; சுவாமி நாத சதகம்
கணபதிக்காப்பு ;
1. மலைமேவு மாமுருகன் மன்மலைப் பேருரு:
கலைஞான நற்கோலம் : கரமைந் ------- தலையிடர்ப்
பாசமலப் பற்றறுத்துப் பைந்தமிழ்த் தாள்போற்ற
வீசுபுகழ் நாயக! காப்பு .
பொருள்
குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரன்; மூவர்க்கும்
முதல்வனானனவன் ; அவன் வீற்றிருக்கும் மங்கள மலை போன்ற
பெரும் உருவம் கொண்டவனே ;உலகிலுள்ள கலைகளின் ஞான ஸ்வரூபியே ;
யானைமுகமும், ஒடித்த ஒரு தந்தமும், பருத்த வயிறும், அஞ்ஞானம் அகற்றும்,
ஞானநோக்கும் கொண்ட அழகுக்கோலம் கொண்டவனே ; நான்கு கரத்தோடு
ஐந்தாவது கரமாகிய துதிக்கையையும் கொண்டவனே ; பிறவி உயிர்களைப்
பற்றிக்கொண்டு, ஓயாத கடலலைபோல துன்பம்தரும் பற்று,பாசம்,
ஆணவக்கன்ம மாயாமலங்களை நீக்கி, யோகம் வழங்கும் மாமுருகன்
சுவாமிமலைக்கடவுள் ,புகழ்ப்பாடவரும் போற்றவரும் , சுவாமிநாதசதகம்
என்னும் செந்தமிழ்க்காப்பியத்தால் போற்றிட அருள்புரிவாய்!
தென்றல்போல்,பொதிகைபோல் , புகழுற்ற விநாயகப்பெருமானே !
காத்திடுவாய் உலகை. வாழ்த்திடுவாய் தமிழ்ப்பாடலை. கற்போரும்,
கேட்போரும் நன்னிலை அடைய அருள் புரிவாய்! என்று வணங்கி
வேண்டுகிறார் ஆசிரியர்.
2. மாமுருகன் மாமலை மாவுரு மேலதாகி ,
சேமவழிச் சீர்மையாய்ச் சோமநாத ------ ஓமாகி
ஏமவழி ஐங்கரத்தாய்! ஈரிரண்டு சொன்மாலைத்
தேமதுரத் தீந்தமிழ் கா.
பொருள்
இறை வாழ்த்தின் இரண்டாம் படியாக இப்பாடல் அமைகிறது.
பாட்டுடைத் தலைவன் பைந்தமிழ் முருகன். அவன் வீற்றிருக்கும் இடம்
குறிஞ்சி மலையாகும். அந்த மாமேரு,இமயம், தணிகை , சுவாமிமலை
போன்று,உயரமும்,அகலமும், வளங்களும், கொண்ட பெரும் உடல்வளத்தைப்
பெற்று விளங்குபவர் விநாயகர். உலகின் எந்த நன்மைக்கும் அவரே
முதலானவர்; சேரும்,சிறப்பும் உயிர்களுக்கு வழங்குபவர். எல்லாம்வல்ல
எம்பெருமான் சிவபெருமானின் உபதேசத் திரு ஓங்கார உருவமாக
விளங்கும் மூத்தமகன்; ஐந்துகரம்கொண்டு அனைத்துலகையும் காப்பவர்;
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட விநாயகப்பெருமானே !
அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கையும் தன்னுட்கொண்டு,
சுவாமிமலை முருகன்மீது பாடப்படும் சதகநூல் மாலையை ,இனிமை
உடையதாகவும், எளிமை உடையதாகவும் அமைந்திட வாழ்த்திடுவாய்!
பாட்டுடைத்தலைவன் புகழ் நிலைக்க அருள்வாய்! படிப்போரும் ,கேட்போரும்
பல்லின்பம் பெற்றிட அருள்வாய்! என்று ஆசிரியர் வேண்டுகிறார்.
3 . கணநாதா! கையொடித்த தந்தத்தால் காத்த
மணநூலின் மாதவனே ! முருகக் ------- குணநூலை
முத்தமிழைத் தத்துவத்தை நித்தியமாய் மூவுலகும்
புத்திகொள்ள வித்திடுக வாழ்த்து.
பொருள்
சிவகணங்களின் தலைவனே! வியாசமுனிவனின் மகாபாரதம் எனும்
நூல் வழிவழி சிறக்கவும்,அறக்கருத்து உலகில் வளரவும், தனது தந்தத்தை
ஒடித்து,அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதி,அந்நூலை நித்தியமாய்
மூவேழ் உலகிலும் நிலைநிறுத்திய தவமுதல்வனே! அதேபோன்று,
மாமுருகன் புகழ் பாடவந்திருக்கும் சுவாமிமலை சதகம் என்னும்
முத்தமிழாம்,தத்த்துவமாம், இந்நூலையும்,நித்தியமாய் நிலைக்க
அருள் புரிவாய். மூவுலகும் இந்நூற்கருத்தை மனத்தில் கொண்டு
முருகனைப் போற்றிவாழவும் அருள்புரிவாய்! பாட்டைப் பாட்டுடைத்
தலைவனை வாழ்த்திடுவாய்! உனது தாமரைச்சேவடிக்கு எனது
வணக்கங்கள். என்று ஆசிரியர் விநாயகரைப் போற்றுகிறார்.
1. முருகன் அவதாரம்.
பாடல்..1.
1.1. பத்தியும் நீ; பரமனும் நீ.
உலகத்து நலமெல்லாம் உண்மையில் நீயேயாவாய்;
உணர்ந்தோர்க்கு அதுபுரியும்;
நிலையாகி நின்றிட்டாய்; நித்தியமும் நீதானே ;
நிலத்தோர்கள் நீளறிவர் ;
வலையாகி மீனாகி வலிகூட்டும் உணவாகி ,
வாழ்வதனின் இலக்கணம் நீ ;
பலமற்றோர் பெருங்கூட்டப் பத்தியினைக் கண்டாலும்,
பலன்பெறுவோர் அறிபவன் நீ .
கலையெல்லாம் காசிற்கே ; கவினெல்லாம் காசிற்கே ;
காலத்திலே கணிப்பவன் நீ.
சிலையாகிப் போனதாலே சீர்தூக்கல் மறந்தாயோ?
மலைமுட்டி மனம்நொந்ததே 1
கவலையே கணக்காகிக் காலமெல்லாம் கால்பற்றினும்
கண்காட்டாக் கந்ததேவே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
சதகம் நூல் விளக்கம்
போற்றுதற்குரிய பெரும்பொருளைப் பற்றி.ப் பெருமைகள், அருளறங்கள்,
போன்றவற்றை விளக்கிப்பாடுதல் , அல்லது, உலக நன்மைகளை உள்ளூறக்
கொண்ட வழிமுறைகளை வரிசைப்படுத்தி அதன்வழியே பாட்டுடைத்
தலைவன் புகழ் பாடுதல் , அல்லது எடுத்துக்கொண்ட தலைப்பிற்கேற்ப
நாடு,நகர மேன்மைகள், வழிவழிச்செய்திகள் ஆட்சிமுறை,
போன்றவற்றையும் பாடுதல், என்ற நோக்கத்தில் நூறு விருத்தப்பாடல்கள்
பாடுவது சதகம் ஆகும்.
சதகம் என்பது நூறுடையது ;நூறுபாடல் கொண்டது என்பதேயாகும்.
பாட்டின் முத்தாய்ப்பாக இறுதி அடி அனைத்துப்பாடல்களிலும்
ஒன்றாகவே அமைத்தல்; பாட்டுடைத்தலைவனின் பெரும்புகழை
விளக்கிப் பல்வேறு சொற்றொடர்களில் அழகுற அமைத்துப்
பாடுதல் ஒருமரபு .
இலக்கணவி ளக்கம் போன்ற நூல்களில் கூறப்படும் முறை தழுவி
இந்நூல் " சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!"
என்னும் பெருமைமிக்க தொடரால் சுவாமிமலை முருகனைப்
பாடுவதாக அமைந்துள்ளது. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தப்பாடலாக அமைந்துள்ளது.
பத்து அதிகாரம் கொண்டு பாடப்பட்டுள்ளது. முருகனின் அவதாரம்
தொடங்கி என்னும் தலைப்புகளில் பத்துப்பத்துப் பாடல்கள் வீதம்
நூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அந்த வகையில் முதல் அதிகாரம்
ஆகிய அவதாரத்தில் பத்தியும்,பத்திகொண்டவன் தேடி அடைவதற்கான
பரமனும் சுவாமிமலை சுவாமிநாதக் கடவுளே ஆவார் என்பதை
முதற்பாடல் விளக்குகிறது.
பொருள்
உலகம் , மக்கள்,நன்மை,தீமை, இவைகளை ஆக்கியவனும்நீ; நன்மையாய்க்
காப்பவனும் நீ; அனைத்துமானவன் நீயே. இது கற்றறி ஞானிகளுக்கு நன்கு
புரியும்.
அழியா முத்தி ஆனந்தமான நீ அழகுச்சிலையாய் ஆங்காங்கு
நின்றிட்டாய்; நின்றாலும் நித்தியமானவன் நீயேயாவாய். மூவேழ்
உலகிலும் வாழும் கோடிக்கணக்கான சாமானிய மக்களும் இதனை நன்கு
அறிவார்.
மீன்களைப்பிடிக்கும் வலையும் நீயேயாவாய்; அவ்வலையில் படும் மீனும்
நீயே; வலிமைபெற வாழ் மனிதர்களுக்கு உணவாகவும் நீ ஆகிறாய்; உலகில்
யாவுமாகி, உயிர்களின் உள்ளத்திற்கும், செயல்பாடுகளுக்கும் விளக்கம்
காட்டும் இலக்கணமாகத் திகழ்பவன் நீயேயாவாய்.
பணபலம், உடல்பலம், போன்றவை இல்லாத கோடிக்கணக்கான
உன்னடியார்கள் உன்னைத்தேடி, உன்கோயிலைத்தேடி ஆடியும்,பாடியும்
காவடிஎடுத்தும் உன்புகழைப் பாடியவண்ணம் வெய்யிலிலும், மழையிலும்
வருகிறார்கள். வந்தவர்களின் உண்மைவடிவத்தை உள்ளப்பாங்கை நன்கு
அறிந்த நீ அவ்வவர்க்கு ஏற்ற அருளைப்புரிகிறாய்;
கற்ற கலைகளைக் காசுக்குவிற்று, உயிர்வாழ்வோர் ஓராயிரம்;
ஓவியம்,சிற்பம், இலக்கியம் போன்றவற்றையும் வயிற்றுப்பிழைப்பிற்காக
விற்று வாழ்பவரும் ஓராயிரம்; அவ்வவற்றை அறிந்து அவரவர்க்கு ஏற்ற
வாழ்வியல் மாற்றங்களை அளிப்பவனும் நீயே.
ஆற்றவேண்டிய செயல்களை ஆற்றாமல், காலம் பறிபோகிக் கடுந்துயர்
வந்தபின்பு கடவுளே! முருகா! கண் திறந்து பார்க்கமாட்டாயோ?
காதுகொடுத்துக் கேட்கமாட்டாயோ/ வாய் திறந்து வழி கூற மாட்1டாயோ?
சிலையாகிப் போனதாலே செயலாற்ற மறந்தாயோ? என்று ஏகமாகப் பேசி,
நின்னருள்வேண்டும் கூட்டம் ஒருபுறம்; உன் மலையிலே தலையை முட்டி
மோதி உயிரை விடுவேன்; என்முன் வா! எனக்கு செல்வம் கொடு! நல்லுடல்
கொடு ! பதவி கொடு ! என்றெல்லாம் துன்பமிகுதியில் புலம்புவோர் கூட்டம்
ஒருபுறம்.
கவலை, இல்லாமை, துன்பம், இவைகளே என் சொத்தாகின;
இளமை,முதுமை எல்லாக்காலங்களிலும் வறுமை!வறுமை! உனது
கால்களைப் பற்றிக்கொண்டு கதறுகிறேன் ; உன்னருள் பார்வை என்மீது
விழவில்லையே! கல்லாகிப்போனதோ உன் நெஞ்சமும்? என்போர் ஒருபுறம்.
இவர்களுக்கு இடையே கடனைச்செய்யாமல் பலனை எதிர்நோக்கும்
பக்தர்களே! என்றழைத்தபடி சிவஞான வழியில், உயரமோனத்தில்
ஒன்பான் யோகத்தவத்தில் நிற்போனே ! தந்தையாம் சிவனுக்கே
உபதேசித்த குருநாதனே ! சுவாமிநாதா! உன்னடி போற்றுகிறேன்.
பாடல்..2.
1.. 2. அழகாடலே முருகன்
தழல்கூட்ட வழல்பொறி சுழல்நடு வெழுகருணை
விழுத்தோன்றல் குழந்தை நீ .
குழுக்கூட்டம் பழிபாவச் செழுமுள்மரம் அழிந்தழிய
உழுவீர முழுமை நீ.
அழுவிண்ணகப் பழுதுமாற்றிட மழுவருள்வேல் தழுதுளத்தாய்
பழுதறுத்தர விழுமுதல்நீ .
அழுகுரலதை முழுபுவன மெழுவிசையெனத் தொழுதுபணி
அறுமீன்கள் அறுமுகன் நீ .
கழுகுமலை சுழுமுனையில் மழவாடல் எழுமலைகள்
தழுதழுக்கச் செய்தவன் நீ.
அழுங்கடலே கொழுவானாய், எழுந்தீயே சுழிகாற்றாய்
விழிமாற்றி வைத்தவன் நீ.
அவதியினில் பவக்குறைவோர், சிவநாமச் சீரந்தணர்
கவலையறு சிவமகன் நீ .
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே !
சுவாமிமலை க் குருநாதா!
பொருள்
தீமைகளை அழிப்பதற்காக, கயிலைக்கடவுள் நெற்றிக்கண்ணன்
விழிப்பார்வை அழல்பொறி வெளிப்பட, அதிதீப்பொறியின் அளவுகடந்த
சுழல் தழலில் ஆனந்த மாக்குழவியாய் அவதரித்தவன் நீ.
மூவுலகிலும் ஆளுமை பெற்ற அரக்கர் கூட்டம் இறைவரத்தால் வலிமை
பெற்றதை மறந்து ஆணவமேம்பாட்டில் தேவர்களைத் துன்புறுத்தி,
மறைவழி மாண்புகளை அழித்தொழித்த அரக்கர் கூட்டத்தை அழித்து
தேவர்களைக் காத்தவன் நீ. மறைவழி காத்தவன் நீ. பழி பாவங்களைச்
செய்த முள்மரம்போன்ற தீயக்கூட்டத்தை அழித்த முழுமை பெற்ற
மாவீரன் நீ.
துன்பப்படும் தேவரக்கூட்டத்தின் துயர்போக்கி, தக்கயாகத்திலே
தேவர்கள் செய்த குற்றத்தை மாற்றி, இறைக்கருணைக்கு அவர்களை
ஆளாக்கி, அன்னை தந்த வேலின் துணைகொண்டு குற்றம் புரிந்த
அரக்கர் கூட்டத்தின் பழிபாவங்களையும் அழித்து அருள்புரிந்த அரனாரின்
புதல்வனாகி, மூவருக்கும் முழுமுதவன் ஆனவனும் நீ.
சரவணப் பொய்கையிலே மலர்களாய் மலர்ந்து அவதரித்த உனது
அழுகுரல் மூவேழ் உலகிலும் தேவகானம் போல் இசைத்தொலிக்க ,
அவ்வோசையில் மயங்கி மகிழ்ந்த கார்த்திகைப் பெண்டிரான ஆறு
விண்மீன்கள் விரைந்துவந்து எடுத்து, உச்சி முகர்ந்து, பாலூட்டிச்சீராட்டி
வளர்ந்த ஆறுமுகன் நீ.
கழுகுமலையில் நின்றபடி, நின்றபடி, காற்றைச்சுழிமுனையில் நிறுத்தி,
இளங்குழந்தை விளையாடும் பந்தாட்டம்போல் உயர்ந்த மேருமுதல்
சிறுமலைவரை எடுத்துத் தூக்கியெறிந்து, மேலும் கீழுமாய் அவைகளை
மாற்றி விளையாடி மலைகள் உன்கரம் பட்டதால் சிலிர்த்து, மகிழ்ந்து
தொடு (ஸ்பர்ச ) சுகத்தை உணர்ந்து மகிழ்வடையச் செய்தவன் நீ.
சிறுகுழந்தை ஆடல்போல் ஆழ்கடலை வானத்தில் நிலைக்கச்செய்து,
பரந்த வானத்தைப் பாதாளத்தில் அமுக்கிவைத்து, வீச்சுகாற்றைத்
தீயாக்கி, எரியும் தீயைக் குளிர்காற்றாக்கி விளையாடியவன் நீ.
பிறவியென்னும் பிறப்பிறப்பிலே துன்பமுற்று, நிலைதாழ்ந்த
முனிவர்களும், சிவ சிவ என்று எப்பொழுதும் கூறிக்கொண்டே வாழும்,
உயர்ந்தோர்களும், பிறவி என்னும் கவலையை மறந்து சிவகதி பெற
அருள்புரிபவன் நீ.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றருள்புரியும் சுவாமிநாதா! உனதடி போற்றுகிறேன்.
பாடல்..3.
1. 3. அறமுதலும் அறுமுகனே .
அம்மையோடு வந்தசிவம் அழகுமகன் அருள்காட்ட,
மும்மையுணர் மூதரசி
அம்மவோவென் றன்போடு அணைத்தனளே ஆறுகுழவி
அணைகரத்தால் ஒன்றாயின;
மும்மலத்தை வென்றதந்தை முகநோக்கி முழுதுணர்ந்த
முளைப்பயிரே விழுதாமே.
செம்மலரைச் சீராட்டிச் செவ்வேத முதலாக்கிச்
செயக்கந்தன் ஆக்கினரே .
மம்மரறு மணிமுத்தை மகரந்த மலர்க்கரத்தை
மதிமுகத்தை, மணவடியை
இம்பருலகு எழில்மீன்கள் ஏந்தியேந்தி அன்புபக்தி
இன்புகந்த இளங்குழவி.
தவக்கோலப் பொய்கையும், தழல்வாயுத் தண்ணாறும்
புவப்பதியும் சிவமாமே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா.
பொருள்
சரவணப்பொய்கையில் அவதரித்த ஆறுகுழந்தைகளையும், கண்டிடவே
ஆசிபுரியவே அன்னையும் தந்தையுமான பார்வதி பரமேஸ்வரர்கள்
வந்தனர். அருள்பொழியும் அழகுமுக அரும்புதல்வனைக் கண்ட
ஆருயிரன்னை மும்மையும் உணர்ந்த முதுமகள் ,
அம்மம்மா! என்னே அழகு! என்னே அருள்நோக்கு! என்றபடி ஆறு
குழந்தைகளையும் அன்போடு குனிந்து,வாரியெடுத்து அணைத்துக்
கொண்டாள்; அன்னையின் கரம் அனைத்து மகிழ்ந்த தருணம் அவ்வாறு
குழந்தைகளும் ஒன்றாயின; அணைத்த அன்னைக்கரம், அருகமைந்த
ஆண்டவனின் அருள்நோக்கு ஆன பல ஆசிகூடியதால் அழகுக் கந்தன்
ஆனான் அக்குழந்தை.
மும்மலத்தைவென்றவனும்,மும்மலம் பற்றாதவனும் ஆகிய செஞ்சிவனாம்
பரம்பொருளாம் தந்தையின் முகம் நோக்கியது தாயின்கையிலுள்ள
குழந்தை. முன்னைப்பரம்பொருள் முழுதுணர்ந்த முகநோக்கு
அக்குழந்தையை எல்லாம் அறிந்த கற்றுணர் ஞானியாக, இளந்தளிரிலேயே
ஆழ்ந்து பற்றும் வேறுடை ஆன்றமரமாக அருள்பாலித்தது.
தாய்,தந்தை இருவரும் ஒருங்கு கூடி அகமகிழ்ந்து ஆசியளித்து,
அன்புடன் அணைத்துப் பற்றியகாலை ஆறுகுழந்தைகளும் ஒன்றாகி,
அருள்காட்டும் கந்தனாகிக் காட்சியளித்தது. அம்மையப்பர் ஆசிநிறைவால்
அனைத்தும் பெற்றவனாகிய கந்தன் ஆனது அக்குழந்தை.
செந்நிறமலராய் விளங்கிய தன்மகனை தாய் தந்தையரான இருவரும்
சீராட்டினர் ; கொஞ்சிமகிழ்ந்தனர் ; பாலூட்டினர் ; வேதாகமம்
புகட்டியதுபோல அக்குழந்தை வேதமுதல் ஆயிற்று. வீரமும் வெற்றியும்
நிறைந்து விளங்கும் வெற்றிவேல் முருகனாம் கந்தன் ஆனது அக்குழவி .
இருள் என்னும் அறியாமையை அகற்றவந்த மணியை,முத்தை,
இளந்தளிர் போன்ற மலர்க்கரத்தை, நிலவுபோன்ற முகத்தை, நறுமணம்
மிக்கதாகிய சேவடியைப் போற்றிப் பாதுகாக்கவும், பாலூட்டிசச்சீராட்டி
வளர்க்கவும், விண்ணகமகளிர் விண்மீன்கள் கார்த்திகைப் பெண்கள்
அறுவர் விண்ணுலக்கிலிருந்து சரவணப்பொய்கை வந்து குழந்தையைக்
கண்ணும் கருத்துமாய்க் காத்தனர். அவர்களது பணியை அந்த
இன்பக்ககுழவி உகந்து ஏற்றுக்கொண்டது.
இப்பாடலில் இன்புகந்த குழவி என்பதை, இன்பத்தை உகந்து
ஏற்றுக்கொண்ட குழந்தை என்றும்,
இன்பமாகிய கந்தன் என்ற குழந்தை எனவும் பொருள் கொள்ளலாம்.
குழந்தையாய் அவதரித்து, நிலைத்தவம் கொண்ட பொய்கையும்,
கொணர்ந்து சேர்த்த நெருப்பும்,காற்றும், தாங்கிகுளிரவித்த கங்கையாறும்
சிவக்குழந்தை வளர வகை செய்ததால் அவைகளும் சிவமாகவே
தோன்றின. சிவமாகவே உடன் நின்றன. குழந்தையை ஏற்று அதன் புகழ்
வளரப் பாடுபட்ட இந்நிலவுலகும் சிவமாகவே காட்சி தரும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே !
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..4.
1 . 4. பரம்பொருளே பாலகன்
வளர்ந்தன வளர்ந்தன வளப்பொய்கை அலையகத்தே;
வலைப்பாசக் கலைக்கூடம்;
கலைந்தலைந்தன கருமேகக் கார்கூட்டம் கலைக்கரத்தால்;
முளைப்பாலன் முதுவேகம்;
தளர்ந்தோடின தேவசேனை; தளர்ந்ததுவே தனிவச்சிரம்;
உளத்தஞ்சின ஒருநான்கும்;
முளரிநாடு அலறிடவே, களம்காண நிலைகொள்ள
விளக்கினானே வியன்னாரதன்;
மலைநடுங்கின; மனம்நடுங்கின; மதிகோள்கள் விதியெண்ணின;
அலைகாற்றும் அனல்பிறவும்,
தலைதப்பித் தொலைநோக்கால் குலைநடுங்கிப் பலமிழந்தன;
நலக்குமர! நாயகன் நீ.
உவகையால் புவனமெலாம் சிவமாக்கிய பவோத்பவ!
பவன்படைத்த பரம்பொருள் நீ.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலை க் குருநாதா!
பொருள்
சரவணப்பொய்கையிலே பாலகனாய் அவதரித்த ஞானப்பரம்பொருள்
வளர்கின்ற நேரத்தில் பற்று,பாசம் விட்டொழிக்கும் பண்பும், வளர்ந்தன;
பரம்பொருள்மீது பற்றுற்றுப் பணிந்து போற்றும் பங்கும் முறைகுறையே
வளர்ந்தன; அவ்வலைசூழ் பொய்கை ஞானக்கலைக்கூடமாக மாறியது.
இளந்தளிராக இளங்குழந்தையாக அங்கு அவதரித்த ஞான்று, தோன்றிய
அறிவு வளர்வு,படைமாட்சி, கைக்கொண்ட பாலகன் செயலால் அரக்கர்
கூட்டமாம் கருமேகம் கலைந்தோடிற்று; ஒழிய இடமின்றி ஆங்காங்கு
தவித்து நின்றன.
சிலிர்த்து எழும் வேற்படைக்கூட்டம்கண்டு தேவலோகப் படைகள்
அஞ்சிநடுங்கின; எதிர்க்க வந்த இந்திரனின் வச்சிராயுதம் வளைந்து
ஒடுங்கியது; நான்கு தலையுடைய பிரும்மதேவனும் இளம்வீரம் கண்டு
நடுங்கினான்; தாமரைக்கண்ணான் நாடும் தளர்ந்து எதிர்க்க முடியாமல்
ஓடிற்று. காலத்தில் தோற்றுநின்ற இந்திரன் முதலியோர்க்கு நாரதன்
முருகனின் தோற்றம் கூறி, அவன் பெருமையையும் உரைத்து வணங்கி
வழிபட வழிகாட்டினான்.
விளையாட்டாய் முருகக்குழந்தை எடுத்த போரிலே விந்தம்முதல் மேரு
வரை, மலைகள் எல்லாம் நடுநடுங்கின; வானத்துக்கோள்கள் எல்லாம்
தத்தம் நிலையிழந்து தடுமாறி,வழிமாறி வகையறியாது நிலைகுலைந்தன;
அக்கினி, குளிராயிற்று;காற்று தன்னிலை இழந்தது; இடம் மாறி இடருற்ற
அவைகளெல்லாம் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்றஞ்சி
வலியிழந்து நிலைகுலைந்தன; நற்குழந்தையின் நனிவிளையாட்டு.
உலகோருக்குத் தன்வருகையை விளையாட்டாய், வினைச்செயலாய்
உணர்த்திய வேலவா! பரம்பொருளின் நெற்றிக்கண் தோன்றிய
பவோத்பவா !நன்மைகளின் தலைவன் சிவபெருமான் படைத்த
பரம்பொருள் நீ அல்லவா!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..5.
1. 5. உணர்த்த உயர்ந்தோன்
உணராத பணக்கூட்டம், வணங்காத சினக்கூட்டம் ,
குணமுற்ற குலக்கூட்டம்,
தணல்போற்றும் தவக்கூட்டம், இனத்தேவர் தலைக்கூட்டம்
உணர்ந்திடவே உயர்ந்துநின்றவ!
அண்ணாமலை அரும்சோதி அடிபூமி முடிவானாய்,
மண்ணார்ந்தும் , விண்ணார்ந்தும்,
கண்ணிலவுக் கதிர்சூரியன், கயிலைப்பதி கருஞ்சடையுள்,
கருஞ்சுழிமால் , கருவுருநால் ,
பொன்னாள்உரம், பூவாள்கரம், பொலிவாள்நா, பண்மொழியுடன் ,
என்புவச்சிரம், அன்புநெஞ்சம்
பொன்னியாள்,புவி கோள்கள்,தீ, தென்றல்,திரள் தேவகூட்டம் ,
தன்னுள்தான் தரித்தவா !
அவனிநிறை காய்கனிமரம் , ஆன்றகனி, ஈன்றபசு
அனைத்தையுமே அகமுண்டவா
சிவஞான, பரமோன , நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
பரம்பொருளே குழப்பிதையாய் அவதரித்து உலகைக் காக்க
வந்துள்ளான் என்பதை உணராத, உணரமுடியாத தீமைப்பாம்பு போன்ற
நச்சுக்குணம் கொண்ட கூட்டமும், ஆணவத்தால் தாமே உயர்ந்தவர் என்ற
மமதையில் சினத்தோடு திரியும் கூட்டமும், நல்லகுணங்கள் பெற்று வாழும்
நற்குடிப் பிறந்தோர் சால்புக் கூட்டமும், வேள்வி அக்கினியே தெய்வம்
போற்றும் வழி,என வாழும் முனிவர் கூட்டமும், இந்திரன் முதலிய வழிவழி
விண்ணவர் கூட்டமும் , தன்னை, தனது பரம்பொருள் தன்மையை
உணர்ந்திட,உயர்ந்தோங்கி நின்றவா!
அண்ணாமலை தோன்றிய அரும்சோதிபோல் அடி நிலமாகி , முடி
வானாகி , மண்ணெல்லாம் நிறைந்தும், விண்ணெல்லாம் விரிந்தும்
நின்றவா!
கண்கள் நிலவும்,சூரியனும், ஒளிமிகு கதிரும் ஆயின; கயிலைப்பதியாகிய
சிவனோ செஞ்சடையுள் ; நாபிக்கமலத்தில் திருமால்; கருக்குறியில்
நான்முகன்; பொன்போன்ற பார்வதி நெஞ்சில்; இலக்குமியோ கரத்தில்;
கலைவாணி நாவில்; பண்ணிசை,மொழி கள் திருவாயில் ; என்புகளோ
வச்சிரம்; அன்பும்,அருளும் மொழியில். காவிரி,கங்கை, ஆறுகள்,
மூவேழுலகம், நலக்கோள்கள், அக்கினி,வாயு, காற்று, தென்றல், திரண்ட
தேவ.அறக்கக் கூட்டங்கள், இவைகளை உன்னுள் அடக்கியவா!
உலகெலாம் நிறைந்துவிளங்கும் மரங்கள், செடிகள், கொடிகள்,
காய்,கனி,இலை, பூ, விலங்குகள்,கன்றுகள் போன்ற பலவற்றையும் தன்னுள்
அடக்கியவா!
சிவஞானமாய் விளங்குபவனே!மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
பணிந்து போற்றுகிறேன்.
பாடல்.6.
1. 6. குழந்தை விளையாடல்
செஞ்சிவனின் செஞ்சுடரே, விஞ்சுபுகழ் மஞ்சையாய்
அஞ்சுலகு காக்கவந்தவா!
மஞ்சுசூழ்ந்த கஞ்சமலர்த் தஞ்சமன்னான் சத்துலகை,
செஞ்செல்வச் சீர்மைத்தாள்
கொஞ்சுமார்பன் நஞ்சுசயனன் வஞ்சமால் கடலாக்கி,
மஞ்சமாற்றிய மகிழ்குழவியே !
இந்திரனூர் இடுகாட்டில்; இடுகாட்டோன் இந்திரபதம் ;
அந்திமத்தான் பொந்துபுலம்;
செந்தீயது செங்கடலுள்; மந்தமாருதம் மாக்குகைக்குள் ;
வந்தவினை தந்தவனே!
உந்துகோள்கள் சந்துமறப்ப உடுமீன்கள் நடுநிற்க,
விந்தைபல உந்தனாடல் ;
தவமுற்றோர் தருக்கற்றப் பவமாகவே நவமாக்கிய
சிவவழியின் தவப்புதல்வ!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே 1
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
செந்தீ வடிவம் உடையோன் செம்மைக்கருணைமிகு பரம்பொருளின்
நெற்றிக்கண் தோன்றிய சுடரே! வியக்கத்தக்க புகழைக்கொண்டு,
மயிலாய்,மயிலானாய் அரக்கர்களால் அஞ்சித்தவிக்கும் பேருலகைக்
காக்க அவதரித்தவனே!
மேகம் சூழ்ந்த உலகில், தாமரைமலர்மீது அமர்ந்தவன்;( தாமரைமலர்மீது
அமர்ந்த சரஸ்வதியைத் தஞ்சம் அடைந்தவன்) பிரும்மதேவனது சத்ய உலகை,
செம்மைச்செல்வத்தின் தலைவி, தம்மைத் தனது நெஞ்சத்திலே
வீற்றிருக்கவைத்துப் போற்றிக் கொஞ்சுபவன்; பாம்பினைப்படுக்கையாகக்
கொண்டவன்; மாயத்திருமால் வீற்றருளும் பாற்கடலாக மாற்றினாய்!
இருவர் நாட்டையும், சிங்காதனத்தையும் மாற்றிய மகிழ்வடைந்த
குழந்தையே!
இந்திரனது செல்வமாளிகையை இடுகாடாக்கியும், இடுகாட்டவனாகிய
நிருருதிக்கு இந்திர மாளிகையையும் என மாற்றியவா ! இறப்பை நல்கும்
இயமனுலகை மரப்பொந்தாக்கிக் குகையும் ஆக்கியவா ! எரிக்கும்
அக்கினியைக் குளிர்மிகுந்த கடலுக்குள்ளும், ஆற்றல்மிகுந்த காற்றினை
அடங்கியொடுங்கும் குகைப்பகுதியிலும் மாற்றி அமைத்தாய்; முற்பிறவி
வினைபற்றி இவ்வாறு விளையாட்டாய் வழங்கியவா!
தன்வழியில் நிலையாகச் செல்லும் கோள்களின் வழிகளை மாற்றி
அவைகளது பயணத்தை அலைக்கழிக்க வைத்தவா! ஆங்காங்கு தத்தம்
இடத்தில் ஜொலிக்கும் விண்மீன்களின் செல்வழி மாற்றி அவைகளை
நிலவுபோல் நடுவானில் கண்சிமிட்டவைத்தவா! உந்தனது விளையாட்டு
விந்தையும், வினைசார்ந்த தண்டனையாகவும் அமைந்ததோ!
தவத்தால் உயர்ந்த முனிவர்கள் ஆணவமும்,கர்வமும் இன்றி
நல்லவழி நடப்பேன் அவர்களுக்குச் சிவ உலகு நல்கும் ஒன்பான்
யோகங்களை அருள்பவனே ! நவயோக நற்பலனாம் சிவ வழி,சிவகதி
அருளும் சிவக்குமரா !
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் சிறந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றருளும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல். 7.
1.7. தந்தைக்கே உபதேசித்த ஞானகுரு
வெண்கயிலை பெண்ணினல்லாள் மன்னுபாகக் கண்மூன்றான்
தண்ணருளான் தங்குமலை;
மண்கணங்கள் பண்பாட மலைக்கணபதி சண்முகனுடன்
வன்னந்தி முன்நில்மலை ;
காணவந்த திருமாலும், மோனநிலை முனிவர்களும்
கணபதிகுகன் பணிந்தனரே .
வீண்கர்வ வேதமுதல் வெறுத்தேகும் நான்முகனிடம்
வியன்பிரணவப் பொருள்கேட்ப,
தடுமாறித் தத்தளிக்கக் கடுஞ்சிறை அடைத்திட்டார்;
விடுத்தசிவம் விரும்புபொருள் ;
எடுத்துயர்த்தி ஏகாந்த ஞானவள்ளல் வாய்பொத்தி,
வடுபதேசம் கேட்டாரே.
சிவமான தந்தையைச் சீடராக்கிய சுவாமிநாதா!
சித்தாந்த ஞானமகனே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
வெண்பனி போர்த்திய கயிலைமலை; பெண்களில் அருளும், அறமும்
கொண்டு மிகமிக நற்கருணைகொண்டவளாகிய பார்வதி தேவியைத் தனது
உடலில் ஒரு பாகமாகக் கொண்டவன்; நெற்றிக்கண் உடையவன்;
அடியவர்களுக்கு அருள்பொழியும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித
மலையாகும்.
மிகப்பெரிய மாளிகைபோல் விளங்கும் அம்மலையின் நுழை
மண்டபத்தில் பண்பாடிப்போற்றும் கணங்களும், விநாயகப்பெருமானும்,
குமரக்கடவுளும் அமர்ந்திருப்பர்; மலைப்பாதுகாவலர் நந்திதேவரும்
அங்கு நின்றிருப்பார்.
அன்றாடம் எம்பெருமானாம் சிவபெருமானைக் கணவருவோர் பற்பலர்;
விண்ணவர்களும்,திருமாலும், முனிவர்களும் சிவனை வணங்கவந்து
முன்மண்டபத்தில் உள்ள கணபதியையும், முருகனையும் வணங்கியே
செல்வர்.
படைக்கும் முதல்தொழில் செய்யும் கர்வம் கொண்ட பிரம்மதேவன்
பரம்பொருளைக் காணவந்தவர் முன்வாயிலில் அமர்ந்திருந்த கந்தனை
வணங்காமல். இச்சிறுவனை நான் ஏன் வணங்கவேண்டும்? நான்மறை
வல்லுநன் நாம்; என்ற அகந்தையை வணங்காது உள்ளே நுழைய
முற்பட்டார். அவரைத தடுத்து நிறுத்திய குகன், அவரது பெயர்,செய்யும்
தொழில் போன்றவற்றை வினவினான். ஆணவம் மேலிடத் தன்னை
மிகமிக உயர்திக் கர்வத்துடன் மறைமுதல் தானே, படைப்புத் தொழில்
புரியும் உயர்ந்தவன் தான், என விடையளித்தான் பிரமன். மறையறிந்த
அவனிடம் வேதமுதலாம் பிரணவத்தின் பொருள் கூறுமாறு முருகன்
கட்டளையிட்டான் ,
ஆணவமலத்தால் கட்டுண்ட அவன் மனத்தே அப்பொருள்
தோன்றவில்லை; தடுமாறித் தலைகுனிந்தான் பிரமன்.
ஓங்காரப்பொருளறியா உமது இடம் சிறைச்சாலையை எனச்சிறையில்
அவனை அடைத்தார் முருகன். விசின்னவர் வழியே செய்தியறிந்த சிவனார்
பிரமனை விடுவித்தார். பிரணவத்தின் பொருளைத் தனக்குக் கூறுமாறு
வேண்டினார்.
குருவாய்த் தன்னை ஏற்றுப் பணிவோடு கேட்பின் அருள்வேன்" என
மகன் கூறியதும், தந்தையாகிய சிவபெருமானாம் பரம்பொருள்
முருகனைத் தோளில் சுமந்து, பணிந்து வாய்பொத்தி மகனிடம்
உபதேசம் கேட்டார். வடு= இளம்வேதம் பயில்மணவன் (பிரும்மசாரி )
உலகுக்கே குருவான ஞானவள்ளல் ஆகிய தந்தையாம் சிவபெருமானைத்
தனது சீடராகக் கொண்டு ஓங்கார உபதேசம் செய்த ஞானகுருவே!
சுவாமிக்கும் நாதனான சுப்பிரமணியக்கடவுளே!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
பாடல்..8.
1.8. உபதேச அருளுற்று உயர்ந்தோர்
நவவீரர் நலமிசைத்த நவஇரவு நல்லிசையாள்
நலப்பாகால் நன்குணர்ந்தாள்.
அவவிழுங்கு அமலவனும், தவமக்கள் கமலினியும்
அவம்போக அன்றுணர்ந்தனர் .
மௌலியால் மண்டியிட்டு மறைத்தலையன் மனம்கொண்டான்;
மௌனவாணி மௌலியேற்றாள் .
தவக்குறுமுனி தழல்கௌசிகன், தழல்கீரன் , தளிர்வள்ளி
தவநிலையால் சிவம்பெற்றனர்.
அவமுற்ற வரக்கனுமே அருளுற்றான் அகச்சொல்லால்;
துவண்டிடும்பன் தூயதொண்டன் ;
சிவக்கச்சி யப்பரோடு, குகானுபவம் உவந்தவர்கள்
செந்தமிழ்க்கிரி குமரகுருவும்.
பவவினை பலவும் பரிகரி உபதேசச்
சிவகதிதரு சிவதேவா!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
முருகனுக்குத் தொண்டு செய்ய வீரவாகு முதலிய நவ வீரர்களைத்
தனது அருளாசியால் தோற்றுவித்த நவராத்திரியென்னும் ஒன்பதுநாள்
விழாவெடுத்துப் போற்றும் நவதேவிகளாக உருக்கொண்டவளான
பாரவ்தி அம்மையும் பிரணவ உபதேசத்தை எம்பெருமான் சிவன்
பெற்றகாலையே தானும் பெற்றாள் ; அவரின் ஒருபாகமாக விளங்குபவள்
அல்லவா!
உலகையே ஒருசமயம் விழுங்கிய திருமாலும் , தவம்புரிந்து கண்டு
நன்மை அடையும் மக்களால் போற்றப்படும் இலக்குமியும், தங்களின்
மலமாயை அகல நல்லுபதேசம் பெற்று உய்ந்தனர்.
தனது நான்கு தலைகளும் நிலத்தில் படுமாறு வணங்கிய பிரம்மதேவன்
ஆணவம் அகன்று அவ்வுரை மனம் கொண்டான்; அமைதியே
உருக்கொண்ட கலைவாணியும் அனைத்துக்கலைகளும் நிறைந்த தனது
மதியிலே இவ்வுபதேசத்தை மிக உயர்வாகக் கொண்டாள்.
அகத்தியமாமுனிவர் அடிவணங்கி அவ்வுபதேசம் பெற்றார்;
கௌசிகமாமுனியும் அருள்பெற்றார்; தமிழ்ப்புலவராகிய நக்கீரரும்
திருப்பரங்குன்றத்தில் உபதேசம் பெற்றார்; நீண்டநாள் தவமிருந்து
முருகனை மணாளனாய் அடையும் தருவாயில் முருகனே வள்ளிக்கு
உபதேசம் செய்தருளினார்.; இவர்கள் எல்லோரும் தவமேன்மையால்
அருள்பெற்றனர்.
ஆணவத்தால் இறுமாந்திருந்த சூரபன்மனும் முருகனின் நோக்கு
தீட்சையால் பேரின்பம் பெற்றான். எதிர்த்து ப் போர் புரிந்த இடுமபனும்
முருகனின் அம்புகள் பட்ட ஸ்பர்ச தீக்கையால் தொண்டனாகி நாளும்
பணிவிடையாய்க் காவடி தூக்கிப்போற்றினான்.
கந்தபுராணம் பாடிய செஞ்சிவக் காஞ்சியில் தோன்றிய கச்சியப்பர்
குகனையே கண்டு, பாடலின்முதலடி எடுத்துக்கொடுக்கவைத்து
நல்லுபதேசம் பெற்று விளங்கினார். திருப்புகழ் பாடிய அருணகிரியும்,
குமரகுருபரரும் உபதேசம் பெற்றே உயர்ந்தனர்.
இந்நிலவுலகில் பழவினை,பிறவிவினை போன்றவற்றை நீக்கி,
மும்மலங்களை அழித்து, நற்சிவனின் நல்லடி பெற வழி வகுப்பது
பிரணவ உபதேசம் ஆகும்.அவ்வருளை அன்பர்க்கு வழங்கிய
சிவமைந்தனே! சிவனின் சிவமே!
சிவஞானமாய் விளங்குபவனே!மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே!
உன்பொன்னடியைப் பணிந்து போற்றுகிறேன்.
பாடல்..9.
1. 9. அவதார அருளாற்றல் .
நெற்றிப்பொறி முற்றும்சுடர் பற்றும்பணி சுற்றுச்சுழல்
உற்றேயுளம் சற்றேகுலை,
நற்றாயவள் பொற்பூசலாய் யிற்றோடக் கற்சிலம்பு
அற்றேமணி சுற்றிழந்தன;
நவமணிகள் தவமாகச் சிவப்பார்வை உவப்பாக,
நவகர்ப்பம் நவசிசுவாம்;
புவப்பதியாள் அவச்சாபம் சிவமுயல்வு கவல்நீங்க
நவவீரர் சிவமகன்களே.
அஞ்சியோடிய மஞ்சையவள் மஞ்சனநீர் பஞ்செனநிலம்
மஞ்செனத்தெரி குஞ்சுகளாம் ;
விஞ்சையர் விஞ்சுவலம் புஞ்சைநில மஞ்சுகளாம் ;
அஞ்சிலக்க வாறிலக்கமாம்.
சிவச்சார்பு தவக்குமரன் புவம்காக்கும் உவப்படையிது ;
அவவரக்கர் அழிவதுறுதி .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா.
பொருள்
சிவபெருமானின் நெற்றியிலிருந்து மகனைத் தோற்றுவிக்கப்
பொறியானது பளிச்சிட்ட காலத்தே மூவேழ் உலகங்களும் அஞ்சி
நடுங்கி ஒடுங்கியதைப்போலவே அன்னை பராசக்தியும் அவ்வொளியும்,
ஒலியும் ஏற்படுத்திய அச்சமிகு தோரணையால், தானும் அஞ்சியே
ஓடினாள். ஓடிய காலத்தே காற்சதங்கைகள் அசைந்தாடி அப்படியே
கழன்றுவிழுந்தன. வேகத்தில் சிலம்பினுள் இருந்த நவமணிகளும்
இங்கும் அங்கும் பறந்து விழுந்தன; நவ மணிகளும் நவதேவியராய் நாணி
நடந்தன; அத்தேவியர் மீது தீப்பொறி வெளிப்படுத்திய சிவனாரின் குளிர்ப்
பார்வை பட்டது; நவதேவியரும் புதிதாய்க் கர்ப்பம் உற்றனர்;
செய்தியறிந்த சிவத்தலைவி சினந்து அவர்களுக்குக் கடுஞ்சாபம்
இட்டாள் ; குழந்தைகள் கர்ப்பத்திலிருந்து வெளிவாராதிருக்க , அன்னை
பணித்த சாபம் கேட்டு , அங்குவந்த சிவனார் அன்னையைச் சமாதானப்
படுத்தி, அக்குழந்தைகள் உடன்பிறந்திட வழிவகை செய்தார்.
அக்குழந்தைகளே நவவீரர்கள் ஆவர்.
அன்னை அஞ்சி ஓடியகாலை உடலெல்லாம் வியர்வை நீர்போல்
வழிந்தது; அத்துளி நிலத்தில் வீழ்ந்தது; மென்மையான நிலம் அத்துளியை
ஏற்றுக் குழந்தைகளாக வெளியிட்டது; பல இலக்கம் துளிகள்;பல இலக்கம்
வீரக்குழந்தைகள்; விண்ணவர்க்கு இணையான வலிமை பெற்ற அவைகள்
இலக்கக் கணக்கில் குவிந்தனர்;அரக்கர்களை அழிக்கும் படையில்
வீரர்களாக இணைந்தனர்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே!தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!சுவாமிமலையில்
வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உனது பொன்னடிகளைப்
போற்றி வணங்குகிறேன்.
பாடல்.10.
1.10. அவதார நோக்கம் துவக்கம்
அன்னையவள் அன்னத்தாள் முன்னவனோ வண்ணக்கரி,
பண்ணெருது தானபெற்றான்;
தன்னைப்போல் தனியூர்தி தனயனுக்குத் தான்வழங்க,
நாரதன்வழி நாடகத்தான்
மன்வேள்வி மறைக்குறையால் வன்னாடு புண்ணாக்கத்
துன்புற்றோர் நன்மையுற,
முன்வந்த வீரவாகு முன்னோனருள் பின்வாங்கிட
அன்பாடுமே பண்ணூர்தி.
கன்னியிருவர் நண்ணியமால் மன்னன்புகழ் நன்றுரைக்கத்
தண்ணவனும் முன்னருளினான்.
மின்னமுதப் பொன்னழகியர் நண்ணினரே தண்ணழல்தவம் ;
பெண்ணிருவர் பெற்றனர்பதம்.
தவமேன்மைத் தேவயானை, உவக்காதல் நலவள்ளி ,
தேவக்குற குலத்துதித்தனர்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
அன்னை பார்வதியம்மைக்கு ஆனைப்பறவை ஊர்தி; விநாயகனுக்கோ யானை வாகனம்; அறக்கடவுளாம் காளையோ தனக்கு ஊர்தி.
தன்னைப்போலவும், பிரமன்,மால் போலவும் தன்மகனாம்
முருகனுக்குத் தனியூர்தி அளிக்கவேண்டும் என்ற அருள்நோக்கு
உற்ற சிவபெருமான், நாரதன் வழியே ஒரு நாடகம் நடத்தினார்.
தான்தொடங்கிய வேள்வியில் ஓதப்பட்ட மந்திரக்குறைபாடுகளால்
வேள்வித்தீயில் தோன்றிய ஆடு ஒன்று படாதபாடு படுத்துகிறது;
அதனை அடக்கி என்னையும், தேவஉலகத்தையும் காப்பாற்றுவாய்
முருகா முருகா என்று ஓலமிட்டபடி ஓடிவந்தார் நாரதர்.
அறிந்த முருகன் அன்புத்தம்பியைப் பார்க்க விரைந்துவந்த
வீரவாகு ஆட்டை அடக்கி, ஆறுமுகன் முன் நிறுத்தி இதனைத்
தாங்களே ஊர்தியாகக்கொள்ளவேண்டும் என்றுபணிவோடு கேட்க,
ஏனைய தேவர்களும் அவ்வாறே வரம் வேண்ட மாமுருகன்
ஆட்டின்மீது அமர்ந்து அனைத்துலகும் சுற்றி வந்தான். அன்றுமுதல்
ஆடு முருகனது ஊர்தி ஆயிற்று.
தன்னுடைய இரண்டு மகள்களான அமுதவல்லி, சௌந்தர்யவல்லி
ஆகிய இருவரிடம் மருகன்,முருகன் பெருமைபற்றிப் பேசினார் ஒருநாள்
திருமால். அன்றிலிருந்து முருகனையே கணவனாகப் பெறவேண்டும் என்ற
எண்ணத்தில் கடுந்தவம் இருந்தனர் இருவரும். அவர்கள் முன் தோன்றிய
முருகன் கன்னியரே! மிக்க மகிழ்ச்சி; நீங்கள் செய்த இத்தவத்தால்
இக்கணமே அமுதவல்லி நீ இந்திரனுக்கு மகளாகவும், சௌந்தர்யவல்லி
நீ மான்மகளாகி நம்பிராஜன் என்ற மலையரசனால் வளர்க்கப்பட்டு
வளருங்கள்; தக்கசமயத்தில் நானே வந்து உங்களை மணப்பேன் " என்று
வரமளித்தார்.
தவமேன்மையால் இந்திரன் மகளாகி ஐராவதம் என்ற
வெள்ளையானையால் வளர்க்கப்பட்ட அமுதவல்லி தேவயானை என
விண்ணவர்களால் போற்றப்பட்டாள் . சாபத்தால் மானான இலக்குமியின்
வயிற்றில் உதித்த மக்கள் மலையரசன் நம்பிராசனால் வள்ளி என்ற
பெயரோடு சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டாள் .
இவ்வரலாறுகள் நிறைந்த
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே!தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உனது
பொன்னடிகளைப் போற்றி வணங்குகிறேன்.
2. வீற்றிருக்கும் வியன் தலங்கள்.
பாடல்..11.
செந்திப்பதி செம்பழனி சீர்குன்றம் சுவாமிமலை,
அந்திருத்தணி பழமுதிர்கா .
முந்திநிற்கும் விந்தியங்கள்; பந்தம்தரும் பலபார்ப்போம் ;
பந்தநல்லூர், பெரும்புலியூர்.
இடைமருதூர், நாகேச்சரம் சக்கரப்பள் ளி ,வலஞ்சுழி
ஆடுதுறை, சிவபுரமே .
பூந்துருத்தி, கொட்டையூர் , மாந்துறை , உய்கொண்டான் ,
திருப்பராய்த்துறை , ஆனைக்கா.
திருநெடுங்குடி, குமாரவயலூர், திருச்சிராப்பளி , கழுகுமலை,
திருச்செந்தூர், திருவிலஞ்சி .
திருவிக்கிர மசிங்கபுரம், குற்றாலம்,அவிநாசி,
திருமுருகன் பூண்டியாய்க்குடி .
சிவத்தமிழால் அருணகிரி தவமாகப் பாடிட்ட
சிவக்குமரன் நவப்பதியே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
சுவாமிமலை சுவாமிநாதக்கடவுள் வீற்றருளும் தலங்களின்
திருநாமங்கள்; முதலில் முத்தாய்ப்பாய் விந்தியமலைபோல்
உயர்ந்தோங்கி விளங்கும் அறுபடை வீடுகளாம் திருச்செந்தூர்,
பழனி, திருப்பரங்குன்றம்,சுவாமிமலை,திருத்தணிகை,பழமுதிரும் சோலை
ஆகிய பதிகள் ஆகும். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முறையே
சென்று பாடிய திருத்தலங்களின் பட்டியலை வரும்பாடல்களில் காணலாம்.
பாடல் . 12.
திருப்புகழ்த்தலங்கள்
திருத்தணிகை ஆலங்காடு திருவொற்றியூர் அண்ணாமலை,
தேவிகாபுரம் செய்யாறு,
திருவாரூர் மாகாளம் வீழிமிழலை திருஎண்கண் ,
திருச்செங் காட்டாங்குடி ,
திருவிற்குடி, குடவாசல், திருவாஞ்சியம், சிதலப்பதி ,
திருவேப்பூர் திருவல்லம்,
விரிஞ்சிபுரம் வள்ளிமலை, காங்கேய நல்லூர்,
திருநாவலூர், ஆமாத்தூர் ,
திருவெண்ணெய் நல்லூர் திருவக்கரை, திருப்புவனம்,
திருச்சத்தி முற்றமொடு,
திருப்பனந்தாள், பிரான்மலை, காளையார் கோயில்,
திருநல்லூர், கோணமலை,
சுவாமிமலை, கீழ்ப்பழுவூர், திருவான்மியூர் , மயிலாப்பூர்,
காளஹஸ்தியில் குடிகொண்ட,
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
13.
திருமுல்லை வாயிலொடு பேரூர், திருவேட்களம்,
திருவதிகை, திருத்தளூர்,
திருவாமூர், மாணிக்குழி, வலிதாயம் , கடம்பூர்,
திருப்பா திரிப்புலியூர்,
திருக்கடலை யாற்றூர், தீர்த்தமலை, திருப்பழனி,
திருக்கொடுமுடி, பவானி,
திருவேற்கா டுத்திர மேரூர் ,திரு நள்ளாறு,
திருப்பரங் குன்றமொடு,
வேலாயு தம்பாளயம், குளித்தலை, சோலைமலை,
வெஞ்சமாங் கூடலூர்,
நால்வேத ஆரண்யம் நற்றேவூர், பெரம்பூர்,
நற்கைவிளாம் சேரி,
சிவநடனத் திருவழுவூர், திருமயானம், குத்தாலம்,
சிவமகனாய்க் குடிகொண்ட ,
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
14.
புள்ளிருக்கு வேளூர் , புள்மயிலா டுதுறை,
பேளுக்குரிச் சி, சிக்கல்,
உள்நிறை செங்கோடு , உடையாப் பட்டி,
உத்தரகோ சமங்கை,
திருப்புன வாசல்முதல் விராலிமலை, இராமேச்சரம்,
திருப்பத்தூர், குன்றக்குடி ,
திருவாடா னை,இரும்பறை , கோடியக்கா, வட்டத்துறை,
தில்லைத் தானப்பதி ,
திருநூற்றிரு பதில் ,கிரியார் போற்றிய திருப்புகழ்த்
திருத்தலங்கள் குடிகொண்டு,
திருக்கோவை மாவட்டத் திருத்தலங்கள் அருள்தொடங்கி,
மருதூர், மாதப்பூர்,
சிவச்சின்ன வேடம்பட்டி, செஞ்சேரி, சென்னாமலை ,
சரவணம் பட்டிகொண்ட
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
இந்த நான்கு பாடல்களிலும் அருணகிரிநாதர் பாடிப் புகழ்ந்த
முருகன் வீற்றிருக்கும் நூற்றிருபது தலங்கள் வரிசைப்படுத்தப் பட்டன.
இனி மாவட்ட வாரியாக முருகன் வீற்றிருக்கும் தலங்களைப் பார்ப்போம்.
முதலில் கோயம்புத்தூர் மாவட்ட முருகன் கோயில்கள் ......
15.
கோத்தகிரி குனியமுத்தூர், கோட்டுபுள்ளாம் பாளையம்,
குமரன்குன் றோதிமலை,
போத்தனூர் சாலையூர் , இரும்பறை , வேல்கோட்டம்,
மருதமலை, குழந்தைமலை,
ஊதியூர், அன்னூர், உயர்ந்த நீலகிரியில்
குன்னூர், எல்க் மலை.
தீதிலாத் திருப்பூரில், சிவன்மலை, வட்டமலை,
ஆதிவாழ் பாப்பன்குளம்.
பச்சைமலை, பவளமலை , உதயகிரி, கொடுமடுவு,
பவானி, கொடுமுடி,
மலையப்ப பாளையம், கோபிநாயக்கன் பாளையம்,
தண்டல்மலை ஈரோடு .
சிவசேலம் சென்னிமலை, குமரகிரி, கஞ்சமலை.
வடசென்னி மலைவாழ்க .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
16.
காட்டினாயன் பள்ளி,அகரம், கிருஷ்ணகிரி; தருமபுரி
குமாரசாமிப் பேட்டை.
காங்கேய நல்லூர், இரத்தினகிரி, வேலூர்;
காஞ்சிபுரம் செய்யூரொடு ,
திருப்போரூர், குன்றத்தூர், வல்லகோட்டை , உத்ரமேரூர்,
இளையனார் வேலூர்,
திருக்கழுக் குன்றம் பெருமை மிக்கன ;
திருவள்ளூர் வானகரம்,
திருத்தணிகை, சிறுவாபுரி, ஆண்டார் குப்பம்,
திருவொற்றியூர், அரும்பதிகள்.
திருக்குமரன் குன்றம், கந்தகோட்டம், வடபழனி,
அருஞ்சென்னைத் திருப்பதிகள்.
தவமயிலம் , திருநாவலூர், திருக்கோவலூர், கிருஷ்ணாபுரம்,
திருவெண்ணெய் நல்லூர்வளர்
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் ஆகிய
மாவட்டங்களின் முருகன்வாழ் நலப்பதிகள் போற்றப்பட்டன.
17.
திருக்கச்சூர், பெரும்பேற்றுக் கண்டிகை,யச் சிறுபாக்கம்,
திருச்செஙகை . தலப்பதிகள் .
விருத்தாசலம், வில்லுடையான் பட்டும், வேட்களமும் ,
மணவாள நல்லூரும்,
திருப்பாதிரிப் புலியூர், சிமானம் பட்டியும்,
இருங்கடலூர் முருகனூர்.
திருவண்ணா மலை,செங்கம் குரங்கணில் முட்டம் ,
அரிதாரி மங்கலம் .
அரியலூர் திருமழபாடி. பெரம்பலூர் செட்டிகுளம்.
அளவாய்ப்பட் டி, மோகனூர்,
திருச்செங் கோட்டுமலை, கபிலர்மலை, பேள்குறிச்சி,
திருப்பதிகள் நாமக்கல்.
சிவக்கரூர் பாலமலை, கதித்தமலை , வெண்ணெய்மலை,
வேலாயுதம் பாளையமாம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர்,
நாமக்கல், கரூர், மாவட்டங்களின் முருகன் வீற்றிருக்கும் தலங்கள்
முறையே கூறப்பட்டன.
18.
திருமயி லாடி,கை விளாஞ்சேரி, சீர்காழி,
திருவிடைக்கழி, கொண்டல்,
திருவெண்காடு, தலைஞாயிறு, வைத்தீஸ்வரன் கோயில்.
திருமருகல், திருப்புகலூர்,
எட்டுக்குடி, எண்கண் , சிக்கல், பொறச்சேரி
அட்டநாகப் பட்டினமாம் .
தேவர்கண்ட நல்லூர் , திருவாரூர் திகழ்ந்துநிற்க,
தஞ்சாவூர் , கும்பகோணம்,
சுவாமிமலை, வலஞ்சுழி, கருகாவூர், புறம்பியம்
சுத்திருப் பழனம்,
சிவகயிலைத் திருவையா று, சீரான பதிகள்.
சிவமணக்கால் , ஆனைக்கா ,
சிவகுமார வயலூர், விராலிமலை , சூழ்ந்த
சிராப்பள்ளி சிற்றம்பலம் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி , ஆகிய மாவட்டங்களின்
முருகன் அமர்ந்தாட்சி புரியும் கோயில்கள் கூறப்பட்டன.
19.
திண்டுக்கல், தாண்டிக்குடி, பூம்பாறை, ஐவர்மலை,
சின்னாளப பட்டி,பழனி.
குண்டுக்கரை, பெருவயல் , மேலக்கொடு மலூரென
பண்பதி, ரா மநாதபுரம்.
திருப்பரங் குன்றம், எழுமலை , பேரையூர் ,
திருவேடகம், சோலைமலை,
திரு.புத்தூர் திருஆலவாய் திருமுருகன் திருப்பதிகள்.
திருச்செந்தூர், கழுகுமலை,
திருஆறு முகநயினார் கோயில், வைகுண்டம்
தூத்துக்குடி மூத்தபதி.
திருநெல் வேலி யோடு தோரணமலை, பண்பொழி,
திருக்கொழுந்து மாமலை,
சிவகிரி ஆய்க்குடி தென்காசி, குற்றாலம்,
சிவக்குமர ! சீர்பதியாம் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
திண்டுக்கல் ,இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி
ஆகிய மாவட்டங்களில் அமைந்த குமரப்பதிகள் கூறப்பட்டன.
20.
கன்னியா குமரியின் தோவாளை, தக்கலை ,
நன்னாகர் கோயில்;
அன்புறு கேரளம், ஆந்திரம், கன்னாடகா,
அரும்வட மாநிலங்கள்
குடிகொண்ட குமரன் கோயில்கள் எல்லாமும்
குணமுற்ற குருநாதா!
அடிதோறும் ஆன்றபல ஆதர்ச ஆய்வுகள்
அளித்துயர்ந்த பாடல்வழி
நில்லாமல், நித்திலனின் நீளருள் நெடும்பதி
நித்தில முத்தெடுத்தேன்;
கல்லால மரத்தானின் சொல்புகழ் நல்குருவின்
கழல்பதி கவின்பதியே .
சிவானந்த சாயுஜ்யம் சிவபோக சாமீப்யம்
சுவாமிநாத தரிசனமே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கன்னியாகுமரியில் தோவாளை, நாகர்கோயிலில் தக்கலை ; மற்றும்
கேரளம்,ஆந்திரம், கன்னாடகா விலும் , பிற வடமாநிலங்களிலும்
கோயில்கொண்ட குருநாதா!
சதக நூலிலே அடிதோறும் மிகவுயர்ந்த தத்துவங்களை, கருத்துக்களை,
உயர்ந்த கவிஞர்கள் படைத்தனர்;அடியேனோ முருகன் வீற்றருளும்
பதிகளின் திருநாமத்தை ஆய்ந்தெடுத்து, அணி முதாகப் பதிந்துள்ளேன்.
கல்லால மரத்தடி அமர்ந்து சிவஞானம் உபதேசிக்கும் சிவனுக்கே
நல்லுபதேசம் செய்த ஞான குருநாதன் வாழ் பதிகள் எல்லாம்
ஞானப்படிகளே ஆகும்.
சிவானந்தம்,சிவசாயுஜ்யம் பெற்றிட வழி வகுப்பது சுவாமிநாத
தரிசனமே ஆகும்.
3. அடியவர்களுக்கு அருள் வழங்கிய ஆசானே!
3.1. நக்கீரர்.
பாடல்--21.
தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவர், தமிழ்காக்கத்
தழல்கண் திறப்பினும்
தமிழ்க்குறையைத் தாங்காது, தமிழ்ச்சொக்கன் தன்னோடே
தமிழ்ப்போர் புரிந்தவர்;
அமிழ்தமாம் ஆற்றுப்படை அருமுருகன் அருளாற்றலை
அகம்நிறைந்து பாடியவர்;
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்" என
ஆறுமுகன் போற்றியவர்;
ஆறெழுத்து வடக்கிய அருமறை ஆன்றஞானம்
ஆசான் ஈசனுக்கென,
கார்முகக் கருணையைப் பாரறியப் பாடியவர்;
சீர்குறத்தி சிரிப்புணர்த்தி ,
தார்விண்ணோன் தண்மகள் தழுவுகாதல் தான்பாடி
ஊருணியில் அருள்பெற்றவர்;
சிவசாபம் விலகிடவும், தவசீலம் அடைந்திடவும்,
சிவகுமரனுன் அடியுற்றார்.
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 1. நக்கீரருக்கு அருள்பாலிப்பு .
மதுரை; சங்கம் கொண்டு தமிழ் வளர்த்த பாண்டியமன்னர்கள்;
அப்பேரவையிலே தலைமைப் புலவராக சிவபெருமானே வீற்றிருந்த
அச்சங்கத்தின் தலைமைப் புலவராக அமர்ந்து தமிழ் வளர்த்தவர்
மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் என்னும் பெருமகன் ஆவார்.
தருமி என்ற ஏழைப் புலவனின் திருமணநாட்செலவுத் தொகைக்காகப்
பாண்டியனது ஐயம் போக்கும் கவிதையைச் சிவபெருமானே எழுதி,
அதைத் தருமியிடம் கொடுத்துப் பரிசினைப் பெற வழிகாட்டினார்
மதுரை ஆலவாய்க்கடவுள்.
பாடலைப் பாடி,மன்னனும் மகிழ.அப்பரிசை அவ்வேழைப் புலவன்
பெறு ம் சமயம் அப்பாடலில் குறை உள்ளதாகக் கூறிவிளக்கம் கேட்டார்
தலைமைப்புலவர் நக்கீரர். தடுமாறி விடை சொல்ல இயலாது தருமி
தவிக்கையில் அவையில் தானே அப்பாடல் எழுதிக்கொடுத்த புலவன்
என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஆலவாய்க்கடவுளான
புலவரிடம் நக்கீரர் வாதிட்டார்; அவரோடு வாதிட்ட சிவபெருமான்,
அப்பாடலின் பொருட்குற்றத்தை ஏற்காது,சினந்து, நக்கீரனை நோக்கித்
தன் நெற்றிக்கண்ணைக் காட்டித் தன்னையே எதிர்க்கிறாயோ? என
அச்சுறுத்த நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " என நக்கீரர்
அஞ்சாது நிற்க, அப்புலவனுக்குச் சாபம் கொடுத்து மறைந்து விடுகிறார்.
அசரீரியாய் தருமிக்குப் பரிசளிக்கவும், முருகனால் நக்கீரன்
சாபவிமோசனம் பெறுவான்" எனவும் கூறித் தமிழைப் போற்றிட
வந்தருளினார் சொக்கநாதப்பெருமான்.
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வந்து வீழ்ந்த நக்கீரர்
சிவபெருமானையும், சிவகுமாரன் சண்முகனையும் விடாது
போற்றியபடியே சரவணத்திலேயே தவம் கிடந்தார். தனது கர்வநிலை
மாறிடவும், முன்போல் இறைவனைத் துதிக்கவும், வழி அருளுமாறு
வேண்டிய நக்கீரர் முருகனைத் துதிக்கும் நிலையில் ஆற்றுப்படை
என்னும் காப்பியத்தை முருகன் புகழ் பாடிப்பாடினார். முருகன்
வீற்றிருக்கும் ஆறு படை வீடுகளையும் விளக்கிப்பாட்டினார்.
முருகனைக் காணவிரும்பும் அடியவருக்கு அவன் பெருமை கூறி,
அவனை வணங்கினால் கிடைக்கும் அருள் கூறி, அவனை, அவனது
பதியை அடையும் வழிகூறிப் பாடினர். வேலின்புகழ் சூரவதை ,
அரக்கரழிப்பு, வள்ளியின் காதல் விளையாட்டு, தேவசேனாவின்
திருமணம், போன்றவற்றை அழகுத் தமிழில் " திரு முருகாற்றுப்படை"
என்னும் நூலை இயற்றிட ,முருகனே நேரில் வந்தருளி, அவரது
சாபத்தை நீக்கினான். பிரணவ உபதேசமும் அருளினான்.
சுவாமிமலையில் வீற்றுள்ள சுவாமிநாதக்கடவுளின்
பெருமைகளை, விளக்கிய நக்கீரர் தந்தையாகிய சிவனுக்கே
ஆசானாக விளங்கிய சுவாமி நாதத் தத்துவத்தை புகழ்ந்து
பாடினர். அப்படிப்பட்ட சிவஞானமாய் விளங்குபவனே!
மௌனத்தால் முன்னிற்பவனே!ஒன்பதுவகையான யோகத்திலும்,
உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய் விளங்குபவனே!
தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே! சுவாமிமலையில் வீற்று
அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே ! உன்னடி பணிந்து
போற்றுகிறேன்.
3.3.கச்சியப்பசிவாசார்யார்.
பாடல். 23.
கந்தவேளின் குமரக் கோட்டம் காஞ்சிநகரைக்
காத்திடும் கோட்டம்.
கந்தனின் வழிவழி கருணையின் தொழுதெழு
பந்தமாப் பரம்பரை;
கச்சியப்ப சிவாசார்யார் கந்தகோட்ட பந்தத்தினால்
அச்சிவன்மகன் அருளுற்றார்.
கச்சியப்பர் கனவதனில் கந்தனாணை காப்பியமே .
காத்திருபகல்; காத்தருளிரா;
முதலடி திகடசக்கரம் முற்றுணர்வோர் முன்வந்தே
மூதுரைத்த முருகனருள்;
முதலான முத்தமிழின் மூவுலகுப் புகழெல்லாம்
முதுபணியின் முருகன்தான்.
சிவகுமரன் சீர்கதையைச் சிவமாக்கிய சிவாசார்யன்
சிவகதிக்கும் சுவாமி நீயே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3.3.கச்சியப்ப சிவாசார்யர் .
தொண்டை நாட்டின் காஞ்சிபுரம் கலைகளின் தாயகம்; சிவபெருமான்,
காமாட்சி அம்மை, கந்தவேள் குடிகொண்ட விண்ணுலகம் அது; அங்கே
முருகப்பெருமான் குமரக்கோட்டத்தில் அமர்ந்து காஞ்சிமாநகரையே
காத்துவந்தார்.
குமரக்கோட்டத்து மாமுருகனை வழிவழியாக அர்ச்சிக்கும் தொண்டு
புரிந்துவந்த பரம்பரையில் தோன்றினார் கச்சியப்பர்.
காளத்தியப்பசிவாசார்யாருக்கு மகனாகத் தோன்றிய கச்சியப்பர் முருகன்
மீது நிறைந்த பக்தி கொண்டு அபிஷேக ஆராதனைகளைச்
செய்துவந்தார். அவரின் கனவிலே வந்தருளிய முருகப்பெருமான் தனது
வரலாற்றை எழுதுமாறு கூறி, அப்புராணத்தின் முதலடியாக "திடசக்கர"
என்ற முதற்சொல்லையும் அருளாகக்கூறி ஆசி வழங்கினார்.
ஆறுமுகன் ஆணையைத் தலைமேற்கொண்ட இவரும் நாள்
ஒன்றுக்கு நூறு பாடல் இயற்றுவார்; இரவு அதை முருகன் திருவடியில்
வைத்துவிடுவார்; காலையில் அப்பாடல்கள் திருத்தப்பட்டு முருகன்
பார்த்தருளிய அடையாளத்தோடு காணப்படும்.
இவ்வாறே ஆறு காண்டங்கள். பாடல்களில் அப்புராணத்தை
முருகன் அருளால் முடித்தார். குமரக்கோட்டத்து ஒருமண்டபத்தே அமர்ந்து
எழுதும் பணியைச் செய்த அதே மண்டபத்திலேயே நூல் அரங்கேற்றமும்
செய்தார். முதற்பாட்டிலேயே அறிஞர்கள் குறை கூறியதும் , இவர் அந்த
அடியை அருளியது எம்பெருமான் முருகன் எனக்கூறியும் அவையோர்
இலக்கணப் புணர்ச்சி விதியைக் கேட்க, அதற்கும் முருகனே அருள்
புரிந்தார். அந்த அவையிலே ஒருபுலவராக வந்து, வீரசோழிய நூலில்
கூறப்பட்ட புணர்ச்சி விதியை விளக்கி அச்சொல்லின் பயன்பாட்டை
ஏற்கச்செய்தவர் அப்படியே மறைந்துவிட்டார். அவையினரின்
பாராட்டுதலோடு கந்தபுராணத்தைக் கச்சியப்பர் முருகன் துணையோடு
அரங்கேற்றினார்.
இரவும் பகலும் அவரோடே இருந்து நூல் அரங்கேற. உலகெலாம்
புகழ் பெற வழிகாட்டியவர் முருகனே ஆவார்.
சிவகுமாரனின் சீரிய வரலாற்றை உலகறிந்து உவக்கச்செய்த
கச்சியப்பர் சிவசாயுஜ்யம் பெறவும், வழிவகை செய்தவர் முருகனே;
இவ்வாறு பேரருள்புரிந்து கச்சியப்பரை உன்னடிமை ஆக்கிய
சுவாமி நாதக்கடவுளே!
3. 4.குமரகுருபரர் .
பாடல்.24.
ஐந்துமுகத் தண்ணலின் ஆறுமுகத் தரும்புகழை,
ஐந்துவயது நைங்குழவி
மந்தமாருதத் தமிழினிலே கந்தமாமலை அருளினால்
சந்தமாகச் சாற்றியதோ!
சிவகாமி சண்முகக் கவிராயன் உவந்தெடுத்த
சிவனடிமைத் தவக்குழந்தை,
அவமாய் ஊமையாய் சிவச்செந்தூர் சேரருளால்
அவமகல்கலி வெண்பாவாம்.
பொருநை பாய்ந்தது; புதுவெள்ளம் வைகையில்;
காவிரியில், கங்கையிலும்.
அருமுத்து, பிள்ளைத்தமிழ், உருதுமொழிச் சீயபவனி
திருமுருகன் அருள்வண்ணம்.
தவமுனிச் சிவமாகி நவமடம் நற்பெருமை
சுவாமிநாத! நின்னருளே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 4. குமரகுருபரர்
ஐந்துமுகத்தோடு அதோமுகம் சேர்த்துத் தோற்றுவித்தார் சிவனார்,
ஆறுமுகக்கடவுளை. அப்பெருமானை ஐந்துவயதுக் குழந்தை
பிறந்ததுமுதல் பேசாத நைந்து ,துயரினில் தவித்த குழந்தை ; குமரன்
அருளால் மழலை வாய்மொழியே பாடலாக, வெண்பாவாக,
கலிவெண்பாவாக, அதுவும் கந்தர்கலிவெண்பாவாக ஞானமொழி
பாடிற்று என்றால் அது ஆறுமுகக் கடவுளின் அருளல்லவா!
திருவைகுண்டம் என்னும் பத்தியில் சண்முகக் கவிராயருக்கும்,
சிவகாமி அம்மைக்கும் சிவனருளால் மகனாகத் தோன்றிய குழந்தை
ஐந்து வயது வரை பேசா ஊமையாய் விளங்கிக் கந்தவேள் அருள்புரியும்
திருச்செந்தூர் சென்றடைந்து, நாழிக்கிணற்றில் குளித்து, அலைவாய்
நீராடி ஆறுமுகன் வணங்கும் காலை, முருகனருள் முன்வரத் தனது
ஊமை வாயைத் திறந்து பூமேவு செங்கமலப் புத்தேளும் எனத்தொடங்கி,
வேலவனின் புகழைக் கலிவெண்பாவில் பாடியதைக் கண்டு உலகே
அதிசயித்தது. அவம் அகன்றது; புவனம் போற்றியது. புனிதன்
அருளல்லவா!
அருமுருகன் அருளாலே, தாமிரபரணிக் கரையிலே தோன்றிய
கலிவெண்பா, வகைக்கரையில் மதுரையில் மீனாட்சி அம்மை பிள்ளைத்
தமிழாக மலர்ந்தது. காவிரிக்கரையிலோ முத்துக்குமாரசாமி பிள்ளைத்
தமிழாகப் புள்ளிருக்குவேளூரிலே அழகூட்டியது.கங்கைக் கரையிலோ
இஸ்லாமிய மன்னன் பேரவையில் உருது பேசும் கவிஞனாய்ச் சிங்கத்தின்
மேலேறி அரசவை அடைந்து மாப்புகழைப் பெற்றது. காசிக்கலம்பகம்
பாடியது; மடம் அமைத்தது. அமைத்துக் கொடுத்தவனோ முகம்மதியப்
பேரரசன். பதினாறு இலக்கிய பக்தி நூல்களை இறைவன் திருவடியில்
சாற்றியது;
தவமுனியாகித் தருமபுறமடத்திலே துறவறம் பெற்றுத் திருப்பனந்தாள்
என்னும்பதியிலே திருமடம் அமைத்துச்சைவம் வளர்த்தது. எல்லாம் முருகன்
பேரருள் அன்றோ.சுவாமிநாதக்கடவுளே உனது பேரருள் குமரகுருபரனை
செந்தமிழ்ப்புலவனாக்கியது .
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே! ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
3.5.அருணகிரிநாதர் .
பாடல்.25.
முத்தித்திரு வண்ணாமலை நித்தியத்திருப் பதிதோன்றி ,
சத்தியப்புனல் விதிவாழ்வு,
புத்தியைத்தொலை கத்திகண்ணவர் நித்தியச்சுவை நீறாக்க ,
பத்தியமிலாப் பாழ்நோய்சுடு ,
தத்தித்தவழ் அத்திறன்தனைக் குத்துவேல்நுனி முத்துமொழியால்
புத்தியளி தத்துவத்தால்
எத்திறம்புகழ் அத்திஆல்மகன் முத்திறம்தோய் நற்றமிழ்ப்பா
முத்திமுத்தியென் றோதியவன் ;
கத்துகடல் சத்தனுபூதி , கடல்முத்தாம் அலங்காரம்,
வித்தாக்கினான் சிதானந்தம் .
வித்தியாக்கலை வாரணத்தை, வித்துவியனாள் விந்துவள்ளியை ,
உத்தியான வனத்தளித்தான் .
சிவவித்து, சிவாமுத்து , சிவமுருகன் தவக்கவிஞன்
நவாருணகிரி சிவாம்சமே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா.
பொருள்
3. 5.அருணகிரிநாதர் .
நினைத்த அளவிலேயே முத்தியை அளிக்கின்ற
திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரியார் செல்வ வளக்
குடியிலே வாழ்வின் வகைச்சுழலிலே உழன்று நதிநீர் போகும் வழியில்
சென்றார். அவரைச் சிற்றின்பப்பிசாசுகள் பற்றிக்கொண்டன ; காமத்தின்
வழியை விடாது பற்றிய அவர் செல்வம், மானம், குடும்பம் ஆகிய
எல்லாவற்றையும் இழந்தார். அவரது ஆசை அவருக்குப் பெரிய
பெரும் நோயையும் தந்தது;
இறைபக்தியைத் துறந்து மங்கையின்பின்னே சிற்றின்பம் தேடி
ஓடியவரைப் பலதுன்பங்கள் சூழ்ந்துகொண்டன ; முடிவிலாப்
பெருநோயும் தொற்றிக்கொள்ள. அவர் நொந்துபோனார். அந்நோயின்
தாக்குதலால் வலுவிழந்து சாலைகளில் தவழ்ந்து தவழ்ந்து சென்ற
அவரின் மீது இறைவன் முருகன் பேரருள் பட்டது.
நல்ல உடலும், நல்லபேச்சும், நல்ல பழக்கமும் வழங்கிய மாமுருகன்
அவர் நாவிலே தமது வேல்நுனியால் பிரணவத்தை எழுதினார் ; அவ்வருள்
தன்னை மீட்டெடுத்த முருகன் மீது கவிதையாகப் பாடிட வைத்தது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய சிவக்குமாரனை ,ஆலிலை மரத்தடி
அமர்ந்த ஆசான் செல்வனை நலத்தமிழில் நாளெல்லாம் பாடினார் .
ஆக்கள்,அழித்தல்,காத்தல் என்னும் முத் தொழிலையும் கொண்ட
குமரனது, தாள்களைப் போற்றி, முத்தியும், முத்தி தரும் விதத்தையும்
பாடினார் .
கடலொளிபோன்ற அனுபூதியையும், கடல்முத்துபோன்ற
கந்தரலங்காரத்தையும் சச்சிதானந்தப் பேரொளியையும் பாடினார் .
இந்திரன் மகளான வித்யாதாரணியாகிய தேவசேனாவையும்,
இலக்குமியின் மகளாகி மானின் வயிற்றில் அவதரித்த வள்ளியையும்,
மணந்துகொண்டு, தன்னோடு அருள்பாலிப்பிலே இணைத்துக்
கொண்டதைப் போற்றிப்பாடினார்.
சிவபெருமானின் நெற்றிக்கண் வித்தாய் அவதரித்தவர்; பார்வதி
தேவியாரின் அன்புமுத்து, மாமுருகனையே எப்பொழுதும் எண்ணி,
எண்ணிக் கவிபாடும் தவக்கவிஞன், புதிய பிறவி எடுத்த அருணகிரி
சைவ வழியில் வந்த சிவக்கவிஞன் ஆவார். குகக்கவிஞன் ஆவார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்தவனே !
தவத்திற்கே தவமாய் நிற்பவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
3. 6. பகழிக்கூத்தர் .
பாடல்..26.
சமரமுக ரணவீரப் பரசமயத் திமிராரி "
சமயநிலை மாறிட்டோன்
அமரசுகம் தமிழதனில் அமிழ்தமாக அளித்தகாலை ,
குமரனணி செம்பதக்கம்,
அமரபதம் அடைந்தாற்போல் விமலசுகம் பெற்றவரோ !
தமர்துயர்நோய் தரியாரோ!
உமிழொளிநிலா அமிழ்குளிர்சுகம் தமிழ்முகமதின் குமிழ்முறுவலே
அமைத்தார்கவி அருங்கூத்தர்.
சன்னாசி தர்ப்பசயனர் முன்வழியாம்; பொன்னிரவில்
தன்னடிமை மன்னனுக்கே.
செந்நாவால் செந்தூரைச் செந்தமிழால் சீரிசைத்துச்
செம்பகழிக் கூத்தரானார் .
சிவசீவக சிந்தாமணிச் செவ்வமுது செல்வனாக்கிச்
சிவம்காத்தது செஞ்சீரருள்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 6.பகழிக்கூத்தர் .
போர்முனையில் பகைவராம் அரக்கர்களை அழிப்பதிலே
நிகரில்லாத வீரனாகத் திகழ்ந்தவன்; மாறுபட்ட சமயங்களை
அழித்தும், சைவசமயத்தைப் பாதுகாக்கவும் அவதரித்த
திருஞானசம்பந்தராகக் காட்சியளித்தவன்" என்று திருச்செந்தூர்
மாமுருகனைப் போற்றிய பகழிக்கூத்தர் வைணவ சமயம் சார்ந்தவர்.
கனவிலே வந்து தடுத்தாட்கொண்ட முருகனின் கழல்களைப் பற்றிக்
கொண்டவர்.
அமரர்களின் இன்பங்களை மீட்டளித்தவன்; அவன்மீது அமுதமாகிய
தமிழ்ப்பாடல் "பிள்ளைத்தமிழ் " பாடித் தனது நோய் நீங்கப்பெற்றவர்;
அவ்விலக்கியம் அவன் முன்னர் அரங்கேற்றியபொழுது ஊரார்,
பெருமக்கள்,செல்வந்தர்கள் பாடிய புலவனைப் போற்றாதபொழுது,
அன்றிரவு அப்புலவன் பகழிக்கூத்தன் கழுத்திலே தானணிந்துள்ள
நவரத்தினப் பதக்கத்தை அணிவித்துச் சென்றார் முருகன்.
பாடிய புலவனுக்கோ தேவசிங்காதனம் பெற்றதைப் போன்ற மகிழ்ச்சி.
தனது நோயாகிய நீண்டநாள் தீராத வயிற்று வலி அறவே நீங்கிவிட்ட
மகிழ்ச்சி; அதனால்.
திருச்செந்தூர் முருகனை, அவ்விறைவனின் புன்சிரிப்பு,
வானவீதியில் ஒளிநிலாவை அமிழ்தமாய் வீசும் நிலவென்றும் ,
குளிரமுதம் அளிக்கும் உள்ளம்கவர் சுகமென்றும், தமிழவேள்
முருகனது முகமுறுவல் ஒளி,அழகு,வெண்மை, குளிர்ச்சி, கருணை
நிறைந்து விளங்குகிறது" எனப்போற்றினார்.
இராமநாதபுரம் சமஸ்தானத்தில் "சன்னாசி" என்றகிராமத்தில்
தர்ப்பசயனர்" என்பாரின் மகனாகத் தோன்றியவர் . ஒரே இரவில்
கனவுதந்த அருள், கந்தன் காட்டிய கருணை "தர்ப்பசயனர் என்னும்
திருமாலின் அடியவரான கூத்தர் சைவசமயம் சார்ந்தார்; முருகன்
அடிமை ஆனார்; அய்யனார் அருளின் வண்ணம் அவரது திருப்பெயரான
"பகழிக்கூத்தர்" என்னும் பெயரும் பெற்றார்.
தனது சீர்மைமிகு சொல்லால், செந்தூரானைப் பாடிப்போற்றிய
அவரோ புகழ் மிக்க புகழ்க்கூத்தரானார்.
சீவகசிந்தாமணியை விளக்கமுற்பட்டு, 300 பாடல்கள் இயற்றிப்
புகழுற்ற புலவர், அச்சிந்தாமணிசெல்வனாக முருகனை, முன்னிறுத்தி,
சிவசைவம் போற்றும் புலவர் ஆனார்.செம்மைத்தமிழ் செந்தூரவழி
நின்று உயர்ந்தது. அதெல்லாம் சுவாமிநாதக்கடவுளே நின்னருளன்றோ!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்தவனே !
தவத்திற்கே தவமாய் நிற்பவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
3. 7. திருப்போரூர்ச் சிதம்பரமுனிவர் .
பாடல்.27.
போரூர் மேவிய புண்ணியா! போற்றிய
கார்மேகக் கனித் தமிழ்முனி
வேறூர் மாமதுரை; வேடசெந்தூர் வழிகாட்டி.
வீரசைவக் குமாரதேவர் ;
தாரன்னைத் தமிழ்மீனாள் தண்கருணைப் பேராணை
திருப்போரூர் தேடல்பணி;
வாரணத்தான் வனமூர்த்தி, வடிவுற்ற வளக்கோயில் ,
வரமுயல்வு வகைகண்டார்.
பூரணத்தான் பொலிகோயில் பூமழையே போரூரில்;
சீரணியே; செம்பணியே ;
பூரணமாய்ச் செயலாற்றிப் போரூரின் சந்நிதிமுறைப்
பூரணமும் பெற்றுய்ந்தார்.
சிவகாரணம் தவப்பூரணம் உவத்திருப்பணி அவம்தவிர்த்துச்
சிவமுருகன் செவ்வடியருள் ,
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 7. திருப்போரூர்ச் சிதம்பரமுனிவர் .
திருப்போரூர் என்னும் முருகன் பதிக்கு , அன்னை மீனாட்சி ஆணையால்
வந்து, கோயிலையும், மூர்த்தத்தையும் கண்டுபிடித்தும்,ம் அம்முருகன்மீது
திருப்போரூர்ச் சந்நிதி முறை" என்னும் முருகன் போற்றும் தமிழ் பாடி.
முருகனருள் பெற்ற சிதம்பர சுவாமிகள், என்னும் மாமுனிவர்
கருமேகம்போல் இனிமைக்கவிதை பாடும் புலவர் ஆவார்.
தென்பாண்டி மதுரையில் தோன்றிய புலவர் மீனாட்சி அம்மை மீது
கலிவெண்பா பாடிப்போற்றியவர் ஆவார். பிறந்த ஊர் மதுரை. வேடனாம்
மாமுருகன் அருள் கூடியமையால் பற்பலத் தலங்களுக்குச் சென்றவர்,
குமாரதேவர்" என்னும் வீரசைவஞானியைச் சந்திக்கிறார்; அதேகாலை
அன்னை மீனாட்சி அம்மையும் திருப்போரூர் சென்று, முருகனைக்
கோயில்கொள்ளச்செய்து முருகன் புகழ் பாட்டு! என ஆணையிட்டதாலும்,
பயணம் தொடங்குகிறார்.
பலப்பல பதிகள் தாண்டிப் பலப்பல பணிகள் ஆற்றியவர்,
போரூரை அடைந்து, அங்கு கோயிலைத் தேடுகிறார். வேப்பமரத்தடியில்
அமர்ந்துள்ள விநாயகரைத் தவிர எத்தெய்வமும் குடிகொள்ளாத
வனப்பகுதி அது; அங்கேயே தங்கி, பலநாட்கள், பல திங்கள் கோயிலைத்
தேடி அலைந்தவருக்கு அங்குள்ள ஒரு பொய்கையில் முருகன் சிலை
கிடைக்கிறது. தான் தங்குவதற்காக அமைத்திருந்த குடிலில் அவரையும்
வைத்துப் பூசனை செய்து வரும் நாளில் அவரது கனவில் குமாரதேவர்
போல் வடிவமெடுத்து முருகன் தோன்றித் தனது கோயில் நீர் நிலையில்
மூழ்கியிருப்பதை உணர்த்துகிறான். வனத்துக் குளத்தருகே
வனமூர்த்தியாகிய முருகன் கோயிலின் சிதைந்த பகுதிகளைக் கண்டு
அளவில்லா மகிழ்வு அடைந்தவர், வழிகாட்டிய குமாரதேவர் முருகனே,
எனவும் உணர்ந்தார். அன்றுமுதல் அக்கோயிலைப் புதுப்பிக்கும் பணி ;,
புதிதாக அமைக்கும் பணியை முருகன் அருளோடு மேற்கொண்டார்.
நிறைந்த ஞானக்கடவுளாகிய முருகன் கோயிலை அமைக்கும்
பணியில் ஊர்மக்களையும் சேர்த்துக்கொண்டு, சேமித்து வைத்த
செல்வத்தைத் திருடவந்த கொள்ளையனையும் சேர்த்துக்கொண்டு,
அழகுமிக்க கோயிலைக் கட்டிமுடித்தார். கும்பாபிடேகமும் செய்வித்தார்.
எம்பெருமான் புகழை உலகோர் அறியும்வண்ணம் "திருப்போரூர்ச்
சந்நிதிமுறை " என்ற பாராயண நூலையும் முருகன் சேவடியில்
சாற்றினார்.
சிவம் போற்றும் சைவம் காரணமாகவும் ,தவவழியின் நிறைவுற்ற
ஆசான் முருகன் போற்றவும்,தமது அவப்பிறவி அகன்றே அருஞ்சேவடி
அடைந்திடவும், மகிழ்வோடு திருப்பணி செய்து முடித்தவர் முருகன்
சேவடியிலேயே ஜீவ சமாதியுற்றார். இவ்வாறு பேரருள்புரிந்த
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமிமலையில்து வீற்று அருள் புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
3. 8. தேவராயர் .
பாடல்.28.
சான்றோரருள் தொண்டை மண்டலம் வல்லூரில்
சஷ்டிகவசத் தேவராயர் ,
ஊனுருகிடும் உபாதைகள் உயிர்சார்தலை உத்தமன்புகழ்
உணர்ந்துரைத்த முருகனடிமை.
வியன்வீரா சாமிமகன், மயல்காணா மறைப்புலவன்;
வயிற்றுவலி பயிற்றுபாழ்
நயத்துநாடிய நற்செந்தூர் சயத்துபாடிய சட்டிகவசம் .
பயந்ததுசுகம்; பலித்ததுதமிழ்.
காக்ககாக்க கனகவேலே; காக்கவந்தது கனகவேளே .
காக்குமுருகு ; காக்குகவசம் ;
நோக்கநோக்க நீளறுபடை நீக்கவந்திடும் பூக்கமழ்தாள்;
பார்க்கபார்க்கப் பொடிபடுமவம்.
சிவ,குக, வெனத் தவம்புரிமன, அவம்தொலைகுணப் புவனத்தோர்
இகபரசுகம் குகனடிதரும் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3.8. தேவராயர்
சான்றோருடைத்து" என்ப்போற்றப்படும் தொண்டை மண்டலத்தில்
வல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் ; நாமெல்லாம் அன்றாடம்
பாராயணம் செய்யும் கந்தர்சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர்
என்ற முருகபக்தர்.
நமது உடலை வாட்டிடும் நோய்கள் உடலோடு,உயிரும் சார்ந்து
நிற்பவை; அதனைப் போக்கவேண்டுமென்றால் நம்மை ஆட்கொள்ளும்
கருணையாளன் புகழ் பாடவேண்டும்; அதுவே அந்நோய்களை நீக்கும்
மருந்து, என்று கூறி,முருகனின் புகழ் பாடிய மாப்புலவர் அவர்.
வீராசாமி என்பாருக்கு மகனாய்ப் பிறந்த இவர் மாயைகளின்
மயக்கம் தவிர்த்தவர்; மறையாய்த் தமிழ்போற்றிப் பாடல்கள் பாடியவர்;
ஒருபோது வயிற்றுவலியால் தவித்தகாலை, திருச்செந்தூர் சென்று,
முருகனை வணங்கிச் சஷ்டி விரதம் இருந்து, " சஷ்டிகவசம் " பாடினர்.
நோய் தீர்ந்தது; சுகம் கிடைத்தது; புலவரின் தமிழ் மருந்தாக்கிப்
பலித்தது.
காக்க" காக்க" கனகவேல் காக்க" என்று அவர்பாடிய பாடல் இன்று
உலகம் முழுவதும் கனகவேலின் அருள்வேண்டிப்பாடப்படுகிறது. கனக
வேல் தாங்கிய மாமுருகன் உலகைக் காக்கிறான்; அவனைப்போற்றிய
சஷ்டிகவசமும் நாளும் நம்மைக் காக்கிறது.
முருகனது சேவடிகளை மனத்துள் நிறுத்திக் கண்டு,களித்துப்
போற்றுவோர், துன்பமும்,துயரும் நீங்கிட நீண்ட புகழுடைய வேலாயுதம்
நம்முன் வந்துநிற்கும். மலர்போல் மனம் வீசும் அவனது தாள்களைப்
பார்த்துக்கொண்டே இருந்தால், போற்றிக்கொண்டே இருந்தால் நமது
பாவங்கள் அகலும்; புண்ணியம் கூடும்; முருகனருள் சித்திக்கும்.
சிவ,சிவ எனத் தியானம் செய்பவர்கள், குக ,குக என முருகனை
மனமுழுவதும் நினைப்பவர்கள் ,பாவங்களைத் தொலைத்து, நல்வழி
அடைவர்; அம்முருகனது சேவடி அன்பர்களுக்கு இக வாழ்வில் நல்ல
சுகமும், பிறவியில்லாப் பேரின்பத்தை மறுவாழ்விலும் அருளும். என்று
போற்றிய தேவராயருக்கு நல்லருள் புரிந்த வனே !
சிவ ஞாவனமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பவகையான யோகத்திலும் உயர்ந்தவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே!தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமலையில் வீற்று அருள் புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
3. 9.பாம்பன் குமாரகுரு தாசர்.
பாடல். 29.
பாம்பணிசிவன் தாம்பணிமகன் ஒம்நினைபவன் தேம்கடல்நகர்
பாம்பனின் அப்பாவு;
ஓம்கார குரு தரிசனம் ஒருபதின் மூன்றினிலே;
ஒருநூறு ஒளித்தமிழ்க்கவி ;
காவிநாட்டம் தேவித்திருக்கரம்; பாவிப்பிறவி மேவியசிறார் ;
ஆவியானளி மேவுகாட்சி .
மேவிடாத ஆவினன்குடி; ஆறுமுகக் காப்புகவசம் ;
சேவித்திடாக் குமரகோட்டம் ;
பீரப்பன் வலசையிலே ஊரப்பன் உபதேசம்;
கார்க்குழிக்குள் வேல்காண்தவம் ;
சேர்சென்னை சீரறுகால் சேரருள் பேரதிசயம்;
சேவணவிழா வான்மியூரில்;
சிவகுருவே குமாரகுரு தாசனென நவப்பெயருறு
சிவக்கவிஞன் உவந்தருளிய
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 9. பாம்பன் குமாரகுருதாசர் .
பாம்புகளைத் தனது அணிகலன்களாகக் கொண்ட சிவனார்
பணிந்து போற்றும் ஞான மா மகன் முருகப்பெருமானின் ஓம்கார
ஒலியை ,உருவை, மனம்,வாக்கு, காயங்களால் போற்றுபவன், கடலால்
சூழப்பட்ட இராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள ,பாம்பன் என்னும்
கிராமத்தில் அவதரித்தவன் "அப்பாவு" என்ற பெயர் கொண்ட பாம்பன்
குமாரகுரு தாசன் என்ற முருகபக்தர் ஆவார்.
1850 ஆம் ஆண்டு தோன்றிய அவரது பதின்மூன்றாம் அகவையில்
கடலலைகட்கிடையே ஒளியாகக் காட்சி தந்தார் முருகன். அன்றே
முருகன் மீது கவிதைகள் பாடத்தொடங்கிய அப்பாவு,விடாமல் தொடர்ந்து
நூறு கவிதைகளைப் பாடினர்.
துறவறத்தை விரும்பிய அவருக்குப் பெற்றோர் திருமணம் செய்து
வைத்தனர்; பிறவி என்னும் பிணி அவரைப்பற்றிக் கொண்டது; அதன்
வாயிலாகக் குழந்தைகளும் பிறந்தன; ஆயினும் தனது உயிருக்கு மேலான
முருகப்பற்றினால் அவனையே நினைந்துவாழ, அம்முருகனும் அவருக்கு
அருள்காட்சி வழங்கினார்.
ஒருமுறை முருகனிடம் உத்திரவு பெறாமல் பழனிமலை சென்று
வழிபடும் காலை, அவரைத் தடுத்து, என்னிடம் சொல்லாமல் இங்கு ஏன்
வந்தாய்? உடனே திரும்பிப்போ ! என முருகன் ஆணையிட்டதும் பழனி
ஆண்டவரைப் போற்றாமல் ஊர் திரும்பினார். இறுதிவரை அவர்
பழனியை வணங்'கவேயில்லை; உலக உயிர்கள் உறுநோயால் அவதியுற
அதனைப்போக்க, ஷண்முக கவசம்" என்னும் ஆறுமுகக்கவசத்தை இயற்றி,
மக்களை நோயிலிருந்து காத்தார். ஒருமுறை அவர் காஞ்சிமாநகர்
அனைத்து ஆலயத்தையும் தரிசித்தவர் குமரக்கோட்டத்தைப் போற்றாமல்
வந்துவிட்டார்; வழியில் அவரைத் தடுத்த முருகன், அவரை அழைத்துக்
கொண்டுபோய் கோயில், கச்சியப்பர் மண்டபம் போன்றவற்றைக் காத்திப்
பின்னரே ஊர் செல்ல வழிவிட்டார்.
இராமநாதபுரம் அருகே அமைந்துள்ள " பீரப்பன் வலசை" என்ற
ஊரிலே ,முருகனிடம் நல்லுபதேசம் பெற்றார். அங்கு நீரும், மணலும்
கலந்த ஒரு பள்ளத்தில் 28 நாட்கள் உண்ணாமல்,உறங்காமல் கடும்
தவம் புரிந்தார்; ஊராரெல்லாம் அவரை வெளியே வர அழைத்தனர்;
ஆனால் முருகன் வந்து அழைத்தாலே வருவேன்" என்றிருந்த அவரை
முருகன் வேல் வந்து கூட்டிச்சென்றது.
சென்னைப்பதிக்குச்செல்! என்ற முருகனின் ஆணைக்கிணங்க
சென்னை வந்தவர், முருகனது சொல் கனவில் கேட்டுப் பங்காரு அம்மாள்
அவரை வரவேற்று உணவு,இருப்பிடம் போன்றவைகளைச்
செய்துகொடுத்தார். ஒருநாள் நடந்து செல்கையில் ஜட்கா வண்டி இடித்துத்
தள்ளிட அவரது இடதுகால் எலும்பு முறிந்திட அரசங்க மருந்தகத்தில்
சேர்க்கப்பட்டார் . மேனாட்டு மருத்துவர் காலையே எடுக்கவேண்டும்.
என்றார். கேள்விப்பட்ட அவரது அன்பர்கள் ஷண்முக கவசத்தை விடாது
பாராயணம் செய்தார்கள்; விபூதியைப் பூசியவண்ணம் செய்த பாராயணம்
அவர் காலை நன்கு குணப்படுத்திவிட்டது. வியந்த டாக்டர் அவரது
படத்தை அந்த அறையில் மாட்டிவைக்க ஆணையிட்டார். சென்னை
திருவான்மியூரில் தங்கியிருந்தபொழுது கடலலை மீது மயில்கள் பறந்து
வரும் காட்சியைக் கண்டார். அதனை "மயூர வாஹன சேவன விழா"
என்று கொண்டாடினார் . இன்றும் அவ்விழா அன்பர்களால் நடத்தப
பெறுகிறது.
இளம்வயதில் வடமொழி ஆசிரியர் அப்பாவுக்கு, குமாரகுருதாசன்
என்ற பெயரைச் சூட்டினார். அதுவே அவருக்கு நிலைத்தது. இப்பெயரும்
முருகனருளாலே கிடைத்தது என மகிழ்ந்தார் அவர். இவ்வாறு
ஆட்கொண்ட பாம்பன் சுவாமிகளின் புகழை வளரவித்தவன் நீயே
அல்லவா!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த
ஞான குருவே! சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்
கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
3. 10. காவடிச்சிந்து அண்ணாமலையார் .
பாடல். 30.
பூமிமெச்சிடும் அண்ணாமலை பூமிவாழக் காவடிக்கே
ஓம் ஓம் எனச் சிந்துபாடியோன்;
சேமிசெந்தமிழ்ச் சென்னிகுளப் பூமியுழுத விவசாயி;
சென்னவனார் சீர்மகன்;
சாமிமுருகன் சார்வழியைக் காட்டிடவே , சாமிமீதே
சிந்துபாடிய செவ்விளைஞன்;
கந்தவேளை நினைந்திட்டால் வந்துறாது பங்கமெனச்
சந்தமாகவி பந்தமான
விந்தைக்கோன் ஊற்றுமலை விரைந்தேற்க, கழுகுமலைக்
கந்தவேளைச் சொந்தமாக்கினான்;
அந்தமில்லா ஆண்டவனின் ஆட்டநடை ஆன்றகவி
அன்னை,மால் ஆசுகவி;
சிவன்மனமகிழ் உபதேசன் முருகேசன் எனப்போற்றிய
சிவசேவடி சாரிளமை .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 10. காவடிச்சிந்து அண்ணாமலையார்.
நிலவுலகு பாராட்டிப்போற்றும்படி என்னைப் படைத்தான் முருகன்,
எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அண்ணாமலை ரெட்டியார்
ஓம் ஓம் என முழங்கும் முருகனின் காவடி ஆட்டத்திற்குச் சிந்து பாடிய
ஆவார்.
செந்தமிழ் நிலமாகிய நெல்வேலி அருகே, தென்காசிப் பகுதி,
சென்னிகுளம் என்றகிராமத்தில் விவசாயியான சென்னப்பக் கவுண்டருக்கு
மகனாகப் பிறந்தவர் அண்ணாமலை.
குலதெய்வமாகிய முருகனின் பேரருள் இளம்வயதிலேயே கிட்டியதால்
சாமி முருகன் மீது சிந்துக்கவி பாடியவர்.
கந்தவேளைப் போற்றி வாழ்ந்தால் வாழ்வில் துன்பமே வராது. என்று
சந்தக்கவிதைகள் பலப்பல பாடினர். இவரைப் பற்றிநின்றார் ஒருவர்.
"ஊற்றுமலை' குறுநிலத்தின் மன்னர் இவரை, இவரது தமிழை அறிந்து
தமது பேரவைப்புலவனாக்கினார். அங்கிருந்த படியே கழுகுமலை
முருகனைப் பாடிப்புகழ்ந்தார் .
முதலும் முடிவுமற்ற முருகப்பெருமானின் நடன ஆட்ட அசைவுகளுக்கு
ஏற்பச் சிந்து பாடிய கவிஞர், அன்னை கோமதியம்மன் மீதும், அரசனின்
குலதெய்வம் கண்ணன் மீதும் பலப்பல பாடல்கள் பாடினர்.
சிவபெருமானின் மனம் குளிருமாறு, அவருக்கு உபதேசம் செய்த
முருகனைப் போற்றிய அண்ணாமலைக்கவிஞன் இளம் வயதிலேயே
சிவன் சேவடியைப் பற்றினார். அவரை ஆட்கொண்ட
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய்க் காட்சி அளிப்பவனே ! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள் புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி வணங்கிப் போற்றுகிறேன்.
3.2. சங்கப்புலவர்கள் ,
பாடல்.22.
உருத்திர சன்மனாய் அருந்தமிழ் விருத்தன் ;
முருகாற்றுப் படையாய்வான் ;
வருந்திநோன்பு வகைபல விளக்கிடும்நூல் ஆற்றுப்படை;
அருந்தியருள் அகத்தியரும்,
குறிஞ்சிநிலக் கபிலரும், குணம்மிக்க பரணரும்,
கடியலூர்க் கண்ணனாரும்,
நிறம்கொடிமொழி அறம்கொடைஅருள் மறம்திறன்புகழ் மாமுருகனே
புறம் அகம் பாட்டில் போற்றினரே .
வரலாற்றுக் குறிப்பெல்லாம் சிரம்தாழ்த்தும் தொன்மைக்கே;
உவமைகளில் உயர்ந்திருப்பான்;
வரம்வேண்டா அவ்வையும் வளப்பாட்டில் வழிபட்டாள் ;
கரைகண்டன காவியங்கள்;
சிவபுராணத் தேவாரம் சிவமகனைச் சேர்ந்திசைத்தன;
சிவனாண்ட பிள்ளையாம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3. 2. சங்கப்புலவர்கள் .
திருமுருகாற்றுப்படை நாயகனாகிய முருகன், "உருத்திரசன்மன்"
என்ற பெயரோடு, தமிழ்ச்சங்கத்திற்கு வந்து, இறையனார் அருளிய
களவியல் நூலுக்கு, நக்கீரர் எழுதிய உரையே சாலச்சிறந்தது என்று
உரைத்துத் தானும் ஒரு தமிழ்ப்புலவனாய் அங்கு அமர்ந்தான்.
நோன்பிருந்து வருந்தித் தவம் இருந்தே முருகனைக் காண இயலும்"
என்றுரைத்தது திருமுருகாற்றுப்படை. அதனை இயற்றிய நக்கீரரும்,
தமிழமுதம் அருந்தி இறையருள் பெற்ற அகத்தியரும் முருகனைப்
போற்றியவருள் உயர்ந்த சங்க மாமுனிவர்.
முருகனின் நிலமாகிய குறிஞ்சியைப் பாடிய கபிலரும், நல்லறம்
பாடிய பரணரும், கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் , சங்கப்புலவர்
பலரும், தாம்பாடிய அகப்பாட்டிலும், புறப்பாட்டிலும், தனித்தனிப்
பாடல்களிலும், முருகனுடைய, வண்ணமேனியைப் பாராட்டினர் ;
கோழிக்கொடியைப் பாராட்டினர் ; செவ்வாய் மொழியைப் போற்றினர்;
அடியவர் மீது பொழியும் அருளைப்பாராட்டினர்; அறவழி நிற்றலை,
மறவழி வீரம் உவத்தலை, போர்த்திறனை, கொடை உள்ளத்தை ,
பெரும்புகழை விரிவாகப் போற்றிப்பாராட்டினர்.
பழமை மிகுந்த வரலாறு கொண்ட குறிப்போடு, முருகனைப்போற்றினார்
சங்கப்புலவர். உவமைகளில் முருகனை, அவனது வீரமிக்க செயல்களை
விரிவாகப் பாராட்டினார்.
அவ்வைப்பிராட்டியும் தனது முதிய காலத்திலே முருகன் புகழ்
பாடினர். பிற்காலம் தோன்றிய காப்பியங்களும் முருகனை வெகுவாகப்
போற்றிமகிழ்ந்தன.
சிவன் மீது பாடப்பட்ட தேவார, திருவாசகங்கள் தந்தையோடு
மகனையும் இசைத்துப் போற்றின; தேவாரம் பாடிய திருஞானசம்பந்தரும்
முருகனாகவே போற்றப்பட்டார். இப்படிப் போற்றிய சான்றோர்க்கு
அருள்புரிந்த ,
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தின் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் சிறந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னைப்
போற்றி வணங்குகிறேன்.
4. கடைசியில் உள்ளது.
5. படைவீடுகள் .
1.முதற்படைவீடு . திருப்பரங்குன்றம் .
பாடல். 41.
தேவர்சிறை மீட்டெடுத்தான்; பாவரக்கர் மீட்டெடுத்தான்;
படைவீடு பரங்குன்றம்.
தேவமகள் தேவசேனா திருமுருகன் திருமணம்தான்
திருக்கோலம் கொண்டமலை.
சேவல்மயில் ஊர்தியாமே; சேர்ந்தனவே ஆடுயானை;
சேவற்கொடி சேர்ந்திசைக்கும்.
பாவமாயை செந்தூரில்; ஆயகன்மம் பரங்கிரியில்;
ஆணவமோ போரூரில்.
ஐந்துகுகை அமரகுகன், சத்யகிரீசர் , துர்க்கை,
ஐங்கரத்தான் பைங்கண்ணான் .
ஐந்தெழுத்தான் விந்தியமாய் அருங்காட்சித் திருமலை;
முந்துவினை மாற்றுமலை.
சிவச்செல்வர் தவமூவர் நவப்பதிகம் உவந்தளிமலை;
சிவகுகனார் சேர்ந்தொளிர்மலை .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
1. முதற்படைவீடு. திருப்பரங்குன்றம்.
சூரபன்மனை வீழ்த்தி, அவனது சிறையில் கட்டுண்ட தேவர்களை
விடுவித்தவன்; பாவநிலையிலிருந்து அரக்கர்களை விடுவித்தவன் ;
மாமுருகக்கடவுள் வீற்றிருக்கும் முதற்படைவீடு திருப்பரங்குன்றம் ஆகும்.
தேவர்களின் படைத்தலைவன் ஆகி, அவர்களைக் காக்கவே ,
போரிட்டு, வென்றவனாகிய சுப்பிரமணியக்கடவுளுக்குப் போர்ப்பரிசாகத்
தன்மகள் தெய்வயானையைத் திருமணம் செய்துவைக்க விரும்பினான்
தேவேந்திரன்; அத்திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம் ஆகும்.
இங்கு திருமணக்கோலத்தில் முருகன் எழுந்தருளியுள்ளார்.
மயிலை மட்டுமே ஊர்தியாகக் கொண்ட முருகனுக்கு, இத்தலத்திலே
மயில்,சேவல், ஆடு, யானை என்ற நான்கும் ஊர்திகளாக,(வாகனமாக)
அமைந்திருத்தல் சிறப்பாகும். அத்துடன் சேவலும் கொடியாகப்பறக்கும்.
திருச்செந்தூரில் "மாயை" என்னும் மலத்தை அழித்தும்,
திருப்பரங்குன்றத்தில் "கன்மம்" என்னும் மலத்தை அழித்தும்,
திருப்போரூரில் " ஆணவம்" என்னும் மலத்தை அழித்தும் வெற்றி
கண்டவன்; முறையே தாரகன், சிங்கமுகன், சூரபதுமன் ஆகியோரை
வெற்றி கொண்ட முருகன் வீற்றுள்ள தலம் இது.
குடவரைக் கோயிலான இங்கு இறைவன் சன்னதிகள் ஐந்து
குகைகளாக அமைந்துள்ளன; நுழைந்தவுடன் முதற்சன்னதி
திருமணக்கோலத்து முருகனுடையது; அடுத்தது அன்னை துர்க்கை
அம்மனுடையது; அடுத்தது கற்பக விநாயகப் பெருமானுடையது;
பக்கவாட்டில் இடதுபுறம் பவளக்கனிவாய்ப்பெருமாளுடையது;
வலதுபுறம் சாத்யகிரீசர். சிவபெருமானுடையது ஆகும்.
இம்மலையே சிவபெருமானாகக் காட்சி அளிக்கிறது; அதனால்
இதற்குப் "பரங்கிரி" என்ற பெயரும் உண்டு.மலையையே மகேசனாக
வணங்குவர் மக்கள்.வணங்கும் மக்களின் பிறவிப்பிணியைப் போக்கி
வீடுபேற்றை வழங்குவார் சிவனார்.
தேவாரம் பாடிய அப்பர்,,சம்பந்தர் ஆகிய மூவரும் இத்தலத்தைப்
போற்றிப்பாடியுள்ளனர்; தந்தையோடு மகனாகிய முருகக் கடவுளும்
இங்கு வீற்று அருள்புரிகின்றனர். ஆயினும் இம்மலை முருகனுக்கே
உரித்தான முதற் படைவீடாக அமைந்துள்ளது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பான் யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
பாடல். 42.
முதற்படைவீடு. திருப்பரங்குன்றம் .
அன்றாடம் திருப்பூசை; அபிடேகம் ஏற்காமல்,
அருவேலே தானானவன்;
நின்றருளும் கோலத்தே நீள்படையகம் நிலைத்திருக்கக்
குன்றவனோ அமர்ந்தகோலம்.
வென்றிட்ட சூரனவன் சம்ஹாரம் சட்டியிலே
ஒன்றிடுமே உலகெல்லாம்;
குன்றத்தில் குணசட்டி , குளிர்தெப்பம், குனித்திருநாள்
ஒன்றிரண்டு மூன்றாகும்.
குன்றுயரம் ஓராயிரத் தைம்பதடிகள்; குன்றின்மேல்
மன்றலாடிக் கோயிலுண்டு.
வென்றானே வீணசூரன் வியன்நிலத்தே. வென்றவெற்றித்
தென்றலதை ஒன்றிநின்றான்.
சிவன்,சேய் ,தாய், சன்னதிகள், சீர்பொய்கைச் சரவணம்
தவக்குன்றைப் பணிந்திடுவோம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
முதற்படைவீடு. திருப்பரங்குன்றம்.
இக்கோயிலில் நடுநாயகமாக அமர்ந்து அருள்புரியும் முருகக்
கடவுளுக்கு ஆகம முறைப்படி அன்றாடம் பூசைகள் நடைபெறும்; ஆனால்
சுவாமிக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை; அபிடேகம் அவர் கையில்
தாங்கியுள்ள வேலுக்கே அபிடேகம் நடைபெறும்; அன்பர்கள் அளிக்கும்
பாலை வேலுக்கே அபிடேகம் செய்வார்கள். அவ்வேலே ஆண்டவனாகக்
காட்சியளிக்கும்.
ஏனைய ஐந்து படைவீடுகளிலும், நின்றபடி அருட்கோலம் கொண்டு
விளங்கும் முருகக் கடவுள் இங்கு அமர்ந்த கோலத்தில் அருளாட்சி
புரிகிறார். அதுவும் தெய்வயானையை மணந்த கோலம்; அழகும், அருளும்
நிறைந்த கோலம்.
ஐப்பசித் திங்களில் வரும் வளர்பிறைச் சட்டியிலே தான் உலகெங்கும்
உள்ள திருமுருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா கந்த சஷ்டி எனக்
கொண்டாடப்பெறும்; ஆனால் இங்கோ ஆண்டுதோறும் மூன்று
சூரசம்ஹாரங்கள் நடைபெறுகின்றன; இயல்பாக கந்தசஷ்டி விழா,
தெப்பத்திருவிழா நடைபெறும் திங்களிலும், பங்குனி உத்திரத்
திருவிழாவின் போதும் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பானதாக
விளங்குகிறது.
திருப்பரங்குன்றத்து மலையின் உயரம் கடல்மட்டத்திலிருந்து
ஆயிரத்தம்பது அடிகள்; உயர்ந்த மலையின் உச்சியிலே சிவனார்
குடிகொண்ட கோயில் ஒன்றும் அன்பர்களுக்கு அருளைப் பொழிகிறது.
ஆணவச்சூரனை நிலத்திலே போரிட்டு வென்ற முருகன் வீற்றிருக்கும்
பதி திருப்பரங்குன்றம். வெற்றிப்பரிசாக இந்திரன் தனது மகள்
தெய்வயானையை முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்த தலம் இவ்வூர்.
குடவரைக் கோயிலாய் விளங்கும் இங்கு சத்யகிரீசர் ,என்ற பெயரில்
சிவபெருமானும், கற்பகவிநாயகரும், பவளக்கனிவாய்ப்பெருமாளும்,
துர்க்கையம்மனும், கல்யாணக்கோலத்தில் சுப்பிரமணியக் கடவுளும்
அருள்புரிகிறார்கள் ;இப்படிப்பட்ட பெருமையைத் தவம் செய்து பெற்று,
விளங்கும் மாமலையை வணங்கி அருள் பெறுவோம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது யோகத்திலும் உயர்ந்தோங்கியவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாய் விளங்கும் ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி பணிந்து
போற்றி வணங்குகிறேன்.
பாடல். 43.
இரண்டாம் படைவீடு; திருச்செந்தூர்.
படைவீடு கொண்டசெந்தூர், பரவியது ஆறுபதி ;
படையெடுத்த பழம்பெரும்பதி ;
படைவீடுகள் ஐந்தும் பசுநிலங்கள்; பதிசெந்தூர்
படரிடர்களை கடலலைவாய் .
கடலருகே கனிநீராம் நாழிகைக் கிணற்றின்
நலநிலநீர் சரவணமே.
கடலதையே கங்கையாய்க் கனிச்சோறுடன் கவின்மலரிடும்
கதிர்ப்பூசை காணுநல்லூர்;
சட்டிநாள் விழா ஆறென்பர் ; ஈராறுநாள் சிந்துபுரம்
சண்முகனின் சாத்திரத்தில்.
மட்டில்லா மாவிழாக்கள் மாசியாவணி மாதங்களில்;
பட்டுவெள்ளைப் பிரும்மனாவான்;
நெற்றிக்கண் நீள்சிவப்பு; கரும்பச்சை கரியமால் ;
வெற்றிகுகன் உற்றமூவர்.
நவக்கோல நலவிடங்கர் , தவக்கோலச் சயந்திநாதர் ,
அலைவாய்ப் பெருமாளெனும் ,
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
இரண்டாம் படைவீடு. திருச்செந்தூர் .
சூரபன்மன் மீது படையெடுக்கப் போர்தொடுக்கப் புறப்பட்ட நகர்
திருச்செந்தூர் ஆகும்; முருகன் புறப்பட்ட படைவீடு என்ற பெருமை
ஏனைய ஐந்து பதி களுக்கும் சென்றடைந்து, அவைகளும் படைவீடு
என்ற பெருமை பெற்றன; இதனைப் பாடிய நக்கீரர் பெருமானும்
ஆறுபடை என்பதை ஆற்றுப்படை என்னும் புலவன் ஆற்றுப் படுத்தும்
நிலையோடு இணைத்து, திருமுருகாற்றுப்படை என்றே போற்றிப்பாடினார்.
ஏனைய படைவீடுகள் ஐந்தும் குறிஞ்சி நிலங்களாகும்; திருச்செந்தூர்
மட்டுமே நெய்தல் நிலமாகக் கடலலை மோதும் திருச்சீரலைவாய்
ஆயிற்று. அடியவர்களின் துயரக்கடலை நீக்கி அருளும் தலம் ஆயிற்று.
செய்திப்பதியின் பல சிறப்புகளிலே நாழிக்கிணறும் ஒன்றாகும்.
கடலுக்கு அருகே அமைந்த இக்கிணற்றின் நீரோ கனிபோல் இனிக்கும்.
சரவணப்பொய்கை போல் தூய்மையும், இனிமையும் கலந்த புண்ணிய
நீரூற்று நாழிக்கிணறு .
நாள்தோறும் இங்கு நடக்கின்ற பூசையில் கடல் தாயைக்
கங்கையாகப் பாவித்து, அதற்கு, பால்,சோறு, மலர்கள் இவைகளால்
அர்ச்சித்துப் பூசை செய்து வழிபடுவது அன்றாடப் பூசை முறையாகும்.
உலகெங்கும் முருகனுக்கு ஐப்பசித் திங்களில் கந்த சட்டி விழா எடுப்பர்.
ஆறுநாட்கள் நடைபெறும் விழா அனைத்து முருகன் கோயில்களிலும்
சிறப்பாக நடைபெறும். ஆனால் இங்கு, அவ்விழா பன்னிரண்டு நாட்கள்
கொண்டாடப்படுகின்றன. முதல் ஆறு நாட்கள் விரத நாட்கள் ஆகும்;
ஏழாம் நாள் சூரசம்ஹாரம்; 8,9,10,11,12, ஆகிய ஐந்து நாட்களும்
திருக்கல்யாண நாட்கள் ஆகும்; இது இத்தலச்சிறப்பு ஆகும்.
ஆவணி, மாசி ஆகிய இரு திங்களிலும் முருகனுக்குத் திருவிழா
நடைபெறும். இத்திருவிழாக்களில் ஏழாம் நாளில் சிவப்புப் பட்டு
ஆடை அணிந்து,முருகன் சிவனாகக் காட்சி தருவார். எட்டாம் நாள்
காலையில் வெள்ளைப்பட்டு அணிந்து, பிரும்மதேவனாகக் காட்சி
தருவார்; மாலையில் கரும்பச்சைப்பட்டு அணிந்துகொண்டு,
திருமாலாகக் காட்சி தருவார்; மும்மூர்த்திகளும் முருகனுக்குள்
ஒன்றியவர்கள், என்பதை இக்காட்சிகள் விளக்கும்.
சண்முகர் ஆகிய முருகன்,குமாரவிடங்கர், ஜயந்திநாதர் , அலைவாய்ப்
பெருமாள் என்ற பெயர்களோடு உற்சவ மூர்த்தியாக இங்கு காட்சி
தருகிறார். இப்படிப் பெருமை கொண்டவனே!
சிவ ஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் ஆசானாய் விளங்கும் ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி
பணிந்து போற்றுகிறேன்.
பாடல்..44.
இரண்டாம் படைவீடு. திருச்செந்தூர்.
விண்ணாளும் வியன்கோபுரம் எந்நாளும் நடைமூடிடத்
தண்கடலாம் தன்முன்பயில் ;
பண்பாடும் மணநாளின் பின்னிரவில் கணநேரம்
பொன்வாயில் திறந்தருள்வர்;
சங்கார நாள்முடிவில் சதாசிவச் சன்னதியில்
சாயாபி ஷேகம்காண்.
மங்காத புகழுடைய மானின்மகள் மலைவள்ளி
மணிக்குகையில் தனித்திருப்பாள்;
கந்தமாதனச் சந்தனமலை முந்தைய செந்தூராம் ;
விந்தைக்கலி விழுங்கிட்டதோ!
கந்தர்கலி வெண்பாவும், ஆற்றுப்படை, திருப்புகழும்,
செந்திப்பதிச் சிறப்புரைப்பன.
சிவகுருவே சண்முகர்; சிவலிங்கம் நவகுகனே;
சிவஸ்வரூபம் புவனமெங்கும்.1
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
இரண்டாம் படைவீடு; திருச்செந்தூர்.
திருச்செந்தூர் கோயிலின் கோபுரம் முருகன் சன்னதி முன்னே
அமையவில்லை; அங்கு பரந்துபட்ட கடல் காட்சியளிக்கும். சுவாமியின்
பின்பகுதியில் மேற்கில் அமைந்துள்ளது இராஜகோபுரம். அக்கோபுர
வாயிலும் எந்நாளும் திறக்கப்படுவதில்லை;
ஒவ்வொரு ஆண்டும் முருகனது கல்யாணவைபவம் முடிந்த அன்று
நள்ளிரவு அக்கோபுர வாயிலைத் திறப்பர் ; அதுவும் மிகக்குறைந்த நேரமே
கதவு திறந்திருக்கும்; சுவாமி பூஜைக்குத் தொடர்பானவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்; பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை; உடனே
அக்கதவு மூடப்படும்.
சூரசங்காரம் முடிந்தபின் கோயில் பிரகாரம் வழியாக உள்ளே
எழுந்தருளும், சண்முகருக்கு, பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதியில்
சாயாபிஷேகம்" நடைபெறும். சுவாமிக்கு முன் மிகப்பெரிய
நிலைக்கண்ணாடி நிறுத்தப்படும்; அக்கண்ணாடியில் முருகனது பிம்பம்
நன்கு தெரியும்; அந்நிழலுக்கு, அபிஷேகம் செய்வர் ; சாயை என்றால்
நிழல் என்பது பொருள்; காண்போரின் கண் திருஷ்டி கழிவதற்காக
அவ்வபிஷேகம் செய்யப்படுகிறது. இப்பதியில் இவ்வபிஷேகம் சிறந்த
ஒன்றாகக் கருதப்படுகிறது.
செந்தூரின் போற்றவேண்டிய பகுதிகளில் "வள்ளிக்குகையும் "
ஒன்றாகும். தனியே நின்று,அமர்ந்து காட்சி தரும் அம்மையைக் காணக்
கண்கோடி வேண்டும். மான் வயிற்றில் மகவாய்த்தோன்றிய வள்ளி.
மால் பெற்ற மகள் அங்கே காட்சி தருகிறாள்.
கடல் தலமாய் விளங்கும் திருச்செந்தூர் ஒரு காலத்தில்
கற்பகோடி வருடங்களுக்கு முன்பு மலையாகவே விளங்கிற்று.
கந்தமாதனமலை " என்பது அதன்பெயர்; சந்தன மலை என
அழைப்பர். காலங்களில் அது சிதைந்து, குறுகி, நிலப்பகுதியாகவும்,
நீர்ப்பகுதியாகவும் மாறிற்று; அதன் சுவடுகளை ஆலயத்தில் ஆங்காங்கு
காணலாம்; வள்ளிகுகை பிரகாரம் ஆகிய இடங்களில் நிலம் சற்றே
உயர்ந்து காணப்படும்.
நக்கீரர் பாடிய "திருமுருகாற்றுப்படையும்" திருப்புகழும்,"
"கந்தகலிவெண்பாவும்" இத்திருப்பதியை வெகுவாகப் புகழ்ந்து
போற்றுகின்றன.
இங்கு வீற்றிருக்கும் ஆலமரக்கடவுள் தக்ஷிணாமூர்த்தி
ஞானஸ்கந்தர்" என்றே அழைக்கப்படுகிறார்; இங்குள்ள சிவலிங்கங்கள்
குகஸ்வரூபமாகவே போற்றப்படுகிறது. எல்லாம் சிவம் என்பதுபோல்
இங்கு எல்லாம் குகமயமாகவே காட்சி நல்கும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்தில் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாய் விளங்குபவனே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..45.
மூன்றாம் படைவீடு . திரு ஆவினன்குடி . பழனி .
போகமாமுனி புலிப்பாண்டி யோகமாமயம் ஆகமாம்பணி
தேகமாம்உடல் தெய்வச்சிலை;
வேகவேலவன் வீறுடல்தணி தாகசாந்தி ஏகநாளெலாம்
மோகமுறுவல் அபிஷேகமே .
பற்றற்றான் பற்றுவைக்கப் பற்றற்ற ஆண்டியாகி
உற்றகோலம் நிற்குதம்மா.
உற்றசிறகின் உறுகுழந்தை ; உணர்மணத்தான் ; நற்றவாண்டி ;
முற்றமூன்று கோலமிங்கு .
திருமகளும், ஒருபசுவும் , சூரியனும், அருள்பூமியும்
பெரும்பூசை ஆற்றியதால்
திருவாவினன் குடியாகும்; அருங்கனிச் சினத்தமர்ந்த
முருகன்புகழ் பழனியாகும்.
சிவன்போலவே சீரன்ன அபிஷேகம் ஆனிமாதம்
சிவமுருகன் சிறந்திடுவான்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
மூன்றாம் படைவீடு . திருஆவினன் குடி ;பழனி.
போகர் என்ற மாமுனிவராகிய சித்தரும் , அவரது சீடர் புலிப்பாண்டி
என்னும் சித்தரும் தமது யோகமுறை தழுவியும், சைவாகம விதிமுறை
தழுவியும், நவ பாஷாணங்களைக் கொண்டு பழனி மாமுருகனின்
உருவத்தைச் சிலை வடிவில் ஆக்கினார்கள்.
வீர்யமும் ,வேகமும் காந்தியும் கொண்ட அம்முருகனது சிலையின்
வெப்பத்தைக் குறைக்கவும், சாந்தமும் அமைதியும் திகழவும் அவருக்கு
நாளெல்லாம் நாள்முழுவதும் பால்,பன்னீர் , வாசனைத் திரவியங்கள்
கொண்டு அபிஷேகம் செய்வார். இன்றும் அவ்வபிஷேகம் விடாது
நடக்கின்றது.
உலகிலே பிறவி எடுத்துப் பின்னர் அதில் ஆசை,பற்று பாசம்,
கொண்டு உழன்று,தவிக்கும் ஆன்மாக்களைத் தடுத்து,நிறுத்தி,
அவர்களது பந்தபாசத்தை அறுத்து, சிவன்சேவடி அடைய வழி காட்டும்
நிலையில் மாமுருகன் தானே ஆண்டிக்கோலம் கொண்டு, பற்றற்ற
பரதேசியாய்க் கோவணத்துடன் காட்சி அளிக்கிறார். அவரைக்கண்ட
வணங்கும் பக்தர்களும் ஆசையை அறவே அழித்திட இக்கோலத்தில்
ஆசி வழங்குகிறார்.
மலைமீது ஆண்டியாக நின்றாலும், பெரியநாயகி அம்மன்
கோயிலிலே மயில் மீது தவழும் குழந்தையாகவும், திரு ஆவினன்குடிப்
பெரிய கோயிலில் வள்ளி,தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர்
ஆகவும், மலைமீதோ ஆண்டியாகவும் நின்று முக்கோலத்தில்
அருளாட்சி புரிகிறார்,
இலக்குமியும், காமதேனுவும், சூரியனும் பூமித்தாயும் இங்கு
முருகனைப் போற்றிவணங்கி அருள்பெற்றதால் இப்பதி
திரு+ ஆ+ இனன் + கு எனப்பிரித்துப் பொருள் கொள்க.
திரு=இலக்குமி. ஆ=காமதேனு. இனன் =சூரியன். கு=பூமி .
இப்பதியில் தரவேண்டிய வெற்றிக்கனியைத் தந்தை தனக்குத்
தராத காரணத்தால் சினந்த முருகன் இம்மலைமீது ஆண்டிக்
கோலத்துடன் நிற்க, அன்னையும், சிவனும் முருகா! நீயே பழம்;
பழம் நீ. என அழைத்து விளையாடியதால் இம்மலை பழனி
எனப்பெயர் பெற்றது.
சிவபிரானுக்கே உரியது அன்னாபிஷேகம். தந்தையைப்
போலவே,முருகனும் இங்கு ஆனித்திங்கள் கேட்டை நாளன்று
அன்னாபிஷேகம் காண்கிறார். இது இப்பதியின் பெரும் சிறப்புகளில்
மிகச்சிறந்த ஒன்றாகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாய் நின்ற ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமி நாதக்கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
பாடல்.. 46.
மூன்றாம் படைவீடு..திருஆவினன்குடி ,,பழனி .
சக்திகிரி சிவகிரிக் காவடிகொள் இடும்பமலை
சார்ந்துபோற்று முக்திமாமலை;
பக்திமேலிடப் பக்தர்செல் படிகளோ ஐந்தொளிநிறை
சக்தியேழு நூறாகும்.
பக்கத்து வையாபுரி, பதிசரவணப் பொய்கையும்
பசுநெல்லியும் பதிபுண்ணியம்.
தக்கதொரு துணையாக்கித் தக்கவரெலாம் தொழிலாக்கம்
மக்கள்பயில் மகிழ்மாமலை.
சம்பந்தான் சதியாலே கிளியாக நின்றிட்டுச்
சார் தண்டம் சேரருணர்.
கம்புகாவடி சிம்புசேவடி பம்புபாவடி தும்புநோகடி
துன்புபோம்வழி துள்ளலாகுமே.
சிவமூலம் சாயரக்ஷை; சிவாராடம் ஆவுடையார்
சிவானன வபிஷேகம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
மூன்றாம் படைவீடு . திருஆவினன்குடி . பழனி.
அகத்திய மாமுனி ஆணையின்வண்ணம் சிவகிரி,சக்திகிரி என்ற
இரண்டு மலைகளைக் காவடிபோல் தூக்கிக்கொண்டு, முனிவரின்
சொற்படி, ஆவினன்குடி வந்த இடும்பன் அம்மலைகளைக் கீழே வைக்க,
அதன்மீது முருகன் ஏறிநின்று விளையாட, யாரென அறியாமல் அவரைக்
கீழே இறங்குமாறு வலியுறுத்த, அதனால் இருவரும் போர் புரிந்து
தோற்றுப்போன இடும்பன்முன் முனிவர் தோன்றி, முருகன் பெருமையைக்
கூற, இடும்பனும் முருகனின் அடிமை ஆகிறான். அவர் ஏறிநின்ற மலை
சிவகிரி பழனி மலையாகவும், அதனருகே சக்திகிரி இடும்பன் 9
மலையாகவும் , முருகனின் பாதுகாப்பாக இன்றும் விளங்குகிறது.
பழனி மலையின்மீது பக்திகொண்ட அடியவர்கள் ஏறிச்சென்று
முருகனைப் போற்றுவார்கள். அந்த மலைப்படிகள் அறுநூற்றுத்
தொண்ணூற்று ஐந்து படிகளாகும். ஐந்து என்னும் நமசிவய என்பதைத்
தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் சக்தியாம் ஏழு கன்னியர்;
எழுநூற்றில் ஐந்து குறைந்தது என்பது பொருள்.)
திரு ஆவினன்குடியாம் பழனியில் வையாபுரி" ஏரியும் , சரவணப்
பொய்கையும், தலவிருட்சமாகிய நெல்லி மரமும், பதியாகிய முருகனைப்
போற்றும் புண்ணிய வழிகாட்டும் அமைப்புகள் ஆகும்.
கொங்கு நாட்டில் பெரும்தொழில் புரிந்து செல்வத்தைச் சேர்க்கும்
பெருந்தனக்காரர்கள், தொழிலதிபர்கள், இவர்கள் எல்லாம் பழனி
மாக்கடவுளான மாமுருகனைத் தம்மோடு, தொழிலில், வியாபாரத்தில்
பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு செயலாற்றுவர். வரும் இலாபத்தில்
முருகனுக்கும் பங்கு கொடுப்பர். காலம் காலமாய் நடக்கும் செயல் இது.
மக்களோடு கலந்து மகிழும் மாமலை பழனி.
அருணகிரி நாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தானந்தன் என்னும்
புலவன், தேவராயன் என்ற குறுநில மன்னனோடு சேர்ந்து, பாரிஜாத
மலரைத் தேவலோகத்தில் இருந்து ஒருநோய் தீரக் கொண்டுவர
ஆணையிட்டான்; கூடுவிட்டுக் கூடு பாயும் அற்புதக்கலையை முருகன்
அருளால் பெற்றிருந்த அருணகிரி, ஒரு கிளியின் உடலில் புகுந்து, தன்
உடலை மதுரைக் கோபுரத்தில் மறைத்துவைத்துவிட்டுச் சென்று, மலரோடு
திரும்பிவந்தார். ஆனால் புலவன் சதியாக அவர் உடலை எரித்து
விடுகிறான்; தன்னுடல் காணாது தவித்து, அங்கும்,இங்கும் பரந்த
அருணகிரிக் கிளியை , முருகன் தன்கையில் உள்ள தண்டத்தின் மீது
அமரச்செய்தார்.முருகனது பேரருள் பெற்ற அருணகிரி இன்றும் பழனி
ஆண்டவர் கையில் விளங்கும் தண்டத்தின்மீது அமர்ந்துள்ளார்.
என்னே இறையருள்!
பழனி என்றாலே பால்காவடி,பன்னீர்க்காவடி, பளபளக்க காவடிகள்
நினைவிற்கு வரும்; கம்பைக் கையால் சுற்றிச்சிலம்பம் ஆட்டியபடி
ஆடும் காவடியாட்டம்; சிலம்பினைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும்
காவடியாட்டம்; பம்பை ,பரட்டை, போன்ற தாளத்திற்கேற்பப் பாடியபடி
ஆடும் ஆட்டம், கட்டிய கயிறை அறுத்தபடி,மிரண்டு ஓடும் காளையின்
கதியில் ஆடும் ஆட்டம், தமக்கும், தமது குடும்பத்திற்கும் துன்பம்
வராமல் காக்க வேண்டி ஆடும் ஆட்டம், இடும்பன் சன்னதிமுன்
துவங்கும் பேட்டைத் துள்ளல் ஆட்டம் எனப் பல்லோரும் பக்தி
கொண்டு ஆடுகின்ற ஆட்டத்தை இன்றும் காணலாம்.
ஐப்பசித்திங்கள் அனைத்துச்சிவாலயங்களிலும் நடைபெறும்
அன்னாபிஷேகம் போன்று மலைமீதுள்ள முருகனுக்கு அன்னாபிஷேகம்
நடைபெறும்; அதேபோல பெரியநாயகி அம்மன்கோயிலிலும், ஆவுடையார்
கோயில் சிவனுக்கும், மூலநட்சத்திரத்து அன்றும், பூராடம், உத்திராடம்
ஆகிய நாட்களிலும் ஆவணி,ஆணி மாதங்களில் அன்னாபிஷேகம்
நடைபெறும். இது பழனிக்கோர் சிறப்பாகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் விற்று,அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..47.
நான்காம் படைவீடு. திருத்தணிகை.
குன்றுதோறா டலென்றுயர் குன்றமே திருத்தணிகை;
மன்றல்மணம் தென்றல்குகன் ;
குன்றத்துக் குணப்படிகள் குறிக்கும்நாள் தமிழாண்டு;
குளிராடி படிபூஜை;
தணிசினம், தணியச்சம், தணிமயக்கம், தணிதுன்பம்.
தணிவிக்கும் தணிகைமலை;
தனிவீரம், தனிஞானம், தனிஆசான் தனிமூர்த்தி
அணிமுருகன் மணிமலையிது.
அருள்வேலைப் பற்றாது, வச்சிரவேல் திருக்கரத்தில்;
அருள் பெறுபவன் தேவேந்திரன்;
இருள்சூர சங்காரம் இனிமைமலை இங்கில்1லை;
குறவள்ளி குதூகலமே .
தவமேலோன் அகத்தியனும் தான்கற்றான் தனித்தமிழை;
தமிழ்க்குகனின் உபதேசம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
நான்காம் படைவீடு. திருத்தணிகை .
"குன்றுதோறாடல்" என்னும் பெயர் பெற்ற தலமே திருத்தணி என்று
அழைக்கப்படுகிறது. வள்ளிப்பிராட்டியை மணம் புரிந்து, கொண்டு,
அக்குறமனையாளுடன் ஆடிப்பாடிய மலை இம்மலையாகும்.
இம்மலைமீது ஏறி முருகனைத் தரிசிக்கச் செல்லும் படிகளின்
எண்ணிக்கை 365 ஆகும். தமிழ் வருடத்தின் நாட்களின் எண்ணிக்கை 365.
ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு நன்மையே நடக்கவேண்டும் என
எண்ணி, அப்படிகளுக்கு ஆடிக்கிருத்திகை நாளன்று படி பூஜை செய்து
போற்றுவது இங்கு வழக்கமாக உள்ளது.
சூரன் மீது போர் தொடுத்த காலை அவன் மீது தோன்றிய சினம்,
அவன் சேவலாக, மயிலாக மாறியபின்னும் மனத்தக்கதே முருகனுக்கு
மாறாதிருந்தது; அதனைத் தணிக்கவே தணிகை மலை வந்தார்;
சூரபன்மாதி அரக்கர்களால் அஞ்சிநடுங்கிய தேவர்கள், தங்களது
அச்சம் நீங்கிட முருகனையே துணையாகக் கொண்டனர்; அவ்வச்சம்
நீக்கிய மலை இது.
அரக்கர்களின் அடாத செயல்களினால் மனம் வெதும்பிய முனிவர்கள்
முருகன் அவர்களை அழித்தபின் அமைதியும் ஆனந்தமும் பெற்றனர்;
முனிவர்கள்தம் மயக்கமெல்லாம் இன்று மறைந்தது.
மானிடப்பிறவி எடுத்த மக்கள் எல்லாம் நோய்.இல்லாமை, வறுமை
போன்ற துன்பங்களால் வாடினர்; அவர்தம் வாட்டத்தை இம்மலைக்கு
எழுந்தருளிய முருகன் போக்கியதால் மானிட்டதுன்பமெல்லாம் தணிந்தது.
முருகன், இம்மலையில் வீரமூர்த்தி, ஞானமூர்த்தி, ஆசார்யமூர்த்தி என
மூன்று தனமையில் எழுந்தருளி உலகைக் காக்கின்றான்; அவனது
ஆளுகைக்கு உட்பட்ட இம்மலை ஆன்மாக்களை நன்கு காக்கிறது.
ஏனைய முருகன் திருத்தலங்களில் எல்லாம் வேலவன் அன்னை
அளித்த ஞானவேலை க் கையில் ஏற்றிருப்பான்; ஆனால் இங்கோ முருகன்
தனது கரத்தில் வச்சிரவேல்" என்னும் கூர்மை மிக்க ஆயுதத்தைத் தாங்கி
இந்திரனை நினைவு கூரும் வகையில் முனிவரின் முதுகெலும்பான
வச்சிரத்தை ஏற்றுள்ளான்.
குதூகலம் மிக்க வள்ளிக்கல்யாணம் நடந்த தலம் ஆகையால் இங்கு
சூரசங்காரம் நடைபெறுவது இல்லை;
தமிழ்முனிவராகிய அகத்தியரும் இங்கு முருகனை வணங்கிப்போற்றித்
தமிழ் உபதேசம் பெற்றார்; தமிழ்முனி ஆனார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே@ தந்தைக்கே ஞானகுருவாய் உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..48.
நான்காம் படைவீடு. திருத்தணிகை.
தாரகனிடம் தானிழந்த வீறுசக்கரம் விரும்பியமால்
தணிகையிலே தயைபெற்றான் ;
வாரணமாம் ஐராவதம் வளப்பரிசாய் அளித்தபின்னர்,
சோர்வுற்றான் தீர்வாகத்
தார்முருகன் தரமுனைந்தும், தன்திசைகாண் பார்வையினால்,
சீருற்றான்; பேறுறவே
கார்குளிர்ச்சுனை கருங்குவளை நீலமலர் கைநிறையச்
சேர்மனத்துடன் சேவடிதொழும் .
எழுமுனிவர் எழுசுனையில் எழுகன்னியர் விழுநீரும்,
தொழுசரவணப் பொய்கையும்,
பொழில்தெப்பமும், புண்ணியன் செழிப்புமலைச் சீர்களாகும்;
செழுவள்ளிச் சீதனமோ!
சிவநெற்றிச் செஞ்சுடரின் செம்போரின் சீற்றமெல்லாம்
தவத்தாலே தணித்தமலை
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
நான்காம் படைவீடு. திருத்தணிகை
தாரகனிடம் போர் தொடுத்துத் தனது சக்கரப்படையை இழந்த
திருமால். முருகன் அரக்கர் மூவரையும் வென்றபிறகு, திருத்தணிக்கு
வந்து தாரகனிடம் தானிழந்த சக்கரப்படையை
வேண்டி,விரும்பிப்பெற்றார்.
முருகன் மீது கொண்ட அன்பினால் தனது ஐராவதம் என்ற
வெள்ளையானையைப் பரிசாக அளித்தான் தேவேந்திரன்; அதன்பின்
ஐராவதத்தைப் பிரிந்ததால் மிகுந்த துயருற்றான் இந்திரன்;
இதனையறிந்த முருகனும் அப்பரிசை மீண்டும் இந்திரனுக்கே தர
எண்ணினார்;ஆனால் இந்திரன் அளித்த பரிசைத் திரும்பப் பெற
விரும்பவில்லை; அதற்குப்பதிலாக அந்த யானையை எப்பொழுதும்
தன்பக்கமே பார்வை செலுத்துதல்போலக் கிழக்கு நோக்கியே நிற்க
முருகனிடம் வேண்டினார்; அவரும் அதை ஏற்றுக்கொண்டார்; அதன்படி
அதன்பார்வை இந்திரன் திசையில் அமைய அவனும் நன்னிலை
பெற்றான்; இன்றும் கூட இக்கோயிலில் உள்ள அணைத்து
யானைச்சிலைகளும் கிழக்கு நோக்கியே பார்க்கும் வண்ணம்
அமைந்துள்ளன.
அதனாலும், முருகன் மீது கொண்ட பக்கதியாலும் ஏழு சுனை
அமைத்து அதில் நீலோத்பலமாம் கருங்குவளை மலர்க்கொடியைத்
தோற்றுவித்து. அம்மலர்களை நாள்தோறும் முருகன் சேவடியில்
அர்ப்பணம் செய்து பூசனை செய்து வருவது இந்திரனின் பழக்கம்
ஆக மாறிவிட்டது.
ஏழுமுனிவர்கள் உண்டாக்கிய சுனையும் இங்கு உண்டு; அவர்களோடு.
எழுகன்னியர்களும் இங்கு வந்து சுனையி நீராடி முருகனை வணங்குவர்.
அச்சுனை இன்று புனித நீர்ச்சுனையாகப் போற்றப்படுகிறது.
சரவணப்பொய்கையையும் இங்கு தூய்மை நன்னீராக விளங்குகிறது;
அப்பொய்கையிலே தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இவைகள்
எல்லாம் திருத்தணி மலையின் பெருமை பேசும் அமைப்புகளோ!
அல்லது வள்ளிப்பிராட்டிக்கு விண்ணவர் கொடுத்த சீதனமோ! என்று
நினைக்கத்தோன்றுகிறது.
சிவபிரானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய செஞ்சுடர் ,
அவராணைப்படி அரக்கர்களை அழித்த செம்போரின் சீற்றத்தால்
அமைதி வேண்டித் தவம் இருந்த மலையோ ! முருகனது சீற்றம்
தவிர்த்து, அவரின் ஆசி பெற்ற மலையோ ! தண்மை வாய்ந்த மலை
திருத்தணிகை மலையாகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே/! தவத்திற்கே
தவமாக விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..49.
ஐந்தாம் படைவீடு; சுவாமிமலை; திரு ஏரகம் .
பொன்கொழிக்கும் பொன்னிதழுவ, மன்னவன்மலை மின்னுதம்மா!
இன்னலறு கன்னலவன் ;
மண்ணார்ந்த தென்னவர்கள் பொன்வேய்ந்த கட்டுமலை;
பண்ணார்ந்த பைந்தமிழ்மலை ;
பிறவியறு பதுபடிகள் ; உறவுதமிழ் ஆண்டாகும்;
நிறைமுக்தி முறைப்படியே.
கறைக்கண்டன் தரையிலமர் கரம்குவித்து, வாய்பொத்திட ,
மறையுணர்த்திய நிறையாசான்;
சிறைநான்முகன் செவிகுளிர்ந்திட நிறைமாமுனி நிலையுணர்ந்திட
அரைஞாண்ஒலி மறைபுகட்டிடும்.
தரைப்பீடம் ஆவுடையார், இறைகுகனோ உறுபாணம்;
சிறப்பான சிவகுகத்வம் .
அவதியுறும் ஆன்மாக்கள் அமைதிபெற அருள்காட்டும்
சிவகுருவும் சேர்ந்தீரே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
ஐந்தாம் படைவீடு.. சுவாமிமலை; திரு ஏரகம் .
காவிரி பாயும் சோழநாட்டில் காவிரிக்கரையில் வளம் மிகுந்த
வயல்களுக்கு நடுவே உலகமக்கள் துயரைப்போக்குகின்ற பரம்பொருள்
சுவாமிநாதக்கடவுளின் சுவாமிமலை ஒளிப்புகழால் மின்னுகிறது.
சோழநாட்டை ஆண்டவர்களும், பெருந்தனக்காரர்களும் மனமொன்றிக்
கட்டிய மாமலை, சுவாமிமலை. தேவாரத்திருமுறைகள் போற்றிப்பாராட்டும்
மலை இம்மலையாகும்.
முருகன் திருவடி வணங்க மலைமீது ஏறிடச் சான்றோர்கள்
அமைத்துள்ள படிகள் கூட நமக்குப் பெரும் இன்பத்தையும்,
பண்பாட்டையும் அளிக்கின்றன. அறுபது படிகள்; தமிழாண்டின் நலப்
பெயர்கள்; பிரபவ" எனத்தொடங்கும் வருடங்களின் பெயரை
அப்படிகளுக்குச் சூட்டி, அதன்வழியே நமது வினைகளைப், பாவங்களை
நீக்கி,நமக்கு முத்தி அளிக்கும் மகத்துவத்தை ஆன்றோர்கள்
ஆண்டவனிடம் வேண்டிப்பணிந்து அமைத்துள்ளனர்.
மூவருக்கும் மூத்தவனான பரம்பொருள் சிவபெருமான் தனது
மகனையே ஆசானாகக் கொண்டு, பிரணவத்தின் பொருளை மகன்
உபதேசிக்க, வாய்பொத்தி, நிலத்தில் அமர்ந்து, ஞானக்கல்வியைக்
கேட்டார்; தந்தைக்கே குருவான கடவுள் வீற்றிருக்கும் மலை
சுவாமி மலை ஆயிற்று; முருகனும் சுவாமிநாதன் ஆனார்.
பிரணவப்பொருள் தெரியாத நான்முகனைத் தலையிலே குட்டி,
அவனைச்சிறையிலும் அடைந்தவர் முருகன். தந்தை சொல்லக்கேட்டு
அவனை விடுவித்தார்; அந்த நான்முகனும் முருகனை வணங்கி
வேண்டிடப் பிராணவப்பொருளை அவனுக்கும் உபதேசித்தார் .
ஞானமாமுனி அகத்தியரும் வேண்டிட அவருக்கும் ஓங்காரப் பொருளை
உபதேசித்தார். இடுப்பில் கட்டிய அரைஞாண் கழல் ஓலி சிணுங்க
விளையாடும் ஞானக்குழந்தை இவர்களுக்கு உபதேசம் செய்தது.
சுவாமிமலைச் சன்னதியில் நெடியோனாய் நின்றிருக்கும்
சுவாமிநாதக் கடவுளைப் பணிந்து பார்த்தோமானால் அவர்
நின்றிருக்கும் பீடம் லிங்கத்தின் ஆவுடையார்போல் காட்சியளிக்கும்;
நிற்கின்ற முருகனோ சிவலிங்கம் போலவே காட்சியளிப்பார்.
சிவனும்,குகனும் ஒன்று என்னும் சிவகுகத் தத்துவத்தை இது
வெளிப்படுத்துகிறது.
நிலவுலகத்திலே தோன்றிப் பிறவிப்பிணியால் அவதிப்படும்
ஆன்மாக்களின் துன்பத்தைப் போக்கிடவே, தந்தையான சிவனும்,
மகனான குகனும் ஒன்றுபட்டு, குருசீடனாகி ஆன்மாக்களைக்
காப்பவர்களே உங்களது திருவடிக்கு வணக்கங்கள்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாய் விளங்குபவனே!
உன்னடி பணிந்து போற்றி வணங்குகிறேன்.
பாடல்..50.
ஆறாம் படைவீடு. பழமுதிர்சோலை .
சோலைமலை சீலவள்ளி மாலன்மகள் சேர்ந்திசைந்த
கோலமுருகன் வேலமலை;
நீலமாங்கனி கூலநாவல், சூலிலந்தை, செங்கொய்யா,
நீணிலமெலாம் நல்லுதிர்மலை;
சுடாதபழம் கேட்டபாட்டி சுட்டதுபோல் ஊதிநிற்க,
விடாதருளிய விளையாடல் ;
இடாதுநின்று இருடிதானும் இட்டபின்னர் இடிமழை
அடாதுபெய்த அருமுனிமலை ;
தடாதகையின் திருமணம் தண்மதுரை தானடையத்
தவறவிட்ட திருமால்மலை ;
விடாதபற்றுடன் வேலவனை, வியன்மகளாம் இருவரையும்,
விரும்பியணை அழகர்மலை;
சிவக்கனியோ நவக்கனியோ தவக்கனியோ புவனக்கனி.
உவந்துநாம் தாள்பணிவோம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
ஆறாம் படைவீடு . பழமுதிர்சோலை.
சோலைமலை என்ற பெயரைத் தாங்கிய பழமுதிர்சோலை
வள்ளிப்பிராட்டியாரும், தெய்வயானைத் திருமகளும் தன்னருகில் நிற்க,
மாமுருகன் அருள்புரியும் மலையாகும். இங்கு முருகனின் சாட்சியாக
வேல் நிற்கும்; வேல் கிடைத்த இடமே கோயிலாக விளங்குகிறது.
இம்மமலையில் மரங்களில் இருந்து கனிகள் தாமாகவே உதிர்ந்து
விழுவதால் பழமுதிர் சோலை என்ற பெயர் வந்தது என்பர். மாங்கனி,
நாவல்பழம், இலந்தைப்பழம், கொய்யா ஆகிய கனிகள் காயத்துக்குலுங்கும்;
மலர்களும், இலைகளும், காய்களும், கனிகளும் இம்மலையெல்லாம்
தரை முழுதும் உதிர்ந்து விழுந்து காணப்படும்.
அவ்வைப்பாட்டியுடன் வேலன் திருவிளையாடல் புரிந்த மலை
இம்மலை என்பர். நாவல் மரக்கிளையில் அமர்ந்திருந்த மாட்டுக்காரவேலன்
மரத்தடியில் அமர்ந்திருந்த அவ்வைப் பாட்டியைப் பார்த்து,
" பாட்டி! உனக்கு நாவல்பழம் பறித்துப்போடவா? என்று கேட்டான்;
பாட்டி1யும் சரி என்றாள்; சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
பாட்டி என்றதும் பழத்தில் சுட்டது,சுடாதது என்றெல்லாம் இருக்கிறதா?
எனக்கு சுடாத பழமே போடு! என்றாள் . அச்சிறுவன் மரத்தை
உலுக்கினான்; பழங்கள் கீழே விழுந்தன; பாட்டியும் அவைகளைப்
பொறுக்கினாள் . கீழே விழுந்தவை மண் ஒட்டியபடி விளங்கின;
அவைகளை வாயால் ஊதி ,ஊதி வாயில் போட்டுக் கொள்ள முனைந்தாள்
பாட்டி. என்ன! பாட்டி! பழம் சுடுகிறதா ! எனக்கேட்டுச்சிரித்தான் வேலன் .
ஞானம் கைவரப்பெற்ற அவ்வை அப்பா! நீ யார்! ஒரு நொடியில் என்னைத்
திகைக்க வைத்துவிட்டாயே! என்றாள் . முருகனும் அவ்வைப்பிராட்டிக்குக்
காட்சி கொடுத்து ஆசிகள் வழங்கினான். இவ்வரலாறு இம்மலையில்
நடந்ததென்பர்.
பாண்டிய நாடு வற்கடத்தால் மழையின்றிப் பஞ்சத்தாலும்
பட்டினியாலும் தவித்த காலத்தில், இம்மலையில் தவம்புரிந்த ஒருமுனிவர்
பட்டினியால் வாடி, உணவு தேடி மலையெல்லாம் அலைந்தார்; பசியின்
கோரப்பிடியில் சிக்கியிருந்த அவர்கண்முன் ஒரு புலையன் தனது
கொட்டகையில் இறந்துபோன ஒரு நாயைத் தொங்கவிட்டிருந்தான்; அது
அழுகி ,அதிலிருந்து நிணநீர் சொட்டிக்கொண்டிருந்தது. அங்கு சென்ற
அம்முனிவரது மனதில் பசி ஒன்று மட்டுமே மேலோங்கி நின்றது;
தீய நாற்றம், அழுகல் எதுவும் புலப்படவில்லை; அதை அவர் அப்படியே
உண்ண நினைத்தார்; அதை இறக்கினார்; அதனருகே அமர்ந்தார்;
தான் சாப்பிடும்முன் இறைவனுக்கு பலி அளிப்பதை வழக்கமாகக்
கொண்ட அவர் அதை அளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தார்;
பசி அவரை வாட்ட ,அளிப்பது என முடிவுசெய்து ஒரு கைப்பிடி
அதிலிருந்து எடுத்து, அதனை இறைவனுக்குப் படைத்தார்; தானும்
அதைத் தின்னத் தொடங்குவதற்குள் மழை கொட்டத்துவங்கியது;
பஞ்சம் பறந்தது;நாட்டில் பட்டினி பறந்தது; முனிவரின் இறைப்பற்று
உலகையே காத்து.. அம்முனிவன் தவம்புரிந்த மலை இது என்கின்றன
புராண நூல்கள்.
மதுரை மங்கையர்க்கரசி திருமணம் நடத்திக் கொடுக்கப்
புறப்பட்ட இம்மலையழகர் பெருமான், பெண்ணின் அண்ணன் காலத்தில்
செல்லாமல் காலம் தாழ்த்திச் சென்றதால் திருமணநிகழ்வில் கலந்து
கொள்ள இயலாமல் போய்விட்டது; சென்றவர் வைகையைத் தாண்டிச்
செல்லாமல் வந்துவிட்டார்; அந்த திருமால் வசிக்கும் மலை இது.
தனது தங்கையின் மைந்தன் என்பதால் பற்றுக்கொண்டு,
வேலவனையும், அவன் மணந்த தனது இருமகள்களையும் அரவணைத்து
நல்மனமுடன் கொண்டாடி வருகிறார்.அந்த மலையே அழகர் மலையாகும்.
சிவபெருமானின் இளையமகன்;ஞானக்கனி; புத்தம்புதிய போரினால்
உலகம் காத்த நற்கனி; எப்பொழுதும் தந்தையைப்போலவே தவமாற்றும்
தவக்கனி; இந்த புவனத்தின் ஆருயிர்களைக் காக்கும் கந்தன் என்னும் கனி.
அம்முருகன் தாள்களைப் போற்றுவோம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே ! தந்தைக்கே ஆசானாய் விளங்கும் ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
6. திருக்கோயில் ...மூர்த்தங்கள் .
பாடல் ..51.
6. 1. இராஜகோபுரம், பிரகாரங்கள் .
வழிந்தோடும் விழிபக்தி அழிவில்லா நீரோட்டச்
சுழிக்காவிரிப் புனல் நோக்கி
மழைமேகம் மலர்தூவ செழிப்படைந்த கலசங்கள்
பொழிகின்ற அருள்விழிகள்
விண்தொட்டு, மண்தொட்டு தென்திசை பார்க்கின்ற
பொற்கோயில் கோபுரமே.
கண்தொட்டக் கலைநயங்கள் கந்தவேளின் வரலாறுகள்
எண்ணற்றச் சிற்பங்களாம்.
கீழ்க்கோயில் மேற்கோயில் சூழ்ந்துற்ற பிரகாரம்,
மேல்மலை முதல்சுற்றும்,
ஏழேழு உலகையும் ஏற்றாளும் எழில்நாதன்
வாழ்பவன வளச்சுற்றும் ,
சிவமுருகன் சந்நிதானச் செழுமைமிகு சுற்றுக்களாம்.
சேர்ந்துபணிவோம் சேவடிதொழ.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
அடுத்து, நாம் கோயிலின் கோபுரங்கள், பிரகாரங்கள், மலைப்படிகள்
மூர்த்திகள் பற்றிப்பார்ப்போம். சுவாமிமலையின் இராஜகோபுரம் தெற்கு
நோக்கி, கம்பீரமாக வான் நோக்கி எழுந்துநிற்கும். தனக்கு முன்னாள்
ஓடிக்கொண்டிருக்கும் காவிரியாற்றை, அதன் அழகை, நீரோட்டத்தை,
நேராகக் கண்டபடி நிற்பது கோபுரம்.
அக்கோபுரத்திலே அழகிய வண்ண வண்ணச் சிற்பங்கள் முருகன்
வரலாற்றைத் தழுவி அமைந்திருக்கும். ஐந்து நிலை மாடமாக விளங்கும்.
பொற்கலசங்கள் பதுப்பிக்கப்பட்ட கோபுரம் வானளாவி எழும்பி நிற்பது.
கீழே தரைப்பகுதியில் அமைந்துள்ள கீழ்க்கோயில்; அதிலிருந்து
மேலே எழும்பிய கட்டுமலைக் கோயில் மேற்கோயில் எனப்படும்.
அங்கு செல்லப் படிக்கட்டுகள் உள்ளன; இக்கோயில்கள் புராணப்படி
கார்த்தவீர்யன் என்ற மன்னனால் கட்டப்பட்டது; பிற்காலச்சோழர்கள்
ஆலயத்தை மிக நேர்த்தியாக அமைத்தனர்.
அடுத்து அவ்விரு கோயில்களையும் சுற்றிவரப் பிரகாரம் உள்ளது.
அடுத்து, மலைமீது ஏறியவுடன் மலைக்கோயிலைச் சுற்றிவர ஒரு
வெளிப்பிரகாரம் உள்ளது.
அகிலஉலகையும் கட்டி ஆளும் சுவாமிநாதக்கடவுள் வீற்றிருக்கும்
மூலஸ்தானத்தைச் சுற்றிவர உட்பிரகாரம் ஒன்றும் உள்ளது.
செழுமை மிக்க இக்கோயிலின் மூன்று பிரகாரங்கள் இறைவனைச்
சுற்றிவந்து தொழுது, பணிந்து போற்றிட நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான ஆசானே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
வணங்குகிறேன்.
பாடல்...52.
6.2. கீழ்க்கோயில் ..மூர்த்தங்கள் .
கட்டுமலை மருதநிலச் சோழநாட்டின் காட்சிமலை;
குறிஞ்சிமுருகன் கோயில்மலை;
மட்டில்லா மகிழ்வோடு, மீனாட்சி சுந்தரேசர்
பட்டுப்பரி வாரங்களுடன்
நர்த்தன கணபதி, நன்ஞான குருமூர்த்தி,
நல்விநாயகர் உற்சவராய்,
உமாகாந்தர் உடன்குகன், அருந்துணையுடன் திருமுருகன்,
காசிநாதர் கருணைத்தாய்,
நற்பண் நால்வர், நலவள்ளி சேனாபதி,
நற்சண்டி, நலதுர்க்கை ,
நவக்கிரகம், நந்தி,பலி பீடம்,தவக் கிணறும்
சிவம்சார் திருமூர்த்தம்.
புவனிநெல்லி புனிதமரம்; தவக்கோலத் தண்டபாணி,
புவனக்கா புண்ணியர்களே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
மருதநிலமான திருவேரகத்தில் குறிஞ்சிநில முருகனாய் எழுந்தருளி
இருக்கும் சுவாமிநாதக்கடவுளின் திருக்கோயில், கட்டுமலையாக
அமைந்துள்ளது. தரைப்பகுதியில் சிவபிரானுக்கான கோயிலும், மேலே
மலையெழுப்பிக் கட்டி, அதனை மேற்கோயில் என அழைத்தும், அங்கே
மாமுருகன் சுவாமிநாதனாக எழுந்தருளியிருப்பதும் இக்கோயிலின்
சிறப்பாகும்.
கீழ்க்கோயிலிலே சிவபெருமான் சுந்தரேஸ்வரர் என்ற பெயருடன்
மீனாட்சி உடன்காட்சியளிக்க, எழுந்தருளியுள்ளார். மற்றும் பரிவாகணங்கள்
புடைசூழக்காட்சி தருகிறார். கோபுரனுழை வாயிலில் அன்னை மீனாட்சி
கிழக்குமுகம் நோக்கி சுந்தரேஸ்வரர், உட்பிரகாரத்தில் நர்த்தனகணபதி ,
தட்க்ஷிணாமூர்த்தி விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளிதேவசேனா சமேத
சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், மூலவர் முருகன்,
வள்ளி.தெய்வயானை, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகம், சுவாமி
சன்னதிமுன் நந்திகேஸ்வரர், பலிபீடம் அமைந்துள்ள நிலையில் "வச்சிர
தீர்த்தம் என்னும் கிணறும் இங்கேயே அமைந்துள்ளது.
அடுத்து வசந்த மண்டபத்தில் உற்சவர் தண்டாயுத பாணியும், கீழே
சற்று இறங்கினால் அங்கு பூமித்தாயாகிய நெல்லிமரமும், தலமரமாகக்
காணலாம். உலகைக்காக்கின்ற புண்ணியக்கடவுளர்கள் இங்கு
எழுந்தருளி நம்மைக்காக்கிறார்கள்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..53.
6.3. மேல் மலைக்கோயில் ..மூர்த்தங்கள்.
வலதுபுற மலைப்படிகள் இருபத்தெட்டு, பிரகாரம்
நிலையாக, முப்பத்து
நலவிரண்டு நற்படிகள் படிநாயகர், தலைவணங்கி.
நற்கொடிமரம் நேத்ரநாயகர்,
உட்ப்ரகாரம் ஓங்கிடும்பன், உயர் ஊர்தி ஐராவதம்,
உயிரோவியம் உளம்கவரும்;
சட்டிநாயகன் சன்னதி சீடனாகிய சிவதாரகன்;
சிற்றம்பலப் பாகுலேயன்;
வெளிச்சுற்றில் உத்சவகுகன் சந்த்ரசேகர சத்குகன்,
ஒளிக்காசி சிவபார்வதி,
களிச்சந்த அருணகிரி, கஜலட்சுமி, சண்டிகேசர்,
குலப்பயண உற்சவர்கள்,
சிவசண்முகச் சீர்திருமணச் சத்தியர் இருவரும்,
சிவகுகத்வம் சுவாமிமலை.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கோபுரவாயில் வாயிலாகச் சென்று,இருகோயில்களையும்
இணைக்கும் பெரியப்பிரகார வழியே சென்றால் ,யாகசாலை,வரும்.
அதையும் தாண்டிச்சென்றால் கிழக்குக்கோபுரவாயிலில் வல்லபகணபதி
அவரையும் வணங்கியபின் வந்தால் வசந்தமண்டபத்தின் பக்கவாட்டில்
மலைக்கோயில் படிக்கட்டுகள் அருள்பாலிக்கும். தமிழ வருடங்களின்
பெயர்களைக் கொண்ட அறுபது படிகள்; முதல் இருபத்திரண்டு படிகள்
தாண்டிட மலைக்கோயில் பிரகாரம் காணப்படும்; அங்கு மேலும் செல்ல,
முப்பத்திரண்டு படிகள் அமைந்திருக்கும். படிகளுக்கிடையே
"படிவிநாயகரையும் தரிசிக்கலாம்.
கடைசிப்படியில் நின்றபடியே கொடிமரத்தையும்,
நேத்திரவிநாயகரையும் தரிசிக்கலாம். மோகன முருகன் சன்னதி; இடது
புறத்தில் நிறைந்த முருக பக்தியைக் கொண்ட இடுமப மூர்த்தியைத்
தரிசிக்கலாம். அருகே முருகனின் ஊர்தியாக இந்திரனால் வழங்கப்பட்ட
ஐராவத யானையைக் காணலாம். நேரே உள் சென்றால் உலகைக்
காக்கும் கடவுள் கந்தப்பெருமான் உயர்ந்தோங்கிய தோற்றத்தில்
சிவனைப்போலவே அருள்பொழியும் முகத்துடன் காட்சி தருவார்.
சஷ்டி என்னும் நாளிற்குத் தானே தலைவனாய் விளங்கும்
சுவாமிநாதனைத் தரிசித்தபின், எம்பெருமானது சீடனான தாரகப்
பரமேஸ்வரன் லிங்கவடிவில் உபதேசம் பெற்றதில் மகிழ்ந்து அருள்வார்.
அவர்முன்பு பாகுலேய சுப்பிரமணியர் நடராஜ வடிவம் தாங்கி "நானும்
என்மகனும் ஒன்றே" என்பதை விளக்குவார். திருவாதிரை போன்ற
சிவநிகழ்வுகள் இவராலேயே நடத்தப்பெறும்.
உட்பிரகாரத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் உத்சவ முருகன்.
அடுத்து சந்திரசேகரராய் விளங்கும் முருகன் அமர்ந்திருப்பார். உற்சவர்
குகனார், நிற்க, எடுத்துக் காசிவிசுவநாதர்,விசாலாட்சி காட்சி தருவார்.
மூலவர் சுப்பிரமணியர் வள்ளி,தேவசேனா , கஜலக்குமி,சண்டிகேசர்
காணலாம். அடுத்து ஆலயத்தின் அனைத்து விழாக்களிலும் எழுந்தருளும்
விழா மூர்த்திகள் காணப்படுவர்.
சிவகுகத்வத்தை விளக்கும் இக்கோயிலில் சிவசண்முகர் வள்ளி,
தேவசேனாவுடன் கல்யாண மூர்த்தியாக க் காட்சி தருவார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துவிளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே குருவான ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
வணங்குகிறேன்.
பாடல்..54.
6..4..போற்றற்கரிய தலப்பெயர்கள் .
திருவேரகம் திருக்காவிரி வளச்சோலை நலமரங்கள்,
கருங்கனிகள், நறும்பூக்கள் ,
அருந்தளிர்கள், மருந்திலைகள் , இருங்குயில்கள், சிறகாடிகள்,
நிறைமருதம் முறையழகு.
குருமாமலை குருவுக்கே குருவாகி ஒருசொல்லைத்
திருவாய் மலர்ந்ததால்.
குறிஞ்சிக்கோ பெருமலைகள்; குணமருதக் குமரனுக்கோ
குறிஞ்சிபோல் கட்டுமலை.
தாத்ரிகிரி தவமாற்றிய நிலமகள்தான் தான்போகாத்
தாத்ரிமரமாய்த் தலநெல்லி .
நேத்திரச்சுடர் ஏத்துநற்பணி சூத்திரப்பொருள் மூத்தமுதல்
கூத்தனுக்களி சுவாமிமலை.
சிவகிரி, சிரகிரி, சுந்தராசலம் சிவோபதேசம்
சிவகுகனே புரிந்ததால்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
இத்தலத்தின் பெருமைமிகு பெயர்கள் பலப்பல உள்ளன; அவைகள்
எல்லாம் பொருள் பொதிந்தவை; ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.திருவேரகம்.... அழகுமிகுந்த தலம் ; காவிரி பாய்வதால் நல்ல வளம்
கொண்ட மணல்பகுதி; அங்கே மருதநிலப்பயிர்கள் செழித்து
வளர்கின்றன; இளந்தளிர்கள் , பச்சிலைகள் , மலர்கள், காய்,கனிகள்
விளைந்து அழகூட்டுகின்றன; குயில்களும்,மயில்களும் கூடிக் குலவும்
சோலைகளைக் கொண்டது இவ்வூர்; இவைகளால் அழகு நிறைந்து
விளங்கும் பதியாக , நலத்தலமாக விளங்குவதால் இதனை ஏர் +அகம்
அழகுமிகுந்த தலம் என்று போற்றினர்.
குருமலை. குருகிரி ...... தந்தையாகிய சிவனையே சீடனாகக்
கொண்டு, அச்சீடனுக்குப் பிரணவப்பொருளை உபதேசித்தார் முருகன்.
தானறியாத ஓங்காரப்பொருளை நன்கறிந்த சிவபெருமான் தரையில்
அமர்ந்து, முருகனைத் தோளில் சுமந்து ஞான உபதேசம் கேட்டார்.
அதனால் இம்மலை ஆசானாகிய முருகனது மலை என்று,
குருவாக விளங்கியதால் குருமுருகன் வீற்றிருக்கும் மலை"
குருமலை, குருகிரி எனவும் அழைக்கப்படுகிறது.
கட்டுமலை ..... குன்று நிற்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும்
இடமாகும். குறிஞ்சிக் கடவுள் அல்லவா! இவ்வூரோ மருதநிலப்பகுதி.
எங்கு நோக்கினும் வயல்களும், ஆறும், சோலைகளும் காட்சி தரும்;
மலையில்லை ; கார்த்தவீரியன் என்ற மன்னன் பார்த்தான், முருகன்
வீற்றிருக்க அழகிய மலையையே கட்டுவித்தான்; கட்டி எழும்பிய மலை
கட்டுமலை" என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது.
தாத்ரிகிரி ..... பூமித்தாய் இப்பதிக்கு வந்து முருகனைக்குறித்துத்
தவம் இயற்றினாள் ; அவளது வினைகள் அகல, இத்தலத்தை விட்டு
அகலும் நாளும் வந்தது; ஆனால் அவளோ தன என்றும் இப்பதியிலேயே
இருக்கவேண்டும் என விரும்பி, ஆசான் அருள் பெற்று, "நெல்லிமரமாக"
உருவெடுத்து எப்பொழுதும் முருகனை வணங்கும் நோக்கில் நின்றாள்.
பிரகாரத்தில் இன்றும் நெல்லிமரமாக விளங்கும் நிலமகளைக் காணலாம்.
அதன் தொடர்ச்சியாக இப்பகுதி முழுவதும் நெல்லிமரக்காடாக
விளங்கியது என்பர். தாத்ரி= வடமொழியில் நெல்லிமரம் என்பது பொருள்.
சுவாமிமலை....... அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்திட,
எம்பெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்ப்பொறியை
வெளியிட்டார். அப்பொறி, அனலாய்.க் கனலாய், யாராலும் ஏற்கமுடியாமல்
தகித்தது. இறைவன் ஆணைப்படி, அச்சுடரைத் தாங்கிய
காற்று,அக்கினிததேவர்கள் கங்கையை நாடியும் பலனற்றுப்போக முடிவில்
சரவணப்பொய்கையை அடைந்து, விட , அப்பொய்கையிலே
ஆறுகுழந்தைகள் மலர்ந்தன; சிறுவயது ஆடல் பாடல்களில் ஈடுபட்ட
குகன், தந்தையைக்காண வந்த நான்முகன் வணங்காது, கர்வத்துடன்
சென்றகாலை அவரை அழைத்து, என்ன தொழில் செய்கிறீர்கள்?
எனக்கேட்க, அவரும் சிறப்புமிக்க படைப்புத் தொழில் என் தொழில்
என்கிறார். ஆணவம் மிக்க அவரது பதிலில் உள்ள கர்வத்தை உணர்ந்த
முருகன் " நான்மறை அறிவீர்களா? என்றதும் அறிவேனே , என்றபடி
ஓம்" எனத்தொடங்கினார். இடைமறித்த முருகன் அந்த ஓம்காரத்திற்குப்
பொருள் கூறுங்கள் !என்றதும், அவர் விழித்தார்; பொருள் அறிந்திருந்தும்
ஆணவத்தால் மதி இழந்தார். பிராணவப்பொருள் தெரியாத நீவிர்
எத்தொழிலும் ஆற்ற இயலாதவர்; நீர் இருக்கவேண்டிய இடம்
சிறைச்சாலையை என,நான்முகனைத் தலையில் குட்டிச் சிறைதள்ளினார்.
பிரமனை விடுவிக்க வந்த சிவபெருமான், அப்பொருளை நீ அறிவாயோ?
எனக்கேட்க,முருகனும் அறிவேன்; தாங்கள் அறியாவிடின் சீடனாக வந்து
முறைப்படிப்பணிந்து கேளுங்கள்; நான் அப்பொருளை உங்களுக்கு
உபதேசிக்கிறேன் " என்றதும் சிவனும், சீடனாக மாறி, உபதேசம் கேட்டார்;
சுவாமி ஆகிய தந்தைக்கே குருவாகி, நாதன் ஆகி நல்லுபதேசம்
அருளியதால் இம்மலை சுவாமி மலை" எனப்போற்றப்படுகிறது.
சிரகிரி, சிவகிரி , சுந்தராசலம்...... இம்மூன்று திருநாமங்களும்
தந்தையாகிய சிவனார், மகனாகிய முருகனிடம் பணிந்து,உபதேசம்
கேட்டதையே விளக்குகின்றன.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துவிளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாகி உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றிப் பணிந்து வணங்குகிறேன்.
பாடல்..55.
6..5..தூய்மை, புனிதத் தீர்த்தங்கள் ..
வச்சிர தீர்த்தம் வச்சிரவேல் செஞ்சிவன்
உச்சிவெயில் குளிர்ச்சி;
பச்சைநிற மீனாட்சி இச்சைஎதிர் இயங்குவது;
துச்சசாபப் புனிதமானது.
குமாரதாரை குமரனருள் கங்கைநதி சங்கமமாய் க்
காவிரியுடன் இணைந்தோடும் ;
சரவணக்குளம் சரவணன் சிறுபிள்ளை சாபகுரு
சாபங்களை வெட்டுகுளம்.
நேத்திர புஷ்கரணி காணக் கூடாததைக்
கண்டகண் கழுவாயாய்,
நேத்திரம் பெற்றபெண் கார்த்திகைத் தீர்த்தவாரி
கந்தனருளால் கண்டுய்ந்தாள்.
சிவனருளுறு பிரமப்பிழை போக்கிடவே பிரமதீர்த்தம்
படைத்தபின் பெற்றுய்ந்தான்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் ..
வச்சிரதீர்த்தம் ;- உலக ஆன்மாக்களைக் காப்பதில் வல்லவரான சிவனார்,
சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இங்கு கோயில் கொண்டவர், பிறவிப்
பிணி அறுத்துச் சிவகதியில் மக்களை ஈடுபடுத்த ஆணவமாதி மலங்கள்
பற்றாமல் மனத்தில் உடலில் குளிர்ச்சி பெறத் தன் சன்னதியில் தமது
சூலாயுதத்தால் நிலத்திலிருந்து நன்னீரை வரவழைத்தார். அதுவே வச்சிர
தீர்த்தம் ஆகும். அன்னை மீனாட்சி சன்னதி முன் இக்கிணறு அமைந்தது;
அதனால் வழிபடுவோரின் தீய பாவங்களைப் போக்கவல்லது;
வணிகப்பெண் ஒருத்தியின் கணவன் காட்டுக்குளத்தில் குளித்ததால்
பெண் உரு பெற்றான்; சான்றோர் சொல் கேட்டு இவ்வூர் வந்த அப்பெண்
இக்கிணற்று நீரைத் தனது கணவன் தலையில் ஊற்றிக்
குளிக்கச்செய்தாள்; அவனும் உருமாறி,அவளது கணவனாகத்
தோன்றினான்; மிகப்புனிதமான கிணறாகக் கருதப்படுகிறது.
குமாரதாரை ;- தனது பாவங்களைப் போக்கிக்கொள்ளக் கங்கை ஆறு
இப்பதி வந்து, குமாரப்பெருமானை வணங்கினாள் ; மற்றவர்களிடம்
இருந்து அவள் ஏற்ற பாவவினைகள் முருகன் அருளால் நீங்கிற்று.
கங்கையோ தன நாடு திரும்ப மனமின்றி, முருகனை வணங்கியபடியே
இருக்கவேண்டும்" என விரும்பிக் காவிரி ஆற்றோடு ஒன்றாகக் கலந்து
ஓடத்தொடங்கினாள்; அன்றுமுதல் காவிரி ஆற்றிற்குக் "குமாரதாரை "
என்ற பெயர் வழங்கலாயிற்று. முருகனுக்காகக் கங்கை ஆறு காவிரியுடன்
ஒன்றி, நீர்தாரையாய்ப் பொழிந்து ஓடுவதால் குமாரதாரை என்ற பெயர்.
சரவண தீர்த்தம் ;- முனிவரது சாபத்தால் கரடியாக மாறிவிட்ட தனது
தந்தையின் உரு மாற்றம் வேண்டி, முருகனை வழிபட்டு , இக்குளத்தை
ஒரு சிறுவன் வெட்டி உருவாக்கினான்; அதில் நீராடி நாள்தோறும்
முருகனை வழிபட்டுச் சாபநீக்கம் பெற்றான் அத்தந்தை; அதனால்
இக்குளம் சரவண தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
நேத்திரபுஷ்கரணி ;-கந்தனது வேலாயுதத்தால் உண்டாக்கப்பட்ட து
இக்குளம். சோதிடநூல்களில் குறிக்கப்பட்டுள்ள இக்குளம், காணக்
கூடாததைக் கண்டால் கண்பார்வை போகும்" என்ற நிலையில் ஒருபெண்
அவ்வாறு கண்டுவிட்டுக் கண்ணிழந்து தவிக்கையில் பரத்துவாஜ
முனிவரது அறிவுரைப்படி, இங்கு வந்து இந்த புஷ்கரணியில் நீராடி,
முருகனை வழிப'"டக் கண் வரப்பெற்றாள் . அதனால் இக்குளம்
"நேத்ர புஷ்கரணி" என வழங்கப்படுகிறது. கார்த்திகைத் திங்களில்
இங்கு தீர்த்தவாரி நடைபெறும்.
பிரமதீர்த்தம் ;- பிரணவப்பொருள் தெரியாத பிரமனைச் சிறையில்
அடைத்தார் முருகன். தந்தையின் சொல் கேட்டு அவனை விடுவித்தார்.
தனது தவறை உணர்ந்த நான்முகன் பெரிய குளத்தை உருவாக்கினான்.
அதில் மூழ்கி,அன்றாடம் தவறாமல் முருகனைப் பூசித்து வந்தான்;
அதன்பயனாய் முருகனிடம் ஓங்காரப்பொருளை உபதேசம் பெற்றான்.
பிரம்மதீர்த்தம் இன்று "பெரமாட்டான் குளம்" என்று வழங்கப்படுகிறது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாய் உபதேசித்த ஞான
குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
பணிந்து போற்றுகிறேன்.
பாடல்...56.
6..6. ஆலய அமைப்பு ..
தென்னவன்குரு தெற்குநோக்கித் திகழ்ராஜ கோபுரமே.
நன்முருகன் நலச்சிற்பம் .
தென்னவன்மகள் மீனாட்சி சுந்தரேசர் பொன்கோயில்
விண்தொடும் மண்கோயில்.
இருகோயில் நடுவாக இணைத்துசுற்றும் பிரகாரம்
இருடியாக சாலைகாண் .
திருவருடப் பெயருடனே படிகளேறின் மேற்கோயில் ;
அருஞ்சுற்று அழகுசிற்பம்,
இடும்பனோடு எழில்ப்ரகாரம் இணையற்ற தெய்வங்கள்;
குடும்பமாய்க் குருஷண்முகன்.
உடுநாட்டுப் பெருயானை ஊர்தியாக நடுநாயகம்
கருவறையொளிர் கந்தசாமி.
சிவகுகத்வம் சிவகுருத்வம் சிவநினைவுடை சிவமகனவன்
சித்சத்தாய் ஒளிர்ந்திடுவான்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
தெற்குநோக்கிப் பார்வை கொண்ட தக்ஷிணாமூர்த்தி போல ஞான
குருவான தகப்பனுக்கே சாமியான சுவாமிநாதன் கோயில் கோபுரம்
தெற்குநோக்கியே பார்த்தபடி அமைந்துள்ளது. ஐந்துநிலை மாதங்கள்
கொண்ட அந்த அழகுமிகு இராஜகோபுரத்தில் முருகனது வரலாறுகள்
சுதைவடிவில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
நுழைந்தவுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரகார தேவதை
-களுடன் அமைந்துள்ளது. விண் தொடும் விமானங்கள் கொண்ட அந்தப்
பொற்கோயில் தரைக்கோயில்,எனவும், கீழ்க்கோயில் எனவும் அழைக்கப்
படுகிறது.
தரைக்கோயிலையும், மலைக்கோயிலையும் உள்ளடக்கிய பெரும்
பிரகாரம் , பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் உத்சவ யாகசாலை
அமைந்துள்ளது.
தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி , அறுபது படிகள் மேல்
மலைக்கோயில் செல்ல அமைந்துள்ளது. முதல் 22 படிகள் ஏறியதும்
மலைக்கோயில் வெளிப்பிரகாரம் அமைந்துள்ளது. கானைச்சுற்றி வந்தால்
கீழக்கோபுரவாயிலருகே அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சுவாமிநாத
வரலாற்றைக் காணலாம்.
மூலவரின் சன்னதிக்குள் நுழைந்தால் முதலில்
இடுமபனைத்தரிசிக்கலாம். உட்பிரகாரத்தில் உத்சவ சுப்பிரமணியர்
தொடங்கி, சண்முகர் வரை, பரிவார தேவதைகளைக் காணலாம்.
வள்ளி,தேவசேனாவுடன் சண்முகர் காட்சி தருவார்.
சன்னதிமுன் தேவேந்திரனால் காணிக்கையாக்கப்பட்ட ஐராவத
யானையை ஊர்தியாக நிற்பதைக் காணலாம். இவ்வூர்ச்சிறப்புகளில்
இதுவும் ஒன்று. கோயிலின் நடுநாயகமாகக் கருவறையில் கம்பீரமாய்
ஆண்டிக்கோலத்தில் சுவாமிநாதர் சிவனாய், முருகனாய்க் காட்சி
தருவார்.
கருவறைக்குள் சுவாமிநாதக்கடவுள் சிவகுகனாய் விளங்குவார்;
சிவனது குருவாய் விளங்குவார்; சிவத்தையே நினைந்துநிற்கும்
சிவமகனாய் விளங்குவார். சித் எனப்போற்றப்படும் சிற்றம்பலமாய்.
சத்" எனப்போற்றப்படும் சதாசிவமாய் சச்சிதானந்தமாய் விளங்கும்
ஜோதி வடிவத்தைக் காணலாம்.
சிவ ஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்தில் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றிவணங்குகிறேன்.
பாடல்..57.
6..7. ஆறுமுக அழகு.
ஒளிச்சுடரில் அளிதேங்கிய வளிநீரன் களிகொள்முகம்
ஒளிஞான ஒருமாமுகம்;
இருளகற்றும் அருள்வேலால் மருளகற்றும் திருப்பணியால்
கருணைத்தாய் விரும்புமாமுகம்;
தவமுதல்வன் நவச்சீடன் சிவசுவாமி உவந்தனனே;
தவஞானத் தவப்பொழிமுகம்;
புவனமெலாம் புத்துணர்வு புண்ணியமாம் புதுமந்திரம் ;
மௌனநோக்கு மந்திரமுகம்;
வள்ளிக்கும் கல்நெஞ்ச முள்ளிக்கும் புள்பூவழி
அள்ளியருள் எளிமைமுகம்;
புள்ளிதொட்டுப் புத்தேளிர் பொன்னாடு போற்றிசைக்கும்
நல்வியாபகத் தொல்மாமுகம்.
சுவாமிமலைச் சண்முகனின் சண்முகமும் சண்பொருளில்
சண்மதத்தைச் சாற்றுதம்மா!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
சிவபெருமானின் நெற்றிச்சுடரில் தோன்றிய ஒளிக்கற்றையில்
கருணையும், அன்பும் இணைந்த கங்கை,காற்றுத் தொடர்பினால்
சரவண த்தில் அவதரித்த குழந்தை; ஆன்மாக்களின் கமிழ்ச்சியிலே
உள்ளம்கொண்ட முகம்; ஞான ஒளியாகி உலகெல்லாம் காக்கின்ற
ஒருமா முகமுடையோன்;
தவமிருந்து தான்பெற்ற வேலாயுதத்தை உலகத்தின் ஆணவ ,கனம
மாயைகளை நீக்கி, அருள்வடிவாய ஞானத்தை வழங்கி, அன்னையின்
அருளை வெளிப்படுத்தும் மற்றொரு ஞானமா முகம்.
ஞானத்திற்கே தலைவனாகி விளங்கும் தக்ஷிணாமூர்த்தி ஆகிய
சிவனார் பிரணவப்பொருள் அறிவதற்காக ச் சீடனாக மாறி, க் கை
குவித்து,வாய் பொதுச் சீடனான தந்தைக்கு ஞான உபதேசம் செய்து,
தவத்திற்கே தவமான ஞானம் பொழிகின்ற திருவாய் கொண்ட ஒரு
மாமுகம் ;இரண்டாம் முகமாகும்.
ஆறுமுகனாரின் அடுத்த முகம் மந்திரம் மொழிகின்ற மறைமுகம்.
மூவேழ் உலகங்களிலும் புண்ணியமும், புனிதமும் வளர்ந்தோங்க,
மறை மா மரமாகி மந்திரமலர்களை, பொழிகின்ற மந்திரமுகம் ,
மௌனத்தின் நோக்காலும் உலகோருக்குக் கிட்டும்.
வள்ளிமலையிலே தினைப்புனம் காத்த குறமகள் வள்ளிக்கு
முருகன் அளித்த கருணை அவனது எளிமையை வெளிப்படுத்தும்.
காட்டு,மேடு சுற்றிக் காதல் மொழி பேசி, மனையாளாகவும் ஏற்றுக்
கொண்ட எளிமை; கடுமைவாய்ந்த அரக்கன் சூரபன்மனை நல்வழிப்
படுத்த போரிட்டு , விஸ்வரூபம் காட்டி, அப்படியும் மாறாத அவனது
உள்ளத்தைமாற்றி, அவனையே சேவலும்,மயிலுமாக ஆக்கி அவனுக்கு
அன்புகாட்டிய எளிமை ; அப்படி எளிமை கொண்டது ஆறுமுகனின்
ஒருமுகம் .
இந்நிலவுலகில் தோன்றிய சிறுபுள்ளி முதல் பரந்துபட்ட விண்ணகம்
வரை அமைந்துள்ள அத்துனைப்பொருட்களிலும் வியாபித்து, அனைத்தும்
தானியங்கி நின்று, விளங்கி, அசையும் அசையாப்பொருட்களிலும்
தன்னருளே முன்னிற்கச்செய்யும் சர்வவியாபியாக விளங்குபவர்
எம்பெருமான் முருகன். அவ்வியாபகத்தன்மை கொண்டு விளங்குவது
அவரது திருமுகங்களில் ஒன்று.
சுவாமிமலையில் வீற்றிருக்கும் ஆறுமுகக்கடவுளின் ஆறுமுகங்களும்
ஒளி,அருள், தவம், மந்திரம், எளிமை, வியாபகம் என்னும் ஆறுவித
நிலையில் சைவத்தின் ஆறுமதக்கோட்பாடுகளைத் தன்னகத்தே
கொண்டு விளங்குவது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாய் உபதேசித்த ஞான
குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
பாடல்.. 58.
6..8. அநாகதம் ..(இதயம்) சுவாமிமலை .
பேருடலைக் கோயிலாக்கிப் பெருமூர்த்திகள் வாழிடமாய்
ஆறிடங்கள் சேரிடமாம்;
சீருடைமூ லாதாரம் கருணைபொழி திருமணத்தான்
திருப்பரம் குன்றமாமே.
சுவாதிட் டானதலம் திருச்செந்தூர் உறுபோரகம் .
மணிபூரகம் நனிபழனி.
சுவாமிமலை சுவாசம் சுஸ்வரூபம் அநாகதமாம்.
சுழலுலகுச் சுந்தரமே .
விசுத்திக் கழுத்தோ திருத்தணிகை சுபமங்களம் .
அக்ஞை (புருவநடு) கனியுதிர்கா .
விசுவமெல்லாம் விரிந்துபரந்த விரியுடல் விளக்கமே,
விரியாறு வித்தகங்கள்.
தவக்கோல நவக்கோல சிவக்கோல புவனமே,
அவனியா தாரமாகும்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
உடலின் ஆதாரப் பேரிடங்கள் ஆறாகக் கூறப்படும். அதையே
உலகத்தின் அடித்தளமாகவும் காணலாம். அப்படி விளங்கும் மூலாதாரம் ,
சுவாதிஷ்டானம், மணிபூரகம் ,அநாகதம் ,விசுத்தி,பருவநடு போன்றவை
முருகன் குடிகொண்டிருக்கும் ஆறுபடை வீடுகளாக அமைந்துள்ளன
என்பது போற்றத்தக்கது.
மூலாதாரம் என்று போற்றப்படும் தலமாக, வெற்றிபெற்றபின்
தேவசேனாவை மணந்த திருப்பரங்குன்றம் விளங்குகிறது.
சுவாதிட்டானம் திருச்செந்தூர். போரைத்துவக்கி , போருக்கு ஆயத்தம்
ஆகிப் புறப்பட்ட பதி. வெற்றிக்கு வித்திட்ட தலம் ,
மணிபூரகம் நடு நாபியாக விளங்கி பற்றிலாப்பற்றை விளக்குவது
திருஆவினன்குடி என்னும் பழனி ஆகும்.
அநாகதம் உயிர்த்வம் , தனித்வம் , கொண்டு அனைத்தையும்
இயக்கவைக்கும் இதயத்தானமாக விளங்குவது சுவாமிமலை என்னும்
திருவேரகம் ஆகும். சுழல்கின்ற அண்ட கோளத்தின் அழகாகி , அறிவாகி,
அனைத்துமாகி விளங்குவது இத்தலம் ஆகும்.
விசுத்தி உலக ஆன்மாக்களோடு கலந்து, உறவாடிப் பழகி, நட்பு
கொள்ளும் எளிமை,காதல், போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்
குறவள்ளியின் கரம்பற்றிய மாமலை திருத்தணி ஆகும். அதுவே
விசுத்தியாகத் திகழ்கிறது.
ஆ புருவநடு ஆன்மாவை ஒருமைப்படுத்தும் இடம்; ஏகாந்த நோக்கு
இயற்கை, மரங்கள், கனிகள், மலர்கள் தளிர்கள் கலந்து ஓங்கிய மலை
பழமுதிர்சோலை; குன்றெல்லாம் குமரன் நிற்கும் குணத்தை வலியுறுத்தும்
வளமான மலை .
பரந்துபட்ட விசாலமான விரியுலகு; விரிந்தாழ்ந்த மனதோடு இயங்கும்
நல்லுடல்; இவ்விரண்டின் இணை விளக்கமே அடிப்படையான ஆறாகும்.
அவ்வாறும் ஆறுமுகனோடு ஆங்காங்கு ஒன்றி விளங்குவதால் அவன் பதி
ஆறு(வழி) காட்டும் தலமாகிறது .
தவக்கோலமாய் ஆண்டியாய் நின்றருள் புரிவதும், புதிது புதிதாய்
ஆடை ஆபரணங்கள் அணிந்துகொண்டு, குமரனாய், விருத்தனாய்,
வேடனாய்க் கோலம் கொள்வது, சிவோஹம்" என்ற நிலையில் தானே
சிவமாகக் காட்சி தருவது, உலகமெல்லாம் நிறைந்து நின்று அழகாகவே
உலகாகவே அருள்கூட்டுவது , கொண்ட முருகனும், அவனது பதிகளும் .
உலகின் மூலாதாரமாய் விளங்குவதில் வியப்பில்லையே!
சிவஞானமாய் நிற்பவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே!
சுவாமி மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்.. 59.
6..9.. தல வரலாறு .
மஹாபுராணம் மாநந்தி குறுமுனிக்கு உபதேசிக்க,
மாமுனிவர் மற மறை என,
மஹாசாபம் மாதவத்தால் மனம்நொந்த தேவர்க்காய்
மகேசதீக்கை மாப்பலனளி,
மறந்ததால் மகேசன் மாமுருகன் உபதேசம்;
மதிகர்வ நான்முகனும்
சிறைபெற்றான் சிவக்கருணை குறைநீங்கிக் குணம்பெற்றான்;
சிவோபதேசம் சுவாமிமலை.
இந்திரனும் அரக்கனழி ஐராவதம் அங்கமர்த்தி,
இருநிலத்தாய் நெல்லியானாள் .
செந்தமிழ் வரகுணன் செங்கோயில் சீரெடு த்தான் ;
செங்கண்ணும், செவ்வுடலும் ,
செவ்வாயும் செவ்வாய்ப்பதி சுவாமிநாதன் செவ்வருளே .
செவ்வறங்கள் அறிந்தோனே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
சுவாமிமலைத் தலவரலாறு மகாபுராணத்தில் நந்திதேவரால்
அகத்தியர்போன்ற முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். அவ்வரலாறு கேட்ட
அகத்திய மாமுனிவர் தான் ஜீவன் முக்தனாக விரும்பிக் கடுந்தவம்
மேற்கொள்ள விரும்பினார். யாரேனும் தவத்தைக் கெடுக்க விரும்பினால்
அவர்கள் " பிரம்மஞானத்தை மறக்கக்கடவது" என்னும் சாபத்தை
அளித்தபின் தவத்தைத் தொடங்கினார்; அவரது தவமேன்மை
விண்ணுலகைத் தாக்கியது. அஞ்சிய தேவர்கள் திருமால் தலைமையில்
சிவபெருமானைக் கண்டு தங்கள் குறையைக் கூறினர். சிவபெருமானும்,
தவம் செய்யும் அகத்தியரின் தலைமீது தம் கையை வைத்து, அவருக்கு
தீக்கை அருளினார். பரிபாகமுத்தித் தன்மையைப் பெற்ற அகத்தியரும்
தனது சாபம் சிவனைப் பாதிக்கும் என வருந்தச் சிவனோ அதுவும்
எனக்குத் தக்க நேரத்தில் உதவும்" என்று சொன்னார்.
அன்று மறந்த பிரும்மஞானத்தால் தனது மகனிடம் உபதேசம் பெறும்
வாய்ப்பை நல்கியது.
ஆணவமும் கர்வமும் கொண்ட நான்முகன் ஒருசமயம் கயிலை
சென்றபோது, நின்றிருந்த குமரனைக் காணாதவன்போல் வணங்காமல்
சென்றான்; அவனைத் தடுத்த முருகன் நீயார்? என்ன தொழில் செய்கிறாய்?
என்றுகேட்க, நான்முகனோ நான் பிரம்மதேவன்; படைப்புத் தொழில்
செய்கிறேன், என்றதும் எதன் அடிப்படையில் இடத்தொழில் செய்கிறாய்?
என்கிறார். அவனோ வேத அடிப்படையில்தான்; என்றான். எங்கே?
வேதம் சொல்லும் கேட்போம்" என்றதும் நான்முகன் ஓம்" என்று
தொடங்க, முருகனோ நில்லும் நீர் சொன்ன பிரணவத்திற்கு யாது
பொருள்? கூறும்! என்றதும், ஆணவமேம்பாடு அவன் ஞானத்தை
மறைத்தது; திக்கித் தடுமாறினான்; பொருள் கூற இயலாமல் தவித்தான்.
பிரணவப்பொருள் தெரியாத நீவிர் என அவர் தலையில் குட்டினான் ;
அவரைச்சிறையில் அடைத்தான்.
சிவபிரானின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை விடுவித்தான்.
அப்பொழுது, குமர ! உனக்கு அப்பொருள் தெரியுமோ? என்றதும்
தங்கள் அறியாவிடின் தாங்கள் முறைப்படி வேண்டினால் நான்
உரைப்பேன்" என்றதும் சிவனும் தான் ஒரு சீடனைப்போல் தரையமர்ந்து
வணங்கி, முருகனைத் தனது தோளிலே அமரவைத்துக் கொண்டு
வாய்பொத்தி,பிரும்மோபதேசம் கேட்டார்; அது நடந்த இடம் இம்மலை;
அதனால் இது சுவாமிக்கு நாதன் ஆகிய சுவாமிமலை என வழங்குகிறது.
நான்முகனும் ஞானோபதேசம் பெற்றான்; அகத்தியனுக்கு
உபதேசித்தார் ஆசான் முருகன்.
மேலும் சில வரலாறுகள்...........
ஹரிகேசன் என்ற அரக்கனால் துன்புற்ற தேவேந்திரன் இங்கு வந்து
வேலனை வணங்கிப்போற்றியபின் பொறுக்குச்சென்றான்; போரிலே
வென்றான்; நன்றிக்கடனாக ஐராவதம் என்னும் தனது வெள்ளையானையை
அன்புப்பரிசாக இங்கேயே விட்டுவிட்டுச்சென்றான். அன்றுமுதல் இங்கு
முருகனின் ஊர்தி யானையே ஆகும்;
சிவபெருமானின் நெற்றிக்கண் சுடரைத் தாங்கி அதனைச்
சரவணத்தில் விட உதவிய பூமித்தாயின்மீது சினமுற்ற பார்வதி தேவி
நிலமகளுக்குச் சாபம் இட்டாள் ; அது நீங்க இங்கு வந்து காலமெல்லாம்
போற்றிய பூமித்தாய் மீண்டும் போக மனமில்லாமல் இங்கேயே
முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கும் நிலையில் நெல்லி மரமாகித்
தலவிருட்சமாய் இன்றுவரை நிற்கின்றாள்.
வரகுணபாண்டியனோ இங்குவந்து இறைவணக் கண்டநாட்களில்
மீனாட்சி சுந்தரேசரைத் தவறாமல் வணங்கிவிட்டே உணவு உண்ணும்
வழக்கம் கொண்டதால். இங்கேயே அவர்களுக்கு ஒரு கோயில்
எழுப்பினான். அதுவே கீழ்க்கோயில் என அழைக்கப்படும் மீனாட்சி
சுந்தரேசர் கோயில் ஆகும்.
செங்கண் ....... பிறவியிலேயே குருடனான ஒருவன் இப்பதி வந்து
ஒவ்வொரு சன்னதியும் வணங்குவான்; அவன் மீது அன்பு கொண்ட
விநாயகப்பெருமான் அவனுக்குக் கண்கொடுத்தார்; பார்வை கொடுத்தார்.
அதனால் அவருக்கு நேத்ர விநாயகர் என்ற பெயரும் வந்தது.
செவ்வாய்........... பிறவி ஊமையன் ஒருவன் காவிரியில் நீராடி,
நாள்தோறும் தவறாமல் கோயிலை வலம் வந்தான்; முருகன் அருளால்
அவனது ஊமை நீங்கிற்று ; முருகா முருகா என்றே பேசலுற்றான்.
செவ்வுடல்........ வசதியான குடும்பத்தைச்சேர்ந்த ஒருவன் தவறான
பாதையில் சென்று, குஷ்டரோகியாய் மாறினான்; எல்லோரும் அவனை
வெறுத்ததால் இவ்வூர் வந்து தங்கினான்; ஒருநாள் ஒருவீட்டில் நகைகளைக்
கொள்ளையடித்தபொழுது வீட்டார் அவனைப்பிடிக்க வந்தனர்; அவன்
ஓடினான்; நகைகளோடு செல்லும் அவனைப் பிடிக்க எல்லோரும்
துரத்திக்கொண்டு வந்தனர். ஓடும் வேகத்தில் வழியில் அமைந்த "வச்சிரக்
கிணற்றுள் விழுந்துவிட்டான்.அது தெரியாமல் துரதியவர்கள் போய்விட்டனர்;
இருட்டில் கிணற்றுள் விழுந்த அவன் இரவு முழுவதும் அக்கிணற்றின்
நீரிலேயே மூழ்கி,எழுந்து, எனத் தத்தளித்துக் கிடந்தான். மறுநாள்
அங்கு வந்தவர்கள் அவன் குரல் கேது ஓடிவந்துக் காப்பாற்றினர்;
அவனைப்பார்த்தோர் வியப்புற்றனர்; அவன் நோயெல்லாம் நீங்கி,
நல்ல மேனியனாக விளங்கினான்;வச்சிரதீர்த்தம் அவனை நோயிலிருந்து
விடுவித்துள்ளது. என்னே முருகன் அருள்!
செவ்வாயின் அதிபதியாகிய கருணைக்கடல் கருணையினால் செம்மை
பெற்றவர்கள் அவரை. சிவஞானங்கள் அறிந்தவனே! மௌனத்தில்
நிற்பவனே! ஒன்பது யோகத்திலும் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! என்று போற்றி அவரடி
பணிகின்றனர்.
பாடல்..60.
6..10..வழிபாடும், பயனும்..
சுவாமிநாத தரிசனம் என்றுசொல்வதே பெரும்பயன்தரும் ;
சுந்தரமுகம் காணல்கனி ;
சித்திரை வைகாசி, புரட்டாசி அட்டமிநாள்
சத்பூஜை சனிநிவர்த்தி ;
ஆனிசப்தமி அழிகுடி அடியோடே அகற்றும்;
ஆடிப்பௌர்ணமி ஓடிடும்பழி;
ஆவணி ஆதித்யநாள் மேவிவரும் உயர்பதவி;
ஐப்பசி,தை அன்னதானம்
ஆலயத்தின் தேர்த்திருவிழா நடத்திய பலன்தரும்;
ஆகாமியம் அகன்றுபோகும்;
கார்த்திகைப் பௌர்ணமி காரேழ் பிறப்பிலும்
சேர்த்தபழி சீர்குலையும்;
சிவமார்கழி மாப்பதவி; மாசிப்புனல் வீடுபேறு;
மகிழ்பங்குனி அகம்நிறைச்செயல்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
சுவாமிமலை சென்று சுவாமிநாதக்கடவுளை வணங்கப் போகிறேன்/"
என்று சொல்லுவதே நிறைந்த பலன்களைத் தரும்; ஒளிமிகுந்த
அம்முகத்தைக் கண்டுவிட்டாலோ பேரானந்தம்;
இனி அம்முருகப்பெம்மானை நாளெல்லாம் வழிபடல்,
திங்கள் தோறும் வழிபடல் நமக்கு அளிக்கக்கூடிய பலன்களைப்
பார்ப்போம். சித்திரை, வைகாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில்
அட்டமி நாளன்று. முருகப்பெம்மானைப் போற்றி வழிபட்டால் ,
நாம் இதுகாறும் செய்த பிரம்மஹத்தி, பசுஹத்தி, உணவளிப்பதைத்
தடுத்தல் போன்ற பாவங்களை நம்மைவிட்டு அகற்றும்.
ஆனிமாதம் ஆறுமுகனைப் பூஜித்தால் நம்மை அழிக்கும் குடிப்
பழக்கத்தை நாம் அடியோடு விட்டிடுவோம்.
ஆடிமாதப் பௌர்ணமி அன்று காவிரியில் நீராடி, முருகனைப்
பக்தியோடு பூசனை செய்தால் கொலைப்பழி, திருட்டுப்பழி போன்றன
நம்மை வந்து அண்டாது.
ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தியோடு முருகனைப்
பூசனை செய்தால், நமக்கு வரவேண்டிய உயர்பதவிகள் எல்லாம் தானே
வந்துசேரும்.
ஐப்பசி மாதத்திலும், தை மாதத்திலும் கோயிலுக்கு
வருவோர்க்கெல்லாம் அன்னதானம் அளித்தால், முருகன் மகிழ்வார்.
அத்துடன் இவ்வாலயத்தில் தேர்த்திருவிழா நடத்திய பலனும் கிட்டும்.
நாம் வீணே செய்த பசு,பாச கர்மாக்களின் பாவங்கள் அகன்று,
பதிபுண்ணியம் பெருகும்.
கார்த்திகைப் பௌர்ணமியன்று முருகனுக்கு சிறப்புப் பூசனை
செய்தால் நமது முற்பிறப்பில், அதற்குமுன்னரும், ஏழு பிறப்புவரை கூடிய
பாவங்களை அழித்து, நம்மைச்சிவனடி சேர்க்கும்.
சிவனுக்கு உகந்த மார்கழிமாதம் அதிகாலை எழுந்து, காவிரிநீர் ஆடி,
அன்போடு முருகனைப் பூசனை செய்தால் உயர் பதவிகள் நம்மைத்தேடி வரும்.
மாசிமாதம் சுவாமிமலையில் அமைந்துள்ள அனைத்துத் தீர்த்தங்களிலும்
நீராடி,பயபக்தியோடு பூசித்தோமானால் நமக்கு மோட்சம் கிடைக்கும்.
பங்குனி மாதம் முருகனை வணங்கி வாயாரப் புகழ்ந்து பாடினால்,
மனதில் எண்ணிய எல்லாம் கை கூடும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்தில் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..61.
7.. பூசனை முறைகள்..
7..1. பூசனைக்காலங்கள் .
காலங்களைப் படைத்தளித்த நீலகண்டன் திருமகனுக்குக்
காலங்களில் நற்பூசனை;
காலபூசனை கணக்கிற்கு ஆகமப்படி எட்டாகும்.
காலமாற்றம் குறையலாம்.
விடியல், உதயகாலை காலசந்தி, உச்சிவேளை,
வியன்மாலை , முன்னிரவு(பூர்வராத்திரி)
பின்னிரவு (அபரராத்திரி) அர்த்தஜாமம், பொன்னெட்டுக் காலங்கள்.
மன்னுபூசை மகிழ்நாட்கடன்.
ஆறுமுகன் சுவாமிமலை ஆறுகாலப் பேறுடையோன்;
ஐந்துபர்வ காலங்கள் ;
சீர்மாதப் பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை,
சிவப்ரதோஷம் சீர்வெள்ளி.
சிவனைப்போல் சிறப்புற்ற காலபூஜை ஏற்றருளும்
சிவகுகனே! சண்முகனே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
உலகையும்,காலம்,நேரம்,பொழுது என்றவற்றையெல்லாம் படைத்த
நீலகண்டனாம் சிவபெருமானின் மகனே குமரக்கடவுள்; அவனையும்,
அவனுக்கான கோயிலையும் படைத்து,அக்கோயிலில் பூசனை
நேரத்தையும், காலத்தையும் படைத்து அதன்வழியே முருகனின்
பெருமையை உயர்த்தியவர் இறைவன்.
சைவாகம விதிகளின்படி ஒருகோயிலின் தினப்படிப் பூசனைக்
காலங்கள் எட்டாகும்; காலமாற்றத்தால் அது குறைந்து ஏழு, ஆறு,
நான்கு, மூன்று, இரண்டு ஒன்று என மாறி வழக்கத்தில் உள்ளது.
ஆகம விதிப்படி உஷக்காலம், ப்ராதக்காலம், ப்ராதஸ்ஸந்தி ,
மாத்யான்ஹிகம் , சாயரட்சை . பூர்வராத்திரி, அபரராத்திரி ,
அர்த்தஜாமம் என எட்டுக்காலங்கள் உள்ளன.
சுவாமிமலை முருகக்கடவுளுக்கு நாள்தோறும் ஆறுகால
பூசைகள் நடைபெறுகின்றன.அது தவிர திங்கள் தோறும் ,
ஐந்து பர்வங்கள் என்னும் அமாவாசை,பௌர்ணமி, மாதப்பிறப்பு,
பிரதோஷம், வெள்ளிநாள் என்னும் ஐந்து நாட்களும் சிறப்பு
பூசனைகள் நடைபெறும்.
சிவபெருமானைப்போலவே சிறப்பான கால பூசைகளை ஏற்று,
வீற்றிருக்கும் சிவத்வம் வாய்ந்த குகனே! சண்முகனே!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞான உபதேசம் செய்த
ஞான குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..62.
7..2. அபிஷேகம் .
அதிகாலை விதிகூறும் நதிகாவிரி நற்புண்ணிய
புதுநீர்க்குடம் யானைத்தலை ,
கதிமேள வாத்திய வீதிவழி சுற்றிவந்து
மதிச்சடையோன் அபிஷேகமே .
அரளி,பாதிரி உத்பலம், அருந்தாமரை அபிஷேக
திரள்நீரில் கலந்திடுக;
உரலெண்ணெய், மாவுமஞ்சள் முள்ளிப்பொடி, பஞ்சகவ்யம்,
ஐந்தமிர்தம், பால்தயிர்நெய்,
கரும்புரசம் , கனிவகைகள், கனிரசங்கள், இளநீர்,
நறுஞ்சோறு , விபூதிசந்தனம்,
அருங்கலசம் , புரிசங்கம், அருமறைத் திருப்பாட்டுடன்,
இருநாழிகை நடந்திடுமே.
நடுப்பகல் பஞ்சாக்கரம் ; வ்யோமவ்யா பி,ப்ரதோஷம் ;
அர்த்தஜாமம் ஷடங்கமாம் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
அபிஷேக நீராக, ஒவ்வொருநாளும், அதிகாலையில் புண்ணிய
நதியாகிய காவிரிக்குச்சென்று, தூய்மை வாய்ந்த பரிசாரகர் வாயிலாக
நற்குடம் கொண்டுவந்து, அதில் நதிநீரை நிரப்பி, மேளதாளங்கள் முழங்க,
யானையின்மீது குடத்தோடு பரிசாரகர் ஏறி அமர,நான்கு வீதிகளையும்
பிரதட்க்ஷிணமாக வலம் வந்து, கொடிமரத்தருகே அதனைப் பவ்யத்துடன்
இறக்கி, அதனை அப்படியே நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யலாம்;
இல்லெனில் கர்ப்பக்கிரகம் கொண்டுசென்று அபிஷேக நீரில் கலந்தும்
அல்லது ஸ்நபன கலசாபிஷேகத்தோடு கலந்தும் அபிஷேகம் செய்யலாம்.
முருகனுக்கு செய்யப்படும் அபிஷேக நீரில் நறுமணம் ஊட்டக்கூடிய
பாதிரி, நீலோத்பலம்,தாமரை, அரளி ஆகிய மலர்களைப் போட்டு
அபிஷேகம் செய்க.
அபிஷேகத்திரவியங்களின் பாட்டியல் ............
நல்லெண்ணெய் , மாப்பொடி,மஞ்சள்பொடி, நெல்லிமுள்ளிப்பொடி,
பஞ்சகவ்யம்,(கோமயம், கோமூத்ரம், பால், தயிர்,நெய் ) பஞ்சாமிர்தம், பால்,
தயிர், நெய் ,கரும்புச்சாறு, வாழி,மா,பலா,போன்றபழங்கள், பழங்களின்
சாறு, இளநீர் ,அன்னம், விபூதி, சந்தனம்.ஸ்நபன கும்பநீர், சங்காபிஷேகம்,
இவைகளைக் கொண்டு, முறையே நான்மறை மந்திரங்கள் ஒலிக்க ,
திருமுறைப்பாடல் இசைக்க, வெளிய நாதஸ்வர இசை ஒலிக்க ,
இரண்டு நாழிகை அளவில் பணிவோடு, செய்யப்படுவது மனமுருகன்
அபிஷேக நலமிகு நிகழ்வு.
நடுப்பகல் பூஜை ஆயின் பஞ்சாக்கர மந்திரமும், மாலையாயின்
வ்யோமவ்யாபி என்னும் மந்திரமும், அர்த்தஜாமமாயின் ஷடங்க
மந்திரமும் சொல்லுதல் வேண்டும். என்று ஆகம நூல்கள் கூறுகின்றன.
சிவஞானம் ஆனவனே! மௌனம் கொண்டவனே! நவயோகம்
ஆள்பவனே! தவமானவனே! தந்தைக்கும் குருவானவனே! சுவாமிமலையில்
வீற்றிருப்பவனே! உனது சேவடித் தாமரைக்கு அடியேனின் வந்தனங்கள்.
பாடல்..63.
7..3. அலங்காரம்.
அழகனாம் ஆறுமுகன் அலங்காரக் கோலத்தில்
அணிகளுக்கோ! அழகனுக்கோ?
மழகளிறு மயில்சேவல் விழுவேல் இருகன்னியர்,
தழுவிவரலே அலங்காரம்.
செம்பட்டுச் சீர்பச்சை வெண்பட்டு வீசிவரச்
செந்தோளில் நற்பூணூல் ;
அம்மவோ ! எனவியக்கும் அணிகள்பல அணிந்தபின்
ஆரரத்னம் வீறுமார்பில் ;
நெற்றியிலே திருநீறு, நெற்றிக்கண் நடுப்பொட்டு
பற்றணியு ருத்திராக்கம்.
பற்றில்லான் கொத்துமலர் முற்றுவண்ணச் செம்மாலை ;
விற்புருவக் கன்னத்துமை ;
நவதிரவ்யம் நலச்சுகந்தம் நல்லபயப் பொற்கரத்து ,
நனிவேலும் நமசிவய .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
அழகே உருவானவர் ஆறுமுகக் கடவுள் ஆவார். அவருக்கு மேலும்
அழகூட்ட, அலங்காரங்கள் செய்தால், அழகு பெறுவது அவரா? அவருக்கு
அணிவித்தால் ஆபரணங்களா?
இந்திரன் அளித்த ஐராவதம் என்னும் யானை, சூரபன்மனாம் மயில் ,
சேவல், மாறாத அன்புடைய தெய்வயானை ,வள்ளி என்றுபோற்றப்படும்
இரண்டு கன்னியர் அகலாது சூழ்ந்துவர முருகனுக்கு வேறு அலங்காரம்
எதற்கு?
அவருக்கு சிவத்வத்தைக் குறிக்கச் செம்பட்டுடையும், திருமால் பரம்
குறிக்கப் பச்சைப்பட்டும், பிரும்மபரத்தைக் குறிக்க வெண் பட்டுடையும்
அணிந்தமுருகன் அழகுடன் காட்சி தர, , அவர் தோளிலே பட்டுநூலால்
உருவாக்கப்பட்ட பூணூலும் அணிவித்ததால் அழகோடு விளங்கினார்.
கண்டவர்கள் எல்லாம் என்னே! அழகு! என்று வியக்கும் வண்ணம் , வகை
வகையான அணிகளை எல்லாம் அணிந்தவர்க்கு அவ்வணிகளுக்கு அழகு
சேர்க்கும் வகையில் இரத்தின மாலையைக் கழுத்திலே சூட்டினார்.
நெற்றியிலே மூன்றுபட்டையாகத் திருநீறு சாத்தினர் ; புருவமத்தியில்
சிவாம்சத்தை விளக்கும் வகையில் நெற்றிக்கண்ணாகச் சிவப்புக்
குங்குமப் பொட்டு சாத்தினர் ;
பற்றை விட்டொழிக்கும் உருத்திராக்க மாலையைப் பற்றுள்ள
முருகனுக்குக் கழுத்திலே சாத்தினர் .
பற்றினை ஒழித்த ஆண்டிக்கோலத்து ஆண்டவனுக்கு வண்ணவண்ண
மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை ச் சூட்டினர் ; வில்போன்ற புருவம்
கொண்ட முருகனின் கன்னத்திலே ஒரு கரும்பொட்டு,மைகொண்டு
தீட்டினர்; தோஷங்களை நீக்கும் முருகனுக்கே திருஷ்டி தோஷ
நிவர்த்தியாக அப்பொட்டு இட்டனர்.
நல்ல நல்ல நறுமணம் பொருந்திய வாசனைத் திரவியங்களைத்
தெளி த்தனர்; ஆன்மாக்களைக் காக்கும் அபய வரத ஹஸ்தமும் (கையும்)
மற்றொரு கையில் வேலாயுதமும் கொண்டவராக அவரை அலங்கரித்தனர்.
நமசிவய என்னும் மகேஸ்வர நிலைக்குச் சான்றாய் விளங்கினார்.
சிவஞானத்தின் உயர்ந்தவனே ! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல் ..64..
7..4.. பூசனைமலர்களும்,முறையும்.
தமனம், சீதகும்பம், தண்கனிப் பசும்பால்,
தர்ப்போத்சவம் , அபூபம்,(ஆப்பம்)
தண்டுலான்னம், தீபங்கள், நெய்,தேன், கம்பளம்,
தயிரோடு, பன்னிரண்டு,
திங்களும் நற்பூசனை. வில்வம், துளசி,
தங்கவீரை, மாவிலிங்கம்,
மந்தாரை, நாவலிலை, விஷ்ணுக் கிராந்தி,
பந்தமான வாரபூசனை .
அந்தமில்லான் பஞ்சவில்வம் , அட்டமலர் இட்டபூசனை;
அருங்காலை நந்திமலர்,
அரளிதான் நடுப்பகல்; நறுமல்லிகை நனிமாலை ;
அர்த்தஜாமம் த்விகர்ணி.
வரவேற்றல், அபிஷேகம், நிவேதனம், முறைப்பாடல்
குரு ,தாய், மறை,அடிமை.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
சித்திரை மாதத்தில் தமனபூஜை, வைகாசியில் குளிர்ச்சியான
குடத்தமைந்த நன்னீரால் பூஜை, ஆனியில் நல்ல பழங்களால் பூஜை,
ஆடியில் பாலபிஷேகம் செய்து பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம்
என்னும் பரிகார பூஜை, புரட்டாசியில் அப்பங்களால் பூஜை,
ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் விளக்குகள் ஏற்றி
தீபபூஜை, மார்கழியில் நெய்யால் அபிஷேகம்,ஹோமம், பூஜை,
தைத்திங்களில் தேனாபிஷேக பூஜை, மாசியில் கம்பளம் சாத்தி,
பூஜை, பங்குனியில் தயிராபிஷேகம், தயிரன்னம் போன்றவற்றால்
பூசனை செய்து இறையருள் பெறவேண்டும்.
ஞாயிறன்று வில்வத்தால் அர்ச்சிக்கவேண்டும்; திங்கள் கிழமை
துளசியால், செவ்வாயன்று வீரை மலரால், புதனன்று மாவிலிங்கமலரால் ,
வியாழனன்று மந்தாரைமலரால், வெள்ளியன்று நாவல் இலையால் , சனிக்
கிழமையன்று விஷ்ணுக்கிராந்தி மலரால் அர்ச்சித்தல் பெரும் பயனை
அளிக்கும்.
ஆதியும்,அந்தமும் இல்லாத இறைவனுக்கு ஐந்து வில்வங்கள்
எனப்பெயருற்ற வில்வம், நொச்சி, கிளுவை, முல்லை, விளா ஆகியவற்றைச்
சமர்ப்பித்து நல்லருள் பெறவேண்டும்.
இறைவனுக்கு அட்ட புஷ்பங்கள் என்னும் அருகு, செண்பகம்,புன்னாகம்,
நந்தியாவட்டை,பாதிரி, ப்ருஹதி ,தும்பை ஆகியவற்றால் அர்ச்சித்து
உயர்வு பெறலாம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில்முன்னிற்பவனே ஒன்பது
வகையான யோகத்தில் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய் உள்ளவனே!
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..65.
7.5. நைவேத்யம் ...படையல் ..
அன்றாடக் காலங்கள் அரும்பூசனை சமயங்களில்,
அபிஷேகம் முடிந்தபின்,
அலங்காரம், அர்ச்சனை நிறைவுற்றபின், நிவேதனம்
அருமுறைப்படிப் படைக்கவேண்டும்.
சாலியரிசி, யவரிசி , பிரியங்கு நீவாரம்,
கோதுமையும் குணச்சமையல்;
நாலுபடி நல்லரிசி நற்றூய்மை களைந்தபின்,
நான்மறையால் அடுப்பேற்றுக.
சுத்தான்னம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல்,
பாயசம்,தயிர், எள்ளன்னம் ;
முத்துவடை , காய்கறிச் சமையலுடன் சமைத்தவை,
சிவார்ப்பணம் எனப்படைக்க.
சிவார்ப்பணம் சமர்ப்பிப்போர் சிவாவின் கையளித்து,
சிவக்கரத்தில் சேர்க்கவேண்டும்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் பூசனைக் காலங்களில்
இறைவனுக்குப் படைக்க, நிவேதனம் செய்ய,வேண்டுவது முறையாகும்.
அன்றாடம் அபிஷேகம் முடிந்தவுடன் நல்லுணவு நிவேதனம்
செய்யவேண்டும். அலங்காரம் முடிந்து அர்ச்சனை முடிந்துவுடன் நான்குவித
நாற்பதார்த்தங்களுடன் நிவேதனம் தயார் செய்து நிவேதிக்கவேண்டும்.
சோறு, அன்னம் சமைக்க, நல்ல அரிசி வேண்டும்; சாலியரிசி
வெண்மை நிறம் குன்றா சம்பா அரிசியில், அல்லது யாவதான்யத்தில்,
பிரியங்கு அரிசியில், நீவார அரிசியில், கோதுமையில் நிவேதனம்
ஆக்கப்பட வேண்டும்.
ஒருகால நைவேத்யத்திற்கு நான்குபடி,ஒருமரக்கால் அரிசியெடுத்து,
அதனை மண்,கல், புழு, போன்றவையில்லாமல் நன்கு புடைத்து, நல்ல நீரில்
அத்தைகளைந்து தூய்மையுடன் நன்னீரில் நல்லபாத்திரத்தில்
கொதிக்கவிடவேண்டும். அடுப்பில் ஏற்றும்பொழுதும், அரிசி போடும்
பொழுதும் பஞ்சாக்கர " மந்திரம் கூறியபடி செயலாற்றவேண்டும்.
சமைப்பவரும் நன்கு குளித்துத் திருநீறு அணிந்துகொண்டு, தூய்மையோடு
சமைக்கவேண்டும்.
வடித்த சாதத்தை,அப்படியே நிவேதனம் செய்தல் ஒருமுறை. அது
சுத்தான்னம்" எனப்படும். மேலும் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல்,
பாயாசான்னம், எள்ளன்னம் , தயிரன்னம் போன்றவைகளும் உருவாக்கிப்
படைக்கலாம்.
உளுந்துமுத்துக்களால் ஆன வடை, காய்கறி, போன்றவைகளும்
சமைத்து நிவேதனம் செய்தல் நல்ல இறையருளைக்கொடுக்கும்.
இவைகளை நிவேதனம் செய்யும்பொழுது "சிவார்ப்பணம்" என்று சொல்லித்
தண்ணீரை அதன்மீது தெளித்து நிவேதனம் செய்யவேண்டும்.
ஆலய அர்ச்சகர் அன்போடும், அகமகிழ்வோடும் நிவேதனங்களை
முதலில் தேவியின் கரத்தில் நீரைச்சேர்த்து, அம்மையின் வழியே அதனை
அப்படியே இறைவன் கரைத்து, சாப்பிடுமாறு செக்கவேண்டும்.
நிவேதனம் ஏற்று அருள்புரிகின்ற சுவாமிநாதா!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய்விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..66.
7..6..தீபாராதனை .
கோயில்களில் அடியவர்கள் காத்திருக்கும் குணநிகழ்வு,
கோடிபலன் மகாதீபம்.
வாயினிலே வளப்பாடல் வரத்தினிலே உளம்தேக்கி
வரவேற்கும் பூசையிது.
பகைமை களையும்; அமைதிமேன்மை அருளும்;
பகல்போல் பளிச்சிடும்;
தகைமையோன் நீர்தெளித்து, மலரிட்டு, முத்திரையுடன்
தழல்தீபம் தான்பெற்று,
இடம்நின்று வலம்தூக்கி, மூன்றுசுற்று முகம்,கண்,
தடமார்பு , மூக்குகண்டம் ,
அடிமலர்கள் தொடுசூழல் ஓங்காரமாய்ச் சுற்றவேண்டும்.
ஆண்டவன்முன் அரும்சோதி.
சிவனவனே நின்றருளும் செம்மையால் மகாதீபம்
சிவனாமே! சிவயநம .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
நமது ஆலயங்களில் பெருவாரியான கூட்டம் எவ்வளவு நேரம்
ஆயினும், காத்துக்கிடந்து எம்பெருமானுக்கு நடக்கும் தீபாராதனை
நிகழ்வைக் கண்டு பரவசம் அடைவார்கள்.கோடிப்பலனை வாரி
வழங்கும் அந்தத் தீபாராதனை பற்றிய சில விளக்கங்களைப் பார்ப்போம்.
மக்களெல்லாம் அடியார்கள் எல்லாம் தோத்திரப்பாடல்களை
மனமுருகப் பாடிக்கொண்டே, உள்ளத்திலே கடவுளை நிறுத்தி வழிபடும்
மிகப்பெரிய வழிபாடு தீபாராதனை ஆகும்.
தீபாராதனையில் காட்டப்படும் மகாதீபமும், பிறதீபங்களும்
பகலவன்போல் ஒளிக்கதிர்களை வீசி, நமது வினைகளைச்
சுட்டெரிக்கும்; மனதிற்கு அமைதி நல்கும்; மேன்மை நல்கும்.
தீபாராதனை முறை :- பூசனை செய்யும் அர்ச்சகர் , எதிர்த்தாற்போல்
பரிசாரகர் தரும் தீபத்தை, வாங்குகையில் முதலில் நீர்
தெளிக்கவேண்டும்; அதன்மீது மலர்களை மந்திரம் சொல்லித் தூவ
வேண்டும் . மூன்றுசூலம்போல் முத்திரை காட்டி வரவேற்று, தீபத்தைப்
பணிவோடு கைகளால் பற்றவேண்டும். இருக்கைகளில் அதனைத் தாங்கி ,
இடது காலை அழுத்தமாக நிலத்தில் இருத்தி , வலதுகாலைச் சற்றே
மேலே தூக்கியபடி , தீபத்தை அதண்சுடரை , இறைவனின் முகம்,கண், மூக்கு,
கழுத்து, மார்பு, விளங்குமாறு தனித்தனியே காட்டவேண்டும். இறைவனின்
அடிக்கமலத்திலும் தீபம் படுமாறு காட்டவேண்டும்.இந்நிகழ்வு ஒரு
ஓங்காரம் போல வட்டமிட்டு,மூன்று சுற்று சுற்றிப் பின் அதனைப்
பரிசாரகரிடம் அளிக்கவேண்டும். அருள்சோதியாய் ஆண்டவன்
விளங்குவதே இத் தத்துவம் ஆகும்.
சிவனே மகாதீபத்தின் தலைவன்; அவனருளால் அவன் தாள்
வணங்கி என்பதுபோல அவனுக்கே அத்தீபத்தைக் காட்டி, அருள்
பெறும் நாமே பாக்கியசாலிகள் ஆவோம். நமசிவய .
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
விற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..67..
7..7. ஷோடசோபசாரம். பதினாறு வகை உபசரிப்பு.
ஆண்டவனின் அருளைப்பெற ஆன்றபூசனை முடித்தபின்
அமரவைத்தல் முதலான,
வானளாவிய உபசரிப்பு விதிப்படி ஆற்றவேண்டும்;
வகைமுறையே பூசனைகள்
தீபங்களால் கருவிகளால் உபசரிப்பு முறைகளால்
தீரபாதம் போற்றலாகும்.
தீபநாகம் , மயூர,சேவல், கஜ,காளை புருஷாம்ருகம் ,
தீபபுருஷம் அத்திரம் (சூலம்)
எட்டுமங்களக் குடை,இருதிரி , சுவஸ்திக் சாமரம்,
பூர்ணகும்பம், விசிறி,கொடி ,
எட்டுதிக்கும் ஆலவட்டம் இட்டுவரும் உபசாரம்.
அனைத்திலும் அதிபதிகள்,
சிவநாமம் சொல்லியபடி சிவகுகனைப் போற்றுவார்கள்.
சிவபெருமான் அருளுருவர்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
இறைவனது பேரருளைப் பெற,அன்றாடம் மிகச்சிறந்த பூசனை
செய்தபிறகு, அவரை நல்ல ஆசனத்தில் அமரவைத்து, பாத்யம்,ஆசமநீயம்
என்றமுறையில் நன்னீர் கொடுத்து, அவர்க்குப் பதினாறு வகையான
உபசரிப்புகள் வேண்டும்.
வானளாவிய உபசரிப்பு முறைகளால் எம்பெருமானை மனதளவில்
மகிழ்ச்சி தருமாறு பணிவிடைகள் தூப ,தீபங்கள், பிறக்கருவிகளால் ஆன
உபசரிப்புகளை விதிப்படி மந்திரங்கள் கூறி ஆற்றவேண்டும். எல்லாம்வல்ல
இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து செய்யவேண்டும்.
அஞ்சடுக்கு, ஏழடுக்கு, பதினோரடுக்கு என்னும் தீபத்தை
மந்திரபூர்வமாகக் காண்பித்தபின், முறையே நாகதீபம், மயில்தீபம், கோழி
தீபம், யானை தீபம், விருஷப தீபம், புருஷாம்ருக தீபம், புருஷதீபம், அஸ்த்ர
தீபம், இவைகளில் உள்ளவைகளை, ஏற்றவைகளை, மூர்த்திக்கு ஏற்ப,
மந்திரங்கள் ஓதிக் காண்பிக்கவேண்டும்.
எட்டு மங்களம் என்று போற்றப்படும் உபசார வகைகளை முறைப்படிக்
காண்பிக்கவேண்டும். குடை, இரு திரிவிளக்கு, சுவஸ்திக், பூர்ணகும்பம்,
விசிறி,கொடி எட்டுத்திக்கும் வெற்றி கூறும் ஆலவட்டம், ஆகியவற்றை
அன்பும், கலந்து மந்திரங்களைக்கூறிக் காண்பிக்கவேண்டும்.
தீபங்களுக்கும், ஏனைய பொருள்களுக்கும் தலைவர்கள் (அதிபதிகள்)
உள்ளனர்; அவர்களையும் போற்றவேண்டும்.
அனைத்து பூசனைகளிலும் சிவநாமம் சொல்லிச் சிவகுகனைப்
போற்றுவார்கள் சிவனடியார்கள்; அர்ச்சகர்கள். அவர்களுக்கு அருள்
வழங்குவார் எம்பெருமான் சிவனார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..68.
7..8.. நான்மறை, திருமுறை, சுலோகம், ஆசீர்வாதம்.
மறைதந்தவன் மனமுவந்த நிறையர்ச்சனை நிறைவுற்றதும்,
மறைத்தொன்மை இருக்வேதம்,
மறைத்தூய்மை யஜுர்வேதம், இசைஸாமம், நிறையதர்வம்
குறையின்றிக் கூறல்முறை.
நால்வர்கள் நாயன்மார் பற்பலரும் நற்றமிழில்
நல்லிசைப்பண் நயந்தோட,
மேலுலகு மேதினியில் மெல்லிசை கவர்ந்துவர
மேகராகக் குறிஞ்சிப்பண்
தாளத்துடன் தேவாரம் திருவாசகம் பாடல்முறை.
தார்மீக நலம்தாங்கிய
வடமொழியின் வளப்பாடல் வழிவழியே சொல்லல்முறை.
தென்னாடுடை பொன்னாட்டவன்
சிவபெருமான் சிறப்புகளைச் செம்மையாய்ச் சித்தரிக்கும்
சீராசீர் வாதமும்சிவம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
மறைகளை முனிவர்களுக்கு உபதேசித்த இறைவனின் அர்ச்சனை தீபம்
முதலிய பூசனைகள் நிறைவுற்றதும், நான்குவேதங்கள், திருமுறை, தேவார,
திருவாசகங்கள் சைவாகமசுலோகங்கள், கூறுவது பெரும் மரபாகும்.
அதன்படி, முதலில் தொன்மை வாய்ந்த இருக்குவேதமும், தூய்மை
கொண்ட யஜுர்வேதமும், இசைவடிவான சாமவேதமும், உலகியல்
எல்லாம் நிறைந்த அதர்வ வேதமும் நன்கு ஓதப்படவேண்டும்.
அப்பர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள்,
அருணகிரியார் திருமூலர் போன்ற் சான்றோர்கள் பாடிய நல்லிசைப்பண் ,
விண்ணவர்களும் வந்துகேட்கும் இசைப்பாடல்களை
மேககராகக்குறிஞ்சியிலும், பிறபண்களிலும் பாடுவது முறை.
அறம்போற்றுகின்ற நல்வழி காட்டும் வடமொழிப்பாடல்கள்
இறைவனைப்போற்றும் வகையில் கூறவேண்டும்.
சிவபெருமான் தென்னாடுடைய சிவன்; எந்நாட்டவர்க்கும் இறைவன்
அவனது பெருமைகள், சிறப்புகள், வீரதீரப் பிரதாபங்கள் போன்றவற்றைத்
தொகுத்து ஆசிவேண்டி அதனைக் கூறுதல் முறை.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமி மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..69.
7..9..பூசனை சார்ந்த பொதுவிதிகள்.
இறைவனது அபிஷேகம், நைவேத்ய நற்பொழுது,
இறைபலி , தூபதீப,
நிறைகாலம் நாதஸ்வர நல்லிசை இசைக்க.
மறையொலிமணி மகேசனது
அருள்பூசனை ஆரம்பம் அதன்முடிவு நேரங்களில்
அகிலமறிய அடிக்கவேண்டும்.
திருமுழுக்கு, திருபூசனை , நறுமலர் சாத்துசமயம்/
புரிச்சங்க ஒலிகூட்டுக.
பட்டுநூல் ஆடைகள், பலவண்ண ஆடைகள்,
பஞ்சாடை அலங்கரிக்க.
பட்டுகிழி பழையன சுட்டெலி கடித்தன
விட்டுநீக்குக ; வீடுபெறுக.
சிவதருமம் அதிகாலை அருணோதயம் முன்னதாக,
ஐந்துமாவொலி எழுப்புக.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்பொழுதும், நைவேத்யகாலத்திலும்,
பலி போடுகின்ற காலத்தும், தூப,தீப காலத்தும், ஆலயங்களில் நாதஸ்வர
இசை மேளத்தோடு இசைக்கவேண்டும்.
கோயிலில் கட்டப்பட்டுள்ள பெரிய மணியை அடித்து ஒலி
எழுப்பவேண்டிய காலங்கள், பூசனையின் ஆரம்பகாலம், முடிந்து
தீபாராதனை தொடங்கும் காலம் ஆகிய நேரத்தில் உலகோர்
அறிந்து இறைவனைத் தொழுதுய்ய ஒலி எழுப்பவேண்டும்.
இறைவனின் அபிஷேக காலம், பூசனை நடக்கும் சமயம், மலர்கள்
சாத்தும் சமயம் சங்கொலி எழுப்பவேண்டும்.
இறைவனுக்கு, நல்ல பட்டாடைகளும், அதுவும் பலப்பல வண்ணங்களில்
சாத்தவேண்டும்; பஞ்சினால் நெய்த ஆடைகளும் சாத்தலாம்.
கிழிந்த பட்டாடை, மிகப்பழைய ஆடைகள், எலிகடித்த ஆடைகள்
போன்றவற்றை இறைவனுக்கு ஒருபோதும் சாத்தாதீர்கள்; நல்ல ஆடையே
வீட்டுப்பதம் நல்கும்.
சிவதருமம் என்னும் நூல் உரைத்த இவைகளோடு, ஆலயத்தில்
விடியற்காலை, சூரிய உதயத்திற்குமுன் மிருதங்கம், சங்கு, மணி,
நாதஸ்வரம் , பாடல், போன்ற ஐந்துவகையான ஒலி எழுப்பி, இருளை
அகற்றி ஆன்மாவிற்கு வழிகாட்டுக.
சிவஞானத்தில் உயர்ந்தவனே ! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்நதவனே ! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..70.
7.10. பூசனை மலர்களும், மாண்பும்.
வில்வபூஜை சிவலோகம் சித்திக்கும்; பாவங்களின்
விடுதலையாம் ; விரிமுக்குணம்;
வில்வமானது காய்ந்ததாயினும், பழையதாயினும், உகந்ததே.
வில்வத்தொடல் பாவநீக்கம்.
செம்பரத்தைத் தாழம்பூ செஞ்சடையோன் விரும்பான் ;
லம்போதரன் துளசியை;
அம்பாளோ அருகொடு வெள்ளெருக்கு, மந்தாரை;
செஞ்சூரியன் வில்வதளம்.
மலர்களைத் தலைகீழாய்ச் சாத்துதல் விலக்குக ;
மலர்சிதைத்தல் மாபாவம்.
மலர்களைக் கட்டுவோன் , பறிப்பவன் உடலுள்ளத்
தூய்மையுடன் தொழிலாற்றுக.
சிவலிங்கம் சிவவில்வம் சிவலோகம் சிறப்பிக்கும்;
சிவார்ச்சனை குகார்ச்சனையே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
சத்வம், ரஜஸ்,தமஸ் என்ற முக்குணங்கள் கொண்ட வில்வதளத்தினால்
சிவனை அர்ச்சிப்பவன் சிவ உலகை அடைகிறான்; அத்துடன் பாவங்களில்
இருந்தும் விடுபடுகிறான்.
வில்வ தளம் காய்ந்துபோய் இருந்தாலும், மிகமிகப் பழையதாக
இருந்தாலும் அதனைப் பூசனைக்குப் பயன்படுத்தலாம். வில்வத்தைத்
தொடுதல் பாவங்கள் போக்கும் வழியாகும்.
செம்பரத்தை , தாழம்பூ, இவைகளைச் சிவபெருமான் அணியமாட்டார்.
விநாயகப்பெருமான் துளசியை அணியமாட்டார். அன்னை பார்வதிதேவி
அருகம்புல், வெள்ளெருக்கு, மந்தாரை போன்றவற்றை அணியமாட்டார்.
சூரியன் வில்வம் அணியமாட்டார்.
மலர்களை இறைவனுக்குச் சாத்தும்போழுது தலைகீழாகச் சாத்துதல்
கூடாது. அத்துடன் மலர்களைக்கிள்ளுதல், சிதைத்தல், பெரும் பாவச்செயல்
ஆகும்.
மலர்களைப் பறிப்பவர், தொடுப்பவர் தூய்மை காக்கவேண்டும்;
மனமும், உடலும் தூய்மையில் விளங்கவேண்டும். ஐந்தெழுத்தை ஓதியபடி
இப்பணியைச் செய்யவேண்டும்.
சிவனுக்கே உரிய வில்வத்தை சிவனுக்கே சமர்ப்பித்து, அர்ச்சனை
செய்பவர்களைச் சிவ உலகில் போற்றுவார்கள். சிவனுக்குச் செய்யும்
பூசனைகள் எல்லாம் குகனையும் சாரும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..71.
8.. கும்பாபிஷேகம்; .குடமுழுக்கு.
8..1. பாலாலயம் . இளங்கோயில் .
இளங்கோயில் எனப்படும் பாலாலயம் குடமுழுக்கு
வளத்துவக்கம் விதியுமாகும் .
இளங்கோயில் அமைக்காமல் குடமுழுக்கு கிடையாது;
மீள்கை ஆவர்த்தனம்;
மீளாநிலை அனாவர்த்தனம் திருத்தம்புன ராவர்த்தனம் ;
மறைந்தொழிதல் அந்தரிகம்
நாலாம்முறை , மூலாகம முதுவிதி முன்னுரைக்கும்.
நற்கோயிலின் ஈசான
மூலையின்கண் முழுக்கோயில் வடிவத்தை மூர்த்தியின்
முழுவடிவம் அர்ச்சிக்க.
காலைதொட்டுப் பூசனையெலாம் கலைஒவிய நிலைக்கேயாம்.
குடமுழுக்குக் காலம்வரை.
சிவாகம சீர்மைப்படி சித்தமெல்லாம் சீரோவியம்.
சீர்கோயிலும் ஊர்போற்றும்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
ஒருகோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முடிவு செய்தபின், அக்கோயில்
தெய்வமூர்த்தங்களை , கோபுரத்தை, விமானங்களை இளங்கோயில்
என்னும் பாலாலயம் தவறாது செய்தல்வேண்டும். அவ்வாறு செய்வதே
ஆகமவிதி முறையாகும்.
பாலாலயம் செய்யாமல் குடமுழுக்கு நடத்துதல்
முறையாகாத்து..அவ்விளங்கோயில் ஆவர்த்தனம், அனாவர்த்தனம் ,
புனராவர்த்தனம் , அந்தரிகம் என நான்குவகையால் விளக்கப்படும்.
நான்கு முறைகள்;- 1. ஆவர்த்தனம்;
நீண்டகாலமாக வழிபாடு இல்லாமல் பூட்டிக்கிடந்த கோயில்
சிதிலம் அடைந்த, சீரழிந்த, கோயில்களைப் பிரதிஷ்டை செய்யுங்கால்
செய்யும் பாலாலயம் ஆவர்த்தனம் எனப்படும்.
2. அநாவர்த்தனம் ;- புதிய கோயில், புதிய விக்ரஹம் என்றகாலத்து,
செய்யப்படும் பாலாலயம் அநாவர்த்தனம் ஆகும்,
3. புனராவர்த்தனம் ;- பழைய கோயிலைப் புதுப்பித்து எழுப்பச்
செய்யும் பாலாலயம் புனராவர்த்தனம் ஆகும்.
4. அந்தரிகம்;- கோயில் வளாகத்தில் தீயன நடத்தல், விலங்குகளால்
சீரழிவு, கள்வர்கள், நாத்திகர்கள் ஆகியோரால் ஏற்படும் அழிவுகள்,
இவைகளை மாற்றிச் செய்யும் பாலாலயம் அந்தரிகம் எனப்படும்.
இவைகளை மூலாகமன்கள் விளக்கமாகச்சொல்கின்றன.
இளங்கோயில் என்பது ஒரு முழுமையான கோயிலே ஆகும்; கோயிலின்
ஈசான மூலையில் அக்கோயில் உருவாக்கப்படவேண்டும். கடவுளர்களின்
நல்லுடலை ஒரு வரைந்து அதனையே கடவுளாகக் கருதிப் பூசனை
செய்யவேண்டும்.அபிஷேகம் தவிர்த்து, அனைத்துப்பூசனைகளும்
செய்யப்படவேண்டும்; கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் வரை,
இதுவே பெருங்கோயில் ஆகும். திருவிழாக்கள், சிறப்புப்பூசனைகள்
எல்லாம் இங்கேயே நடக்கவேண்டும்.
காலை தொடங்கி இரவு வரை எல்லாவித பூசனைகளும்
நடத்தப்பவேண்டும். சீரிய ஓவியத்தை மக்கள் போற்றி வணங்குவார்கள்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாய் உபதேசித்தவனே! சுவாமி
மலையில் வீற்றிருக்கும்சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..72.
8.. 2. தொடங்கும் நாள் தூயபூசனைகள்.
அனுக் ஆண்டவனிடம் அனுமதி அரும்பூசனை;
ஆசார்யர் தேர்வுற்றார்,
அனைத்துமே அவர்வழியில் நடத்திட அனுமதியும்!
ஆன்றபரனே அனுக்ரஹிப்பீர்!
சங்கல்பம் மங்களமே பொங்கிடவே எங்களூரின்
தங்ககோயில் குடமுழுக்கு
பங்கமின்றி நடந்திடவும், புங்கவனே! போற்றுகின்றோம்;
தங்குதடை தடுத்தாட்கொள்.
பாத்ரபூசனை பவித்திரமாம் பாத்திரங்கள் பக்திபூசை
போற்றிடவே உதவுபவை;
சூத்ரதாரி சுரர்களே பாத்ராதி பதிகளாவர்;
சூத்திரத்தால் போற்றல்முறை.
சிவத்தொடர்பு அவம்போக்கும்; நவப்பணியில் சிவம்கருதிச்
சிவயநம சேர்ந்திசைப்போம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
கும்பாபிஷேகப் பூசனைப்பணிகள் தொடங்கும் முதல் நாளில்
இப்பணியைச் செய்வதற்கான நல்லாசானை, நண்ணமாரை,ஆகமம்
நன்கறிந்த ஆசார்யரைத் தேர்வுசெய்தார்கள்; நல்லொழுக்கம் வாய்ந்த
அவர் தமது பணியைத் துவங்கும்முன் விநாயகரை வணங்கி,
உலகிற்கும், இவ்வூருக்கும், நன்மையே நடப்பதற்கும், கும்பாபிஷேகம்
நடத்தும் கர்த்தா வான அவர் நன்மையே அடைவதற்கும் ஆக,
இறைவன் சன்னதியில் நின்று, சுவாமி முன்னால் வெற்றிலை,பாக்கு,
தேங்காய். பழங்கள், மஞ்சள், மலர்கள் இவைகளை வைத்து, மனதார
வேண்டிக்கொண்டார். அமர்ந்து, விநாயகர் முதலான கடவுளர்களை
விளித்து, இவ்விழா நன்கு நடைபெற ஆசி வழங்குங்கள் என வேண்டினார்.
சங்கல்பம் ....... இறைவா! நாங்கள் இப்பொழுது குடமுழுக்கு தொடர்பான
பூசனைகளை த் தொடர இருக்கின்றோம். இந்நிகழ்ச்சியானது எவ்விதத்
தடையுமில்லாமல் செவ்வனே நடைபெறத் தாங்களே அருள்புரியவேண்டும்.
பலகையில் அமர்ந்த ஆசார்யர், விநாயகரைத் தொழுது, ஆசமநீயம்
செய்து, தலையில் குட்டிக்கொண்டு, பிராணாயாமம் செய்து, சங்கல்பம்
செய்துகொள்ளத் துவங்கினார். நாள், நேரம், விண்மீன், யோகம்
போன்றவைகளைக் கூறி, நிகழ்வு தடைகள் இல்லாமல் நடக்க அருள்
புரியவேண்டும் என வேண்டிக்கொண்டார்.
பாத்திரபூசனை ........ பூசனைக்குத் தேவையான பாத்திரங்களை நன்கு
தூய்மைப்படுத்தி, அதனைப் பயன்படுத்தும் முன் அத்தனையும், அதன்
அதிதேவர்களையும் (தலைவர்கள்) பூசித்து, விழாவின் எல்லா நிகழ்விற்கும்
பாத்திரம் தேவை; அதனால் பாத்திரங்களே! பாத்திரத்தேவதைகளே!
உங்களைப் போற்றி வணங்குகிறோம்" என்று பூஜிக்கவேண்டும்.
சிவனின் பேரருள் நமக்கு வேண்டும்; நாம்தொடங்க இருக்கும்
குடமுழுக்கு விழாவின் தலைவரே அவர்; அதனால் நாம் அனைவரும்
நமசிவய " என்று போற்றிக்கூறுவோம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில்முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்தில் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசம் செய்த ஞானகுருவே! சுவாமி
மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..73.
8..3..தொடங்குமுன் நடத்தப்படும் பூசனைகள்.
கணபதி வழிபாடு. குடமுழுக்கு நன்குநடக்கக்
கணபதியே வழிகாட்டி.
மணமலர்கள் மஞ்சளரிசி பிறபொருட்கள் கைக்கொண்டு,
ஆசார்யர் தொழுதிடுவார்.
வருணபூசை நிலத்தூய்மை மனத்தூய்மை நிலைத்திட
வருணதேவன் வாரிபொழிவான்;
கருணையைப் பெற்றிடவும், நீர்நிலைகள் செழிக்கவும்,
வருணகும்பம் வணங்கப்படும்.
பஞ்சகவ்யம் கோமயம், கோசலம், பால்,தயிர் ,நெய் ,
பஞ்ச,பசுப் பொருட்களை,
பஞ்சவினை ஆன்மசுத்தி போக்கிடவே பூசனைகளை
அஞ்சுறாசான் செய்திடுவார்.
நவக்கோயில் சிவக்கனவு உவந்தூரார் உருவாக்கும்
குகக்கோயில் குடமுழுக்கு.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
கணபதி பூசனை; விநாயக பூஜை; உலகின் எல்லாச்செயல்களுக்கும்
முதன்மையாக விளங்குபவன் கணபதி. அவனை முதலில் பூஜிக்காமல்
தொடங்கும் செயல்கள் நன்மை பெறாது. அதன்படி குடமுழுக்கு
ஆகிய இந்த மங்கள விழாவும் நன்கு நடைபெற விநாயகரையே
துணையாகக் கொண்டு, தொடங்குவோம். மஞ்சள், அரிசி,
வெற்றிலை,பாக்கு,தேங்காய், அருகம்புல், மலர்கள் கொண்டு பூசனையைத்
தொடங்கிய ஆசார்யர் வணங்கித் தொழுது நல்லதே நடக்க வேண்டிடுவார்.
கோயில், யாகசாலை, அதைச்சுற்றியுள்ள இடங்கள் நல்ல தூய்மை
பெற்றிடவும், குளிர்ச்சியால் அடியவர்கள் மனமெல்லாம் குளிர்ந்து
சிவத்தோடு ஒன்றிடவும், மழை பொழிய வேண்டியும், உலகம்
வளம்பெற நன்மழை வேண்டியும், வருணக்கடவுளை, நீர்த்தலைவனை
அழைத்து, உபசரித்து, அவனுக்கு நற்பூசனை செய்வித்துப் போற்றுதல்
ஆசார்யரின் கடமை; அதனை அவர் முறையோடு மந்திரங்கள்
வாயிலாக ஆற்றுவதே வருணபூசனையாகும். ஒருகும்பத்தில் வருணனை
ஆவாஹித்து,(வரவழைத்து) நற்பூசை செய்தல்.
பஞ்சகவ்யம் ;- ஆன்மாக்களின் ஆன்மா உலகியலால் அசுத்தமாக
விளங்கும்; அதனைத் தூய்மைப்படுத்திட ஆகம முறை கூறும் பஞ்சகவ்யப்
பூசனையைப் புரிவார் ஆசார்யர். பசுவின் சாணி, மூத்திரம், பால், தயிர் ,
நெய் ஆகியவற்றை ஐந்து கிண்ணங்களில் மறையோதி சேர்த்து,
அவைகளில் அதனதன் தேவர்களை ஆவாஹித்து, நற்பூசனை செய்து,
அவைகளை ஒன்றாகக் கலக்கிப் பூசைப்பொருளாக்கியபின் அதனை
ஆண்டவனுக்கு, அடியவர்களுக்கு வழங்குதல் மரபு.
பாடல்..74.
8..4. வாஸ்துசாந்தி, பிரவேசபலி , ம்ருத்சங்கிரஹணம் .
வாஸ்துசாந்தி வீணரக்கச் செயல்தடுக்க, வளக்கட்டம் ,
வரைந்துபூசை வாஸ்துவிற்கு;
வாஸ்துவினால் வலுவிழந்து, வளவமைதி வரவழைக்க,
வாஸ்துவேள்வி செய்திடுவார்.
பிரவேசபலி நிறைநின்று நிலைகாக்கும் திசைக்காவலர்
திறன்போற்றிப் பலிகொடுத்துப்
பிறவரக்கர் வரவிடாமல் அறச்சாலை காத்திடவே
பிரியபூசை செய்திடுவார்.
மண்ணெடுத்தல் மண்தோண்டிய பள்ளத்தால் மனமுடைந்த
மண்ணரசி மனம்மகிழ
மண்ணிற்கு மறையோதி நீராட்டி, நீள்பூசை
நிகழ்த்திடுவார் ஆசார்யர்.
நாவாலய நிர்மாணம் நலமநலமாய்ப் பூசனைகள்,
நலமந்திரம் நமச்சிவாயம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
நல்லசெயல்கள் நடப்பதைத் தடுக்க, வீணே சுற்றித்திரியும் அரக்கர்
கூட்டம் இன்றும் கேடுகள் விளைவிக்கின்றன; அதனைத் தடுக்கும்
முகத்தான், செய்யப்படும் பூசையே வாஸ்துசாந்தி. அரிசியில் அல்லது
மாவில் கட்டங்கள் வரைந்து, அதனுள் வாஸ்துபுருஷன் உருவம் நினைந்து,
பூசை,வேள்வி செய்யவேண்டும். அதனால் மகிழ்ந்த வாஸ்து புருஷன்
அரக்கர்களை விரட்டியடிப்பார். தீய சக்திகளை குடமுழுக்கு பகுதியில்
இருந்து விரட்டியடித்து, நலபூசைகள் நடந்திட இச்சாந்தி உதவுகிறது.
ஆசார்யர் இதனையும் மறை முறைப்படி ஆற்றிடுவார்.
பிரவேச பலி..... எட்டுத் திசைகளையும் எட்டு திகபாலகர்கள்
காக்கின்றனர்; அவர்களுக்கு உரிய மந்திரத்தால் அவர்களுக்குகந்த
பலிகளைத் தந்து பூசனை செய்யவேண்டும். அவ்வாறு ஆசார்யர்
முறைப்படி ஆற்றினால், மகிழ்ந்த திசைக்காவலர்கள் தத்தம் பகுதியில்
நின்று, அவ்வழி தீயகூட்டம் அரக்கர் போன்றோர் வரவிடாமல் ,உள்ளே
நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வேள்விச்சாலையைக் காப்பார்கள்;
அதனால் அவர்களுக்கு நல்ல பலி, நற்பூசை செய்வார் ஆசார்யர்.
மண்ணெடுத்தல் ...... நிலமகளைத் துன்புறுத்திப் பள்ளம் தோண்டி,
நமது பூசைக்கு வேண்டிய மண்ணையும், கட்டடம் கட்டமண்ணும்
எடுத்துக்கொள்கிறோம். அதனால் மிகுந்த வேதனையில் இருக்கும்,
நிலமகளை அமைதிப்படுத்தவும், மகிழ்ச்சி அடையச்செய்யவும் செய்யும்
பூசையே ம்ருத்சங்கிரஹம் என்னும் பூசை. தோண்டிய பள்ளத்தில் நீரால்
பிறபொருட்களால் அபிஷேகம் செய்வித்து, சந்தனம் குங்குமம் இட்டு,
மலர்களால் பூசனை செய்வார் ஆசார்யர்.
புதுக் கோயில் அமைத்து, குடமுழுக்கு செய்து நல்ல தன்மையில்
பூசனைகளும் செய்கிறோம் என்றால் அது அந்தப் பரமேஸ்வரன் காட்டிய
நல்வழியே ஆகும். ஓம் நமசிவாய.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்துநிற் பவனே! தவத்திற்கே தவமானவனே!
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..75.
8..5.அங்குரார்ப்பணம் ,ரட்சாபந்தனம்,கும்பாலங்காரம்.
அங்குரார்ப்பணம் அகழ்ந்தமண் ஆரிளமுளை அரும்பாலிகை,
ஆதித்யர் பன்னிருவர்,
பொங்குநிலவு தங்கவைத்து, தங்குவள சங்கபூசை ,
எங்களாசான் இனிதியற்றுவார்.
இரட்சா பந்தனம் காப்புக் கயிறு,
இடையூறு தடுத்திடும் ;
மரபாலே ஆசார்யர். மற்றுசிவத் துணைவரெலாம்
ஏற்றிடுவர் செங்கரத்தில்.
கும்ப அலங்காரம் யாகசாலைக் கும்பங்கள்
குன்றீசன் குணவடிவே;
செம்பவளச் சீரணிகள் செம்மாலை அணிவித்து,
நம்மவர்கள் அலங்கரிப்பர்.
புவனத்தின் புண்ணியத்தால் புதுக்கோயில், புதுப்பூசை;
சிவனருளே தவப்பயனாம் .1
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
இரட்சாபந்தனம் என்னும் காப்புக்கயிறு கையில் கட்டுதல் ,
குடமுழுக்கு நடத்தும், ஆசார்யர், அவருக்குத் துணைசெய்யும்
ஆசார்யர்கள் , ஆகிய அனைவருக்கும் இக்காப்புக்கட்டுதல் நடைபெறும்.
நடத்துபவர்கள், பங்கு கொள்கின்றவர்கள் போன்றோருக்கும் இடையூறு
வருதல் கூடாது என்பதை, மனதில் கொண்ட இவர்கள் சிவப்பணியை
மேற்கொள்ளபவர்கள் ஆவர். அதனால் அவர்களது திருக்கரத்தில்
மறையோதி மந்திரக்கயிறு கட்டப்படும்.
கும்பாலங்காரம்... குடமுழுக்கிற்கான கடங்கள் ,குடங்கள்,கும்பங்கள்
யாகசாலையில் வேதிகை எனப்படும் மேடையின்மீது அர்ச்சனை ,பூஜை
செய்வதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கை, குறிப்பிட்ட முறையில் மேலும்,
கீழே வரிசை முறையிலும் வைக்கப்படும். அக்குடங்களை நூல் சுற்றி,
மாவிலை சொருகி, தர்ப்பைக் கூர்ச்சம் வைத்து, சந்தனம் குங்குமம் வைத்து,
அழகு செய்யப்பட்டு வைக்கப்படும். முக்கியமான தெய்வங்களின்
குடங்கள் மேலும் அழகு செய்யப்படும், வண்ண வண்ண மாலைகள்,
இரத்தின ஆரங்கள், நகைகள் பட்டுவஸ்திரங்கள் மேல் அங்கவஸ்திரங்கள்
போன்றன சாத்தப்படும். இதுவே கும்பாலங்காரமாகும்.
உலகு செய்த நற்புண்ணியம் காரணமாக இக்கோயிலில் குடமுழுக்கு
உருவாகியுள்ளது; அதற்கு வழிவகுத்து, நிறைவேற்றுபவன் சிவபெருமானே
ஆகும். அவனடி போற்றி எப்பொழுதும் ஓம் நமசிவாய என்போம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்.. 76.
8.6. கலாகர்ஷணம், யாகசாலா ப்ரவேசம் , பிம்பசுத்தி . நாடி சந்தானம்.
கலாகர்ஷணம் கருவறைக் கடவுளர் , பிறமூர்த்திகள்
காலத்தால் தொன்மையவர் ;
சிலாவடிவச் செம்மைச் சக்திகளை மந்திரவழி,
செங்கலசம் சேர்ப்பித்தல்.
யாகசாலா ப்ரவேசம் கலாகர்ஷணக் கும்பங்களை
யாகசாலை உள்ளமர்த்தல்.
சூரிய சோமபூசை மண்டலா வரணபூசை
வீரியம்பெற வகைகாட்டல்.
பிம்பசுத்தி பிம்பங்கள், விக்ரஹங்கள் தூய்மையாய்
உம்பர்போல் உருவாக்குதல்.
நாடி சந்தானம்; தேடியருள் விக்ரஹங்கள்
நாடியாம் நல்லுயிர்ப்பை,
நாடிதர்ப்ப நலக்கயிறு நீள்வழியாய்க் கடங்கள்
தம்மோடு தொடர்புறுத்தல் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே 1
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கலாகர்ஷணம் என்பது, கோயிலின் கருவறையில், ஒவ்வொரு
மண்டபத்திலும் வீற்று அருள்புரியும் சிலைவடிவ விக்கிரஹங்கள்
காலத்தால் தொன்மை வாய்ந்தன. நிறைந்த மந்திரசக்தியை உள்ளடக்கிய
மும்மூர்த்திகளின் உயிர்ப்பு நிலையை , அர்ச்சித்து, மந்திரத்தால் எடுத்து,
அச்சக்தியைக் கலசங்களில் யாகசாலைக் குடங்களில் சேர்ப்பிப்பது எனப்
பொருள்படும்.
யாகசாலைப்பிரவேசம் ; குடமுழுக்கிற்குத் தேவையான குடங்கள்,
செம்புகள் இவைகளுக்கு, நூல் சுற்றி, அலங்கரித்து மாவிலை, தேங்காய்,
கூர்ச்சம் இவைகளுடன் மங்கள வாத்யம் முழங்க, மறையொலி வானளாவ
யாகசாலைக்குள் எடுத்துவரப்பட்டுப் பூசனைக்காக அங்கு கட்டப்பட்டுள்ள
வேதிகைகளில் அழகுற வைத்தல்.
யாகசாலையில் கடங்களை இறைவனாக நினைத்து அதற்குப்பூசை
செய்யவேண்டும். அதன்படி,சூரியபூசை,சந்திரபூசை, கும்பங்களுக்கு
ஆவரண பூசைகள் செய்வார்கள்.
பிம்பசுத்தி; விக்கிரஹங்களின் உயிர்ப்புச் சக்தியை கும்பங்களில்
சேர்த்ததால், அவைகளை நன்கு த் தூய்மை ஆக்க முனைவதே பிம்பசுத்தி.
நன்கு தேய்த்து ப் பொன்போல் ஆக்குதல்.
நாடிசந்தானம் ; யாகசாலையில் அழகுற பூசைசெய்து வைத்துள்ள
குடங்களின் கழுத்தில் தர்ப்பைக் கயிறால் ஆன நீண்டகயிற்றை
முடிச்சுப் போட்டு, அதன் அடுத்த நுனியை ஆலயத்துள் இருக்கும் எல்லாத்
தெய்வங்களின் இடுப்பிலும் தனித்தனியே கட்டி, மந்திரம்
சொல்லவேண்டும். மந்திரத்தால் இரண்டு நிலைகளுக்கும் நல்ல தொடர்பு
ஏற்படும். தெய்வத்தின் சக்தி குடத்திற்குப் போகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசம் செய்த ஞானகுருவே! சுவாமி
மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..77.
8.7. விசேஷ சந்தி , பூதசுத்தி, ஸ்பர்சாகுதி .
விசேஷ சந்தி சிறப்புடைய ஆசார்யர் அனைவரும்
இருவேளை செய்சந்தி;
விரிதத்துவம் முப்பத் தாறுடன் விரிவானுளோர்
நினைந்தளிக்கும் நித்யார்க்யம்.
பூதசுத்தி ஐம்பூத வழுக்குடலை அழுக்குமாற்றி,
நாதவிந்துவாய் நனிதெய்வமாய்
சீதக்கரை சின்முத்திரை சிவரூபம் சிந்தையுடன்
செய்சுத்தி இருவேளை.
ஸ்பர்சாகுதி தொட்டருளும் தூயவேள்வி; யாகசாலை
புனிதநீர்க்குடம் புகுவிளங்கும்
தத்துவங்களை மந்திரங்களால் விக்ரஹத்து நிலைக்கவைத்தல்,
தனியாசான் நிலைப்பாடு.
சிவமடை நவமூர்த்திகள் உவந்தேற்ற மந்திரத்தால்
சிறப்புற்று அருள்புரிவர் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
விசேஷசந்தி ; நாள்தோறும் குடமுழுக்கில் புனிதப்பணி ஆற்றும்
ஆசார்யப்பெருமக்கள் காலைமாலை சந்தியாவந்தனம் செய்வதுபோல
இந்நாட்களில் சிறப்பான ஒரு சந்தியையும் செய்யவேண்டும்.
முப்பத்தாறு தத்துவங்களை, அவைகளின் அதிபதிகளை மறையோதி
அழைத்து அவர்களுக்காக அரிசிகலந்த நீரால் அர்க்யம் விடவேண்டும்.
அத்துடன் மறைந்த குலமூதாதையர்களுக்கும் கையால் நீரெடுத்து
மந்திரத்துடன் வார்க்கவேண்டும்.
பூதசுத்தி ; மனிதவுடல் அசுத்தங்களாலும், ஐம்பூதங்களாலும் , தூய்மை
அற்றதாக மாற்றப்படுகிறது; அவ்வசுத்தங்களை ஆசார்யர்கள் மனத்தால்
மந்திரத்தால் மாசுநீக்கி, நிர்மலத்துடன் குடமுழுக்குப் பூசைகளை
ஆற்றவே பூதசுத்தி என்ற முறை கடைபிடிக்கப்படுகிறது.நதிக்கரையில்,
அல்லது குளக்கரையில் அமர்ந்துகொண்ட ஆசார்யர்கள் அன்றாட
அனுஷ்டானங்களை முடித்தபிறகு மந்திரங்கள் கூறும் சடங்கினை
மனமுவந்து விதிப்படி ஆற்றி, பூத உடலைத் தெய்வநிலையில் மாற்றி
அமைத்துக்கொள்ளல் .
ஸ்பர்சாகுதி ; யாகசாலை பூசனைகள் வேள்விகள் எல்லாக்காலங்களிலும்
முடிந்தபின் இவ்வேள்வி செய்யப்படவேண்டும். கும்பங்களில் நிறைந்துள்ள
முப்பத்தாறு தத்துவங்களைக் கோயிலின் உள்ளே அமர்ந்துள்ள
விக்கிரஹத்தில் நிலைநிறுத்த மந்திரங்களால் செய்யப்படும் வேள்வி,
பூசனைகளே ஸ்பர்சாகுதி .
இந்தநிகழ்வால் விக்கிரஹங்கள் தெய்வசாந்நித்யம் பெற்றுச் சிவமாய்,
சிவஉருவாய் நின்று உலகிற்கு அருள்புரிவர் .
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே ! தவத்திற்கே தவமானவனே!
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல் ..78.
8.8. அஷ்டபந்தனம் , யாகசாலை,குண்டங்கள்,காலங்கள்.
அஷ்டபந்தனம் எண்பொருட்கள் கொம்பரக்கு, சுக்கான்தூள் ,
செம்பஞ்சு, கற்காவி,
தேன்மெழுகு, மகிடவெண்ணெய் , குங்கிலியம், சாதிலிங்கம்.
சேர்த்தரைத்து விக்கிரகம் ,
ஞானபீடம் இணைந்திடவே இணைத்துச் சார்த்தல் .
யாகசாலை குடமுழுக்கு
ஞானவேள்வி வாமதேவர் வந்துதங்கி, மோனமந்த்ரம்
முழுவேள்வி மூழ்குசாலை.
ஒன்றைந்து , ஒன்பது முப்பத்து மூன்றாகும்
இன்றைந்து குண்டங்களே .
பன்னிரண்டு நான்காறென இரண்டும் இருந்தபோதில்
ஆறுகாலமே அமைதியாகும்.
பன்னிரண்டு கரத்தானே பதியான பரம்பொருள்
கண்மூன்றான் காத்திட்ட .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
அஷ்டபந்தனம் ; எட்டுப்பொருட்களால் இணைத்துவைத்தல். சுவாமி
விக்கிரஹத்தையும், சுவாமி பீடத்தையும் ஒன்றுசேர்த்துப் பிரியாமல் ஒட்டி
வைக்கச்செய்யும் முறையே அட்டபந்தனம் ஆகும். எட்டுப்பொருட்கள்
கொம்பரக்கு,சுக்கான் தூள் ,செம்பஞ்சு, கற்காவி,தேன்மெழுகு,
எருமைமாட்டின் பாலில் எடுத்த வெண்ணெய்,குங்கிலியம், சாதிலிங்கம்
ஆகியன.
யாகசாலை; குடமுழுக்கிற்கான வேள்விகள், யாககுண்டங்கள், குடங்கள்
வைத்துப்பூசனை செய்யும் வேதிகைகள் ஆகியவற்றை த் தூய்மையான
முறையில் அமைத்து, அனைத்து வேள்விகளும், பூசைகளும் செய்யும் இடம்.
குண்டங்கள்; யாகசாலைக்குள் வேள்வி செய்வதற்கான குண்டங்கள்
அமைக்கப்பெறும். ஒன்று, ஐந்து, அல்லது ஒன்பது, அல்லது முப்பத்துமூன்று
குண்டங்கள் அமைக்கலாம் என ஆகம நூல்கள் கூறுகின்றன;
பெரும்பாலும் ஐந்து குண்டங்கள் அமைப்பதே பெருவழக்கமாக உள்ளது.
விநாயகருக்கு, ஐந்துகோண குண்டமும், முருகனுக்கு ஆறுகோண குண்டமும்,
சிவபெருமானுக்கு வட்டவடிவக் குண்டமும், அம்மனுக்கு யோனி குண்டமும்,
ஏனைய பரிவார தேவதைகளுக்கு சதுரக்குண்டமும் அமைக்கவேண்டும்.
காலங்கள் ; குடமுழுக்கிற்கான காலங்கள் அதாவது எத்தனை காலம்
பூசை செய்தபின் குடமுழுக்கு எனில்? இரண்டுகாலம், நான்கு காலம்,
ஆறுகாலம், பன்னிரண்டு காலம் என வகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும்
ஆறுகாலங்களே வழக்கத்தில் உள்ளது.
பன்னிரண்டு கரம்கொண்டு விளங்கும் முருகனையே ஆசானாகக்
கொண்ட சிவபெருமானான பரம்பொருள் முக்கண்ணன் காத்தருளும்,
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே! சுவாமி
மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..79.
8..9. வேதிகார்ச்சனை,அக்நிகார்யம், த்ரவ்யாகுதி ,பூர்ணாகுதி.
வேதிகார்ச்சனை வேதிகைக் கலசங்களில் முழுமுதல்வர்,
பதிபோற்றும் பிற தேவர்கள்,
வேதிவாயில் ஆதவன்பிறர் பூசித்தும், ஆவரண
சோதிபூசை செவ்வணாற்றுதல்.
அக்நிகார்யம் அக்கினியை உருவாக்கி, அதிபதிகளாம்
முக்கண்முதல் மூத்தோர்க்கும்,
அக்கினியில் நெய்யாகுதி ஆகம,மறை அருஞ்சொல்லால்
அருவேள்வி ஆற்றுதலே .
திரவியங்கள் ஆகுதி தொண்ணூற்று ஆறுவகை
திகழ்மறையினில் தீயிலிடுக.
பூர்ணாகுதி நிறைவுற்ற ஆகுதியாய் பூக்கனி நெய்
மாரளவு உயர்த்திய
நவசிருக்கால் நான்மறைகள் நன்கோதி நடுத்தீயில்.
நமசிவாய எனவிடுக்க.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
வேதிகார்ச்சனை ; யாகசாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள மேடையை
வேதிகை என்போம். அவ்வேதிகையில் உள்ள கடங்கள்,கலசங்கள்
ஆகியவற்றில் ஆவாஹனம் செய்யப்பட முழுமுதல்வனாம் சிவனை,
தேவியைப் பிற தேவர்களை ஆகம முறைப்படிப் பூசனை செய்வதே
வேதிகார்ச்சனை எனப்படும். வாயிலில் த்வாரபூசை" என்பதையும், பிறகு
ஆவரண பூசை என்பதையும் செய்தல் முறையாகும்.
அக்நிகார்யம்; யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள குண்டங்களில்
விதிமுறைப்படி அக்கினியை. நெருப்பை வரவழைத்து, அதனைப்பூசை
செய்தும், பொறி,நெல்,முதலியவை தூவியும், நெய்யினால் ஆகுதி வார்த்தல்
செய்தல் முறை; அதன்பின் முறையே மறையோதி இறைவர்களை அழைத்து,
அவர்களுக்கு உண்டான சமித்து,ஹவிஸ், போன்றவற்றால் அவர்களை
மகிழ்வித்து மேலும் மேலும் பலருக்கும் இவ்வாறு செய்வதே அக்நிகார்யம்
எனப்படும்.
த்ரவ்யாகுதி ; வேள்வியில் பற்பல தானியங்கள், பழங்கள் அன்னம், வடை
போன்றவற்றைப் போடுதல் மரபு; அத்தோடு வேள்விக்கான
தொண்ணூற்றாறு பயறு, உளுந்து போன்ற பொருட்களை நெய்யோடு
சேர்த்து, நெருப்பில் ஹோமம் செய்தலே த்ரவ்யாகுதி ஆகும்.
பூர்ணாகுதி ; வேள்விச்சடங்கின் முழுமை பெற்று விளங்குவது
பூர்ணாகுதி ஆகும். இதுவே எல்லோராலும் விரும்பி வணங்கப்படுவது.
ஆசார்யன் ஸ்ருக் ,ஸ்ரவம் என்ற இரண்டு வேள்விக்கரண்டியால் ஆகுதி
செய்வார்; இப்பொழுது, அந்த ஸ்ரவத்தின் மேல் பட்டுத்துணிக்குள் தேங்காய்,
பழம்,வெற்றிலை,பாக்கு, பூ. இவைகளை வைத்துப் பிடித்துக்கொண்டு,
அதன்மேல் ஸ்ரவ த்தை வைத்து, மார்புவரை தூக்கியபடி மந்திரங்கள்
முழங்க எம்பெருமானை நினைந்து போற்றியபடியே அக்கினியில்
போடுதல் பூர்ணாகுதி எனப்படும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்நிற்பவன் ! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே தவமானவனே!
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..80.
8.10.கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம், மஹாபிஷேகம்,மண்டலாபிஷேகம்.
கடம்புறப்படல் பூர்ணாகுதி முடிந்ததும் புறப்படும்
கடவூர்வலம் சாதகன் தலை
கடத்தைச் சும்மாட்டின் மேலிருத்தி, ஆசார்யர்
கடம்முன் முறைவருவார்.
குடமுழுக்கு குறையிலாக் கோயிலில் குறைவராத
குடமுழுக்கு குணவாசான்
கடநீரைக் கோபுரக் கலசத்தில் ஊற்றுவார்;
கறைக்கண்டன் தாள்வாழ்க.
மகாபிஷேகம் மற்றைய தெய்வங்கள் அபிஷேகம்
முடிந்தவுடன் முக்கண்ணன்
மகாபிஷேகம் காண்பான்; மலர்மாலை பட்டாடை
மகேசனுக்கு மா பூசை.
சிவகும்பம் சீருற்ற நாற்பத்து எட்டுநாள்வரை
சிவாபிஷேகம் மண்டலம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கடப்புறப்பாடு யாகசாலையில் பூர்ணாகுதி முடிந்ததும்,
ஏனையபூசனைகளை முடித்த ஆசார்யர் தன து சாதகரிடம்
கடத்தைத் தலையால் தாங்கி எடுத்துச்செல்ல உத்திரவிட்டதும்
மேள வாத்யம் ஒலிக்க, முன்வந்த சாதகர் தனது தலையில் சும்மாடு
போன்று சிரோ வஸ்திரத்தை வைத்துக்கொள்கிறார். எல்லோரும்
இதைப்போலவே தாயாராக ஒவொருவரும் தலைமீது புண்ணிய நீருடைய
குடத்தைச் சுமந்து நின்றதும், கூடவே ஆசார்யரும் தர்ப்பை
முஷ்டியுடன் தொடர்ந்து செல்ல, மல்லாரி நாதஸ்வரம் கிடுகிடுக்க,க்
கடங்கள் பிரதக்ஷிணமாய் அந்தந்த சன்னதிமுன் சென்றடைந்தன.
வழியில் தீபாராதனை,தேங்காய் சதுர் விடல் போனவை நடந்தன.
கும்பாபிஷேகம் ; கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும்,
கோயில் விமானங்களுக்கும் கடங்கள் சென்றடைந்ததும், அங்குள்ள
அந்தந்த ஆசார்யர்கள் பிம்பத்திற்கும் , விமானத்திற்கும் பூசை செய்து,
நல்லநேரத்தில் புண்ணியமறைத்தன்மை உடைய கடங்களின் புனித
நீரை அபிஷேகம் செய்தனர். வானிலே கருடன் வட்டமிட்டது;
மற்றும் ஏனைய பூசைகளைச் செய்தனர். தீபாராதனை செய்தனர்.
மஹாபிஷேகம் குடமுழுக்கு முடிந்ததும் எல்லாவித பூசைகளும்
முடிந்தபின்னர் இறைவனுக்கு மஹாபிஷேகம் செய்வார். அனைத்து
அபிஷேகப்பொருட்களும் பால்,இளநீர், தேன் போன்றவைகளும்
கொண்ட திரவியங்களால் மஹாந்யாசம் என்ற மந்திரம் சொல்லி,
மஹாபிஷேகம் செய்து, அலங்கரித்து தீபாராதனை காட்டுவர்.
மண்டலாபிஷேகம் ; கும்பிபாபிஷேகம் முடிந்து நாற்பத்து எட்டு
நாட்கள் கும்பாபிஷேகம் கண்ட மூர்த்திகளுக்கு தொடர்ந்து, தவறாமல்
அபிஷேகம்,பூசை,அலங்காரம், போன்றபல நிகழ்வுகளைச் செய்வார்கள்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தாவமானவனே !
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல் ..81
9.. உத்ஸவம்.
9.1. த்வஜஸ்தம்பம் ; கொடிமரம்.
இறைமுருகன் இணையில்லா உத்சவத்தில் ஓங்குமுதல்
இசைபாடும் கொடிபறக்கும்,
நிறைக்கம்பம் நித்திலமாம். மறைமுதல்வன் விமானவுயரம்,
நிலையோங்கு கலைப்பால்மரம்;
அரைநூறு ஆண்டுதாண்டி முழுநூறு தாண்டாமல்
அருவிளைச்சல் வலிமைமரம்;
உரைக்கவசம் தங்கவெள்ளி பஞ்சலோகம் இழைத்திடலாம் ;
உயரழகு உயர்வுதரும்;
மண்டபநடு சுற்றுவழி முன்நடு சுவாமிநோக்கு
கண்கூர்நடு கொடித்தடம்.
தண்டநெடுபோல் தானுயர்ந்து, தலைமூன்று அழகுநீண்டு
திருநீற்று நிலைகாட்டும் ;
நவத்தாமரை இதழ்விரிந்த நலுங்குக்கால் நலமணிகள்,
நற்பீட நயம்கூட்டும்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
கோயில்களில் நடைபெறும் திருவிழா வடமொழியில் உத்ஸவம் எனக்
கூறப்படும். அவ்விழாவில் முதனிலை பெறுவது கொடிமரமே . சிவமுருகன்
திருநாளில் சிறப்புறும் கொடிமரம்பற்றிப் பார்ப்போம்.
அழியாப்புகழுற்ற கோயில் கொடிமரம் கோயிலின் நடுநாயகமாக
விளங்கும் சுவாமி விமானத்தின் அளவு உயர்ந்து இருக்கும். பாலூறும்
பச்சை மரத்திலேயே கொடிமரத்தை உருவாக்குவார்.
ஐமபது ஆண்டுகள் வாழ்ந்த மரம், அதுவே நூறாண்டுகள் தாண்டாத
வயதுடைய மரம் மரத்திலேயே கொடிமரம் உருவாக்குவார்; நல்ல
விளைச்சலும், வலிமையும் கொண்டிருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட மரத்தை இழைத்து, நீள அகல அளவு பார்த்து அழகு
வேலைப்பாடு கூட்டியபின், அம்மரத்திற்குத் தங்கத்தினாலோ,
வெள்ளியினாலோ ,பஞ்சலோகத்தினாலோ கவசம் பூட்டுவர். அழகுமிளிர
அமைத்தல் நல்லது.
இக்கொடி மரத்தின் நிலையான இடம் கோயிலுக்குள்
மகாமண்டபத்தின் இருந்து வெளியே செல்லும் வழியில் நடுவில்
பிரகாரம் தொடங்கி முடியும் நடுவில், சுவாமியின் நேர்பார்வைக் கோட்டின்
நடுவில் அமைக்கப்படவேண்டும்.
பழனியாண்டவர் தண்டம்போல் நெடிதுயர்ந்து, ஓங்கிவிளங்கும்
கொடிமரம். அதன் தலையில் திருநீற்றுப்பட்டைபோல் குறுக்கு வட்டத்தில்
மூன்று சிறுகரம் நீட்டிக்கொண்டிருக்கும். மூன்றும் இணைந்து மணிகள்
கட்டப்பட்டு அழகுற ஒளியும்.ஒலியும் கலந்து காட்சிதரும்.
கொடிமரத்துப்பாதம் பீடம் கவிழ்த்த தாமரைமலர்போல் காணப்படும்.
ஆங்காங்கு மணிகளாகிய வேலைப்பாடு மிகுந்திருக்கும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி
மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..82.
9..2. கொடிச்சீலை .
கொடிமரத்து உச்சியில் கொடிப்பட்டை வரையுயர்ந்து
கொடியடிதொடும் நிலைமுறுக்கிடும்
கொடிச்சீலை ஐந்துமுழம் கொண்டும், அதிகமாய்ப்
பதினான்கும் கொண்டதாகும்.
வெண்மைநிறம் துணிவண்ணம்; நன்னகலம் ஏழுமுழம்;
வெண்கொடியிடை இருகுச்சிகள்
வண்ணவூர்தி வரையுமிடம் வகையாக விடவேண்டும்.
வாரணம்தான் வரைவேரகம்.
வெண்மையுடன் செஞ்சிவப்பு, மஞ்சள்நிறம் வரைகயானை ;
நன்மைதரும் இருவிளக்கு,
வெண்சாமரம், வெற்றிக்குடை, பூர்ணகும்பம் திரிசூலம்
மண்வளம்பெற வரைந்திடுக.
தவக்கூர்ச்சம் திண்கயிறு, நவமாலை நன்கிணைத்து
சிவமுருகன் கொடிபறக்க.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கொடிமரத்தில் தொடுக்கப்படும் துணி வெண்மை நிறத்தே அமைய
வேண்டும்.வானளாவிய கொடிமரத்தில் கட்டப்படும் கொடியானது,மேலே
உச்சிப்பட்டை வரை சென்று, அங்கே உள்ள வளையங்களில்
மாட்டிக்கொண்டு, பின் தாழ்வரை வரை வரும். அந்த அளவு அது
கொடிமரத்தைச் சுற்றிக்கொண்டு விளங்கும்,
அதன் நீளம் பதினான்கு முழம் ஆகும்; ஐந்துமுழச்சுற்றளவில் பரந்துபட்ட
அகலமும்நீளமும் கொண்டது;
வெள்ளைநிறத்தைக் கொண்ட அக்கொடிச்சீலை,ஏழுமுழ அகலம்
கொண்டது; அதன் நடுப்பகுதியில் மேலும் கீழும் நிறைய இடம்விட்டு
இரு குச்சிகள் விரித்துக்கட்டப் பட்டிருக்கும். அதற்குள் வண்ணச்சித்திரம்
எழுத அது பயன்படும்.
அந்த இடத்தில் அக்கொடி யாருக்காக ஏற்றப்படப்போகிறதோ அவரின்
வாகனத்தை அங்கு வரைவார்கள்;சிவபெருமான் எனில் காளைமாட்டினை
வரைவார். ஆனதால் அதுவும் சுவாமிமலை ஆதலின் இந்திரன் அளித்த
வெள்ளைவாரணம் வரையப்படும்.
கொடிச்சித்திரத்தில் வெண்மை,சிவப்பு,மஞ்சள் போன்ற நிறங்களையே
பயன்படுத்துவர்.அவ்வண்ணத்திலே இங்கு யானை வரையப்பட்டுள்ளது.
அத்துடன் இருபக்கங்களிலும் இரண்டு விளக்குகள் வரைவார்.
இன்னும், வெண்சாமரம், குடை, பூர்ணகும்பம், திரிசூலம் போன்றவற்றை
உலகு நலம்பெற வரைவார்கள்.
கொடிமரத்தில் கொடிச்சீலையோடு மாவிலை, தர்ப்பைப்புல்கூர்ச்சம்,
மலர்மாலை இவைகளையும் வலிமை மிக்க கயிற்றால் நன்கு கட்டி,
மரத்தைச்சுற்றிக் கீழிலிருந்து மேல்வரை அமைப்பார்கள். சிவமுருகன்
கொடி சுவாமிமலையில் பறக்குது பாரீர்!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..83.
9..3. உத்சவ வகைகள் .
சைவம், சாத்விகம் , பார்த்திவம், பவனம் ,
தைவிகம் , பைத்ரம் ,
கௌமாரம் சாவித்ரம், சாந்த்ரம், புக்தி,
சௌரம், சாவரம்.
பன்னிரண்டு உத்சவ வகைகளைக் காமிகாகமும்,
யோகஜமும் கூறுகின்றன.
பதினெட்டு உத்சவக் கிரியைகளைக் காமிகம்,
வ்ருஷயாகம் , த்வஜாரோஹணம்,
ப்ரஹத்தாளம் , அங்குரம், யாகசாலை, அஸ்த்ரயாகம்,
பலிதானம் , தானக்ரமம்,
பரிவேஷம், நீராஜநம், கௌதுகம், தீர்த்தசங்க்ரஹம் ,
சூர்ணோத்ஸவம், தீர்த்தகம்,
அவரோகணம், ஸ்நபனம், விவாஹம், பக்தோத்ஸவம்.
வீரதந்த்ரம் இருபதாக்கும் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
உத்சவத் திருவிழா நாட்களைக் கணக்கில் கொண்டு, காமிகாகமம்
ஒருநாள் திருவிழாவை, சைவம்" மூன்றுநாள் விழாவை சாத்விகம் "
ஐந்துநாள் விழாவை, பார்த்திவம்" ஏழுநாள் விழாவை, பவனம்"
ஒன்பதுநாள் விழாவை, தைவிகம்" பன்னிரண்டுநாள் விழாவை,பைத்ரம் "
பதின்மூன்றுநாள் விழாவை,கௌமாரம்" பதினைந்துநாள் விழாவை,
சாவித்ரம்" பதினேழுநாள் விழாவை,சாந்த்ரம்" இருபத்தொருநாள் விழாவை
சௌரம்" இருபத்தொன்றிற்கு மேற்பட்ட நாள் விழாக்களை ,சாவரம் "
என்றும் கூறுகின்றன. பெரும்பாலும் நமது திருக்கோயில் களில்
பத்து நாட்களே உத்சவம் நடைபெறுகிறது.
காமிகாகமம் உத்சவநாட்களில் நடக்கும் செயல்களை
"அஷ்டாதசக்கிரியைகள்" என, பதினெட்டாக வகுக்கின்றன.
வீரதந்த்ரம்" என்னும் ஆகமம் இதனை இருபதாக வகுக்கிறது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..84.
9..4. உத்சவ நாட்களில் வாகனங்கள் .
சிவபெருமான் முதல்நாள் காலையில் அரங்கம்;
மாலையில் சிங்கம்;
சிவசூர்யர் சூர்யப்ரபை சந்த்ரப்ரபை ; மூன்றாம்நாள்
பூத,அன்ன வாகனங்கள்;
நான்காம்நாள் நாகம், விருடபம் ; ஐந்தாம்நாள்
பல்லக்கு, கயிலைமலை ;
ஆறாம்நாள் பல்லக்கு, யானை; ஏழாம்நாள்
காலைரதம் கற்பகத்தரு;
எட்டாம்நாள் பல்லக்கு, குதிரைவில் பார்வேட்டை;
புருஷாம்ருகம் பல்லக்கு.
ஒன்பதுநாள் உத்சவத்தில் ஓங்கிய வாகனங்கள்;
தொன்மைமிகு நல்வரிசை.
சிவவிழாவில் சித்தரிக்கும் சிவவாகனம் மாறுபடும்;
சிரம்தாழ்த்தி ஏற்றிடுவோம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
சிவன்கோயில் ஒன்பதுநாள் உத்சவத்தில் ஒவ்வொருநாளும்
சோமாஸ்கந்தருக்கு அமைக்கப்படும் வாகனங்களின் பட்டியல்;
நாள் காலை மாலை
முதல் அரங்கப்பல்லக்கு சிங்கம்
இரண்டு சூர்யப்பிரபை சந்திரப்பிரபை
மூன்று பூதவாகனம் அன்னப்பறவை
நான்கு நாகப்பாம்பு விருஷபம்
ஐந்து பல்லக்கு இராவணன் எடுத்த கயிலைமலை
ஆறு பல்லக்கு யானை
ஏழு இரதம் (தேர்) கற்பகத்தரு
எட்டு பல்லக்கு வேட்டைக்கோலக் குதிரை
ஒன்பது புருஷாம்ருகம் பல்லக்கு
ஒன்பதுநாள் திருவிழாவின் வாகனமுறைகள் வேறுபட்டும்,
மாறியும் இருக்கலாம். அவைகளை நாம் மதித்து ஏற்றிடுவோம்.
சிவஞானத்தால் விளங்குபவனே! மௌனத்தில்முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்தவன்! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..85.
9..5..சக்தி உத்சவ வாகனங்கள் .
உத்சவர் வீரசக்தி ; உத்சவம் பதினொருநாள் ;
முதல்நாள் பத்ரபீடம்;
குதிரை காலை; மாலையோ பச்சைக்கிளி;
கட்டில்,புஷ் பப்பிரபை;
நதிமகரம் பீமவாகனம் ; கல்யாணம், விருஷபம்;
சூர்ணோத்ஸவம், யானை;
தேர்,மயில்; பல்லக்கு, விமானரங்கம்; ஒன்பது,
நாகம், சிங்கம் ;
பத்ரபீடம், அன்னவாகனம்; தீர்த்தவாரி, அவரோஹணம் ;
ஆசார்யச் சண்டபூசை.
கத்தூரிப் பொட்டுவைத்து , முத்துமாலை, செம்பட்டு,
புதணிவித்துப் பூசாத்துக.
சிவனைப்போல் நவசக்தி தேவிக்கும் நல்லுத்சவம் ;
சிவாகமம் செப்புகிறது.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
கோயில்களில் வீரசக்தியே உற்சவமூர்த்தியாக விளங்குவார்; அதனால்
அவ்வீர சக்திக்கே உத்சவம் கொண்டாடப்படும். பதினோரு நாட்கள்
தேவியின் திருவிழா கொண்டாடப்படும். விழா நாட்களில் வாகனங்கள்;
நாள் காலை மாலை
முதல் பத்ரபீடம் பத்ரபீடம்.
இரண்டு குதிரை கிளி
மூன்று கட்டில் புஷ்பப்பிரபை
நான்கு முதலை பீமவாகனம்
ஐந்து கல்யாணம் விருஷபம்
ஆறு சூர்ணோத்ஸவம் யானை
ஏழு தேர் மயில்
எட்டு பல்லக்கு விமானரங்கம்
ஒன்பது நாகம் சிங்கம்
பத்து பத்ரபீடம் அன்னப்பறவை
பதினொன்று
தீர்த்தவாரி அவரோகணம் .
இவ்வாறு சிவனைப்போலவே தேவிக்கும் உத்சவங்களைச்
சிவாகமம் செப்புகிறது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசம் செய்வித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..86.
9..6.. முருகனின் உத்சவ வாகனங்கள்.
குமார தந்திரம் குமரனுக்குக் கூறுகின்ற
குலவாகனப் பட்டியல் .
அமர்ந்திடப் பத்ரபீடம்; அன்னவாகனம் மாலை;
அருஞ்சேவல் ஆடு;
சூர்யப்ரபை மாமயில்; நாகம் சந்த்ரப்ரபை;
சேர்மகரம் சென்னகப்புலி ;
சூர்யன்தொடாப் பல்லக்கு, யானை; இரதத்தேர் ;
புருஷாம்ருகம் குதிரை;
பல்லக்கு சிங்கம்; கட்டில் , இராவணன்;
தீர்த்தவாரி சக்தியூடல் ;
நல்லவல்ல வாகனங்கள் நாளுநாளும் சுமக்குதம்மா!
நல்லாகமச் சான்றுதானே!
சிவகுகனும் சிவனைப்போல் சீர்கொண்ட திருவிழா;
தவம்செய்தோம் வணங்குதற்கே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
குமாரதந்திரம், என்ற ஆகமநூல் முருகனுக்கான உத்சவநாட்களின்
வாகனப்பட்டியலை முறைப்படுத்தித் தந்துள்ளது.
நாள் காலை மாலை
முதல்நாள் பத்ரபீடம் அன்னவாகனம்
இரண்டு கோழி ஆடு
மூன்று சூர்யப்பிரபை மயில்
நான்கு நாகம் சந்திரப்பிரபை
ஐந்து மகரம் புலி
ஆறு மூடுபல்லக்கு யானை
ஏழு தேர்
எட்டு புருஷாமிருகம் வேட்டைக்குதிரை
ஒன்பது எடுப்புப்பல்லக்கு சிங்கம்
பத்து கட்டில் இராவணன்
பதினொன்று தீர்த்தவாரி சக்தியூடல்.
இவ்வாறு பட்டியலிடப்பட்ட முறையில் உத்சவம் நடைபெற்றது.
சிவபெருமானைப்போலவே சிவகுகனும் சீர்மையான வாகனங்களில்
திருவிழாவில் காட்சி அளித்தார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..87.
9..7. சுவாமிமலைத் திருவிழா வாகனங்கள் .
தொன்மைத் திருவேரகம் ஒன்பது திருவிழா;
ஒன்பதிலும் ஒருமூன்று,
தொன்மை வழிவந்த தூய பிரும்மோற்சவம்;
முதன்மையோ சித்திரைவிழா.
முதல்நாள் கொடியேற்றம்; பாங்குடனே படிச்சட்டம்.
பல்லக்கு; இடும்பவாகனம்;
முதுசட்டம், பூதவாகனம்; பல்லக்கு, ஆட்டுக்கிடா;
பல்லக்கு, ஐங்கடவுளர்,
மும்மயில் , மூஞ்சூறு , இளங்காளை , எழிலழகு;
பல்லக்கு, கஜவாகனம் ;
பல்லக்கு, காமதேனு; தாழிவெண்ணை , வெண்குதிரை;
திருத்தேர் திருத்தரிசனம் ;
சிவசபாபதி சிவகாமி மணிவாசகர், திருவூடல்;
பல்லக்கு அவரோகணம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
பழமை வாய்ந்த சுவாமிமலைக் கோயிலில் ஆண்டுதோறும் ஒன்பது
திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த ஒன்பது உத்சவங்களிலும்
மூன்று பிரும்மோற்சவங்களாக நடைபெறுகின்றன; அம்மூன்றிலும்
முதன்மை பெற்றது சித்திரைப்பெருவிழாவாகும்.
நாள் காலை மாலை
முதல் கொடியேற்றம் ;
படிச்சட்டம்
இரண்டு பல்லக்கு இடும்பவாகனம்
மூன்று படிச்சட்டம் பூதவாகனம்
நான்கு பல்லக்கு ஆட்டுக்கிடா
ஐந்து பல்லக்கு பஞ்சமூர்த்திகள் (இன்றொருநாள் மட்டும்)
விநாயகர்....மூஞ்சூறு ; சிவன்...மயில்,
அன்னை...மயில்; முருகன்...மயில்
சண்டிகேசர்...இளங்காளை .
ஆறு பல்லக்கு யானை
ஏழு பல்லக்கு காமதேனு
எட்டு வெண்ணைத்தாழி வெள்ளிக்குதிரை
ஒன்பது திருத்தேர்
பத்து அருள்மிகு பாகுலேய சபாபதி சுப்பிரமணியர்.(நடராஜர்)
சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் திருவூடல்.
மாலை....பல்லக்கு . அவரோகணம்.
திருவிழா நாட்களில் முருகன் மட்டுமே திருவீதியுலா .
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த
ஞானகுருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..88.
9..8.சுவாமிமலையில் பிற உத்சவங்கள்.
திருக்கார்த்திகைத் தீபநாள் திருவிழா பத்துநாள்;
திருப்பூசம் தைத்திங்கள்,
திருவிழாவும், பத்துநாள் பாங்குறவே நடக்கிறது;
திருக்கொடி ஏற்றாமல்.
கந்தசஷ்டி பவித்ரோத்சவம், திருவாதிரை விசாகம்,
முத்துமுறை நடக்கின்றது;
கந்தவள்ளிக் கல்யாணமும் பங்குனி உத்திரத்தில்,
கண்களிக்க நடக்கின்றது;
தமிழாண்டின் முதல்நாளில் ஆங்கிலாண்டு முதல்நாளில்
திருப்படிவிழா சிறப்புவிழா;
அமிழ்தமாம் முருகனை அருந்தங்கத் தேரினிலே
அழைத்துவரும் அன்பர்விழா ;
சிவகார்த்திகை வரும்திங்கள் சிவமாகும் கார்த்திகேயன்
சீருடைவிழா ஊரறிந்ததே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
கார்திகைத் திங்களில் தீபக்கார்த்திகைத் திருவிழா பத்துநாட்கள்
மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது போலவே தைமாதம் பூசத்
திருநாளும் உத்சவமாகக் கொண்டாடப்படுகிறது; பத்துநாட்களும்,
பல்லக்கு, வாகனங்கள் சுவாமி புறப்பட்டு வீதிஉலா வருதல், என மிகச்
சிறப்பாக நடைபெறும்.
துவாஜாரோஹணம் கொடியேற்றம் இல்லாமல் கந்த சஷ்டி,
பவித்ரோத்சவம், திருவாதிரை, விசாகம் போன்ற நாட்களில் திருவிழாக்கள்
நடைபெறுகின்றன.
பங்குனி உத்திரத்தில் வள்ளிக்கல்யாணத்துடன் திருவிழா
கொண்டாடப் படுகிறது.
தமிழ் வருடப்பிறப்பன்று படிவிழா , ஆங்கிலப்புத்தாண்டு முதல்நாள்
படிவிழா பண்ணோடும்,இசையோடும் நடத்தப்படுகிறது.
விரும்பும் அன்பர்கள் பணம் கட்டித் தங்கத்தேரை இழுத்துவரும்
விழாவும் தொடர்ந்து நடைபெறும்.
மாதம் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று, சுவாமிநாதக்
கடவுளுக்கு இம்மாவட்டமல்ல, மாகாணமே கூடிக் கொண்டாடுவர்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்தவன்! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..89.
9.9. உலா நாட்களில் உடன்வரும் உயர்நிலைகள்.
அருள்கூட்டும் திருமுகத்துடன் பெருமாட்டி உடன்வரவே,
அடியவர்கள் ஆறுதல்பெற,
அருங்கரத்தால் ஆறுமுகன் அபயத்தான் ஆகின்றான்;
விழாப்பயண வீதிகளில்
மறைகற்றோர் மாமறையை ஓதியபடி உடன்வருவர்;
கறைக்கண்டன் முறைப்பண்ணை,
நிறைமனத்தார் நின்றுபாடி, இசைமழையைப் பொழிவார்கள்;
நெடுங்கரத்தில் நாதஸ்வரம்
மல்லாரி, காம்போதி, மனமுருக வாசித்து
நள்ளிரவைக் களியூட்டுவர் ;
வில்லாளன் வீரவேலன் வியன்பவனிச் சாலையிலே,
விண்ணதிர வேட்டுசத்தம்
தவத்தோர்கள் கண்டுபோற்றும் சிவஜ்வாலை போன்றுதோன்றி
நலவீதி ஜொலிக்குதம்மா !
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே //////////1
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
அருளைப்பொழிகின்ற திருமுகத்துடன் வள்ளிநாயகி உடன் வர .
அம்மையையும் அப்பனையும் கண்டதால் அடியவர்கள் ஆறுதல் பெற்று,
அகமகிழ,ஆறுமுகநாதர் வீதிகளில் விழாப்பயணம் மேற்கொண்டார்.
அந்த ஊர்வலத்தில் இறைவனைப் பின்தொடர்ந்து, வேதம் ஓதுகின்ற
அந்தணர்களும், திருமுறை பாடுகின்ற ஓதுவாமூர்த்திகளும் இறைவனைப்
போற்றியபடியே வந்தனர்.
இறைவனுக்கு முன்னால் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் மேளதாளம்
தொடர, மனம் நிறைந்த இராகங்களைப் பாடியபடியே சென்றனர்;
வீரம் நிறைந்த வேலேந்திய முருகன் போகும் வீதிகளில் விண்ணதிர
வெடிகள் வெடிக்கும் ஒலி காதைப்பிளந்தது; வண்ண வண்ண
மத்தாப்புகள் நல்லொளியை உருவாக்கின;
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..90.
9..10. தீர்த்தவாரி, விடையாற்றி.
பத்தாம்நாள் பக்தர்தம் பரிவிற்குப் பரமனருள்
முத்தியளி தீர்த்தவாரி;
சத்திசகிதம் சண்முகர் காவிரிக்கரை சேர்ந்திடுவார்;
அத்ரதேவர் அருகமர்வார் ;
தூபதீபம் தூயசூலம் தாங்குசாதகர் தூயநீர்க்
காவிரிக்குள் மூழ்குவார்;
சாபநீக்கம் சாரடியார் சண்முகன் வணங்குவார்.
சண்முகனே விடையாற்று.
ஆலயத்துள் ஆன்றகொடி அவரோஹணம் ஆசார்யரைச்
செல்வத்தால் சிறப்புசெய்க.
ஆலயத்துள் ஆறுமுகரை அவரிடத்தில் அமர்விக்க;
ஆறிருதடந் தோள்வாழ்க.
சிவாகம முறைதழுவிச் சிவகுகப் பிர்மோத்சவம்
சிவானந்தம் அளித்திடுமே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
உற்சவத்தின் பத்தாம் நாள் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும்
வண்ணம் தீர்த்தவாரி" கொண்டாடப்படும். நல்ல புண்ணிய நீர்நிலைக்குச்
சென்ற இறைவன் தனது சார்பாக அத்திரத்தேவரை நீரில் மூழ்கவைத்து,
அடியவர்களின் பாவத்தை வினையை நீக்குவார்.
அவ்வழியில் ஆறுமுகக்கடவுள் சுவாமிமலையில் மனைவியருடன்
காவிரிக்கரைக்கு எழுந்தருளித் தீர்த்தவாரி நடத்துவதைக்காணலாம்.
அத்திரத்தேவருடன் எழுந்தருளிய சண்முகருக்கும், அச்சூலத்திற்கும்
பூசனைகள் நடைபெறும். அச்சூலத்தைத் தன்கையில் பிடித்தபடிச்
சாதகர் காவிரிநீரில் இறங்குவார்; மந்திரங்கள் முழங்க
அத்திரத்தேவரைக் காவிரி நீருக்குள் மூழ்கவைப்பார். அடியவர் எல்லோரும்
தாங்களும் நீரில் மூழ்குவார்கள்; இதுவே தீர்த்தவாரி.
தங்களது வினைகளை நீக்கிய முருகனை அடியவர்கள்
வணங்கிப்போற்றுவார்கள். ஆறுமுகனுக்குப் பிரியா விடையும் நல்குவர்.
அதன்பிறகு வீதிவலம் வந்த சண்முகர் ஆலயத்துட்சென்று ,
கொடிமரத்தில் ஏற்றியிருந்த கொடியை மந்திரங்கள் முழங்க
அவரோகணம் செய்வார்; கொடியிறக்கப்படும்.
இந்த பத்துநாள் உற்சவத்தை முறைப்படி நடத்திக்கொடுத்த
ஆசார்யருக்கு, மாலைபோட்டும், சால்வை போட்டும், செல்வங்கள்
வழங்கியும் சிறப்பு செய்ய வேண்டும்.
அதன்பிறகு எம்பெருமானை அவருடைய நிலையான இடத்தில்
யதாஸ்தானம்" அமர்த்தவேண்டும். ஆறுமுகன் தாள் வாழ்க.
சிவாகமம் சொல்லியபடி, முருகனுக்கு இவ்வுத்ஸவத்தைச் செய்த
அனைவருக்கும் சிவானந்தம் சித்திக்கும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கிற் தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..91.
10.. சுவாமிமலை போற்றும் பாடல்களின் பெருஞ்சிறப்பு .
10..1..அருணகிரியார் பாடற்சிறப்பு .
சந்தக்கவி சண்முகக்கவி செந்தமிழ்ச் சொல்லாற்றல்
கந்தனையே போற்றும்கவி;
பந்தமெலாம் விட்டுவிட்டுப் பற்றறுத்துப் பற்றிக்கொள்
கந்தன்கழல் சொந்தமாக்கி,
விந்தைமிகு நந்தவனச் செந்தாழம் பூவெடுத்து,
முத்துநாற்றம் முடங்கிடவே,
பந்தமுற்ற பரமனுக்கே படைத்திட்ட பைஞ்சொற்கவி
பரிந்தளித்த திருப்புகழ்,
"துவாதச புயாசல ! ஷடானன! வரா!சிவ
சுதா!எயினர் மான்அன்புறு,
துவாதச! சுராதிபதி மாலயனும் சலாமிடு
சுவாமிமலை வாழும்,
பெருமாளே!" எனப்போற்றும் பைந்தமிழ்ப் பாடலாலே
பெறற்கரிய பேறுற்றார்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
சந்தம் பாடுவதில் வல்லமை பெற்ற கவிஞர்; சண்முகனையே பாடும்,
புலவர்; தனது ஆற்றல்மிக்க தமிழெல்லாம் கந்தன் புகழைப்படுத்தற்கே
என வாழ்ந்த கவிஞர் அருணகிரியார்.
பந்த பாசங்களை எல்லாம் விட்டுவிட்டு பற்றுக்களை அறுத்துவிட்டுக்
கந்தன் சேவடியையே பற்றாகக் கொண்டவர் , நிறைந்த மலர்களால்
வியப்பூட்டும் நந்தவனச்சோலையிலே நறுமணமும்,அழகும் கொண்ட
தாழை மலர்களாகிய கவிதைகளைத் தன்னுடைய கடந்தகால
தீச்செயல்கள் தீவினைகள், நீங்கிடவே உறவு கொண்ட முருகனுக்கே
திருப்புகழ்" என்னும் பெயரோடு அவன் கால்களில் சமர்ப்பித்தவர்
அருணகிரியார் ஆவார்.
அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களிலே ஒன்று சுவாமிமலை
முருகனைப்போற்றுகிறது; அழகை,ஆழ்ந்த பொருள் நுணுக்கத்தைப்
பாருங்கள்.
"பன்னிரண்டு கரத்தானே ! ஆறுமுகத்தானே! வரங்களை அருள்பவனே !
சிவபெருமானின் மகனே! எயினர் குலத்திலே அவதரித்த வள்ளி மானை
விரும்பி மணந்த பன்னிரண்டு வகையான பேரியல் வாழ்வு கொண்டவனே!
இந்திரனும், திருமாலும், பிரமனும், கால்களை விழுந்து, எழுந்து "சலாம்"
இடும் வணக்கத்திற்கு உரியவனே ! சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமானே ! என்று பைந்தமிழ்ப் பாடல் பாடிப் பேற்றினைப் பெற்றார்
அருணகிரி.
சிவஞானமாய் விளங்குபவனே! கோணத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமானவனே!
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..92.
10.2..ஞான சற்குரு நாதா!" எனப்போற்றும் அருணகிரியார்.
மூச்செல்லாம் முருகனாக, முத்திவழி முதுகவிஞர்,
முத்தர்புகழ் தம்பிரானே!
அச்சமிலாப் பெருவாழ்வு அளித்திடும் ஆறுமுகனை,
அருள்சுரக்கப் பாடிடுவார்.
"கறைபடும் உடம்பிராதெனக் கருதுதலொழி வாயுவைக்
கருமவசனங் களால்மறித்து
அனலூதிக் கவலைபடு கின்றயோக கற்பனை
மருவுசிந்தனை போய்விடக்
கலகமிடும் அஞ்சுவேரறச் செயல்மாளக் குறைவற
நிறைந்தமோன நிர்க்குணமது
பொருந்தி வீடுறக் குருமலை விளங்குஞான
சற்குரு நாதா!" எனச்
சிவகுகனைச் சிந்தையுள் சித்திக்கும் சிவமாகச்
சித்தரிக்கும் சித்தரவர் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
திருவாய் திறப்பின் தித்திக்கும் சொல் முருகனே" என்ற நிலையில்
முத்திவழி காட்டியருளும் அருணகிரியார் "முத்தர் புகழ் தம்பிரானே!
என்றே முருகனை அழைக்கிறார்.
மனதில் தோன்றும் அச்சங்களைப் போக்கி, அமுதப்பெறுவாழ்வு
நல்கும் ஆறுமுகனைத் திருவேரகத்தில் வீற்றிருக்கும் ஞான முதல்வனை
எப்படிப்போற்றுகிறார் பாருங்கள்!
கறைகள் நிறைந்து விளங்கும் இப்பூதஉடல் இனித்தங்காது ,என்று
நினைந்து வருந்துதல் நீக்குக; நமது உயிராகிய மூச்சுக்காற்றை, விதி,
கர்மபலன்" என்றெல்லாம் பேசி, நிறுத்தஇயலுமோ? ஆயினும் முயன்று,
மூச்சுக்கனலை ஊதி,ஊதிக் கவலைப்படுகின்ற நிலையில்,
யோகத்தின் கற்பனை நினைவுச்சிந்தனைகள் எல்லாம் போய்விடக்
கலங்கும், ஐந்துபூதங்களும் வேறு வேறாய்ச்செயல் படவும்,
மௌனமாகிய அழியாத பெருங்குணம் பழைமைகளை மாற்றி,
சிவத்தோடு பொருந்தி முத்தி என்னும் பேரின்ப வீட்டை அளித்திடும்
ஞானகுருவாகி நின்ற குருமலையில் விளங்குகின்ற ஞானமே!
சற்குருநாதனே! என்று பிறப்பினால் உழலும் ஆன்மாக்களைத்
தன்வயப்படுத்தும் ஞானகுருவின் கருணையைப் போற்றுகிறார்.
சிவகுகனைச் சிவமாகவும், சித்தராகவும், சித்தரிக்கும் சிந்தனை
கொண்டவர் அருணகிரியார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே/1 உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..93.
10.3. கந்தபுராணமே விந்தைப்பாடல் .
தோன்றல் திருவாடல் அழித்தல் அருளல்
தோன்றலின் ஆன்றவழி;
தோன்றிய புராணத்தின் ஊன்றிய திருப்புகழ்
ஈன்றிடுமே ஈசன்புகழ்.
"சேவேறு மீசர் கற்றஞான போதபுத்தி
சீராகவே உரைத்த,"
"தேரார்கள் நாடுசுட்ட சூரார்கள் மாளவெட்டு"
" தீராகு காகுறத்தி
மணவாளா!" "காவேரி நேர்வடக்கிலே வாவி,பூ
'மணத்த, காவார்
சுவாமிவெற்பின் முருகோனே!" அவதாரம், உபதேசம்.
சூரனழிவு , வாரணத்துணை.
சிவமலைச் சீர்மை, செந்தமிழ்க் கிரியார்
சிவமாக்கிய செம்பாடல்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய சுதர்மாமுருகன்,
அவதரித்து, விளையாடி, அரக்கர்களை அழித்து, அருளும் காட்டிய
பெருமைகள் உடையவர்.
அவரது தோற்றத்தை விரிவாக விளக்கும் கந்தபுராணப்பாடல்களில்
ஆழ்ந்த அனுபவம் கொண்ட அருணகிரியார் ஆங்காங்கு
அதேமாண்புகளைப் பயன்படுத்துகிறார்.
சிவபெருமான் மகனான முருகனிடம் பிரணவோபதேசம் பெற்றதை
முறையாகப் பாடிய அவர்,
விண்ணவர்களைக் கொடுமைப்படுத்தி, அவர்தம் நாட்டையும்
கைப்பற்றி,அவர்களையும் சிறையிலிட்ட சூரன் தலைமையிலான அரக்கர்
கூட்டத்தை அழித்தவர், என்றும், பின் அவர்களுக்கு அருள்புரிந்தவர் எனவும்
போற்றுகிறார்.
அத்துடன் வள்ளிமலைத் தினைப்புனத்தில் அவதரித்த வள்ளியம்மையை
மணந்திட முருகன் போட்ட வேதங்களை எல்லாம் விவரித்துக்கூறுகிறார்.
உபதேசம், சூரனழிவு, வள்ளிமணம், போன்றவைகளை நன்கு பாடி,
அப்படிப்பட்ட முருகன் வீற்றிருக்கும் சுவாமிமலை" எனவும் இப்பதியைப்
பாடுகிறார்.
சிவமாக விளங்கும் சுவாமிமலையைச் சிவத்தன்மை கூட்டிய
அருணகிரியார் திருப்புகழையும் சிவமாகியவர் ஆவார்.
சிவஞானமாய் விளங்குபவனே! கோணத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய் விளங்குபவனே!
தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..94.
10.4. குறத்தி மணவாளன் .
குன்றிருக்கும் இடமெல்லாம் நின்றிருக்கும் பொன்முருகன்,
குன்றில்வாழ் குறத்திக்கு
மன்றல்மணம் தென்றல்சுகம் நன்றளிநலம் ஒன்றுகிறார் ,
வண்டமிழார் அருணகிரி.
"குறமகள்தனை மணமருள்வோ னே ! என்றழை கருத்திலும்,
"குறமக ளாணைமின்
மருவிய பூரணகுரு கிரிமேவிய பெருமாளே!"
அருளிய பாட்டிலும்,
"குறத்திக்கு ஏற்றவேரகப் பொருப்பில் பூத்த
பெருமாளே!" பெரும்சான்று;
"அற்புத வேடமுதச் சொருபத்த குறத்தி
மணம்கொள் வோனே!"
"கானாளும் எயினர்தன் சாதிவளர் குறமானொடு
மகிழ்கருத்தன் " மகிழ்சான்று.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
குன்று இருக்கும் இடமெல்லாம் வீற்றிருக்கும் திருமுருகன்
அக்குன்றத்தில் காலம் காலமாக வாழும் குறை இனப்பெண்ணான
வள்ளி மாதேவியை மணம்புணர்ந்த திருக்காட்சியை அருணகிரியார்
ஆங்காங்கு அருமையுடன் பாடுகிறார். சுவாமிமலைத் திருப்புகழில்
குறமகளுக்குத் தன் மனைவியாகும் பாக்கியத்தை அளித்தவன்
என்று போற்றுகிறார்.
குறமகளின் ஆணைப்படி, அவளை மணந்து, அவளோடு
சுவாமிமலை வந்தருளிய முருகனே! என்று புரிகிறார்.
மலையிலே தோன்றிய வள்ளி மலருக்கு ஏரக மலையிலே
வாழ்வளித்த வள்ளலே! என்றும் பாடுகிறார்.
வேடர் குலத்திலே அவதரித்த அமுதமாகிய நற்குண நாயகியை
குறத்தியை மணம் கொண்டவனே! என்றும்,
காட்டை ஆள்கின்ற எயினர் குலத்தில் வளர்ந்த குற மானோடு
ஆடிப்பாடி,விளையாடி மகிழ்ந்த மனத்தை உடையவன்"என்றும்
பாடுகிறார்.
சிவஞானத்தில் உயர்ந்தவனே ! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்தில் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..95.
10.5.தந்தைக்கே உபதேசித்த ஞானகுரு .
சுவாமிமலை சுவாமியாகிய சிவனார்க்கே சுவாமியான
சுப்பிரமணி யர்வாழ்மலை;
சுவாமிமலைத் தத்துவத்தை அருணகிரி மிகவிரிவாய் ,
சுருக்குள்ளொளி மணிச்சுடராய் ,
"ஓமெழுத்தில் அன்புமிக வூறி , ஓவியத்தில்
அந்தம் அருள்வாயே" !
சோமேசர், " சேவேறு மீசர் சுட்டமா
ஞானபோத புத்தி,
சீராகவே உரைத்த " சிவோபதேசம் பாடுகிறார்.
"சிவனார் தமக்குரிய
உபதேச வித்தையருள் திருவேரகம் வருபெருமாள்"
உயர்த்துகிறார் நயந்தபடி .
சிவத் "தாதை கற்கவினவ ஓதுவித்த பெருமாளே!"
சிவோபதேசம் சீர்மையாம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
சுவாமிமலையில் அருள்புரியும் முருகக்கடவுள் மூவேழ் உலகிற்கும்
மூத்தவரான சிவபிரானுக்கே பிரணவத்தை உபதேசித்த ஞானகுரு ஆவார்;
சுவாமிமலைத் தத்துவத்தை அருணகிரியார் முடிச்சுபோன்ற
குடுவைக்குள் நின்று உலகெலாம் ஒளி பரப்பும் நவரத்தின மணிபோல,
விளக்கமாகவும், சூக்ஷ்மமாகவும் திருப்புகழில் பாடுகிறார்.
ஓம் என்ற பிரணவத்தின் உள்ளார்ந்த பொருளாக விளங்கி, அதனோடு
இரண்டறக்கலந்து, ஓவியமாய் விளங்குகின்ற முருகா! நீ மந்திரத்தின்
முதலும் முடிவும் ஆகின்றாய்! என்று பாராட்டுகிறார்.
சோமாஸ்கந்தர் காளை வாகனர் ஆகிய சிவனார் விரும்பி,
வேண்டிக்கேட்டபொழுது, ஞானபோதத்தை அவருக்கு நன்கு உபதேசித்தார்.
என்றும் பாடுகிறார்.
சிவபெருமான், பிரணவ உபதேசம் கேட்டிடக் கயிலையில் இருந்து
திருவேரகமாம் இங்கு வந்து, தனயனிடம் ஓங்கார உபதேசம் பெறுகிறார்.
எனவும் முருகனைப்போற்றுகிறார்.
சிவமாகிய தந்தை தனக்கு பிரணவத்தை உபதேசம் செய்வாய்! என
வணங்கிக்கேட்பத் தந்தைக்கே உபதேசித்த பெருமாளே! எனவும்
போற்றுகிறார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமி மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..96.
10.6. இயற்கை வருணனையில் அருணகிரி.
மனமகிழ்வு மருதநிலம்; மலைவளத்து மாகாவிரி;
மாங்கனிகள்; மலர்க்கூட்டம்;
மனமெல்லாம் மாமுருகன்; நனிகவிதை நன்னடனம் ;
"குருகினோடு நாரையன்றில் ,
இரைகளது நாடிடங்கள் குதிகொளிள வாளைகண்டு
குரைகடல்களே அதிர்ந்துவரு,
குருமலை", "ஏலம் இலவங்கம், நாகவகுளம்,
படப்பை பூகமருதம் ,
தழைத்த யாவுமலை கொண்டுகைத்த காவிரி
புறம்புசுற்றும் ஏரகம்
அமர்ந்தபச்சை மயில் வீரா!" " சூதமகிழ் பாலைகொன்றை ,
சோலைதுன்றி சூழுமதில்
தாவிமஞ்சி தோரணநன் மாடமெங்கும் நீடுகொடி
சுவாமிமலை" என்பார்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
அருணகிரியார் சுவாமி மலையைக்கண்டார்; மருதநிலத்து மணமிகு
காட்சிகள்'மலைவளத்தை அள்ளிக்கொணரும் காவிரி; மாமரவனங்கள் ;
மலர்களின் கூட்டங்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக மாமுருகனின்
நல்லருள்; எழுந்தது கவிதை; இயற்கை வளத்தோடு ........
அந்தக்கடற்கரையில் நாரை,குரு கு ,அன்றில் 1ஆகிய பறவைகள்
தங்களது மேய்ச்சல் களமாகிய கடல் நற்பகுதியில் நின்று
கொண்டிருந்தன; அந்நேரம் வாளை மீன்கள் மிக்க மகிழ்வோடு குதித்துக்
கொண்டு கடலையே கலக்கிக்கொண்டு வருவதைக்கண்ட பறவைகள்
மகிழ்வோடு அவைகளை எதிர்கொண்டன" அப்படிப்பட்ட வளம் நிறைந்த
மலைத்தளம் குருகுமலை ஆகும்.
மற்றோர் இடத்தில் ஏலக்காய், இலவங்கம்,நாகமரம், வகுளம், படப்பை,
பாக்கு, இவைகளால் மருதநிலத்தைத் தழைக்க, மலைநிலத்திலிருந்து
நீரிலே சுமந்துகொண்டு வந்து விளங்கும் காவிரியாறு சுற்றிவரும் நிலப்
பறப்பைக் கொண்டு விளங்குகின்ற திருவேரகத்தில் இதனைப்
பசுமைகளுக்கும் தாயகமான பசுமையைக் கொண்ட மயில் மீது
அமர்ந்த முருகனே! என்கிறார்.
மற்றொரு பாடலில் மாமரங்களும், பாலை, கொன்றை மரங்களும்
சூழ்ந்த சோலையிலே தோன்றிய காற்று, மரங்கள் மீது வீசியபின்,
உயர்ந்த கோட்டைச்சுவர்களின் மீது வீசி, அப்படியே மென்மேலும் சென்று,
மேகங்களால் சூழப்பெற்ற உயர் மாடங்களையும், அங்கு கட்டப்பட்டுள்ள
தோரணங்களையும் தழுவி, அம்மாடங்களில் கட்டப்பட்டுள்ள
வானைத்தொடும் உயர் கொடிகளையும் பறக்கச்செய்தன" என்கிறார்.
இப்படிப்போற்றப் பெற்ற முருகனே!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உயதேசித்த ஞான குருவே!
சுவாமி மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..97.
10.7. சூரனை வென்றவா ! அருளியவா !
அவதார நோக்கமே அரக்கரழி அருளாகும்;
அருளாக்கிய அருணகிரியார்.
தவறாகிய "சூரனைக் கடிந்த கதிர்வேலா!"
தவவழித்தடத் தானவனவன் .
" சூர்முதிர் கிரௌஞ்சவெற்பும், வேலைநிலமும், பகைத்த ,
சூரனுடலும், தணித்தபெருமாள்"
"மாமரம் ஒத்துவரிக் குள்நெருக்கிய சூரனை,
வெட்டி, நிணக்குவியல்
கொடிவாரணம் மெச்சளித்த அயிற்குக!" என்றும்,
"குலைபடு சூரனங்கம்
அழிபட வேலெறிந்த குமர !" என்றும்,
வெற்றிகுகன் போற்றுகிறார்.
சிவவாணை "சூர்கிரி கொளுத்திக் கூற்றுரிடும்
வேலா!" வென்றவா !
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
முருகனின் அவதார நோக்கமே சூரன் முதலிய அரக்கரை அழித்து,
ஆட்கொண்டு அருள்காட்டுதலே ஆகும். அதன்படி அருணகிரியார்
தமது திருப்புகழில் அழித்தலும், அருளாலும் காட்டுகிறார்.
தவறான வழியில் செல்லும் சூரனைக் கடிந்து, நல்வழி காட்டி,
உபதேசித்த பின்னரும் தகாதன செய்தக்கால் அழித்த வேலை உடையவர்"
என்கிறார்.
அரக்கத்தனம் மிகுந்த கிரௌஞ்ச மலையும் ,கடல்சூழ்ந்த பட்டினமும்,
கொண்டதால் வென்றிடுவோம் என்ற மமதை கொண்ட சூரனின்
உடலும்,உள்ளமும் தணிவித்து, நல்வழி காட்டிய பெருமாளே!
என்றழைக்கிறார்.
பேருயர் நிலை காட்டியும் மாறாத சூரன், கடல்நடுவே கொடுமை
தாங்கிய மாமரமாய் நின்று, அலைக்கழித்து, அமரர்களை அச்சுறுத்திய
சூரனை, வெட்டி,வீழ்த்தி அவனது பிணக்குவியலைத் தனது கொடியாகிய
கோழிக்கும் அதன்கூட்டத்திற்கும் அளித்த வேல்கொண்டவனே! என்று
அழைக்கிறார்.
சூரன் அங்கங்கள் அழிந்துபட ,வேலெறிந்து வினை தீர்த்த குமரனே!
என அழைக்கிறார் கிரியார். வெற்றிபெற்றமுருகனின் வெற்றியைப்
பாராட்டுகிறார்.
தந்தையான சிவனின் ஆணையைத் தலைமேற்கொண்டு சூரனோடு
போரிட்டு,அவனது மலைகளையும் நாடு நகரங்களையும் கொளுத்தி
அழித்த வேற்படை உடையவனே! என்றும் போற்றுகிறார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
நிற்பவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..98.
10..8. திரு எழுகூற்றிருக்கை ;அருணகிரியார்.
சித்திரக்கவி தேர்க்கட்டு இரதபந்தம் என்பரிதனை;
ஒன்றிலிருந் தேழுவரை ,
சித்திரமாய்க் குறைந்தும், கூடியும் நயம்காட்டும்.
முத்தமிழ்க்கவி முதுபடைப்பு ;
"ஒருவகைத் தோற்றத்தில் இருமரபு எய்தியமை;
ஒன்றாய் ஒன்றியமை;
இருவரில் தோன்றி மூவா தாயினை;
நான்முகன் குடுமி
இமைப்பினில் பெயர்த்து, மூவரும் போந்து,
இருதாள் வேண்ட,
ஒருசிறை விடுத்தனை" ; "நான்மறை உணர்த்தும்,
முக்கட் சுடரினை,
இருவினை மருந்துக்கு ஒருகுரு ஆயினை;
ஏரகத்து எழுசுடரே !
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே 1
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
யாப்பு என்னும் வகையில் "சித்திரக்கவி" என்று புலவர்களால்
போற்றப்படும் பாடல் முறை இது. இதனை "இரத பந்தம் " என்றும் சொல்வர்;
தேர்போன்று தோற்றம் குறைந்தும், விரிந்தும் காணப்படுவது;
ஒன்று,இரண்டு , மூன்று என வளர்ந்தும், மூன்று,இரண்டு ,ஒன்று எனக்
குறைந்தும், சீர்கள் அமைவது சித்திரக்கவி என்பர். அப்படிப்பட்ட
கவிதையைப் படைக்கிறார் அருணகிரியார்.
தவநிலையில் மனம் கொண்ட சிவபெருமானின் நெற்றிச்சுடரில்
தோன்றி, அம்மையப்பன் இருவருக்கும் மகனாகி, சக்தி,சிவம் என்ற
இரண்டும் ஒன்றாகி, மும்மையறத்தே நின்ற முருகன்.
நான்கு முகமுற்ற பிரமதேவன் பிரணவப் பொருள் அறியாததால்
தலையில் குட்டிச் சிறையிலடைத்திட, அரி,அயன், சிவன் மூவரும் சேர்ந்து
முருகனின் இருதாள் பணிந்து வேண்டிட, முருகனும் சிறையிலிருந்து
பிரமனை விட்டான்.
உலகுக்கெல்லாம் நான்மறை உணர்த்தும் தட்சிணா மூர்த்தியாகிய
சிவபெருமானே ஓங்காரப்பொருள் தெரியாது, பணிந்து வேண்ட, அவரைச்
சீடனாக ஏற்றுக்கொண்டு அவருக்கே குருவான சுவாமிநாதன் முருகன்
ஆவான்.
திருவேரகத்தில் வீற்றருளும் ஏழு சுடர்போன்றவனே! எழுந்தருளும்
சுடரே!
சிவஞானமாய் விளங்கும் சுடரே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..99.
10. 9. நக்கீரரது ஆற்றுப்படை .
கடைச்சங்கத் தலைவர், படையாற்றுப் பெரும்புலவர்;
சடையனையே நிலைகுலைத்தவர்;
அடைக்கலமாய் ஆறுமுகன் அடிக்கமலம் போற்றிடவே
ஆற்றுப்படை அருளியவர்.
ஆறுமுகத்தின் அரும்படை வீடுபாடிய பேறுற்றதால்,
" ஏரகத்து, உறைதலும்"
உரியன்குகன் என்றும், புரிநூல் திருவந்தணர்
உயரிய கொள்கையினை,
"அறுநான்கு இரட்டி , இளமை நல்யாண்டு,
அறன்னவில் கொள்கை"
"ஆறெழுத்து வடக்கிய அருமறைக் கேள்வி,நா
வியல்மருங்கின் நவிலப்
பாடி" அருந்தமிழ் ஆன்றதன்மைப் பண்புற்ற
ஆசார்யன் போற்றுகின்றார்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் தலைமைப்புலவராக விளங்கியவர்;
சங்கநூல்களில் எல்லாம் பாடல்கள் பாடியவர்; முருகன்மீது
"திருமுருகாற்றுப்படை" பாடியவர்; நெற்றிக்கண்ணைத் திறப்பினும்
குற்றம் குற்றமே" எனப் புலவராக வந்த சிவபெருமானையே நிலை
குலையச்செய்தவர்' ; அதிலிருந்து விடுபட முருகன்மீது ஆற்றுப்படை
பாடியவர்.
ஆறுபடை வீட்டினிலே திருவேரகத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
"ஏரகத்து உரைதலும் உரியன அதான்று" எனப்பாடியுள்ளார்.
அங்கு வாழும் அந்தணர்குலப்பெருமக்கள் மறையோதி, முறைப்படி
வாழ்பவர்; என்றும், முருகனைப்போற்றுபவர்கள் என்றும் கூறுகிறார்.
இருபத்துநான்கு வயதினைப் பெற்றும் இளமையோடு திகழும்
அவர்கள், அறம் நவில்கின்ற முறையோடு வாழைப்பவர்" என்றும்.
ஆறெழுத்தை சரவணபவ என்னும் திருமந்திரத்தை ஓதுபவர்கள் என்றும் ,
முருகன் மீது அவர்கள் கொண்ட பக்தி மேம்பாட்டை உரைக்கிறார்
முருகனை நாள்தோறும் பூசனைகள் செய்யும் சிவாசார்யர்களே அவர்கள்,
என்றும் கூறுகிறார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கின்ற சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..100.
10.10. சுவாமிமலை போற்றும் நூல்களும், புலவர்களும்.
நவரத்தின மாலை, தியாகராஜர்; சுப்பராயர்
நான்மணி மாலை;
சைவவீர வேலையர் யமக வந்தாதியும்,
திருவேரக மாலையும்.
சுவாமிமலைப் பிள்ளைத்தமிழ் நடேசக் கவுண்டர்.
வெண்பா வந்தாதி,
திருவேரக முருகப் பெருமான் பதிகம்,
திருவேரக வெற்புரை ,
திருவேரகப் படைவீட்டுப் பதிகம், திருப்புகழ் ,
தனிவெண்பா, தந்தருளினார்,
வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்.
வழிநடைச் சிந்தொருநூல் .
உ.வே.சாவின், முருகன் பாமாலை. வடமொழித்
தோத்திரக் கதம்பம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே 1
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
சுவாமிமலையைப் போற்றிப் பலசான்றோர்கள் பாடியுள்ளனர்.
நூலின் பெயர், புதியவரின் பெயர் போன்றவற்றைப்பார்ப்போம்.
1. திருவேரக நவரத்தினமாலை ..பாடியவர்..கடுக்கண் தியாகராஜ தேசிகர் .
2. திருவேரக நான்மணிமாலை.....பாடியவர்..சுப்பராய பிள்ளை.
3 .. திருவேரகயமக அந்தாதி.. பாடியவர்..கபிஸ்தலம் வேலையர் .
4.. திருவேரக மாலை.. கபிஸ்தலம் வேலையர்.
5. சுவாமிமலைப் பிள்ளைத்தமிழ் ...நடேசக்கவுண்டர்.
6..வண்ணச்சரபம்; தண்டபாணி சுவாமிகள். இயற்றிய நூல்கள்.
வெண்பா அந்தாதி, திருவேரக முருகப்பெருமான் பதிகம், திருவேரக
வெற்புரை ,திருவேரகப் படைவீட்டுப்பதிகம், திருப்புகழ், தனிவெண்பா.
7..வழிநடைச்சிந்து ..ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
8. திருவேரக முருகன் பாமாலை. உ.வே.சாமிநாத அய்யர்.
9. திருவேரகச் சண்முகர் மாலை. உ.வே.சா
10. வடமொழியில் , ஸ்ரீ.சுவாமிநாத புஜங்கம், ஸ்ரீ. சுவாமிநாத பஞ்சரத்னம்,
ஸ்ரீ.சுவாமிநாத கராவலம்ப ஸ்தோத்ரம் , ஸ்ரீ.சுவாமிநாத சுப்ரபாதம் ஆகியன.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..31.
4.. சிவ உபதேச சீர்வரலாறு .
4. 1. பிரமன் கயிலை வருதல்.
வெள்ளியங்கிரி சொல்பொருள்முதல் நல்லுமைதொடர், வல்லவன்பதி
விழைந்தனர் வினைபுகழ்ச்சுரர்.
புள்ளவிழ்சிறை மல்லுலகிடை தொல்மயில்துணை, வேலுடைகுகன்
உளமுறுமலை வந்தடைந்தனன்;
விளையாடல் கலையாகவே விநாயகனுடன் விரிமலைதனில் ;
வெள்ளமுதென அமர்ந்திருந்தான்.
தலைத்திருமகன் தனைப்பணிந்திடத் தவமுனிவர், திருமாலுடன்
தலைநான்கும் தனித்தனிவர,
வந்துற்றோர் வாயில்முனை வரக்கடவுள் வடிவேலவன்
வணங்கியபின் உள்நுழைந்தனர்.
கந்தமுகம் காணாது, வந்தனைகள் புரியாது,
நிந்தனைபோல் நுழைநான்முகன்;
சிவமறைகள் சிறந்தோதும் தவத்தலைவன் தானென்ற
அவக்கர்வ நான்முகனே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
வெள்ளிமலை எனப்பெயர் பெற்ற கயிலைமலை . சொல்லும்,
பொருளுமாய் விளங்கும் முதற்கடவுள், உமையம்மையுடன் அமர்ந்திருக்கும்
வல்லவன் தலைநகரை, வினைகளால் புகழுற்ற விண் தேவர்கள் வந்து
போற்றிடக் குழுமினர்.
இந்த நல்ல உலகத்தை நன்கு காண , விரித்த சிறகினை உடைய
தொன்மை வாய்ந்த மயில் மீது அமர்ந்து பறந்த முருகன், அப்படியே
தனது தந்தையின் தவமலையாகிய கயிலைக்கு வந்துசேர்ந்தான் .
விளையாடலையே கலையாகக் கொண்ட முருகன், தனது அண்ணன்
விநாயகருடன், மலைவாயிலில் வெண்மைமிக்க அமுதம்போல்
அமர்ந்திருந்தான்.
அந்நேரம் மூவேழ் உலகிற்கும் மூத்தவனான சிவபெருமானை
வணங்கிப்போற்றிட முனிவர்களும், திருமாலும், பிரமனும், ஆங்காங்கு
தனித்தனியே வந்து கூடினர்.
வந்தவர்கள் அனைவரும் எம்பெருமானை வணங்க உள்நுழையும்
பொழுது, வாயிலில் அமர்ந்திருந்த வரங்களை அருளும் வடிவேலனைக்
கண்டு,தொழுதபின்னரே உள்ளே சென்றனர்.
வாயிலில் அமர்ந்திருந்த கந்தப்பெருமானைக் காணாமலும்,
வணங்காமலும், போற்றாமலும் , நிந்தனை செய்கின்ற மனநோக்குடன்
நான்முகன் உள் நுழைய முற்பட்டான்.
சிவனால் உபதேசிக்கப்பட்ட மறைகள் அனைத்தையும் அறிந்தவன்;
தவத்தினால் அனைத்தும் கற்றவன்; என்ற கர்வம் ஆணவம் அவனைத்
துரத்த அன்புற்ற குழந்தையைக் காணாது சென்றான்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞான குருவாய் உபதேசித்த ஞான
குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..32.
4..2. பிரமனை முருகன் வினவல் .
நலமருளும் நல்லோனை, நனிவணக்கம் கூறாது,
நான்முகன் நகர்ந்துசெல்ல,
மலமோக மாண்புடையீர்! சிலபோது இங்குவாரீர்!
பலம்பெற்றுப் பின்செல்லலாம்;
அழைத்ததுவோ அருங்குழந்தை ; ஆனாலும் அழைத்தவரின்
விழைநோக்கம் அறிந்திடவே,
பிழைத்ததென் ? அழைத்தீரே, மழைக்கருணை மாமுருகன்
விழைகின்ற விரைவு ஏனோ ?
ஏற்றமுடையீர்! போற்றுதொழில் சாற்றிடுக! நேற்றின்றுநாள்
போற்றிடும் படைப்பென்தொழில் ;
ஆற்றூற்று வேற்றுநீராய் ஆற்றுகின்ற பணியதனில்
மூத்தமறை முதிர்ப்பீரோ?
சிவனவன் கருணையினால் சிலைமறைகள் அறிந்துள்ளேன்;
சிவமறையே கருவூலம்;
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
கயிலைமலையில் சிவபிரானை வணங்கிப்போற்றவந்த நான்முகன்
வாயிலில் அமர்ந்திருந்த முருகனை வணங்கிப் போற்றாது, உள்நுழைய
முனைந்தான்; ஆணவமலத்துச் சிக்கிய பிரமனை அருகு அழைத்தார்
முருகன்.
தன்னை அழைத்ததுவோ சிறு குழந்தை; ஆனாலும் அழைத்தவரின்
நோக்கத்தை உணர, அவரருகே சென்றான் நான்முகன்.
ஐயன்மீர்! நான் என்ன தவறு செய்துவிட்டேன்? எதற்காக என்னை
அழைத்தீர்? என வினவியதும், மேகம்போன்ற கருணை கொண்ட
மாமுருகன், இவ்வளவு விரைவாக எங்கு செல்கிறீர்கள்?
பெருமைமிக்க பெரியோரே ! தாங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
என்றும் கேட்டான்.
இறந்தகாலம்,நிகழ் காலம், எதிர்காலம் எனப்படும் முக்காலத்திலும்
சிறப்புமிக்கதாகிய படைப்புத்தொழில் புரிகிறேன். என்கிறார் பிரமன்.
ஆற்றுநீர், ஊற்றுநீர் ,வேற்றுநீர் எனப்படும் மாறுபட்ட முக்காலத்திலும்
இத்தொழில் புரியும் தாங்கள் ஆற்றுகின்ற படைப்புத் தொழிலின்
முதலாக நான்மறைகளைப் பயன்படுத்துவீர்களோ? என்று வினவினான்
முருகன்.
எல்லாம்வல்ல சிவனார் கருணையினால் அருளிய
ஆகமவேதநூல்களின் சிறுசிலவற்றை அறிந்துள்ள நான் சிவமறையையே
படைப்பின் அடித்தளமாகக் கொண்டுள்ளேன்; என்கிறார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாகி உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..33.
4..3.. பிரமனின் அறியாமை.
பரம்பொருளிடம் கற்றமறைப் பாடங்களில் ஒன்றுரைக்க'
பாலமுருகன் பரிந்துரைக்கச்
சிரம்தாழ்த்திச் சிவமந்த்ரம் சிறப்புவேதம் செப்பிடுவான்,
செம்மொழியை முன்னுரைத்தான் .
குடிலை,முன் சாற்றிக் குலமாமறை கூறமுனை
பிரம்மனைத் தடுத்து,
முடியாக மூதுரைக் குடிலையின் முதுபொருள்,
ஓங்காரத் தனிப்பொருள்
உரைத்திடுக; என்றுரைத்தான் ஓங்காரச் சண்முகன்.
உடனுரைக்க, உருவறியா ,
மறைநான்கு முகத்தானும், மதியிழந்து, தடுமாறி,
குறையறிவால் குமைந்தனன் ;
சிவனிடம் சீடனாகித் தான்பெற்ற சிவாகமம்,
சிந்தனைக்குறை மந்தமாம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
நான்முகனே ! பரம்பொருளிடம் கேட்டுணர்ந்த சிவாகம மறைப்
பாடங்களில் ஏதேனும் ஒன்றை உரைப்பாய்! என்றான் முருகன்.
தலைவணங்கித் தான்கற்ற சிறப்புமறைகளில் ஒன்றை
எடுத்துரைக்க முயன்ற நான்முகன் , வேத ஆரம்பத்தில் உரைக்கும் "ஓம்"
என்னும் செம்மொழியை உரைத்துத் தொடங்கினான்.
ஓம்காரப்பிரணவத்தின் ஒலியுரைத்துத் தொடங்கப்போன
பிரும்மதேவனைத் தடுத்தார் முருகன்.
எல்லாவற்றிற்கும் முடியாகவும், முதலாகவும், விளங்கும் குடிலையின்
தொன்மைமிக்க பொருளை, ஓங்காரத்தின் உயர் பொருளை விளக்குக;
என்றுரைத்தான் ஓம்காரச்சண்முகன். உடனெ அதன்பொருளை விளக்கவும்,
விரித்துரைக்கவும் வழியும் வகையும் அறியாது ,
மறைபோல் நான்கு முகம் கொண்ட பிரமனும், மதியிழந்தான்; மமதை
ஆட்டிப்படைக்க, நாத்தடுமாறி, அதன்பொருள் தெரியாது விழித்தான்;
வெட்கித்தலை குனிந்தான்.
சிவபிரானிடம் சீடனாகித் தான்பெற்ற ஞானம்,சிவாகமம், மறை,
போன்றவற்றை மனதுள் நிலைநிறுத்திச் சிந்தனையில்
கொணரமுற்பட்டும் ஆணவத்தால் அத்தனையும் மறந்தான்;மறைத்தது
மமதை.
சிவஞானமாய் மாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி
மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்...34.
4.. 4. பிரமனுக்குச்சிறை .
எழுத்துகட்கும், மறைகட்கும், முதலாய்,விளங் கெம்பிரான்
வழுத்திய குடிலையை,
அழுத்தமாக உரைத்தவனே திருத்தமாய் அதன்பொருள்
அறிந்திலனே; நெளிந்தனன்;
கண்ணுதலான் காட்டினாலே காணும் பெற்றியுற்றோன்
காணாது, கவிழ்ந்தான்தலை ;
கண்ணெனவுயிர்க் குடிலையின் பொன்பொருள் புரியாத ,
கசடன்நீ படைப்பவனோ?
நான்குமா முடிகளும் குலுங்கிடவே, நலமுருகன்
நறுக்கெனவே குட்டிநானரோ !
நான்குசிரமும் நடுங்கிட, நாதமகனின் நற்றாளில்
நலிந்தபடி வீழ்ந்தனன்.
சிவமகன் சீரியபாதம் உதைத்ததோடு, சினமுற்றுச்
சிறையுள்ளும் தள்ளினனே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
எழுத்து,சொல், மறை, ஆகியவற்றின் முதலாகவும், பொருளாகவும்
விளங்குகின்ற சிவபெருமான், உபதேசித்த ஓங்காரத்தை, மிக
அழுத்தமாகவும், ஆழமாகவும் உரைத்த நான்முகன் அதன் பொருளை
நன்முறையில் அறியாததால் நெளிந்தான்;
காட்டினாலன்றிக் காணா உயிர்கள்" என்ற சித்தாந்தப்படி
எம்பிரான் காட்டினாலன்றி உணராத பிரமன் பொருள் மனதுள்
தேடிதேடிக் காணாது தலை குனிந்தான்.
கண்போன்ற ஓங்காரத்தின் உட்பொருள் அறியாத நீ ஞானமில்லாக்
கசடன் ; நீயோ படைப்புத் தொழில் ஆற்றுவது? சினந்தான் முருகன்.
பிரமனது நான்கு தலைகளும் குலுங்கி நடுங்கவே நறுக்கெனத்
தலையில் குட்டினான் முருகன் .
நான்குதலைகளும் நல்லுடலும் நடுங்கிட மாமுருகன்
பாதாரவிந்தங்களில் ஒடுங்கி வீழ்ந்தான் பிரமன்.
தனது சீரிய கால்களால் பிரமனை உதைத்ததோடு அவனைச்
சிறையில் அடைக்கவும் ஆணையிட்டான் முருகன்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்தவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாகி உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி,
வணங்குகிறேன்.
பாடல்..35.
4..5. பிரமனை விடுவிக்க முயற்சி.
படைப்பென்னும் பெருந்தொழிலை, நடைப்படுத்தினான் சடையன்மகன்;
தடைதவிர்த்தது தர்மச்செயல்;
விடைதெரியா விண்ணவர்கள் விட்டுணுவுடன் துணையோடு,
விரைந்தனர் வெண்மலைதனை;
விடையவனோ விடையழைத்தான் விடுத்திடுக வேதமுதல்;
வேலவனிடம் சீலமுரை .
அடைந்தவனும், ஆறுமுக! ஆண்டாண்டு அருந்தொழிலன்
கடைச்சிறையடை கண்ணியமோ?
படைப்புத் தொழிலானைச் சிறைத்தடை விடுவிப்பாய்!
படைமுதல்வன் விடுவாணை !
கடைக்கண்ணின் அருளாளன் கடுஞ்சினமே கொண்டிட்டான்;
கர்மவினை குடிலைமுதல்;
சிவமந்த்ரம் சொல்லாதவன், விடுவிப்பா? சென்றுவிடு!
சிறைவாயில் உறைவாய் நீ.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
சிறையில் அடைக்கப்பட்ட பிரமனின் படைத்தல் தொழிலைத் தானே
மேற்கொண்டான் முருகன்;பிரம்மதேவன் இல்லாததால் உருவான தடை
முருகனால் நீக்கப்பட்டது; அறச்செயலால் தடைகளை நீக்கிவிடும்
அன்றோ!
பிரமன் சிறைப்பட்ட செய்தி அறிந்த விண்ணவர் கள் திருமால்
துணைகொண்டு அவரின் தலைமையில் சிவபெருமானைச்சந்தித்துத்
தங்கள் துயரைப் போக்கிக்கொள்ள முற்பட்டனர்; செய்தி அறிந்த சிவனார்
நந்தி தேவரை அழைத்தார்; உடனே கந்தமலை சென்று, நாம்
சொன்னதாகச்சொல்லி ப் பிரும்மதேவ னை விடுவித்துவிட்டு வா!
என்று ஆணையிட்டார்.
கந்தவெற்பை அடைந்த நந்திதேவரும், முருகா! தொன்றுதொட்டு
படைப்புத் தொழிலாற்றும் பிரும்மதேவனைச் சிறையில் அடைத் தல்
முறையாகுமா? அவரை உடனே விடுவிப்பாய்! இது சிவபெருமானின்
ஆணை " என்றார் .
தன்னை நாடி வருவோரிடம் அன்புகொண்ட மாமுருகன், இன்றோ
கடுஞ்சினம் கொண்டான்;வேதவிதி;ஓங்காரம்; குடிலை; அதன்பொருள்
தெரியாதவன் படைப்புத் தொழில் செய்வதா? அவனைச் சிறையிலிருந்து
விடுவிப்பதா? நந்திதேவ! இங்கிருந்து ஓடிவிடுங்கள்! இல்லையெனில்
விடுவிக்கச்சொன்ன உம்மையும் சிறையில் அடைத்துவிடுவேன்"
என்று சினத்தோடு கூறினான்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்தவனே ! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே! சுவாமிமலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..36.
4.6. பிரமன் விடுவிப்பு.
அஞ்சியோடித் தஞ்சமானான் அஞ்செழுத்தைச் செஞ்சிவனோ,
மஞ்சனவன் மலைசென்றான்;
மிஞ்சுசினம் மூழ்கியோன்போல் நான்முகனைச் சிறையிறுத்தல்,
அஞ்சிறைவிட நந்திவேண்ட
மறுத்திட்டாய்! மற்றதன்பின் திருத்தமுறக் கருத்துரைத்த,
எமதுசொல்லும் ஏற்கவில்லை;
கருத்தகண்டன் திருவாசகம் கந்தனைக் கலக்கிடவே,
கரம்கூப்பித் திறம்சொன்னான்;
தந்தைசொல் மிக்கமந்த்ரம் உள்ளதோ? தலையேற்றேன்;
தந்தையே! எனப்பணிந்தான்;
கந்தவெற்புச் சிறையினின்று, கறையானை விடுவித்தான்;
கந்தவேளை வணங்கிநின்ற
தவவேள்வித் தலைநான்கன் தருமவழிக் கர்மமுரை
சிவமகனின் சீர்போற்றினான் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
முருகனின் சினமொழிகளைக் கேட்டு அஞ்சிய நந்திதேவர்
சிவபெருமானின் சேவடிகளைத் தஞ்சமடைந்தார்; செய்தியறிந்த
சிவபிரான் தானே நேரில் கந்தவெற்புக்கு வந்தருளினார்.
அளவுகடந்த சினம்கொண்டவர்போல முருகனிடம் பேசலுற்றார்.
"நான்முகனைச் சிறையில் அடைத்தாய்; அதிபற்றிப் பேசவந்த
நந்தியை வெருட்டினாய்; யாம் கூறிய கருத்துகளையும் ஏற்கவில்லை;"
இது முறையா? என்றார்.
நீலகண்டனாகிய தந்தையின் வாயிலில் இருந்து வந்த சொற்களைக்
கேட்ட முருகன்,சற்றே கலங்கி, எம்பெருமானை வணங்கியபடிச்
சொன்னார்.
தந்தை சொல்லைவிட உலகில் உயர்ந்த மந்திரம் உளதோ? தங்களின்
சொற்படி நடப்பேன்; இப்பொழுதே நான்முகனைச் சிறையிலிருந்து
விடுவிக்கிறேன்"என்று சொல்லிப்பணிந்தார்.
சிறையிலிருந்து பிரமனை விடுவித்தார். விடுதலை பெற்ற நான்முகன்
கந்தவேளை வணங்கியபடி அவரின் மேன்மைகளைச் சிறப்பித்துப்
போற்றினான்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே!
சுவாமி மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..37.
4..7. உபதேசம் வேண்டும் சிவனார்.
ஐய ! உன்றன் அருமகன் செய்தவிச்செயல் என்போன்றோர்
ஆணவமலம் அகற்றிடும்;
மெய்மையே; மெய்யறிந்தேன்; செயலால்வரும் செருக்கிழந்தேன்;
மைந்தனுக்கே முதல்வணக்கம்;
என்றுரைத்தவன், ஏகியபின் ஏந்தலை அருகழைத்து,
அன்பருள் நோக்களித்து,
நன்றுகேட்ட நற்குடிலை நயப்பொருளை நன்மகனே!
நீயும்தான் அறிவாயோ?
அறிவாயெனில் அப்பொருளை அறிவிப்பாய்! அகமகிழ்வேன்;
அரியயனும் காணாச்சிவம்,
விரிவுரையை விரித்துரைக்கக் கேட்கவே, வேலவனும்
பரிபூரண குருபோன்று ,
சிவகுருவே! செம்மறையைச் சீடர்கட்குச் செவிகூறும்
செயல்பாடு சேர்ந்தொழுகுக.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
சிறையிலிருந்து வெளிவந்த நான்முகன், சிவபெருமானை வணங்கி,
இவ்வாறு சொன்னான். தலைவா! உமது மகன் எனக்களித்த
இத்தண்டனை என்போன்று ஆணவத்தால் செருக்குற்றிருக்கும்
எல்லோருக்கும் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது; எனது ஆணவம்
அகன்றது; உண்மையான இச்செயலால் நான் பேருண்மையை அறிந்தேன்;
படைப்புத்தொழில் ஆற்றுகிறேன் என்ற ஆணவம் என்னை விட்டு
அகன்றது. தங்களுக்கும்வணக்கம்; ஆயினும் தங்கள் புதல்வனுக்கே முதல்
வணக்கம்.என்றுரைத்தபின் அவன் இடம் சென்றான்.
அந்தநேரம், சிவபெருமான் தனது மகனை அருகழைத்தார்;
அவன்மீது அன்பும்,அருளும் கலந்த பார்வையை வீசினார்; முருகா! நீ
கேட்டாயே ஓங்காரப்பொருளின் அர்த்தம், அப்பொருள் நீ அறிவாயோ?
என வாஞ்சையுடன் கேட்டார்.
அறிவாய் எனில் எனக்கு அப்பொருளை அறிவிப்பாயா? அறிவித்தால்
நான் அகமகிழ்வேன்" என்றார் ; திருமாலும்,பிரமனும் பலகால் தேடியும்
காணஇயலாத சிவம் மகனிடம் இப்படிகெஞ்சிக்கேட்டது.
குடிலையின் பெரும்பொருள் அறிவிக்கக்கேட்ட தந்தையைப் பார்த்த
முருகன்,நிலைபெற்ற நித்தியமான ஞான ஆசான் போன்று இவ்வாறு
சொன்னான்.
யோகதட்சிணாமூர்த்தியே! இரகசிய மந்திரங்கள் சீடர்களுக்கு
உபதேசிக்கையில் பணிவு,மறைவு, அடக்கம் இன்னன வேண்டும்;
அவைகளுடன் அந்த முறையில் நீவிர் கேட்பீரேயானால் நானும் உமக்கு
உபதேசிக்கிறேன்" என்றான்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே! சுவாமி மலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்குருவே ! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..38..
4..8. ஞான உபதேசம்.
செம்பொருளின் சீருரைதனைச் செவிமடுத்த ஞானகுரு,
செந்தாமரைச் சேவடியைச்
செம்மண்ணில் மண்டியிட்டு, அமர்ந்தபடிச் செங்கரத்தால்
செஞ்சோதிச் சுடர்மகனை .
மலர்போல மார்புபடத் தூக்கியே மாத்தோளில்
மகிழமர்த்தித் தாழ்ந்தபடிச்
சிலைபோல வாய்பொத்திச் செவியதுவே செவ்வாயாய்ச்
சீர்குருவின் உரையேற்றார்.
ஓமென்னும் உயர்பொருள் விரித்தவன் உணர்வென்னும்
உண்மையும் உரைத்தவன்,
ஓமென்னும் குடிலை மந்திரம் உள்ளத்தால்
உணர்மறை உருவாகும்.
சிவாகமச் சிவஞான வித்தகரும் படைத்தவரும்
சிவமேதான்; சிவமேமகன்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் ..
உயர்பொருளைக் கேட்கும் முறைபற்றிய நல்லுரையைக் கேட்ட
ஞானதட்க்ஷிணாமூர்த்தி , தனது இருகால்களையும் மண்டியிட்டுக் கீழே
மண்ணில் அமர்ந்து, தனது கைகளால் சோதிப்பிழம்பாய் விளங்கும்
தனது மகனை, மலர்போல மெதுவாகத்தூக்கி, குழந்தையின் மேனி
மார்புபடத் தூக்கி,த் தனது தோளின்மேல் மகிழ்ச்சியோடு அமர்த்திக்
கொண்டு,தலையைத் தாழ்த்தி, வில்போல உடல்வளைத்து,
வாய்பொத்திக்கொண்டு, காதையே வாயாகக் கொண்டு, ஞானோபதேசம்
செய்த முருகனின் உரையைக்கேட்டார்.
ஓம்" என்னும் உயர்ந்த பொருளை, விரிவாக விளங்கியவன், அது
உணர்வு என்னும் உண்மையும் கொண்டு விளங்குகிறது என்றும்
விளக்கினான்.
ஓம்" என்னும் மாக்குடிலை மந்திரம் உள்ளத்தால் உணரத்தக்கது,
என்றும் விளக்கினான் ஆறுமுகன்.
சிவாகமம் சிவஞானம், ஆகியவற்றின் வித்தகர், படைத்தவர் சிவனே.
அவரே இன்று உபதேசம் கேட்கிறார் எனில் சிவமே மகனாகவும்
விளங்குகிறதோ! என்றும் தோன்றலாம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் முன் நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே! சுவாமி மலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..39.
4.9. முருகனோடு சிவன் திருவிளையாடல்.
சீடனாகிச் செவிமடுத்து, வாய்பொத்தி, மண்ணமர்ந்து ,
செவ்வுரையைச் சேமித்தவன்,
பாடலால் பாணபத்திரன்; ஆடலால் அரும்பாண்டியன்;
தேடலால் திண்ணனவன்;
திருவிளை ஆடலுற்ற பெருமானவர் திருமகனைக்
குருவாக ஏற்றருளிய,
திருவிளை யாடல்தான் குருவான பிள்ளைக்கே
பெரும்பெருமை கூட்டிற்றோ!
சுவாமிநாதன் சுவாமிமலை சுவாமியான சுப்பிரமணி
சுவாமியே சீடரானார்;
சுவாமியவர் ஞானத்தால்; சுவாமியவர் மோனத்தால்;
சுவாமியவர் மாமறையால்.
சிவத்தையே தவத்தையே நவத்தையே ஆடலால்
சிவமாகிய சுவாமிநாதா!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்..
சீடனாகித் தலை தாழ்த்திச் செவியேற்று, வாய்பொத்தி, மண்டியிட்டு
மண்ணில் அமர்ந்து,மகனின் ஞானவுரை கேட்ட நிகழ்வு,
பாணபத்திரன் என்ற அடியவருக்காகத் தானே படுபவனாக மாறிப்
பாடல் பாடியே வடநாட்டுப் பாடகனை மதுரையை விட்டே ஓடவைத்த
திருவிளையாடல்,
நடனம் கற்ற பாண்டியன் நடராசப்பெருமகன் ஒரே காலில் நின்றபடி
ஆடுவதால் அவர் துணைப்ம் அடையாரோ! என எண்ணி, அவர்முன் நின்று,
மறுகாலைத் தூக்கி ஆடவற்புறுத்தி வெற்றியும் பெற்றான். அது ஒரு
திருவிளையாடல்.
சிவனைப்பார்த்தவுடன் பைத்தியமான அடியவன் திண்ணன் ; அவன்
சிவனைத்தேடி அலைய,சிவனோ அவனைத்தேடி அலைந்து, அவனை
ஆட்கொள்ள கண்ணைக்கொடுத்தும், இருகண்ணைக்கொடுத்தும்
இருவரும் ஆடிய ஆடல் .
இவ்வாறெல்லாம் ஆடல்காட்டிய பெருமான், இன்று மகனையே
குருவாக ஏற்றருளும் திருவிளையாடல் ஆடினாரோ!
சுவாமியாம் சிவனுக்கு நாதனாகியவான் மலை; மலைக்கு சுவாமியான
சுப்பிரமணியர். அவருக்கோ சிவமே சீடரானார். வியப்பல்லவா!
ஞானத்தால் சுவாமி; மௌனத்தால் சுவாமி; மறைகளால் சுவாமி;
அவருக்கே நாதன் முருகன்.
சிவம் திருவிளையாடலில் சிவம்; தவம் யோகதட்சிணாமூர்த்தி;நவம்
புதிய நோக்கு;புதிய கருணை; புதிய செயல்; ஆகியன கொண்ட
சிவபெருமான் மகனிடம் ஞானம் கேட்ட புதுமை; ஞானத்திற்கு ஞான
உபதேசம். சிவம் குகம் ஒன்றாயிற்று.
சிவஞானமாக்கு நிற்பவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
நவயோகத்தில் உயர்ந்து காணப்படுபவனே! தவத்திற்கிற் தவமானவனே!
தந்தைக்கே ஞானம் அருளிய குருவே! சுவாமி மலையில் வீற்றிருக்கும்
சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..40.
4..10..ஆறிலும் ஒன்றியவனே!
ஒன்றே தோற்றம்; ஒன்றே உள்ளம்;
ஒன்றான சுவாமிநாதா!
இருகுறளின் சான்றாகி, இருபெண்கள் சார்பாகி,
இலங்குகின்ற சுவாமிநாதா!
மூன்றுமே ஒன்றாகி, மூன்றையும் வென்றிட்டு,
மூன்றான சுவாமிநாதா!
நான்கினை அடக்கி, நான்கினை வழங்கி,
நான்கான சுவாமிநாதா!
ஐந்தினை வென்றே, ஐந்தின் தலைவா!
ஐந்தான சுவாமிநாதா!
ஆறின் அற்புதமே! ஆற்றும் முகமுடையோய்!
ஆறாகிய சுவாமிநாதா!
புவனங்கள் போற்றிசைக்கும் தவமுனி நவகுமர !
போற்றினோம் சுவாமிநாதா!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
ஒரே பரம்பொருள்; இரக்கம் ஒன்றே உள்ளம்; மூவேழ் உலகிற்கும் ஒரே இறை.
தந்தை மகற்காலருந் நன்றி" மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி"
என்னும் இரண்டு குரளுக்கும் சான்றாகத்திகழ்பவர்கள்
சிவபெருமானும்,முருகப்பெருமானும் ஆவார்கள்.
இந்திரன் பெற்றெடுத்த ஐராவதம் வளர்த்த தெய்வயானை,
மானின்வயிற்றிலே பிறந்து,நம்பிராசனால் வளர்க்கப்பட்ட வள்ளி ,
இருவரின் அன்பிலே திளைத்து, அவர்கள் சார்பானவர் முருகன்.
அரி,அயன்,உருத்திரன் மூவரும் ஒன்றானவர் முருகன்;
ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் வென்றவர் முருகன்.
குழவி,இளமை,முதுமை எனக்காட்சி தரும் சுவாமிநாதா!
நால்வகைப்படைகளை அடக்கிச்சூரனைவென்று,
அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கினையும் அடியவர்களுக்குவழங்கி,
அறம் ,பொருள்,இன்பம்,வீடு என நான்காக விளங்குபவனே சுவாமிநாதா
ஐம்பூதங்களை வென்று, ஐவகை நிலங்களின் தலைவன்; நமசிவய
என்னும் ஐந்தான சுவாமிநாதா
சரவணபவ என்னும் அற்புதம்; ஆறுமுகமுடையவன்; சட்டி (ஷ ஷ்டி )
நாளின் தலைவ !
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்தவனே ! தவத்திற்கும் தவமாய்
நிற்பவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே! சுவாமி மலையில்
வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
நூற்பயன்
நலமளிக்கும் நல்வழி காட்டும், உளத்துள்
பலம்கூட்டும்; பற்றுநீக்கும் பிள்ளை ------- வளமளிக்கும் ;
பேறுசிவப் பேறுசதகப் பாடலொன்று கேட்டாலோ,
கூறினாலோ கோடிபுகழ் நாடு.
பொருள்
சிவப்பேற்றைப் பெரும்பேறாகக் கொண்டு பாடப்பட்டுள்ள
சுவாமிநாதசாதகம் என்ற நூலின் ஒருபாடலைக் காதால் கேட்டாலோ,
வாயால் கூறினாலோ, அளவுகடந்த பெரும்புகழை நாடி அடையலாம்;
அதுமதுமன்று, அப்பாடல்களைக் கேட்பதும், வாயாரப்படுவதும்
கெட்டோர்க்கும்,பாடியோர்க்கும் நன்மைகள் பல நல்கும்; நல்லவழியைக்
காட்டி, முக்திக்கு வழிகாட்டும்; அஞ்சாத தன்மையை அளித்து,
உள்ளத்திற்கு வலிமை சேர்க்கும்; பற்றுடையான் பங்கு பெறப் பற்றற்ற
தன்மையை வழங்கும்; பிள்ளைப் பேற்றினையும் அளிக்கும்;இதனைப்
படித்துப்பாடி நன்மைகள் அடைவோமாக.
முன்னுரை
திருமுருகன் குறையில்லா அருளினால் இவ்வாண்டும் அடியேனது
பிறந்தாநாளன்று "சுவாமிநாத சதகம்" என்னும் நூலை இயற்றி வெளியிட
முனைகின்றேன். சுவாமிமலையில் வீற்றருள்புரியும் சுவாமிநாதக்
கடவுளின் பெருமைகளைப் பேசுவதோடு, கோயில், கோயில்
தொடர்பான பலசெய்திகள், சுவாமிமலைக் கோயில் அமைப்பு,
பிரகாரங்கள், மலை, மலையேறும் படிகள், மூர்த்தங்கள், கோபுரம்,
விமானங்கள், போன்றவற்றையும், ஆறுகள்,குளங்கள் போன்றவற்றையும்.
அகைப்படுத்தியுள்ளேன். கும்பாபிஷேகம் , யாகசாலை, உத்ஸவம் ,
விழா,பூஜைமுறைகள் போன்றவற்றையும் முறையே விளக்கி இந்நூலை
அமைத்துள்ளேன்.
நேரில் சென்று கண்டும், நூல்களில் படித்தும், கல்வெட்டு, தல,
புராணங்கள், வழியாகவும் அறிந்தும், கோயிலில் பணிபுரியும் திரு.
கணேசகுருக்கள் என்பாரிடம் நிறைய செய்திகள் அறிந்தும்,
தேவஸ்தான வெளியீடுகளைப் படித்தும், விழாப் பத்திரிக்கைகளைக்
கண்டும் , இந்நூலைப் படைத்திருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆகமமுறைகளை, மந்திரங்களை,
செயலாற்றும் விதிகளை " திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக
சைவாகமத்துறை முதல்வரும், டாக்டரும், தமிழகம் முழுவதும் பலப்பல
கோயில்களில் கும்பாபிஷேகம்,உத்சவம் சிறப்புற நடத்திக்கொடுத்த
பெருமையும் உடையவரான ஆகமப்ரவீண முனைவர். திரு. சி.
கார்த்திகேய சிவாசார்யார்" எம்.ஏ .பிஹெச்டி அவர்களிடம் முறை,நூல்கள்,
விளக்கம்,போன்றன நேரில் கேட்டறிந்தும், இந்நூலைப் படைத்துள்ளேன்.
நூலும், விளக்கமும்.
சதகம்" என்னும் பிரபந்த வகையிலான இந்நூல்,
எண்ணிக்கை காரணமாக இப்பெயர்பெற்றது. வடமொழிதழுவிய
இப்பெயர் தொன்றுதொட்டே வழங்கி வருகிறது. நீதிகள், பழமொழிகள்,
வரலாறு, புராணங்கள், அவதாரங்கள், முப்பத்திரண்டு அரண்கள் போன்ற
ஏதேனும் ஒன்றை அல்லது பலவற்றைத் தழுவி இந்நூல் படைக்கப்படும்.
இந்நூலின் மற்றொரு சிறப்பு, ஒரேவகையான தொடரை, நூறுபாடலிலும்
இறுதிவரி ,அல்லது அதற்கு முன்னதைய வரிகளில் அமைத்துப்
பயன்படுத்துதல் மரபாகக் கடைபிடிக்கப்படுகிறது. சுவாமிநாத சதகத்தில்
"சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!"
என்றே இறுதி வரி அமைக்கப்பட்டுள்ளது.
சதக இலக்கணம்;-
இலக்கண விளக்கம் என்ற நூல் சதக இலக்கணத்தை
"விழையும் ஒருபொருள்மேல் தழைய
உரைத்தல் சதகமென்ப " என்று வகுக்கிறது.
ஒருபொருளை அடிப்படையாகக்கொண்டு , அப்பொருளை நூல்
முழுவதும் பரந்து வருமாறும், நூறு பாடல்களோடும் பாடுவது சதகம்
என்கிறது.
யாப்பருங்கலம் ஒழிபியலில் .சதகத்திற்கு இலக்கணம் கூறுகிறது.
"அகப்பொருள் ஒன்றன்மேல் ஆதல், புறப்பொருள்
ஒன்றன்மேல் ஆதல். கற்பித்த ஒருநூறு
செய்யுள் உரைப்பது சதகம் என்ப"
என வரையறுக்கிறது. அகப்பொருளாகிய இன்பியல் தழுவி,
அல்லது புறப்பவருளாகிய போர், புறநிலை, அறம் போன்றன
கொண்டு,பாடப்படுவது; இது நூறு பாடல்கொண்டு பாடப்
படவேண்டும். என்கிறது.
சதகவளர்ச்சி ;-
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நால்வருள் ஒருவரான, மாணிக்க
வாசகர் பாடிய திருச்சதகம் , சாதகநூலின் முன்னோடி எனலாம்.
கண்டு,கேட்டு, உரையாடும் கருத்துக்களைக் கொண்டது இந்நூல்.
12 ஆம் நூற்றாண்டில் ஆறைக்கிழார் பாடிய கார்மண்டல சதகம்,
வரலாற்று அடிப்படையில் எழுந்த தாகும். அதன்வழியே பிற்காலத்தில்
பலசதகங்கள் தோன்றின; தொண்டைமண்டல சதகம், பாண்டிமண்டலசதகம்,
சோழமண்டல சதகம், கொங்குமண்டல சதகம், ஈழமண்டல சதகம்
போன்றவை அவை.
திருத்தொண்டர் சதகம், கோவிந்த சதகம் போன்றவை
இறைவழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டன.
படிக்காசுப்புலவர் எழுதிய தண்டலையார் சதகம், பழமொழி
அடிப்படையில் பாடப்பட்டது. 17,18,19, நூற்றாண்டுகளில் பலப்பல
சதகநூல்கள் தோன்றின; அம்பலவாணக்கவிராயர் இயற்றிய
அறப்பளீஸ்வர சதகம் சிவபெருமானின் புகழைப்போற்றுவது.
சாந்தலிங்க அடிகளாரின் வைராக்கியசதகம் பற்றற்ற தூய்மையை
விவரிப்பது. சிதம்பரவாணர் எழுதிய கைலாசநாதர் சதகம்
நீதியோடு சோதிடம் பற்றியும் விளக்குகிறது. குருபரதேசிகர் எழுதிய
குமரேச சதகம் மனித வளத்தைக் கோடிட்டுக்காட்டுகிறது.
குணங்குடி மஸ்தான் இயற்றிய முகைதீன் சதகம் இறைவழிபாடு
சார்ந்தது.
சுவாமிநாத சதகம்;-
இந்நூல் சுவாமி மலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுள் மீது
பாடப்பட்டது. அவரது தோற்றம், அவதாரம், பெருமை, தந்தைக்கே
உபதேசித்தது, அரக்கர் அழிவு, அரக்கருக்கும் அருள், வள்ளி,தெய்வயானை
திருமணம், போன்ற புராணவரலாறுகளும் பேசப்படுகின்றன;
பத்துத் தலைப்புகளில் பக்தியை எடுத்து இயம்புகிறது.-
முதல்தலைப்பு முருகனது அவதாரச்சிறப்பு. பன்னிருசீர்
விருத்தப்பாடல்களில் ஒவ்வொரு தலைப்பிற்கும், பத்துப்பாடல்கள்
முறையே அமைக்காப்பட்டு நூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
பத்தியும் பரமனும் ஆக விளங்குபவன், அவதரித்தல் , அழகே அவன்,
அறத்தின்முதல், பரம்பொருளே பாலகன், விஸ்வரூபம், விளையாட்டு,
ஞானசிவனுக்கே குருவானவன் , அருளுபதேசம் பெற்றவர்கள்,
அவதாரநோக்கம் ஈடேறத்துவங்குகிறது . போன்ற தலைப்புகளில்
முருகன் பெருமை பேசப்படுகிறது.
இரண்டாம் தலைப்பு ;- உலகெங்கும் வீற்றுள்ள முருகனது தலங்கள்
அவற்றின் பெயர்கள் பத்துப்பாடல்களிலும் கூறப்படுகின்றன.
மூன்றாம் தலைப்பு;- தன்னுடைய அடியவர்களுக்கு அவன் அருள்புரிந்த
திறம் கூறப்படுகிறது. நக்கீரர்,சங்கப்புலவர், கச்சியப்பசிவாசார்யார்,
குமரகுருபரர், அருணகிரியார், பகழிக்கூத்தர்,சிதம்பரமாமுனிவர்,
தேவராயர், பாம்பன்குமாரகுருதாசர், காவடிச்சிந்து அண்ணாமலையார்,
போன்றோர்கள் முருகனைப் பாடி அருள்பெற்ற திரத்தைவிளக்குகிறது.
நான்காம் தலைப்பு;- சிவனுக்கு முருகன் உபதேசித்த சீர்மைமிகு வரலாறு
விரிவாகத் தரப்பட்டுள்ளது. பிரமன், கயிலைக்கு வருதல், ஆணவம்,
முருகனை வணங்காமை, அழைத்தல் ,தொழில் கேட்டல், வேதம் கூற
முதலில் ஓம் எனல், பொருள் கேட்டல், விழித்தல், சிறை, சிறைமீட்கச்
சிவனே வருதல், மீட்பு, உபதேசம், போன்றன விளக்கப்படுதல்.
ஐந்தாம் தலைப்பு;- ஆறுபடைவீடுகளின் பெருமைகள். வரலாறுகள்
விரிவாகத் தரப்பட்டுள்ளன.
ஆறாம் தலைப்பு;- சுவாமிமலையில் அமைந்துள்ள கோபுரம்,
பிரகாரம், கீழ்க்கோயில், அங்கு வீற்றிருக்கும் மூர்த்தங்கள், மேற்கோயில்
அங்கு வீற்றிருக்கும் மூர்த்தங்கள்,சன்னதிகள், விளக்கப்படுகின்றன.
சுவாமிமலையின் வேறு வேறு பெயர்கள், அவற்றின்
விளக்கங்கள், திருவேரகம்,குருமலை,கட்டுமலை, தாத்ரிகிரி,சிவகிரி,
சிரகிரி,சுந்தராசலம். போன்றன விளக்கப்படுதல்.
தீர்த்தங்கள், நீர்நிலைகள் பற்றிய விரிவான விளக்கம்.
வச்சிரதீர்த்தம், குமாரதாரை (காவிரி) சரவணக்குலம், நேத்திரபுஷ்கரணி ,
பிரம்மதீர்த்தம். போன்றன.மற்றும், ஆலயமைப்பு, ஆறுமுக அழகு, வரலாறு,
அநாகதமாய் அமைந்துள்ள சுவாமிமலை, வழிபாடும், பயன்களும், பற்றி
விளக்கப்படுகிறது.
ஏழாம் தலைப்பு;- சைவத்திருக்கோயில்களில் நடைபெறும் பூசனை
முறைகளை விளக்குவது ;நாள்தோறும் நடைபெறும் பூசனைக்காலங்கள்,
காலங்கள் தோறும் நடைபெறும் அபிஷேகமுறை, அலங்காரமுறை,
இறைவனுக்குச் சாத்தப்படும் மலர்களின் வகைகள், காலங்களுக்கான
நைவேத்தியங்கள், தீபாராதனை , பதினாறு வகையான உபசாரங்கள்,
அன்றாடம் பூசனைச்சமயத்தில் பாடப்படும், திருமுறைகள், நான்குவேதங்
கள், ஆசீர்வாதம் எனப்படும் ஆசியுரைகள் , மேலும் அன்றாடப்
பூசனைமுறைகளடங்கிய விதிமுறைகள், மலர்களின் மாண்புகள்
போன்றவை விளக்கப்படுதல்.
எட்டாம் தலைப்பு;- சைவக்கோயில்களில் பன்னிரண்டு ஆண்டிற்கு
ஒருமுறை நடக்கும், கும்பிபாபிஷேகம் எனும் குடமுழுக்கு பற்றிய
செய்திகளின் தொகுப்பே இத்தலைப்பு ஆகும்.
பாலாலயம், (இளங்கோயில் ) அனுமதி வேண்டல்,(அனுக் ) கணபதி
வழிபாடு, வாஸ்துசாந்தி, பிரவேசபலி , ம்ருத்சங்கிரஹணம் (மண்
எடுத்தல் ) அங்குரார்ப்பணம், கலாகர்ஷணம், யாகசாலை, பிம்பசுத்தி,
நாடிசந்தானம், விசேஷ சந்தி, பூதசுத்தி, ஸ்பர்சாகுதி , அஷ்டபந்தனம்,
(மருந்து சாத்துதல்) வேள்விக்குண்டங்கள், குடங்கள், கலசங்கள்,
வேதிகை, வேதிகாரச்சனை, வேள்வி வளர்த்தல்,(அக்நிகார்யம்)
த்ரவ்யாகுதி (வேள்விப்பொருட்கள் வேள்வித தீயில் போடுதல்)
பூர்ணாஹுதி , கடங்கள் புறப்படல் , குடமுழுக்கு, (கும்பாபிஷேகம்)
மஹாபிஷேகம், மண்டலாபிஷேகம் என்ற முறையில் நடைபெறுவதை
விளக்குதல் .
ஒன்பதாம் தலைப்பு;- கோயில்களில் நடைபெறும் திருவிழா உத்சவம்
தொடர்பான செய்திகளை விளக்குவது.
கொடிமரம், கொடித்துணி, அவைகளை அமைக்கும் முறை, கொடி
ஏற்றும் முறை,; உத்சவ வகைகள், நாள்தோறும் இறைவன் அமர்ந்து
செல்லும், வாகனங்கள்,சிவபிரானுக்கு, சிவபிராட்டிக்கு, முருகனுக்கு,
முறைகளைக் கூறுதல்; அடுத்து, சுவாமிமலையில் நடைபெறும்
திருவிழாக்களில் பத்து நாட்களிலும் கொண்டாடப்படும் வாகனங்கள்;
வீதிஉலா, நாதஸ்வரம், நான்மறையோதல், திருமுறைப்பண் பாடல்,
போன்றவை விளக்கப்படுதல்; பிற திருவிழாக்கள், தீர்த்தவாரி, விடையாற்றி
போன்றன விளக்கப்படுதல் .
பத்தாம் தலைப்பு;- சுவாமிமலை முருகனைப் போற்றிப்பாடியவர்களின்
உள்ளக்கிடக்கையை விளக்குதல்; முப்பத்திற்கு மேற்பட்ட திருப்புகழ்
பாடியுள்ள அருணகிரியாரின் பாடல்களில் பொதிந்துள்ள முருகப்
பெருமையைப் போற்றுதல், நக்கீரரின் திருமுருகாற்றுப்படையை
விளக்குதல்; மற்றும் பெருமைமிக்க பற்பல சான்றோர்களின்
பாடலில் பொதிந்துள்ள சுவாமிநாத தத்துவத்தை விளக்குதல்,
முடிவாக இந்நூலைக் கற்று ஓதுவார் அடையும் நன்மைகள்
கூறுதல். என்ற அளவில் நூல் நிறைவு பெறுகிறது.
நூல் வெளியீடு :- ஒவ்வொரு ஆண்டும், அடியேனின் பிறந்தநாளன்று
சிற்றிலக்கிய வகை நூல்களில் ஒன்றை வெளியிடும் மரபின்படி,
இவ்வாண்டு சுவாமிமலை முருகன்மீது "சுவாமிநாத சதகம்" என்னும்
இந்நூலை அம்முருகன் சேவடியில் சமர்ப்பிக்கின்றேன்.
14.10. 2025 அன்று காட்டாங்கொளத்தூர் விபைவ் ஹோட்டலின்
மஹாராணி அரங்கில் இந்நூலை மதிப்புகெழுமிய பன்முகத்தலைமைச்
சான்றோர். டாக்டர். சுதாசேஷையன் அவர்கள் வெளியிடும் நற்பேறு
கிடைத்துள்ளது.
நன்றியும் நற்றேடலும் :- குருவாய் வந்து, உருவாய் உலகிற்கு என்னை
அறிமுகப்படுத்திய ஆறுமுகவேலன், அவன் புகழ் பாடவும் வகை
செய்துள்ளான்; அவனருளால் ஆடிப்பாடி வரும் அடியேனின் வாழ்வு ,
வான்புகழ் வள்ளிமணாளன் சேவடித்தொண்டிற்கே " என்னும் உயரிய
நினைவில் என்னாலும் என்ற ஆணவ மேம்பாட்டில் பேசுகின்றேன்.
ஆயினும் உள்ளமெல்லாம் நிறைந்து விளங்கும் முருகனைப் போற்றாத
நாளெல்லாம் பிறவா நாளே" என்று , அவனது அருங்கமலத் தாளிணைப்
போற்றி வணங்குகின்றேன்.
இந்நூலை வெளியிட்டு வாழ்த்திய டாக்டர் சுதாசேஷையன் அவர்கட்கும்,
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய இசைக்கவி.திரு. ரமணன் அவர்கட்கும்,
இந்நூலின் ஆய்வுரை வழங்கிய நண்பர். கலவல கண்ணன் செட்டியார்
மேல்நிலைப்பள்ளி,முன்னாள் தலைமை ஆசிரியர், திரு. முத்துசாமி
அவர்கட்கும், தமிழ் ஆய்வாளர். திருமதி. சித்ரா ராமசாமி அவர்கட்கும்,
என்னை ஊக்குவிக்க முருகனே இவ்வுருவில் வந்துள்ளான்" என
நினைந்து உள்ளமெல்லாம் உருகி, உள்ளமார் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்நூலை அச்சிட்டு வழங்கிய எல்.கே. பிரின்டர்ஸ் உரிமையாளர்
திரு பாஸ்கரன் அவர்கட்கும், எனது மாணவராயிருந்தும் , எனக்குத்
தக்கதருணத்தில் தமிழ்ப் பணிகளை விடாது செய்துவரும், தமிழறிஞர்
ஜி .சேகர் குடுமபத்தாருக்கும், "சிவபக்த விலாஸ " உறுப்பினர்கட்கும்,
அரங்கமும், உணவும் வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் என்னை வாழ்த்திவரும்,
"விபைவ்" ஹோட்டல் ஐந்து சான்றோர்களுக்கும், எனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதுமையிலும் என்னைப் பாதுகாத்துவரும், என்னிரு கண்களான எனது
இருமகள்களுக்கும், பலவகையில் எனக்கு உதவிவரும், எனது மருமகனகள் ,
பேரக்குழந்தைகள், எனது மனைவி ஆகியோருக்கும் முருகனது நல்லருள்
கிட்டட்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றியும் வணக்கமும்.
21.9.25 சுவாமி.சுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக