செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

                                     வீர வாகுவின்  தூதுப் பயணம்


1.  இளவலே!  வீர!   இனியன   பேசு!
     அளவில்   செருக்கும்  அடக்கு.

2.   வேதநெறி  போற்றுக;  வெஞ்சிறை  வாடிடும்
       சீதமனத்     தேவர்  விடு.

3.   அல்லன    ஆற்றின்   அழிவளிக்கும்  ஆன்றவேல்;
      நல்லன     நாடவழி   நாட்டு.

4.   கொடுஞ்செயல்  கூடாச்  செருக்கு  குறைத்து,
       நடுநிலை   நாளுமே  கொள்.
   
5.   அறத்தின்    அருங்குரல்   நெஞ்சத்தே   இருத்திப்
      பரமன்     பணிந்து  தொடங்கு.

6.   வான்வழி   செல்லும்   வளமார்  உருவத்தைக்
      கோன்வழி  பெற்றே   உயர்.

7.  அஞ்சினர்   வஞ்சகர்;  விஞ்சையர்  வாழ்த்தினர்;
     மஞ்சுமேல்  மாமுடி,கால்   மண்.

8.  கந்தமலை   உந்திநின்றோன்   கார்மலர்    தேடிய
     அந்தமாதி   சோதிபோல்   ஆகு.

9.  வானெலாம்   வீரர்;    வளியெலாம்   வீரரே;
     மீன்கோள்    மதி,பானும்   வீர்.

10.  செல்வழிச்    சீரிலங்கை   கண்டார்;  சிலநொடி,
       வல்லரக்கன்   வந்தெதிர்   போர்.

8.  வழியில்   அழிபடு    கூட்டம்   முடிவில்
     பழிவரும்   தூதினில்  என்று.....

9.  நாற்புற   வாயில்   மகேந்திரம்   மாறிமாறி
     போர்ப்புறக்   காவல்   காண்.

1௦.  சிற்றுருக்    கொண்டார்;  சிறந்து  விளங்குகின்ற
        நற்றிறச்சூர்   நாட்டுவளம்  நாடு.


                                          பொருள்
       
          வீரவாகுவைத்  தூது   அனுப்ப முடிவு செய்த தேவர்களின் விருப்பத்தை
ஏற்ற  முருகக் கடவுள், அவனிடம்  தூதுப்பணி  பற்றிய செய்திகளை
எடுத்துரைக்கத்  தொடங்கினார்.  இளவலே! வீரவாகு!  தூதுவனின்  உயரிய
குணத்தில் ஒன்று, இனிமையாகப் பேசுதல்; எளிமையாகப் பேசுதல். இவ்விரண்டையும்  நீ கடை பிடி.அதேநேரம்  ஆணவம் கொண்ட அரக்கனின்
செருக்கு  தணிந்து,  பணிவும்  பண்பும்  தோன்ற  உன் பேச்சு வழி வகுக்க
வேண்டும். இதை மனதிற்கொள். என்றார்.

2.       அரக்கனாம்   சூரனிடம்  ஆணவம்  அழித்து,வேதநெறி போற்றுமாறு
 வலியுறுத்து;சிறையிலே   வாடுகின்ற ஜெயந்தன்  முதலிய தேவர்களை
உடன் விடுவிக்கவேண்டும் ,என்றும், மென்மையான  அவர்களின் துயரைக்
களைதலே உனது   தூதுப்பணியின்  முக்கிய நோக்கம் என்பதை வலியுறுத்திக் கூறு.

3.    மேலும்  மேலும் தீயவைகளைப் புரிந்து கொண்டே இருந்தால்  முருகனின்
வேலாயுதத்திற்குப்  பலியாகவேண்டும் என்பதை உணர்த்து;நல்லன  புரிந்து
நல்ல சான்றோர்   வழி போற்றி,உயர்வடைய   வழி  காட்டு. உந்து உரை அரக்க மனத்தை மாசற்றதாக மாற்றவேண்டும் என்பதை உணர்ந்து நல்லுரை  ஆற்று" என்றெல்லாம் தூதுச் செய்திகளைக்  கூறி  ஆசியும்
அருளும் நல்கி வீரவாகுவை அனுப்பினார்  முருகன்.

4. மேலும் ,வீரவாகு! சூரனிடம்  அவனது அரக்க மேன்மை கொண்ட
கொடுமையான செயல்களை அறவே நீக்குமாறு வலியுறுத்து . ஆற்றக்கூடாத  அறமற்ற செயல்களைத் தவிர்க்குமாறு கூறு.சான்றோர் போற்றும் நடுநிலைமையை ஆட்சியில் கடைபிடிக்குமாறு எடுத்துரை.
உனது சொல்லில் அவனது மனம் மாறுமாறு பேசுவாய்.என்று முருகன்
தூதுரை பகர்ந்தார்.

5.  அறக் கடவுளான  ஆறுமுகனின் அருளுரைகளை மனத்தே நிறுத்திய,
வீரவாகு  முருகனின் சேவடிகளில்  விழுந்து வணங்கி அவரது ஆசியுடன்
பயணத்தைத் தொடர்ந்தார்.

6.   வானத்தே  தவழ்ந்து செல்லும் வீரவாகு இறைவன் அருள் பெற்றுத் தனது
உருவத்தை  மிகப் பெரிய உருவவமாகப் பெற்றுப் பறந்தார்.கண்டவர்கள் வியக்கும் படியும், அஞ்சும் படியும்  வான் முழுவதும்  வியாபித்திருக்கும்
அவரது தோற்றம் விண்ணவரையும்  அச்சுறுத்தியது.

7 .  வானத்தே பறந்து செல்லும் அவரது தோற்றத்தைக் கண்டு அரக்கர் கூட்டம் அரண்டு,வியந்து அஞ்சி ஒடி ஒளிந்தது; முதலில் அஞ்சிய விண்ணவர்களும்,
அவரைப் பற்றி அறிந்துகொண்டு,அவர் செல்லும் பணி சிறக்க  வாழ்த்தினர்;
மேகத்தே மறைந்தெழும்  மாமுடியும்,நீட்டினால்  மண்ணை  அளாவும் கால்களும் கொண்டு அவர்  வானமுகட்டில் பறந்தார்.


8.    கடலில்   மீது, பறந்து  செல்லும்   மனநிலையில்  பேருரு  கொண்ட   வீரவாகு, "கந்தமாதன"   மலையின்   சிகரத்தில்  நின்றபடிப்    பறக்க  முயற்சித்தார். காலால்   உந்திப்  பறக்கத்தொடங்கினார்.வானத்தையும்,  நாகலோகத்தையும்  இணைத்து   நின்ற   அவர் .முன்னொருகால், திருமாலும்,பிரமனும்,  அடிமுடி   தேடிய   அண்ணாமலைச்   சோதிக்கடவுள் போல்    காட்சி  அளித்தார்.

9.     வானமெல்லாம்  நிறைந்து,  காற்றெல்லாம்    கலந்து, விண்மீன்கள்,நிலவு, ஆதவன்  என்னும்   கோள் களெல்லாம்   நிறைந்து   காணும்   இடமெங்கும்   வீரவாகுவாய்க்   காட்சி   அளித்தார்.

10.    அவ்வாறு    அவர்   பறந்து   செல்கையில், இலங்கை   மாநகரைக்  கண்டார்.    அடுத்த   நொடி,  அவரைத்   தடுத்து   நிறுத்த   அரக்கர்   கூட்டம்  ஓடோடி  வந்தது.அவரை   மேலே   செல்லவிடாமல்   தடுத்தது.அங்கே   ஒரு
போர்க்களம்   உருவாயிற்று.

8 .  வழியில் எதிர்த்து வந்த  இலங்கைத் தீவினைக் காக்கும் அதிவீரன்,அவன் படைத்தளபதி வீரசிங்கன்,போன்றோரையும் அழித்ததோடு இலங்கையையும் கடலிலே மூழ்கச் செய்தார்.அரக்கர் கூட்டத்தை அழித்தபடியே  பறந்த வீரவாகு  மேலும் மேலும்  போர் புரிந்து,அரக்கர்களை அழித்தால் ,தான் செல்லும் தூதுப் பணி  ஆற்ற இடையூறு ஆகும்,என்றும்,தூது செல்வோர் போரிடலாகாது என்னும் விதியையும் மனத்திற்கொண்டு அக்கூட்டத்தைத்தவிர்த்தவாறே பறந்து சென்றார்.

9.   மகேந்திர நாட்டின் பரந்துபட்ட கோட்டைகளின் நான்கு வாயிலிலும் விளங்கும் காவல் படைகளையும்,பாதுகாப்பையும் பார்த்தார்.தெற்குக் கோயில் காவற்படைத் தலைவன் ஆயிரம் தலை கொண்ட கயமுகன் என்பானோடு போரிட்டு, அவனை அழித்தார். அந்நாட்டில் விளங்கும் காவல் மிகுந்த சூழலைக் கண்ட அவர்
போரைத் தவிர்ப்பதே தூதின் இலக்கணம் எனக்கக்ருதினார் வீரவாகு

1௦.  தனது உருவத்தை அணு அளவில் மிகச்சிறியதாக இறையருளால் மாற்றிக் கொண்டார். வானத்தே பறந்தபடி அந்நாட்டின் அழகை,அற்புத
அரக்கர் வாழ்வைச் செல்வ  வளத்தைக் கண்டு வியந்தார்,

                                                     விளக்கம்
                                                        பொருள்
1.மஞ்சு= மேகம்

2.சூர்நாட்டு =   சூரனது  நாட்டுவளம்

8.   கார்மலர்    =  இங்கு   கார் =திருமால்(வண்ணம்)மலர் =பிரமன்
                                                              (அமர்ந்திருப்பதால்)

                                                     இலக்கணம்
1.போற்றுக    ......வியங்கோள்  வினை

2.வெஞ்சிறை   ....பண்புத்தொகை

3.கூடா .....              ஈறு  கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

4.  அழிபடு  ..........வினைத்தொகை

5.மாறி மாறி  ......அடுக்குத்தொடர்

6. சிற்றுரு      .........பண்புத்தொகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக