சனி, 10 ஆகஸ்ட், 2019

                              முருகனது தெளிவும்,தெளிவு தேடும் சூரனும்


1.   ஒளிந்தும்  மறைந்தும்  உயிரினைக்   காக்க,
      நெளிந்தும்  நிலைவிட்டு  நீங்கு.

2.   மறைந்தனன்   ஆதவன்  மண்மேட்டுச்  சீரூர்
      குறைந்த  குவலயம்   ஆக்கு.

3.   விரைவோம்    வியன்வேல்   பெருமான்தாள்  போற்ற.
      திரைசூழ்   இலங்கை  வர,

4.   யாளியன்   கனன்று  கடும்போர் ஆற்றினன்;
      வேலினான்  நல்லருள்  வீழ்.

5.  கண்டனன்   கந்தனைக்   காரிருள்   போயிற்று;
     தண்ணொளி  தாவிற்று;  தான்.

6.  சென்றுவந்த    செய்தியாவும்   செந்திலோன்  செவ்வருள்;
      நன்றிகொன்றான்   நாடாதான்   சூர்.

7.  நாளையே   நாம்தொடுப்போம்   நற்போரை:  இன்றுபோய்
     நாளையே    காணாக்   கலி.

8.  அஞ்சியோர்    ஆறுதல்   அளித்தநல்    வேளையில்
      அஞ்சாத    ஆணவம்   அங்கு.

9.  தூதுவந்தோன்   மாற்றிவிட்ட   தொன்னகரை  மீட்டெடுத்து
     யாதுசெய்ய? சான்றோரே!  சொல்.

1௦.  கூடிநின்ற   பேரவை  கூக்குரலில்   ஆர்ப்பரித்துப்
       பாடிநாம்   வென்றிடுவோம்  என்று.

                                         பொருள்

1.   வீரவாகுவின் வாள்  வீச்சிற்கு   அஞ்சிய   அரக்கர்  கூட்டம்   ஆங்காங்கு ஒளிந்து கொண்ட து ; மறைந்து நின்றது;  தங்களது   உயிரைக் காத்துக் கொள்ள,அவ்விடத்தை   விட்டே   ஒடி மறைந்தனர்  சூர வீரர்கள்.

2.  ஆதவன்   மறைந்தான்; அவனைப்போலவே   அந்நாடும்  உலகை  விட்டே
மறைந்தது;சீர்மை    மிக்க சூரன்  நகர்   மண்   மேடாகியது;நகரை   அழித்தார்;  தீயிட்டுக் கொளுத்தினார்; எம்பெருமானைக்   குறைவாகப் பேசிய  சூரன்  மேல் கொண்ட  சினம் அவன்  நகரை அழித்ததால்
வாகுவிற்குச்  சற்றே   அடங்கியது.

3. தூதுப்  பணியில்   போரிடக் கூடாது;  ஆயினும்  அரக்கனின்   ஆணவத்தை
அடக்கவே  அவனைச்   சார்ந்தோரையும்,  அவன்   நாட்டையும்  அழித்த வீரவாகு அவ்விடத்தை  விட்டு  அகன்றார்; தலைவனாம்  முருகனைக்  காணவேண்டும்  என்ற  அவா,  அவரை விரைவாகப்  பயணிக்கச் செய்தது;
வானில்  பறந்து, கடலால்  சூழப்  பட்ட இலங்கை  மாநகர் எல்லையை அடைந்தார்.

4. இலங்கையைக்   காத்துக் கொண்டிருந்த   யாளிமுகன்  வானத்தே   பறந்து
வந்து,தன் நாட்டு   மலையை   அணுகி   நிற்கும்   வீரவாகுவைக் கண்டான்;
தனது   மகனைக்  கொன்றவன் அவனே   என்பதையும்   உணர்ந்தான்;
ஆயிரம் முகங்களையும், இரண்டாயிரம் துதிக்கைகளையும்  கொண்டு
விளங்கும்   யாளிமுகன் வீரவாகுவைத்  தடுத்தான்;போரிட   முனைந்தான்
முருகனைப்   போற்றிய   வீரவாகு  அவனது   தலைகளையும், கைகளையும்
வெட்டி,வீழ்த்தினார்;அவனும்   மடிந்தான்;செந்தில்   திருப்பதியை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்  வீரவாகு.

5.   திருச்செந்தில்  நகரை  அடைந்த   வீரவாகுவை,அவரது   தம்பிகளும்,
அவரது  படை வீரர்களான இலக்கம்  வீரர்களும் சூழ்ந்து  கொண்டனர்;
போற்றி வணங்கினர்; வீரவாகுவும்,  அவர்களை   அழைத்துக்   கொண்டு
செந்திப் பதி  புரக்கும் செவ்வேளைக்  காணப் புறப்பட்டார்;மாலும், அயனும்,
மற்றைய  தேவர்களும் சூழ்ந்து  போற்றியபடி நிற்க,முருகனைக் கண்டார்;
கண்ட  மாத்திரத்திலேயே   அவரது உடல்  நோயும்,மனத்துயரும்  மறைந்தன;
முருகனின்  அருட்பார்வை   வீர்வாகுவின்   மீது பட்டவுடன் களைப்பெல்லாம்
மறைய ஆண்டவனின்   அருள் வெள்ளத்தில்  நனைந்து பேரின்பத்தில் திளைத்தார்.

6.   இறைவன்   ஆணைப்படி . தான்  புறப்பட்டதையும்,வழியில் தங்களது
அருளால் பேருருவம்,சிற்றுருவம்  எடுத்ததையும்,வழியில்  தடுத்த அரக்கர்
பலரை வீழ்த்தியதையும்,வரத்தின்  பேரருளால்  செல்வம்   கொழிக்கும் சூரப்
பேரரசையும்,அரக்கர்   கூட்டம்  அனுபவிக்கும் மேன்மைகளையும்,
அரக்கர்களின்  ஏவலராய்ப்   பணிவிடை செய்யும் தேவர்களின் அவலத்தையும்,காவல்  மிக்க வீரமகேந்திரத்தில்  தான்  நுழைந்த முறையையும் விளக்கிய  வீரவாகு, ஆணவம்   மிக்க   அரக்கன்முன் கூனிக்குறுகிச்   செல்லாமலும்,அவன்முன்   தரையில் நின்று  பேச விரும்பாமையால்  இறையருளை நினைந்து  போற்றித்  தங்க அரியணை
பெற்று,அவன்   அவைக்குள்  அமர்ந்ததையும் , தூதுச் செய்தியைப் பக்குவமாய்  எடுத்துரைத்ததையும்,ஆணவம்  மிக்க சூரனது   இகழ்ச்சிப்
பிதற்றலையும் ,தங்களது  புகழினை முறையாய்க்  கூறியதால் வெகுண்ட
சூரன்,வீரர்களை அழைத்துச்  சிறைபிடிக்க   ஆணையிட்டதையும்,
தங்களின் பேரருளால் அரக்கர்களை அழித்ததையும்,அவனது  ஆணவத்தைக்  கருத்தில் கொண்டு,வீரமகேந்திரத்தை அழித்ததையும்,
சூரனது  மகன்  வச்சிரவாகு உட்பட பல்லாயிரக் கணக்கான அரக்கர்களை வீழ்த்தியதையும் பணிவோடு கூறினான்.அங்கு  சிறையில்  வாடும்  தேவர்களது    நிலையையும் கூறினான்.வரபலத்தால்   தான்   பெற்ற   வாழ்வை  நினைக்காது,நன்றிகொன்றவனாகவும்,என்ன   கூறியும்  நன்மையை  நாடாதவனாகவும்   விளங்கும் சூரனின் செருக்கையும் எடுத்துரைத்தான்.

7.  வீரவாகு!   அரக்கனின்   செருக்கழிய   நாளையே   நாம் போரைத் துவக்குவோம்; அறத்தையும், தேவர்களையும்   காக்க  நாளை    நாம்
மேற்கொள்ளும்  இப்போர் அரக்கர்களின்    நாளைய   வாழ்வினை  மாற்றும்
அழிவுப்போராக   மாறும்.இன்று    என்னும்  கர்வம்   நாளை   என்ற நன்மையைக்   காணாத   அழிவாக அரக்கர்களுக்கு    மாறப்போகிறது" என்றார்   எம்பிரான்  முருகன்.

8.   அரக்கர்களுக்கு    அஞ்சியஞ்சி  வாழும்  தேவர்களுக்கு  முருகனின்   அறிவிப்பு   ஆறு தல் தரக்கூடியதாக   அமைந்தது.தேவர்கள் ஆறுமுகக்  கடவுளுக்கு  நன்றி கூறிப்  போற்றிக் கொண்டாடும்  வேளையில்,வீரமகேந்திரபுரியில்  ஆணவச்   சூரன்  அமைச்சரவையைக்
கூட்டினான்.தெளிவு   காட்டுமாறு   வேண்டினான். முருகன்   அனுப்பிய   தூதுவன் உரைத்த  செய்தியையும், அவன்   நாட்டையே   அழித்துவிட்ட  அவலத்தையும் கூறி,இனி   நாம்  என்ன செய்யப்போகிறோம்?என்ன   செய்ய
வேண்டும்  என்பதுபற்றி   விளக்குமாறு அவையினரை  வேண்டினான்


 9.       தூதுவனால்   அழிந்த  நகரைப்  பிரும்மாவைக்  கொண்டு,மீண்டும்  உருவாக்கிய   சூரன் தெளிவில்லா
மனத்தின்    தெளிவு வேண்டி, அமைச்சரவையைக்   கூட்டிச்  சான்றோர்களிடம்  வழி  நல்குமாறு வேண்டினான்.

1௦.  அவையில்    கூடிய அமைச்சர்களும் ,சிங்க முகன், பானுகோபன்,
இரணியன். போன்ற உறவினர்களும்   " நாமே  வெல்வோம்"போர்  துவக்குவோம்" தேவப்பதர்களைக் கூண்டோடு   அழிப்போம்"என
ஆரவாரக் கூச்சலிட்டனர்.


                                            பொருள்
ஒளிந்தும்,மறைந்தும்.............எண்ணும்மை
சீரூர் ...............................................பண்புத்தொகை
வியன்வேல் .................................உரிச்சொற்றொடர்
திரைசூழ் ...................................... மூன்றாம் வேற்றுமைத்தொகை
திரை ................................................சினையாகு பெயர்
காரிருள் ..........................................பண்புத்தொகை
நாடாதான் ......................................எதிர்மறை வினையாலணையும் பெயர்.
காணா   ...........................................  செய்யா" என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
வென்றிடுவோம்...........................தன்மைப் பன்மை  வினைமுற்று
அஞ்சிய X அஞ்சாத .....................அடி முரண் எதுகை

     கலி' =  இங்கு   அழிவு   என்னும் பொருளில் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக