புதன், 6 பிப்ரவரி, 2019

                                 மகேந்திர காண்டம்

தேவர்கள்  சிறை

1.  மாகாளர்   வாழ்த்தி, ஈகைப்போர் போற்றியபின்
     ஏகினான்  இந்திரன்மே  ரு.

2.  தங்கிடும் துன்பமுடன்  தங்கையும்  துன்முகியும்,
     சிங்கமன்னன்  சீரவை  சேர்.

3.   ஆயிரம்   அண்டங்கள்  ஆளுகின்ற  ஆன்றபுகழ்ப்
      பாயிரம்   போற்றும்  சுரர்.

4.  பேரவையில்  பாரதிர   வீற்றிருந்தான்  சூரபன்மன்;
     மாரடித்துப்   பேய்போல்  நுழை.

5.  அழியாத   ஆக்கை   அருவரங்கள்  பெற்றாய்!
     விழியாலே  வேதனையைப்   பார்.

6.  இந்திராணி  பற்றுகையில்  என்கையை  வெட்டினான்
     மந்திர    மாகாளன்  மன்.

7.  தங்கையின்  பங்கத்தைப்  பார்த்தபின்  சிங்கமென 
     வங்கமென    மாறிச்  சினம்.

8.  நான்முகன்  நல்வரவு;நற்கை  உருவாக்கி 
     வீண்பணி   தேவர்  சிறை.

9.  பானுகோபன்  போர்ப்படைப்    பேராற்றல்  தேவர்கள் 
     நாணமழி  பூண்சிறை  தான்.

1௦.சயந்தனும்  போரிட்டுத்  தோற்றான்  சிறையில் 
     நய மகள்   காணோம்  நெறி.
   
   
                                   பொருள்

1.     அஜமுகியோடு  போர் புரிந்து,அவளது கரத்தை வெட்டி,அவளது பிடியில்
இருந்து இந்திராணியைக் காப்பாற்றிட ,மாகாளர்   ஆற்றிய செயலைப் பாராட்டிய  இந்திரன்,அவர் ஆற்றிய போர் அருள்  வழங்குவதற்காகவும்,
இந்திராணிக்குப்  பாதுகாப்பு  வழங்கும் ஈகைப் பொருட்டாகவும் அமைந்தது
என்பதைக் குறிப்பிட்டு,அவரையும்,அவரது தலைவர் அய்யனாரையும் போற்றி வணங்கினான். சீர்காழியில்  உள்ள இந்திராணியையும் அழைத்துக் கொண்டு,சிவபெருமானைக்  குறித்துத்  தவம் புரியத் தேவகணத்தோடு
மேரு மலை நோக்கிச்  செல்லத்துவங்கினான்.

2.    கை இழந்த துன்பம்,பேரரசன்  தங்கையாகிய  தனக்கு ஏற்பட்ட கதியை
நினைந்து மிகவும்  வருந்திய  அஜமுகி.தனது தோழி துன்முகியுடன் இராசமாபுரத்து   அரண்மனைக்குள் ஓ,,,,ஒ  என  ஓலைமிட்டவாறு  நுழைந்தாள்.

3,        தேவர்களும்,கின்னர,கிம்புருடர்களும், நாகர்களும்,மண்ணுலக அரசர்களும்  போற்றியபடிப்  பாயிரம் பாடவும்,ஆயிரத்தெட்டு அண்டங்களை
ஆட்சிபுரிகின்றவனாயும்,எதிர்  இல்லாத பெரும் புகழ் கொண்டவனாயும்
விளங்கும் சூரபனமனது  பேரவை.

4.         பேரவையில்  வெற்றிக்களிப்போடும்,செருக்கோடும் உலகே  அஞ்சி வணங்கும்  பராக்கிரமத்துடன் சிங்காதனத்தில்   சூரபன்மன் அமர்ந்திருந்தான். அவனது   புகழையும்,பெருமையையும் அழிக்கமுற்படும்
பேய் போல, அஜமுகி  மார்பிலே  அடித்துக் கொண்டு,அவல அழுகையுடன்  அவ்வவையில் நுழைந்தாள்.

5.       ஆயிரம்  அண்டங்கள்   ஆளும்   அண்ணா! இறைவன் அளித்த பெருவரங்க்களால்  அழியாத  உடலும், ஆக் ஞா சக்கரமும் பெற்ற  அண்ணா!
சிங்க ஊர்தியும், சீரிய  நல்லாட்சியும் பெற்ற  அண்ணா! உன் தங்கையைப்
பார்! கை வெட்டப்பட்ட அவலத்தை  வந்து  பார்!உனக்கு அஞ்சி.ஒடுங்கி வாழும் அற்பர்களான  தேவர்கள்  ஆற்றிய கொடுமையைப்  பார்!இந்திரனது
வேண்டுகோளுக்கு இணங்க   மாகாளன் உன்னை  நினைந்து அஞ்சாமலும்,
உன் தங்கை எனத்தெரிந்தும்  கையை  உணதங்கையின்  கையை வெட்டிய
அவலத்தை வந்து  பார்! என முட்டி,மோதிப்  பெரிதாக அழத் தொடங்கினாள்.

6.    அண்ணா!நீ  விரும்பிய  இந்திராணியைக்  காடெல்லாம்  தேடி அலைந்தேன். மண்ணுலகில்  சீர்காழி என்னும் ஊருக்கு  அருகே  மூங்கில்
காட்டினுள்  தனியே  நின்றிருந்த  அவளைக் கண்டேன்; உன்னிடம் அவளைக்
கொணர்ந்து சேர்ப்பிப்பதற்காகக்  கரத்தைப் பற்றி  இழுத்தேன்; அவள்
ஓ" என அலறி.ஐயனாரே!என்னைக்  காப்பாற்றுங்கள்; எனக் கத்தினாள்.
 ஐயனாரின்  மந்திரத்தூதுவன் மாகாளன் தோன்றி, அன்னையே! துன்பம்
வேண்டாம்.யான்  உங்களைக் காப்பேன்" என்று சொல்லியவாறு,
இந்திராணியைப்  பற்றியிருந்த எனது  கையைத்  தன் வாளால் வெட்டினான்;
தடுக்க முனைந்த  தோழி துன்முகியின்  கரத்தையும்  வெட்டி வீழ்த்தினான்.
கூடவந்த   அரக்கர் கூட்டத்தையும் அழித்துவிட்டான்.அண்ணா! உன் அழகிய
தங்கையின் கையைப்பார்! என்று புலம்பியபடி அழுதாள்.

7. அந்தோ! தங்கையே! உனக்கா  இக்கதி?உன் கரமா வெட்டப்பட்டது?சூரனின் தங்கை எனத்தெரிந்தும்  தேவப்பதர்களில் ஒருவன்
வெ ட்டிவிட்டானே!  அமைச்சர்களே! பார்த்தீர்களா?அஞ்சி ஒடிப் பதுங்கும்
தேவர்களுக்குத்  தைரியம் வந்துவிட்டதா?நானே  போகிறேன்.அவனை  வீழ்த்தி வருகிறேன்;என் தங்கை யைக் காக்காது  சூரியனும்,சந்திரனும்
பார்த்துக் கொண்டிருந்தார்களா?வாயு  எங்கே  போனான்?அத்தனை  பேரையும்  சிறையில் தள்ளுங்கள்.சிங்கமெனச் சீறினான் சூரன்.வங்கக்
கடலென   ஆர்ப்பரித்தான் சூரன்.

8.  பிரம்மனே! வா.வெட்டுற்ற   எனது  தங்கையின்  கரத்தைப் பொற்கரமாக
உடனே  மாற்று.  ஓடோடி வந்த  நான்முகன் அஜமுகியின் கரத்தை  அழகுபட
மாற்றினான்.தங்கைக்கு  ஏற்பட்ட துயரைத்  தடுக்காமல்  பார்த்துக் கொண்டிருந்த  அத்தனை தேவர்களையும் சிறையில் அடைத்துத்
துன்புறுத்துங்கள்! ஆணை பிறப்பித்தான்.தந்தையைச்  சமாதானப் படுத்திய பானுகோபன்,படைவீரர்களுடன் தேவர்களை  அழித்து,இந்திரனையும்,
இந்திராணியையும் சிறைப்பிடித்த்வரப் பெரும் படையுடன்  புறப்பட்டான்.

9. தேவலோகம்  சென்ற  அரக்கர்  படை அவ்வுலகை  அழித்தது;
மாடமாளிகைகள்  தீயிடப்பட்டன.அஞ்சி ஒடி ஒளிந்தார்கள் தேவர்கள்;
இந்திரனின்  மகன் ஜெயந்தன் பானுகோபனை  எதிர்த்துப் போர் புரிந்தான்.
மந்திர  மாயப்போரில் வல்லவனான பானுகோபன் முன் தோற்று வீழ்ந்தான்.
அந்நகரையே தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தேவர்கள் அனைவரையும்
விலங்கிட்டு மகேந்திரபுரிக்கு  இழுத்துச் செல்லுமாறு ஆணையிட்ட பானுகோபன்,இந்திரனையும், இந்திராணியையும் தேடினான்.எங்கும் அவர்கள் இல்லை;சினத்துடன் தந்தை முன் வந்து நடந்ததைக் கூறினான்.

1௦.   சயந்தனையும், பிற தேவர்களையும் சிறையில் தள்ளிச் சித்திரவதைக்கு
ஆட்படுத்துக.காணாமல்  போன இந்திரனையும்,இந்திராணியையும் தேடுக.
என  ஆணையிட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக