப்பு   யாருக்குக்   கிடைக்கும்!எனது   அருமைத் தம்பியே!  உன்னை நினைந்து   பெருமைப்  படுகிறேன்,
இப்பொழுது      மனமகிழ்வுடன்   உன்   நகர்  செல்வாயாக,  போர்  துவங்கியதும்  செய்தி   கூறுகிறேன், நால்வகைப்   படைகள்   சூழ
வந்து,போரிட்டு   எனக்கு   வெற்றி  தேடித்   தருவாயாக "என்று   மகிழ்வுடன்
கூறினான்.

                                                விளக்கம்


எண்ணானே,,,,,,,,,,,,,,,,,,,தெரிநிலை   ஏகாரம்,
பெருவரம்       }
பேரியாக்கை},,,,,,,,,,,,,,,,,, பண்புட்தொகைகள்
காரிருள்           }
வெஞ்சிறை     }
தென்றலே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உருவகமாய்  முருகனைக்  குறிக்கிறது.
அறை மொழி ,,,,,,,,,,,,,,,,,,,,,வினைத்தொகை
இருள் சொற்கள் ,,,,,,,,,,,,,,,,உவமைத்தொகை
செல்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வியங்கோள்  வினைமுற்று

  எருவாலே எட்டிமரம் தன்கசப்பு   மாறா;
  இப்பாவில்   அமைந்துள்ள   அணி  பிறிது   மொழிதல்  அணி  ஆகும்,
தான  சொல்ல வந்த   கருத்தை   நேரே  சொல்லாமல் உவமை  வாயிலாக
விளக்குவது  இவ்வநியாகும்,
   இப்பாடலில்   நன்மை   அறிவுரைகள்   எவ்வளவு   கூறினாலும் தீயவனான
சூரன்   மனம் மாறாது"  என்பதை   விளக்க   வந்த    ஆசிரியர்   எட்டிமரத்தை
வளர்க்க,ஏலக்காய்  உரம் இட்டும், பன்னீரைத்   தண்ணீராக ஊற்றி   வளர்த்தாலும்   அம்மரத்தின்   காய்  தனது   கசப்பச்  சுவையை  ஒருபோதும்
விடாது,என்னும்   உவமையை   மட்டும் கூறிப்   பொருளை   விளக்குவதால்
இப்பாடல்  பிறிது   மொழிதல்  அணி   ஆயிற்று.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக