திங்கள், 22 ஜனவரி, 2018

                                             சரவணம்

அரனார்  சரவணம்   அம்பிகை   சார்ந்து,
திறன்மகன்    கண்டார்   தெளி.

அருகணை   அன்னை   அரவணைப்பு   ஆறு
திருமுகமும்   ஒன்றாய்   ஒளிர்.

ஆடவும்,   பாடவும்   ஓடவும் ,  தேடவும்
ஈடில்லா    ஒவ்வோர்   இதழ்.

சுடருடை   ஞாயிறு   சுற்றிடும்   அண்டம்
சுடர்வேலன்    சென்றான்  நொடி.

கல்லோடு    கல்லும்,  நாகமொடு   நாகமும்
அல்லலில்லா   ஆட்டமும்   ஆடு.

மேலுலகம்   பாதாளம்,மேல்கீழ்  மாற்றிமாற்றி
மேலில்லை:  கீழில்லை   காண் .

வான்வழி    சஞ்சரிப்பன    போம்வழி   வேறாக்கி,
நானூறு   பக்கமும்   நகர்.

பூமியில்     விண்ணில்    திசைகளில்   கோள்களில்
நேமிபோல்   சுற்றினார்  வேல்.

குழந்தை    களநிலை    கண்டோர்    கலங்கி
மழுவால்    எதிர்க்கவே    மாள் .

இந்திரன்   வச்சிரம்    நில்லா    தழியவும்,
வந்தனை   தந்தார்   குரு .

                                        பொருள்

1.      அம்மையும்,  அப்பனும் ,  சரவணத்தில்   கார்த்திகைப்    பெண்டிரால் 
வளர்க்கப்   பெறும்   முருகனைக்    காணப்  புறப்பட்டனர்.  ஞானப்  
பு தல்வனைக்   கண்டு     அன்பு  செலுத்தி,  ஆறு   முகங்களை,  ஆறு
தத்துவத்  தெளிவை   வழங்க   வந்தனர்.

2.  பார்வதி!  நம்  மகனை  அழைத்து  வருவாய்!. என   ஈசன்  சொல்   கேட்டு,
அம்மை,  சரவணைத்து   விளையாட்டயர்ந்திருந்த்த   வேலனைக்    கண்டு,
உள்ளமெல்லாம், மகிழ, குழந்தாய்! அருகே  வா!  என அன்போடு   அழைத்து,
அணைத்து,உச்சி  முகர்ந்தாள்.அம்மையின்  அரவணைப்பில்   ஆறு
குழந்தைகளும்,ஒன்றாகி,ஆறுமுகங்களும்,பன்னிரண்டு    கரங்களும்
தோன்ற. ஓருருவாய்க்   காட்சி அளித்தார்.அன்று  முதல் " கந்தன்"
என்னும்  பெயரும் பெற்று   விளங்கினார்.
                         
                                           விளக்கம்

ஒளிர்"  என்பதால்  அன்னை அளித்த  அமுதப்பாலால்  ஞானஸ் கந்தனாகவும்,
அன்னையின்  கருணை  உள்ளதைக்  கொண்டவராகவும்,விளங்கினார், என்பதும்,  அன்னை  அளித்த  முலைப்பால்  சிந்தி,பொய்கையில்   முனிவர்
சாபத்தால்  மீன்களாக விளங்கிய  பராசர  முனிவரின்   பிள்ளைகள்   ஆறு
பேரும்    சாபம் நீங்கி,பரங்குன்றம்  அடைந்ததும்  ஒளிர்மிகு  நிகழ்வுகள்
ஆகும்," என்பதுகிடைத்த   நற்பொருள்.   மேலும்,  சரவணப்   பொய்கையில்
முருகனைக்  கண்ணும்  கருதுமாய்ப்  பாதுகாத்து வந்த   கார்த்திகைப்
பெண்களுக்கு,  சிவபெருமான்   நல்லருள்  புரிந்தார், " கார்திகைப்  பெண்களே!
நீவிர்  வானத்து  விண்மீனாக  ஒளிர்வீர்! முருகனின்  விழாக்களில்
கார்த்திகையே  மிகச்  சிறந்த தாக   அமையும். நீவிர்   வளர்த்த  காரணம்
கருதி,  முருகன், " கார்த்திகேயன் "  என அழைக்கப்  படுவான்"< என்றதும்
பெறப்படுகிறது.

3.   சரவணத்தில்   முருகன்   ஒருமுகத்தால்  ஆடுவான்,  அதே நொடி
அடுத்த  முகத்தால்  பாடுவான்,  ஓடுவான்:ஒருவரை   ஒருவர்   தேடுவர்:
ஆறுமுகங்களும்  ஈடு  இணையற்ற   ஆடல்களை   ஒரே  நேரத்தில்
புரிந்தன.

4.   ஞாயிறு  சுற்றிவரும்  அனைத்து   அண்ட   கோளங்களையும்  ஒரு நொடிப்
பொழுதில்  சுற்றி வந்திடுவான்  குழந்தை.
                           
                                                            விளக்கம்
"சுடர் வேலன் "  என்பதால்   ஒளி"  செல்லும்  விரைவும்,  ஒளியின்  பிரகாசமும்  உடையவன் கந்தன்  என்பது   சிறப்புப் பொருள்.ஒரே
நேரத்தில், கயிலையிலும் ,சத்யலோகத்திலும், வைகுந்தத்திலும்,
மண்ணகத்திலும் மற்றைய  கோளங்களிலும்    காட்சி   தருபவன்
என்பதும் ஒரு  பொருள்.

5.  குழந்தை   முருகன்  யாருக்கும்   துன்பம்   தராது, திறன்மிக்க     ஆடல்களைப்  புரிந்தான்,  விந்திய  மலையையும்,   மந்தர   மலையையும்
தூக்கி,ஒன்றோடொன்றை    மோத   விடுவான், திசை   காக்கும்  அனந்தன், தக்ஷகன் ,  வாசுகி   போன்ற   எட்டு    பாம்புகளைப்     பிடித்து வைத்துக்  கொண்டு, ஒன்றோடொன்றைச்   சண்டை   செய்ய விடுவான். அவனது
இளம்  விளையாட்டு  இது.

                                                  விளக்கம்
ஆட்டமும்"   என்ற  உம்மையால்,   மலைகளைத்   தலைகீழாக   நிறுத்தி
வைத்தல் ,  ஏழு  கடல்களை  ஒன்றாக  ஆக்குதல்,கங்கை  நதியை  ஓட
விடாமல்  தடுத்து நிறுத்துதல்,ஐராவதம்  முதலிய  எட்டு    யானைகளிடையே
போரை  உருவாக்கிப்  போர்புரியச் செய்தல், சூரியனைச்  சந்திரனாகவும்,
சந்திரனைச்   சூரியனாகவும்  மாற்றி  இயக்குதல்,பாதாள உலகில்  ஏழு
கடல்களையும் பாய்ச்சுதல்,போன்ற  பற்பல  ஆடல்கள்   பெறப்படுகின்றன.


6.   விண்ணில்    தவழும்   உலகங்களைப்     பாதாளம்  எனப்படும்  கீழ்
உலகிற்கும்,  பாதாள  உலகப்  பகுதியை    மேலுலகிற்கும்   மாற்றி , மாற்றி
அமைத்து    முருகன்  விளையாடினார். மேல் தட்டு ,  கீழ் தட்டு   என்ற
நிலையை  மாற்றி  சமத்துவத்தைப்   பறைசாற்றினார்.

                                                     விளக்கம்
  தனது   விளையாடல்   வழியே  உயர்வு,தாழ்வு   எண்ணத்தை  மாற்றிய
முருகனின்   செயல்   வியப்பைத்தருகிறது.


7.   வானத்தில்   வளைய   வரும்,கோள்களை,  பிற   மண்டலங்களை,
வழி   மாற்றி ,வேறு வேறு  பாதையில்  சஞ்சரிக்க  வைத்தார்.அதனால்
அவைகளும், அவைகளின்  வழி   மாற்றத்தால்   பிற  கோளங்களும்
தன்வழியை   மறந்து சென்றன. நொடி நேரம்   ஆடிய   ஆடலால்
துன்பமோ  துயரோ  ஏற்படவில்லை.ஆயினும்  ஏன்?எதனால்?
யார்   இது   செய்வது?  என்ற வினாவால்  அச்சமும்  அதிசய    நோக்கும்
கொண்டு  விளங்கினர்   தேவர்களும்,அசுரர்களும்.


8.    நிலவுலகில்   ஒருநொடி:மறுநொடி    விண்ணகம்:  அடுத்த    நொடி
கோள்களில்:   மறு   நொடி  பாதாள   உலகில்  என  வேலவன்   காற்றினும்
கடிதே    சென்று   அரக்கர்,தேவர்,   கந்தருவர்,   மனிதர்   என  எல்லோரையும்
வியப்பில்    ஆழ்த்தினார். சூரிய   நேமியோ?  இறைவன்  கரச்சக்கரமோ ?
என   வியந்தனர்   மூவேழ்   உலகத்தவர்.


9.    கண்முன்னே     நடக்கும்    காட்சிக்    களம்   கண்ட   அரக்கர்கள்  ஆற்றுவார்
திறன்  உணராமல்  குழந்தை  விளையாட்டு   என   உணராமல்  மழு,வில்,அம்பு,
வேல்   எனப்  பல்வேறு    படைகளை   எறிந்து ,எதிர்த்து, மாண்டு   போயினர்.


10.    அரக்கர்களைப்   போலவே,  அஞ்சி,  அரண்டு,  ஏதோ   மாயம்" என
எண்ணிய   தேவர்களும், அவர்களின்    தலைவன்   இந்திரனும்   போர்
தொடுத்துத்   தோற்றோடினர்.இந்திரனின்  வச்சிராயுதமும்   எதிர்க்க  இயலாமல்   ஒடிந்து  விழுந்தது.தக்க  நேரத்தில்   அங்கு   வந்த   வியாழபகவான்"   தேவர்களின்   ஆசான் ,  குழந்தை   முருகனின்
விளையாடலை   எடுத்துக்கூறி, எதிர்த்தமைக்கு   மன்னிப்பு  வேண்டி,
அவர்   காலில்  விழுந்து   வணங்குங்கள்"  அவரே   அரக்கர்களிடம்
இருந்து   உங்களைக்     காக்கத்    தோன்றிய   குமரக்கடவுள்"   என்றதும்
தேவர்கள்    அனைவரும்  வாங்கிப்   போற்றினர்   முருகனை.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக