சனி, 10 பிப்ரவரி, 2018

விஸ்வ ரூபம்

                                       விஸ்வ ரூபம்

1. இளையன்    இகலில்    எறிவோம்     என்றே
    விளைவறியா      வந்தீர்    அறி.

2.  வானோடு     மண்ணடி   விஸ்வரூப    வண்ணத்தை
     ஊனோடு       ஓங்காரம்    கல்.

3.  பாதாளம்     பைங்கால்:    கணைக்கால்      எழுதீவு:
     தீதில்லா     ஆடை     கடல்.

4.  திசைகள்      கரங்கள்:     திருநாபி      வானம்:
     நசைசுவர்க்கம்      நற்றலை    நாடு.

5.  ஞாயிறு        அக்கினி          திங்கள்      சுடர்க்கண்கள் :
     பாயிர            மேகம்   முடி.

6.   ஆன்மச்      சிவனவன்:   அன்னை       அருமதி:
      கோன்பிரமன்     பாரிசங்கள்      காண்.

7.  கலைமகள்      நாவில்       அலைமகள்      செல்வம்:
     அலை காற்று      ஈரைந்தும்    காற்று.

8.  சீற்றம்          உருத்திரன்:        செவ்வணி         நாகங்கள்:
     ஆற்றல்        மருந்து      மயிர்.

9.  காட்சி        அருளிய       கந்தன்       கருணையை,
     மோட்சத்       திறனுருவம்      போற்று.

 10.  ஆறுமுக    விஸ்வரூபம்     அன்பர்தம்    வேண்டுகோளால்
        பேரமைதி    பெற்றருள்    மன் .

                                           பொருள்
 
        தன்னை   உணராது எதிர்த்துப்   போரெடுத்த   தேவாசுரர்களை  அழித்த
எம்பெருமான்   முருகன்   தான்  யாரென்பதை   விண்ணவர்க்கு  அறிவுறுத்தும்
முகத்தான்  உலகளாவிய   தனது  பேருருவை   அவர்களுக்குக்  காட்டினார்.
விஸ்வ ரூபம் =  உலகளாவிய  பேருரு .

1.       இவன்   குழந்தை " இவனை   எளிதில்  வெல்லலாம்," என்றே  என்னோடு
போருக்கு   வந்தவர்களே! எனது  பராக்கிரமம்  அறியாது   படைகளைத்
தொட்டவர்களே!  என்னை,உலகளாவிய  என்   விஸ்வரூபத்தைக்  காணுங்கள்   என்று  மொழிந்த   குகன் மூவேழ்  உலகமும்   உள்ளடக்கிய
தனது   பேருருவைக்   காட்டினார்.

2.         மூவேழ்   உலகமும்,     பாதாள    இறுதி  தொட்டு      வான  முகடு  வரை
பரந்து   வியாபித்து   விளங்கும்   என்   பேருருவைப்   பார். ஓங்காரப்
பொருளாய்  உலகெலாம்    விரிந்து,உலகமெல்லாம்   என்னுள்   ஐக்கியம்
ஆகி நிற்கும்   வண்ணத்தைப்  பாரீர்!" என  முருகன்  தனது   பேருருவைக்
காட்டினார்.

                                                   விளக்கம்
"அகிலாண்ட  கோடி  பிரும்மாண்ட   நாயகன்: எனப்போற்றும்   மறைகள்.
"யாதுமாகி  நின்றாய்"  என்பார்   பாரதி.
அலகில்   சோதியன்"  என்பார்   சேக்கிழார்.
"மூவேழ்   உலகமும்   தானாகி"  எனப்போற்றும்   தேவாரம் .

3.     ஏழு   பாதாள  உலகங்கள்   திருவடியிலும் ,ஏழு    தீவுகள்     கணைக்காலிலும்,  ஏழு    கடல்கள்   அணிந்துள்ள    ஆடையிலும்,
அமைந்திருக்கும்  பேருருவைக்   காணுங்கள்.

4.     எட்டுத்    திசைகளும்   கரங்களுக்குள்ளும்,  பரந்துபட்ட     வானம்
நாபியென்னும்    தொப்புளுக்குள்ளும்,எல்லா   இன்பங்களும்  நிறைந்த
சுவர்க்க   உலகு,தலையிலும்   ஒளிர்வதைக்  காணுங்கள்.

5.     சூரியன்,   சந்திரன்,    அக்கினி (நெருப்பு)   ஆகிய    மூன்றும் ,  மூன்று
கண்களாகவும்,நன்மைக்கு  முன்னோடியாய்   விளங்கும்  மேகங்கள்
தலை   முடியாகவும்   விளங்குவதைப்    பாருங்கள்.

6.       ஆன்மாவாக,    சிவபெருமானும்,  அறிவுநிலையாக    அன்னை
கௌரியம்மையும்,  இடப்பாரிசமாகத்    திருமாலும்,    வலப் பாரிசமாகப்
பிரம்மதேவனும்   விளங்குவதைப்      பாருங்கள்.

7.       கலைநிலையாய்க்      கலைமகள்   நாவிலும், இலக்குமி  செல்வத்
திருநிலையிலும், 'ப்ராணன்"    முதலிய   பத்துக்    காற்றுகளும்,(வாயுக்கள்)
மூச்சுக்காற்றிலும்    விளங்குவதைப்     பாருங்கள்.

8.      காலாக்கினி    உருத்திரன்    சீற்றம்  மிகுந்த   கோபத்திலும்,
அனந்தன்"  முதலிய   எட்டு  நாகங்கள்   (பாம்புகள்)   அணிகளிலும்,
ஒளஷதி"  எனப்படும்   மருந்துகள்  உடல்  உரோமங்களிலும்  விளங்குவதைப்
பாருங்கள்.

9.    எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகள்  தவமிருந்தும்     காணக்    கிடைக்காத
விஸ்வரூபக்     காட்சியை, வீடு பேறு    நல்கும்   காட்சியைக்   காணுங்கள்.
கந்தனது  கருணையை   எண்ணி,அவன்   நம்மைக்   காக்க   வந்த    கடவுள்.
அரக்கர்களிடம்    இருந்து    நம்மை   மீட்க   வந்த  கடவுள்    என்பதை
மனதில்   நிறுத்தி,     அவனைப்     போற்றுவோம்"  என  உரைத்த   இந்திரன்
சொல்   கேட்டு   அனைவரும் முருகனைப்    போற்றி    வணங்கினர்..

10.    பேரொளி   மிகுந்த    பேருருவைக்     கண்டு ,நிலை   தடுமாறிய,  தேவர்கள்
எங்களைக்    காப்பாய்!  எழிலுடைய    அருள்பொழியும்   அழகுடன்   காட்சி
 தருவாய்!" என   வேண்டிய   தேவர்களின்   வேண்டுகோளை   ஏற்று,
முருகன்  எழிலோடும்,அருள்புரியும்   எளிமையோடும்   காட்சி    தந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக