ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

                                      வீரவாகு  தூது

1. அரக்கர்  வரலாறு   அல்லல்  அடிமை
    நிறைத்து  முடித்தார்  குரு.

2. ஆதலின்   ஆறுமுக!   தேவரைக்  காக்கவே
     வேதநெறிப்   போரைத்  தொடங்கு.

3.  சிவசக்திச்   செம்மை   வடிவமே! சேயோய்!
     சிவமளி   நற்பயன்  சேர்.

4.  வந்தனைச்   சொல்லுடன்  வாய்மொழி  தந்தவன்
      சிந்தனை   ஏற்றான்  குகன்.

5.  அரக்கரும்   சூரனும்   அத்தன்   படைப்பே;
     திறந்திட   நன்மனம்  காண்.

6.  அவனழி    கொள்கை   அவன்சிறை   அவலம்
      தவறெனச்  சொல்வோம் முதல்.

7.  தூதோன்   பயணம்   தொடங்குக  தொன்னெறி.
     தீதோன்    உணரின்  நலம்.

8.  நன்மை   வழிபுகின்  வன்னெஞ்சம்  தான்விடின்
     அன்போடு   ஏற்போம்   அகம்.

9.  இன்னென   கூறி  இயலுடன்   பேசியே
     பண்ணெனும்  சான்றோனைத்  தேடு.

1௦.  வினையை   முடிக்கும்  விரிமதி   வாகு
        புனைவான்  பணியைப்  புகல்.


                                         பொருள்
1.    வியாழ பகவான்  அரக்கரது  முழுவரலாற்றையும்  கூறி முடித்தார்.
     முருகனைப் போற்றியும், பணிந்தும்  அரக்கரது    தோற்றம் முதல் ,
இன்று  வரை  அவர்களது  கொடுங்கோன்மையையும்  விளக்கி,இறைவன்
அளித்த  வரங்களால்   சிறப்புற்றிருக்கும், அவர்கள் அவ்விறைவன்  நெற்றிக்
கண்ணிலே  தோன்றிய  சோதிச்சுடர்  குமரக்கடவுள்  ஆகிய  தங்கள் கரத்தாலே  மடிவர்  என்பது  விதி.ஆதலின்  அரக்கர்களை  அழித்துத் தேவர்களைக்  காக்க வேண்டும் , என்று  பணிவோடு வேண்டிக்கொண்டார்.

2.     முருகனே!  மூவேழ்  உலகங்களையும்,தேவர்களையும்  அரக்கர்களின்
கொடுமையிலிருந்து  காத்திட,  இன்றே  "தீமையை  அழித்து, நன்மையை நிலை  நாட்டப்   போர்  தொடுக்கலாம்" என்னும் மறை நெறி தழுவி,
அரக்கர்களை  அழிக்க ப் போர்   தொடங்குக.என்றும்  வேண்டினார்  குரு.

                                                 விளக்கம்
வேதநெறி ............இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

3.     சிவ  பார்வதி  உருவமாய்த்   தோன்றிய  சோதிச்சுடராம்  செந்தீ  அழகனே! இருவரின்  குமரனாக   வந்துதித்த  முருகா!  எதற்காக  உன்னை
இறைவன்  தோற்றுவித்தானோ,  அதற்கான   பணியைச் செயலை இன்றே
தொடங்கு, என்றும் குரு வேண்டினார்.

                                                விளக்கம்
  நற்பயன் .........பண்புத்தொகை .

4.   தன்னை  வணங்கி, வாழ்த்தி, வரலாறு  உரைத்த  வியாழனின் உரைத்திறம்  கேட்டு,மகிழ்ந்த   முருகன், அவரது வேண்டுகோளின்
உட்பொருளை நன்குணர்ந்து, அதற்கான்  வழி வகைகளை  ஆய்ந்து,
அதில் ஈடுபட ,அரக்கரோடு  போர் புரிய  முடிவு செய்து, மற்றவர்களுடன் அது
பற்றிப் பேசத் தொடங்கினான்.

5.     சூரனும்,அவனது  தம்பியரும், அவனைச் சார்ந்த  அரக்கர்  கூட்டமும்
எம்பெருமான்  சிவனின்  படைப்பே   ஆகும்;சிவபக்தர்களான   அவர்கள்
அழியவேண்டும், என்றோ.அவர்களை  அழிக்கவேண்டும்   என்றோ நாம்
மனதில் சிந்தனை கொள்ளவேண்டாம்.அவர்களுக்கு   நல்வழி   காட்ட முயல்வோம். என்று  தேவர்களை நோக்கிக்  கூறினான் வேலன்.

6. முதலில்  சூரனின்  மனத்தே   தவறுகளை  நீக்க முனைவோம்;அழிவுப்
பாதையில் செல்வதை  மாற்றுவோம்;தேவர்களைச்  சிறையில் அடைத்ததைத்  தவறென  உணர்த்துவோம்; தேவர்களைச்  சிறையிலிருந்து
விடுவிக்கச் சொல்வோம்;அன்பை  உணர்த்தி  அவனுக்கும்  நல்வழி மாற
ஒரு   வாய்ப்பு நல்குவோம்"  என்றார்  முருகவேள்.

7.    தீய நோக்கத்துடன்   வாழும் சூரனின்  மனத்தை மாற்றத்  தொன்மை நெறி   சார்ந்து தூது   அனுப்புவோம்;தீமை   தவிர்க்க; நன்மை  வழி நடக்க;
தேவரைச்   சிறையிலிருந்து  விடுவி; வேதநெறி  சார்ந்து   அன்பு போற்றுக ;"
என்றுரைக்கும் தூதுவன்   நமது சார்பாக  அவனிடம்  சென்று பேசட்டும்;
ஏற்பானாயின்  நாமும்   அன்பு   காட்டுவோம்.மறுத்து, மீண்டும் தீயன  பேசி,
அல்லனவற்றைப் புரிவானாயின்  போர்  தொடுத்து  வெற்றி  கொள்வோம்."
என்றுரைத்த   ஆறுமுகனின்  அன்பு உரைக்கு அனைவரும்  அடிபணிந்தனர்.

8.      வன்மை சார்ந்த  நிகழ்வுகளைக்  கைவிட்டு,தீய  செயல்களைக்
கைவிட்டு,நல்வழி   நாடுவான்  எனில், நாமும் அவனை,முழு மனத்தோடு
ஏற்போம்;அன்பு  காட்டுவோம்."என்றும் நல்லுரை  ஆற்றினார்  ஆறுமுகன்.

9.    என்றெல்லாம்  எடுத்துரைத்த  இளமுருகன் பேசிய  நல்லுரை கேட்ட  தேவர்கள்  அதனை  அப்படியே  ஏற்றுக் கொண்டு,அதன் படி  நடக்க முடிவு
செய்தனர்.அதன்  முதற்படியாகத்    தூது  அனுப்பத் தகுதியும், வீரமும்,
சொல்லாக்கமும், பேச்சாற்றலும் நிறைந்த   ஒருவனை   ஆய்ந்து தேர்வு
செய்ய முடிவும்  செய்தனர்.

1௦.      அறிவாற்றலும், கூர்ந்த மதியும், வீரமும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட
வீரவாகுவே" நல்ல  தூதுவன்   ஆவான்" என அனைவரும் ஒருமனதாக முடிவு
செய்து,அதனை, முருகக் கடவுள்  முன் வைத்தனர். அவரும் தகுதியானவனே
வீரவாகு"என்றதும்  அவனைச்  சூரன்  நாட்டிற்குத் தூது அனுப்ப முடிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக