திங்கள், 29 ஜூன், 2020

4. 45. இரணியன் புலம்பல், தேவர் சிறை மீட்பு.


asdads

   4. 45.   இரணியன்  புலம்பல், தேவர்  சிறை மீட்பு.


1.     மன்னன்     இறந்தனன்       மாதேவி      அவ்வுரை 
        நண்ணுமுன்      நல்லுயிர்   நீங்கு.

2.     கோமளை      கோமகன்      கோமகள்      பல்லோரும் 
        தீமனை         தாவியாக்கை    தீர்.

3.     தந்தையார்       கந்தவேளின்       சேவலாய்ச்      சீர்மயிலாய்ச் 
        சொந்தமான     செய்தியால்    நோகு.

4.     ஈமச்       சடங்காற்றத்          தாமம்       மறைந்தேனே;
        ஈமமும்      ஆற்றா    நிலை.

5.     செய்தான்      இரணியன்      செய்கடன்;   செய்விதி 
        செய்குரு         ஆணை    பணிந்து.

6.     ஆக்கம்      வெறுத்தவன்     நோக்கில்      சிவமாகித் 
        தேக்கம்       தவச்செயல்     தாழ்ந்து.


7.     வெற்றி     விமலன்     விறலோனே!    வெஞ்சிறைப்
        புற்றிலுள்ளோர்     விரைந்துமீட்டு     வா.

8.     சிறைக்களம்       சென்றதும்,      சூழ்ந்துநின்ற     தேவர் 
        சிறைமீட்ட        வீரரைப்     போற்று.

9.     மாறுபடு      சூரரைக்      கூறாக்குக்     கூர்வேலின் 
        ஆறுமுகம்        ஆண்டருள்     ஆம்.

10.    கண்டனர்;      கந்தனைக்      கால்பணிந்து     போற்றினர்;
         சண்முகமும்     சாற்றும்      அருள்.


                                                     பொருள்

1.     தனது   கணவன்    சூரபன்மன்   போரிலே   பட்டான்" என்ற  செய்தி காதில்   விழும் முன்னரே    பதுமகோமளை  உயிர்   துறந்தாள்.

2.   கோமளை   மட்டுமல்ல   கோமகனாம்   சூரனின்  மனைவியர்  நூற்றுக்   கணக்கானவர்களும்   துன்பமுற்றுத்    தனது   உயிரைத்   தீ   வளர்த்து, அதிலே   புகுந்து   துறந்தனர்,

3.    போரிலே   தோற்று   இறந்துபட்டாலோ, வீரமரணம்   அடைந்தாலோ, தனது     தந்தைக்கு    ஈமக்கடன்   ஆற்றத்     தான்   ஒருவனாவது   இருத்தல்   வேண்டும்   என்ற  நினைப்பில்   போர்க்களத்தை விட்டு, மறைந்தோடிக்    கடலுக்கடியில்     மீனாக    வாழ்ந்திருந்த   இரணியன்   தனது   தந்தை இறவாமல்,   இரு கூறாக்கி,அப்படியே   முருகனுக்கு   அடிமையாகி,    மயிலாகவும்,  சேவலாகவும்   அவரைப்     பணிந்து     வாழ்கிறார்   என்ற செய்தி   கேட்டு மிகுந்த    துயருக்கு   உள்ளானான்.

4,     தந்தையே!   பிற்காலம்   உமக்கு   ஈமச்   சடங்காற்றவே   உயிர் பிழைத்திருந்த   என்னை   இப்படித்    தலைகுனிய   வைத்து விட்டீர்களே!
போரிலே   உமக்காக   வீரமரணம்   அடைந்திருந்தாலும்   மகனுக்கான   கடமையைச்    செய்தவன்   ஆவேன்.  இன்றோ   ஈமச்சடங்கு   செய்ய இயலாத   நிலையிலும், உமக்குமுன்   வீரமரணம்   அடையாத   கோழை   என்னும்   அவப்பெயருடனும்   வாழ்கிறேன்!  என்று  நான்தான்.கடலுக்குள்   மறைந்தது    பலனில்லாமல்   போய்விட்டதே.என்றும் வருந்தினான்.

5.    தனது    ஆசான்   சுக்கிராசார்யாரைக்   கண்டு,  அவருடைய   ஆணைக்கு
இணங்கி, சிங்கமுகன், பானுகோபன்,  பதுமகோமளை   போன்றோருக்கு   எல்லாம்   ஆற்றவேண்டிய   சடங்குகளை   ஆற்றினான்.

6.   வாழ்வில்   பற்று   இல்லாத நிலைக்கு    ஆளான   இரணியன்   முனிவனாகி,
இறைவன்   சிவபெருமானிடம்   பக்தி   கொண்டு   தவம்   செய்து  மலைச்சாரலில்   வாழ்வைக்   கழித்தான்.

7.   போர்க்களத்தில்    வெற்றி  பெற்று   மகிழ்ச்சிச்    சூழலில்  விண்ணவர் கள்
வீற்றிருந்து   காலை, வெற்றிக்கு   வித்திட்ட   எம்பெருமான்   முருகன்    வீரவாகுவை    அழைத்தார். இளவலே!   நீ   விரைந்து   சென்று, அரக்கர்   சிறையிலே   வாட்டும்   சயந்தன்  முதலிய   தேவர்களை   அழைத்து   வா!
என்று  கட்டளையிட்டார்.

8.   முருகன்   ஆணைப்படி.  அரக்கன்   திருநகர்    அடைந்து,  சிறைச்சாலை   நுழைந்து,   அங்கு   வெற்றி   அடைந்தும்   தங்களை   விடுவிக்க   யாரும்    வரவில்லையே    என   ஏங்கி நின்ற   தேவர்கள்முன்   சென்று   மகிழ்வுச்   செய்தியைக்   கூறியபின்,     உங்களை   அழைத்துச் செல்லவே   யான்   வந்துள்ளேன்"  என்றதும்,  மகிழ்ந்து   அவரைச்   சூழ்ந்துகொண்ட   தேவர்கள் தங்களை   விடுவிக்க வந்த    வீரவாகுவைப்   போற்றினர்.

9.   நன்மையை   விடுத்துத்    தீமையை   நாட்டிய   அரக்கர்   கூட்டத்தை மாமுருகன்     தமது   வேலாயுததால்   வென்றி கொண்டார்.  அவரே   நம்மையெல்லாம்    காத்தவர்   ஆவார். அவரது   கருணையினால்   நாம்
நன்மை  அடைந்தோம்" என்று  இப்புகழு க்கு    முருகனே   முழு முதற் காரணம்  என்றுரைத்தார்  வீரவாகு.அவர்களை   அழைத்துக்   கொண்டு   முருகன்    வீற்றிருக்கும்   செந்திப்பதிப்   போர்க்களம் நோக்கிச்  சென்றார்.

10.  போர்க்களத்தின்   நடுவே   அழகே   உருவாய்   அமர்ந்திருக்கும்   ஆறுமுகக்   கடவுளைக்   கண்ட   சயந்தனும்,பிற தேவர்களும்   அப்படியே
விழுந்து   வாங்கிப்  போற்றினர்.மகிழ்ந்த    மாமுருகன்,  சிறையிலே   பெருந்துயர்   அனுபவித்த   நீங்கள்   அனைவரும்   சென்று   நல்லுணவு   உண்டு, இளைப்பாருங்கள் .  என்று  அருளன்பு   காட்டி   அனுப்பி   வைத்தார்.


                                                                   விளக்கம்

1.   மாதேவி                                              =   பதுமகோமளை
2.   தீர்                                                          =   அழித்துக் கொண்டனர்.
3.   தந்தையார்                                        =   சூரன்
4.   தாமம்                                                   =    கடல்
5.   செய்குரு                                              =    சுக்கிரர்
6.   ஆக்கம்                                                 =    வாழ்வை
7.   விறலோன்                                          =    வீரவாகு
8.   சிறைமீட்ட                                          =    சிறைச்சாலையில்  இருந்து                                                                                                          காப்பாற்றிய
9.   மாறுபடு                                              =     தீமை   வழி நின்ற
10.  சாற்றும்                                              =     அன்புகாட்டும்

                                                           இலக்கணம்

தீமனை   .............................................................உருவகம்
செய்கடன் ..........................................................வினைத்தொகை
ஆக்கம்..................................................................தொழிற்பெயர்



       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக