14. இரவுக்குறி .
பகற்பொழுதில் தோழி குறிப்பிட்ட புனச்சோலையிடத்தில் தலைவியோடு,
கலந்து,இன்பம் அனுபவித்த தலைமகன், தோழியால் பகல்குறி
விலக்கப்பட்ட பின், தோழியால் வலியுறுத்தப்பட்ட திருமணம் புரிதல் ஒரு
முறை;அதனை ஏற்காத தலைவன், அதனால் இற்செறிக்கப்பட்ட தலைவி...
இந்நிலையில் தலைவன் தோழியை நாடி, இரவில் தலைவியைச் சந்திக்க
வாய்ப்பு வேண்டுவான்; இவ்விரவுக்குறி முப்பது மூன்று துறைகளைக்
கொண்டது.
14. 1. இரவுக்குறி வேண்டல்.
கொளு .
இரவில் புணரும் இனிமை நினைந்து,
பெருமுலைப் பாங்கியிடம் பரிவு வேண்டியது.
பொருள் ;-- இரவினில் கூடும் புணர்வின் இனிமை நினைந்து,
பெருத்த மார்பகத்தை உடைய தோழியிடம் உதவிட இரக்கம் காட்டுமாறு
வேண்டியது.
பாடல் --146.
தேவர்க்கும் அரக்கர்க்கும் மருந்து தீந்தமிழ்க் கமுது;
காவல் கடிவேல்; கருமேகத் தணிகைக் குன்றுடையான்
நாவலூர் நல்லருவி மரங்கள் சொல்கிளி நிறைந்து,
மேவிடம் மேன்மை விருந்தினன் ; மன்னிருள் மின்னிடையே!
பொருள்.
தேவர்களைக் காத்து, வெஞ்சிறை மீட்டுப் பகைவர்களான அரக்கர்களை
அழித்துக் காத்ததால் மருந்தானான்;
அரக்கர்களை அழித்தாலும் அவர்களுக்கு கருணை புரிந்ததால் மருந்து
ஆனான்.
இனிமைவாய்ந்த தமிழ்மொழிக்கோ அமுதம் ஆனான்; அவனது
காவல் சிறப்பினைப் பாதுகாப்பது அவன் கரத்தில் உள்ள வீரமிக்க வேல்
ஆகும்.கருணையை மேகம்போல் வழங்கும் முருகன் தணிகை என்னும்
குன்றிலே அமர்ந்தவன்;கருமேகங்கள் தங்கி மழையைப் பொழியும்
தணிகைக் குன்றிலே வீற்றிருப்பவன்.
அக்குன்றிலே உள்ள நல்ல சிற்றூர்; அருவிகளும், வளமான மரங்களும்,
நம்மோடு உரையாடும் கிளிகளும் நிறைந்து, வளத்தைப்பெருக்கும் நல்ல
ஊர்; உமது சிற்றூர்; இவ்வூருக்கு மதிப்புமிகு விருந்தினன் ஆக நான்
வந்துள்ளேன்; இருளிலும் மின்னும் சிறிதாய் கொண்ட தோழியே! என்னை
ஏற்று, உனது தலைவியிடம் என்னைப்பற்றிச் சொல்வாயா? என்று
தோழியிடம் தலைவன் வேண்டினான்.
விளக்கம்;--- மருந்து = நோய் தீர்ப்பது ;தேவர்களின் நோய் [அரக்கர் செயல்]
அரக்கர்களின் நோய் = தீமை மாறி நல்லடி சேர்தல் .
2 கருமேகம் = மழைபொழிய விரும்பும் நிலை; கருணை பொழிய விரும்பும்
குன்றத்தான்
3 . சொல்கிளி = மழலையாய்ப் பேசும் கிளி .
மெய்ப்பாடு -------- பெருமிதம்.
பயன் ------------ இரவுக்குறி நேர்வித்தல் .
14.2. வழி அருமை கூறி மறுத்தல் .
கொளு .
இரவு வருதல் விரும்பி உரைத்திட ,
அருமை வழியுரைத்து மறுத்தாள் பாங்கி.
பொருள்;--- இரவுக்குறி வருத்தலகேட்ட தலைவனிடம், தோழி.
செல்ல முடியா வழிநிலைமை விளக்கி, உரைத்தது.
பாடல்--147.
முள்ளொடு கல்லும், முனைமுறி சில்லும் முளைப்பூண்டுமே
செல்வழி சீறும் காற்று, நில்லாமழை, நிறைபள்ளமும் ,
வல்லிருள் வழிக்குகை, வடிவேலன் தணிகைச் சிற்றூர்
இல்லாத பற்றினால் வழுக்கிடும் ; நல்லவ ! நாடற்க .
பொருள் .
தலைவ ! வடிவேலனின் திருத்தணிகை மலையிலே அமைந்த மிகு
உயரத்தில் உள்ள எம்மூருக்குச் செல்லும் வழியெங்கும் முட்செடிகள்
காலில் குத்தும்;வழிநிறைந்த கற்களும்,முனை முறிந்துபோன சிறு சிறு
சில்லும் காலைக் கடிக்கும்; பாதையில் முளைத்துள்ள முள்ளுள்ள
செடிகளின் இலைகள் காலில் பட்டால் அரிக்கும்; மேலும் வழியெங்கும்
மழைக்காற்று சீறும் ; விடாது மழை கொட்டிக்கொண்டே இருக்கும்;
அந்த நீர் தேங்கிப் பாரிய பள்ளங்கள் உருவாகிக் கீழே விழவைக்கும்;
கடும் இருட்டில் செல்வதால் வழி குகைக்குள் செல்வதுபோல் இருக்கும்;
நடப்போர் கால்கள் பற்று இல்லாது நடந்தால் வழுக்கும் பாறைகளில்
வழுக்கி விழுந்திடுவோம்; இப்படிப்பட்ட வழியில் நல்ல தலைவனே!
இங்கு வராதே! என்று தடுத்து நிறுத்தினாள் தலைவனைத் தோழி.
விளக்கம்;-- 1 . சில்லும் = சிறு சிறு உடைந்த கற்கள் .
2 . பூண்டு = ஒருவகைச்செடி .
3 . பற்று = பிடிப்பு.
மெய்ப்பாடு ------- இளிவரல் .
பயன் ---------------இரவுக்குறி மறுத்தல் .
14.3. நின்று நெஞ்சுடைதல்
கொளு .
இரவுக் குறிதனை விலக்கிய பாங்கி
தரவினால் தலைவன் தன்நெஞ்சு உடைதல் .
பொருள்;-- தோழி. இரவுக்குறி இடையீட்டை எடுத்துச்சொல்லி விலக்கவும்
மனம் பொறாத தலைவன் மணமடைந்து வருந்துதல்.
பாடல்-- 148.
பிறப்புறு ஊமையைப் பைந்தமிழ் பாடவைத்த பரமன்,
சிறப்புறு சீர்த்தணிகைக் குன்றின் முடிநுனித் தேனடை
குறைக்கால் விரும்பும் வேடிக்கை நிலைபோன்ற , நெஞ்சமே!
சிறைக்கனி, நறவிதழ் உறவிற்கு நானும் அழுவேன் .
பொருள்.
பிறப்பால் ஊமையாய்ப் பிறந்த குமரகுருபரனைத் தன்னருளால்
கந்தர்கலிவெண்பா" பாடவைத்த மாமுருகன், அமைதியென்னும்
சிறப்புவேண்டி அணைந்தமர்ந்த தணிகை மலைக்குன்றின் கூம்பன்ன
சிகரத்தின் உச்சியில் உருவான தேனடையை,விரும்பும் காலில்லா
ஒருவன்போல, வேடிக்கை நிலைக்கு ஆளான நெஞ்சமே!
கச்சையால் சிறைப்பட்ட மார்பகத்தையும், தேன்பொழினிக்கும் இதழையும்
சுவைத்து,உறவுகொள்ள விரும்புகின்ற நானும் இயலாமையினால்
உன்னைப்போலவே அழுகிறேன்' என்று புலம்பினான்.
விளக்கம்....1 ஊமை = வாய்திறந்து பேச இயலாதவன்.
2 . முடிநுனி = மலைச்சிகரத்தின் கூம்பு முனை.
3 . குறைக்கால் = காலில்லா [சிதைந்த கால் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக